Wednesday 26 February 2014

நுனிப்புல் மதிப்புரை - எஸ். ஐஸ்வர்யா

மதிப்புரை 

நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் கிடைத்துவிட்டால் தேடல்கள் முடங்கிவிடும். பதில் கிடைக்கப் போவதும் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது தெரிய வேண்டுமெனில் நாம் ஓர் எல்லையை கடந்து தேடுதலை விரிவுப்படுத்த வேண்டும். இந்த நாவலும் இதை நோக்கிய செல்கிறது, சென்று நம்மை தேடுதல் என்னும் மலை அடிவாரத்தில் நிறுத்தி பின் மலை உச்சியில் இருக்கும் உண்மையினை அறிய யாத்திரையை தொடர்கிறது. அப்படிப்பட்ட ஓர் களத்தில் தான் ஆசிரியர் கதாபாத்திரங்களை பயணிக்க செய்துள்ளார். கதாபாத்திரங்கள், நம்முள் பலமுறை தோன்றிய கேள்விகளின் எதிரொலி எழுந்து நின்று விடை தேட முயற்சிக்கின்றனவோ என்பது போல் தோன்றியது.

இயற்கைத் தாயின் அரவணைப்பில் செழித்துக் கொண்டிருக்கும் கிராமத்தில் இருந்து கதை தொடங்கிகிறது. சாதாரண விவசாயக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை முறையைத் தொட்டு, சமூக சிந்தனையை தெளித்துஅறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பி பின், கடவுளிடம் வந்து நின்று உள்ளக்கதவை தட்டிவிடுகிறது.

அறிவியல் சார்ந்த பல நுண் கருத்துக்களை விளக்கி கூற முயற்சித்தது வரவேற்கதக்கது. உயிர் ஆக்கம் செயல்பாடு குறித்தும், மரபியல் ரீதியான ஆராய்ச்சிகள் குறித்தும் கதாபாத்திரங்கள் மூலமாக பேசப்பட்டது நன்று. இன்னும் பேசப்பட்ட அறிவியல் கூற்று சிந்திக்க வைப்பவையாக இருந்தது 

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களின் நோக்கத்தை முன்நிறுத்தியே அனைத்தும் செல்வதாக காட்டினாலும் பின் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிற்கும் தொடர்புடையவையே என்ற உலகின் முக்கிய நியதியை முன்கொண்டு வந்து மெய்யூட்டிவிடுகிறது .

பெரியவர், பாரதி,மாதவி, திருமால், பெருமாள், பூங்கோதை போன்ற பாத்திரங்கள் நம்மை கவர்ந்தது மட்டுமின்றி அவர்களின் சுமைகளை நாம் சிறிது சுமந்தது போல் எண்ணத் தோணிற்று.

பெரியவர்களை போற்றுதல், அனைவரிடமும் அனுசரித்தல் போன்ற தனிமனித குணத்திலும்குழந்தைகளுக்கு பாடங்களையும் நற்கருத்துகளையும் போதித்தல், ஊர் பொறுப்பை ஏற்று மக்களை வழிநடத்தல்தன் நலமின்றி பிறர் நலத்திற்க்காக உழைத்தல் போன்ற சமூக அக்கறை கொண்டவனாகவும், மனஎழுச்சியின் போது தாயிடம் குமுறுவது, அறிந்தும் அறியாமலும் தன்னுள் உறங்கிகொண்டிருக்கும் கேள்விகள் எழும் தருவாயில் விடை தேடும் மனப்போராட்டங்களின் போது என அத்தனை இடங்களிலும் தன் பரந்த மனதைக்கொண்ட இக்கதாநாயகன் வாசன் நம் மனதில் வாசம் செய்துவிடுகிறான்.

ஆனால் இந்த யாத்திரை முழுவதும் ஆசிரியர் நம்மை இக்கதையின் இன்னொரு நாயகனை உடன் வைத்து கொண்டே அவனை நோக்கி  பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் அவன் தன் பாத்திரத்தை வேண்டியளவு மட்டுமே வெளிப்படுத்துவது போன்றே கதை நகர்கிறது. அந்த நாயகனே நாராயணன் .

நுனிப்புல் மேய்தல் ஒவ்வொருவரையும் அடி முதல் முடி வரை நோக்கி உள்பொதிந்திருக்கும் கருத்தை திறந்து எடுக்க மனையின் வாசலில் நாம் காத்திருக்கும் நிலையை ஏற்ப்படுத்துகிறது!.

நன்றி


எஸ். ஐஸ்வர்யா

மிக்க நன்றி ஐஸ்வர்யா .

Tuesday 25 February 2014

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - பாபிலோன் ஓரினச்சேர்க்கை

எகிப்தியர்கள் பற்றி தொடர்ந்து பார்க்கும் முன்னர் பாபிலோனியா குறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் செல்வோம். பாபிலோன் எனும் தலைநகராக கொண்டு உருவானதுதான் பாபிலோனியா பேரரசு. தற்போதைய ஈராக் அன்றைய பாபிலோனியா. அஷ்ஷிரியர்கள் குறித்து முன்னரே பார்த்து இருந்தோம். அவர்களுடன் ஒரு போட்டி அரசாக உருவானதுதான் இந்த பாபிலோனியா. கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு வருடங்கள் முன்னர் உருவாக்கி இருநூறு வருடங்கள் கோலோச்சி நின்ற அக்காடியன் எனும் பேரரசுவில் இருந்து ஹமூராபி எனும் அரசனால் உண்டாக்கப்பட்டது இந்த பாபிலோனியா. இந்த பகுதிகளில் வாழ்ந்த பலரும் செமிடிக் மக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். செமிடிக் அல்லாத மக்கள் சுமேரியன் என அழைக்கப்பட்டார்கள். இந்த பாபிலோனியர்கள், அஷ்ஷிரியர்கள் எல்லாம் அக்காடியன் என்பதுடன் செமிடிக் மக்கள் தான்.

ஒரு மொழி எப்படி அழியும் என்பதற்கு இந்த பாபிலோனியர்கள் ஒரு சாட்சி. அதாவது நமது சமஸ்கிருதம் எப்படி வழக்கொழிந்து இந்தி கோலோச்சி கொண்டு இருக்கிறதோ அதைப்போலவே இந்த பாபிலோனியர்கள் காலத்தில் சுமேரியன் மொழியானது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அக்காடியன் மொழி வடிவம் ஏற்றுக்கொண்டது. இறைவழிபாடுக்காக மட்டுமே சுமேரியன் மொழி இருந்ததை கூட பாபிலோனிய பேரரசு உருவானபின்னர் சுமேரியன் பேச்சு மொழியாக கூட இல்லை.

பாபிலோன் நகரம் ஒரு கலாச்சார, வழிபாட்டு தலமாக மட்டுமே அக்காடியன் பேரரசு காலத்தில் இருந்தது. பாபிலோன் முன்னால் என்ன இருந்தது என்பது குறித்து பின்னர் பார்ப்போம். சுமேரிய நகரங்கள் என்பது ஒரு தனிக்கதை. எலாம் பிடியில் இருந்து பாபிலோன் நகரத்தை மீட்டவர் இந்த ஹமூராபி.


                                                            படம் நன்றி: விக்கிபீடியா

இந்த ஹமூராபி அப்படியே பக்கத்தில் உள்ள நகரங்கள் எல்லாம் தனது பிடியில் கொண்டு வந்து பாபிலோனிய பேரரசு ஒன்றை உருவாக்கினார். இந்த ஹமூராபி அஷ்ஷ்ரியர்களின் பேரரசுவின் இடங்களை கூட தனதாக்கி கொண்டார். இவரது ராணுவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு நாட்டிற்கு என்ன சட்ட திட்டங்கள் தேவை என்பதை சுமேரியர்கள், அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் எழுதியதை எல்லாம் தொகுத்து ஹமூராபி கொள்கை என கொண்டு வந்தவர் இவர். இந்த கொள்கைகளை படித்துப் பார்த்தபோது மனுசாஸ்திரம் சொன்ன பல விசயங்கள் இதில் தென்பட்டது. 1901ம் வருடம் இந்த ஹமூராபி கொள்கை கண்டு எடுக்கப்பட்டது.

பாபிலோன் நகரம் தோன்றுவதற்கு முன்னர் நிப்பூர் எனும் நகரில் என்லில் எனப்படும் கடவுள் போற்றப்பட்டு வந்தார். ஒரு அரசர் உருவானதும் தலைநகரம் மாறுவது அந்த காலகட்டத்தில் வழக்கமாக நடைபெறுவது உண்டு. அப்படித்தான் ஹமூராபி பாபிலோனியா பேரரசு உருவான பொது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத்திற்கு எல்லாம் மாற்றினார். பல கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் உருவாக்கி மர்டுக் எனும் கடவுளை பிராதனப்படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை ஹமூராபிக்கு உண்டு.

வணிகம், அறிவியல், கலை, கட்டிடம் என கோலோச்சிய பாபிலோனியா சிதைந்து போனது எவ்வாறு நான் எப்பவோ கூறியது போல நாம் எவ்வித மதத்துக்காரராக இருந்தாலும் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூல்களை புறக்கணிக்காமல் படித்து வந்தால், அதாவது கடவுள் இது செய்தார், அது செய்தார் என்பதை தவிர்த்து, நமது மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து வந்தார்கள் என்பது புலப்படும்.

ஒரு பெரிய கப்பலில் சின்ன துளை இருந்தால் தண்ணீர் உட்புகுந்து எப்படி அந்த முழு கப்பலும் கடலில் மூழ்கிவிடுமோ அதை போன்றே தெற்கு மெசொப்டொமியா பகுதியானது வலுவிழந்து இருந்தது. ஹமூராபி இறந்தபின்னர் சரியான அரசர் வழிநடத்த கிடைக்காமல் தெற்கு மெசொப்டொமியா பகுதி முதலில் கைப்பற்றபட்டது. அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் இதுதான் தருணம் என சில பகுதிகளை அவர்கள் கைவசம் கொண்டு வந்தார்கள். ஹிட்டிடைஸ் மற்றும் கச்சிடிஸ் போன்றவர்களின் தாக்குதலால் இந்த பாபிலோனியா சிதறுண்டு போனது.

பாபிலோனியர்களின் தொங்கு தோட்டம், ஹமூராபியின் கோட்பாடு போன்ற பல விசயங்கள் காணும் முன்னர் ஜெனிசிஸ் குறித்து வைத்த இரண்டு நகரங்கள் பற்றி இப்போது காண்போம். இந்த இரண்டு நகரங்கள் சுடோம் மற்றும் கொமோரா. இந்த நகரங்கள் உண்மையிலேயே இருந்தனவா என்பதற்கு ஆதாரங்கள் தேடி அலுத்து போனார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இந்த நகரங்கள் இருந்தன என சொல்லுமளவிற்கு சில ஆதாரங்கள் இருக்கிறது என்றே தற்போது சொல்லப்படுகிறது. முழுவதுமாக ஜெனிசிஸ் படிக்காமல் இந்த இரண்டு நகரங்கள் குறித்து எழுதவியலாது என்றாலும் சில குறிப்புகள் குறித்து பார்ப்போம்.

சுமேரியர்கள் அரசர் உர்குர் ஒரு செமிடிக் மன்னன். அப்போது நிறைய கோவில்கள் உருவாக்கப்பட்டன. உர்குர் இதற்கு முன்னர் எந்த அரசரும் செய்யாத விசயங்களை செய்து வந்தான். வெள்ளம் ஏற்பட்டால் அதை தடுக்கும் பொருட்டு ஐந்து ஏக்கர் நிலத்தில் எட்டு அடி உயரத்தில் செங்கற்கள் கொண்டு ஒரு பெரிய பரப்பு  நிப்பூர் நகரத்தில் எழுப்பினான். இதன் அடிப்புறத்தில் தண்ணீர் சென்று வரும்படி  கலைவடிவத்துடன் உருவாக்கப்பட்டது. இதற்கு மேல் ஜிக்குரட் எனப்படும் டவர் ஒன்று எழுப்பப்பட்டு அது ஒரு கோவில் என்றே அழைக்கப்பட்டது. இவ்வாறு பல கோவில்கள் எழுப்பப்பட்டு பிற்காலத்தில் பாபிலோனியர்களின் வழிபாட்டு தலங்களாக மாறின. இந்த ஜிக்குரட் பைபிளில் என்லில் எனப்படும் தேவனுக்காக எழுப்பட்ட ஆலயம் என்றே குறிப்பிடுவதாக சொல்கிறார்கள்.

இந்த தருணத்தில் தான் ஏலமிடிஸ் பெரும் தாக்குதலை சுமேரியர்கள், அக்காடியர்கள் மீது ஏற்படுத்தியது. அப்போதிருந்த பாபிலோன் அரசன் சுமு அபி எனப்பட்டான். அவன் சுமேரியர்கள், அக்காடியர்கள் செமிடிக் மக்களுடன் போராடிக்கொண்டு இருந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்தது. ஏலமிடிஸ் எல்லா வரலாற்று விசயங்களையும் அழித்தார்கள். எல்லா கோவில்களும் சிதறடிக்கப்பட்டன. இப்படி சில விசயங்கள் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது பாபிலோனியா வரலாறை குறிப்பிடுகிறது என்கிறார்கள்.

சாக்கடல் அல்லது செங்கடல் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நகரங்களை தனது கரைகளாக கொண்டது. இந்த கடலின் கரைகளில் எழுப்பப்பட்ட நகரங்கள் தான் சுடோம், கொமோரா. இந்த சுடோம், கொமோரா நகரங்கள் ஒழுக்கத்தின் முறைகேடுகளாக, ஓரினச்சேர்க்கை கொண்டவர்களாக திகழ்ந்தது என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நகரத்தின் அடிப்படையில் சுடோமி என்ற ஆங்கில வார்த்தை காமம் சம்பந்தமான விசயங்களை குறித்து அதற்குரிய சட்டங்களும் சுடோமி விதிகள் என குறிக்கப்பட்டன. இந்த ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள், அதுவும் மிருகங்களுடன் கலவி முறை எல்லாம் சுடோம் கொமாரா நகரங்களில் தலைவிரித்து ஆடியது அதனால் தான் அந்த நகரங்கள் பேரழிவுக்கு கடவுளால் பணிக்கப்பட்டது என்கிறது ஜெனிசிஸ். இதனுடன் சேர்த்து மூன்று நகரங்கள் ஜெனிசிசில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நகரங்கள் இயற்கை பேரழிவினால் அழிந்து இருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.

                                படம் நன்றி: சாக்கடல், செங்கடல் விக்கிபீடியா

ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடி இந்த நகரங்களை காத்திட பத்து நல்லவர்கள் இருந்தால் போதும் என கண்டதுதான் லாட் எனப்படுபவன். ஏஞ்சல்கள்  லாட் என்பவனை சந்தித்து சாப்பிட்டதாகவும், லாட்டிடம் உனக்கு வந்த விருந்தினரை எங்களுடன் கலவி செய்ய அனுமதி என அந்த நகரத்து மக்கள் கேட்டதாகவும், லாட் அதற்கு மறுத்து தனது இரண்டு கன்னி மகள்களை தருவதாக சொன்னதாக குறிப்பு இருக்கிறது. அதை மறுத்து அந்த மக்கள் லாட்டினை தாக்க முற்பட இந்த ஏஞ்சல்கள் லாட்டினை காப்பாற்றி பத்து நல்லவர்கள் கூட கண்டுபிடிக்க முடியாததால் லாட் குடும்பத்துடன் இந்த ஏஞ்சல்கள் வெளியேறின. லாட் மனைவி கெட்டவள் என்பதால் அவளை அந்த நகரத்திலேயே விட்டுவிட்டு போனதாக கதை சொல்கிறது. இப்படி ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள் மூலம் அழிந்ததுதான் இந்த நகரங்கள். இதே நிலைமை பாபிலோனுக்கும் வந்து சேரும் என்றுதான் குறிப்பில் உள்ளதாம்.

பலதார மணத்தினை இந்த மெசொப்டொமியா நகரங்களில் கொண்டு வந்த காரணம் கலவியில் அதிக ஈடுபாடு கொண்ட மக்கள் என்பதை தவிர வேறு என்ன பதில் இருக்க இயலும். பாபிலோனியா அழிவிற்கு காரணம் காமம் ஓரினச்சேர்க்கை என்றே சொல்லிட ரோம பேரரசும் ஆமாம் அதுதான் என சொல்லி செல்கிறது.

இதே ஓரினச்சேர்க்கை விவகாரம் இன்றைய காலகட்டத்தில் கூட பெரிதாக விவாதிக்கப்படும் அவலம் பார்த்தீர்களா. அதுதான் வரலாறு திரும்புகிறது என சொல்வார்கள். இன்றைய சமூகத்தில் GAY, LESBIANS ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தினர் என்பது ஏற்றுக்கொள்வதை தவிர வேறு என்ன வழி. இன்றைய இளைய தலைமுறையினர் இதை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. We like it, we follow it, keep your nose out என்பதே தாரக மந்திரம். இப்படி எல்லாம் இந்த சுடோம், கொமோரா, பாபிலோன் நகரங்கள் இருந்ததை இறைவன் பொறுக்கவில்லை என்கிறது ஒரு கதை.

உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் எதுவெனினும் தயவு செய்து விட்டொழியுங்கள். நம்மை அழித்துவிட கடவுள் தேவை இல்லை, நாம் போதும். 

பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் பற்றி இன்னமும்

(தொடரும்)

Monday 24 February 2014

கதிர்வேலனின் வில்லாவில் பிரியாணி

சினிமா பார்ப்பது போன்று ஒரு பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. அதுவும் பாப்கார்ன் கொறித்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதைகளை ரசிப்பதில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. இதை பண விரயம் என்றெல்லாம் சொல்லி முடித்து விடமுடியாது. சினிமா எதையோ மக்கள் மனதில் காலம் காலமாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறது. ஆனால் மக்கள், ஆமா இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதாக்கும் என்றே மனபாவத்தில் படங்களை அணுகுகிறார்கள்.

இது கதிர்வேலனின் காதல். ஒரே வரிக்கதை. அப்பாவின் சம்மதத்துடன் தனது காதலியை கரம் பிடித்துவிட  நினைக்கும் காதலன். இப்போது இதை சுற்றி ஒரு திரைக்கதை பின்னப்பட வேண்டும். அவ்வளவே. காதலிக்கு ஒரு கெட்ட நண்பன், காதலியின் அப்பாவுக்கு ஒரு பலமில்லாத எதிரி. காதலுனுக்கு ஒரு நகைச்சுவை நண்பன், ஒரு காதலித்து ஓடிப்போன அக்கா, காதலை எதிர்க்கும் தந்தை. இப்படியாக திரைக்கதை முடித்தாகிவிட்டது. காதலில் ஒரு தவிப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதை படம் முழுவதும் தெளித்து இருக்கிறார்கள். மனதில் எதுவுமே ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. காதல் புளித்துப் போன ஒன்றாகிவிட்டது.

அப்படியே வில்லா பக்கம் போனால் பில்லி சூனியம் இதற்கு ஒரு அறிவியல் பின்னணி, நரபலி என்றெல்லாம் சொல்லி தமிழ் உலகம் இன்னும் மாறவில்லை என்றே சொல்லி முடிக்கிறார்கள். ஓவியத்தில் வரையப்பட்டது எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு தோரணையை உருவாக்கி இருக்கிறார்கள். திகிலும் இல்லை ஒண்ணுமில்லை. படம் மெதுவாக ஊர்ந்தால் அது இலக்கியத் தரமிக்கது என்றெல்லாம் தமிழ் சினிமா நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதில் ஒரு காதல். தனது காதலியை தான் மணமுடித்து கொல்ல வேண்டுமே என இறந்து போகும் காதலன், கதைநாயகன். ஆனால் அந்த மணவாளன் வேறு என முடியும் படம். ஒரு சுறுசுறுப்பு வேண்டாம். இது பிட்சா எனும் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லி இருந்தார்கள், பிட்சா படத்தின் முதல் பாக கதை மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து அதுபோன்று தமிழில் சினிமா வர இயல்வதில்லை இதனால் தான் ஜில்லா, ஆரம்பம் போன்ற மசாலா படங்கள் எப்போதும் தமிழில் கொடிகட்டி பறக்கின்றன.

மசாலா படங்கள் கொடி கட்டி பறக்கின்றன என பிரியாணி பக்கம் போனால் அது என்ன கதை என நினைத்து கூட பார்க்க இயலவில்லை. வெஜிடபிள் பிரியாணியா, சிக்கன் பிரியாணியா. சிக்கன் பிரியாணி கதை தான். எதிர்பாராத திருப்பங்கள் கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்க முயற்சி செய்து இருந்தார்கள். யார் கொலையாளி என்பதை படம் முழுக்கத் தேடவிட்டு இருந்தார்கள். சினிமா என்றால் பொழுதுபோக்குதான். அதை சற்று கனகச்சிதமாகவே இந்த பிரியாணி முடித்து இருந்தது. இந்த காட்சி எதற்கு, அது எப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பாமல் வாசமிக்க பிரியாணி தான்.

இப்போது தமிழ் சினிமா இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது. நாங்க எங்க இஷ்டத்துக்கு படம் எடுப்போம், அது எங்களுக்குப் பிடிச்சி இருக்கு. உங்களுக்கு பிடிச்சி இருந்தா எங்க தயாரிப்பாளுருக்கு லாபம் இல்லைன்னா நஷ்டம். மத்தபடி படைப்பாளிக்கு ஒரு படைப்பு எப்பவுமே உசத்திதான். மோசமான படம் என நினைத்தால் தயாரிப்பாளர், இயக்குனர் அந்த படத்தை தயாரிக்க இயக்க முன்வருவாரா, இல்லையே. படைப்புதனை தர வேண்டும், அதில் பணம் பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் சற்று சிந்திப்பது நலம். எவர் இதை எல்லாம் கருத்தில் கொள்ளப்போகிறார்கள்.

இந்த திரைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் கிடைப்பது குறித்து பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். வெளிநாடுகளுக்கு தியேட்டரில் படம் வருகிறதோ இல்லையோ புத்தம் புது காப்பி என டிவிடி கிடைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சில படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என நினைக்கும் மக்களையும் இந்த விமர்சகர்கள், கருத்து சொல்லிகள் படம் வந்த முதல் நாள் அன்றே படத்தை குறித்த கருத்துகளை இணையதளத்தில் தெளித்துவிடுவதால் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று கணிசமாக கூடவோ குறையவோ  செய்கிறது. விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள் என்பது கூட கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

எனவே இனிமேல் தமிழ் சினிமா கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து ஒரு படம் எடுப்பதைவிட குறைந்த பணத்தில் அற்புதமாக படம் படைத்து நகர வேண்டும் என்பதே ஒரு வேண்டுகோள். எவரும் செவிமடுக்க போவதில்லை என்பது வேறு விஷயம்.