Tuesday 9 July 2013

காதலும் பின்விளைவுகளும்

''முளச்சு  மூணு இலை விடலை அதுக்குள்ளே என்ன காதல் வேண்டி கிடக்கு''. சத்தம் போட்டார் அப்பா. 

''அந்த புள்ளையோட என்ன எழவுக்குடா சுத்துற''. கத்தினார் அம்மா. 

வைக்கோல் படைப்புக்கு பின்னால், மாந்தோப்புக்குள் என மறைந்து மறைந்து காதல் செய்தாலும் எப்படியாவது வத்தி வைத்து விடுகிறார்கள். ஊர்காரர்களின் கண்கள் எல்லாம் யார் யார் தப்பு செய்கிறார்கள் என விளக்கெண்ணையை கண்ணில் விட்டு தேடிக்கொள்வார்கள் போல. காதல் ஒரு தப்பான செயல் என்றே சொல்லிக் கொண்டுத்  திரிகிறார்கள். 

''எனக்கு அந்த புள்ளையைப் பிடிச்சிருக்கு''. தலைகுனிந்தே சொன்னேன். 

''செருப்பு பிஞ்சிரும். அந்த விளக்கமாத்தை எடு''. அப்பா மிரட்டினார். 

''இவன் நம்ம மானத்தை வாங்கவே வந்து பிறந்து இருக்கான், இவனை தலமுழுகினாத்தான் சரி வரும்''. அம்மா அலட்டாமல் சொன்னார். 

''வீட்டைப் பக்கம் வராதே, வெளியே போ நாயே''. அப்பாவின் வார்த்தைகள் நாகரிகம் அற்று தெரித்தது.

எனது அக்காவும், தங்கையும் என்னை பாவமாக பார்ப்பது போல் எனக்குத் தெரிந்தது. 

''இங்க பாருவே, இனி அந்த புள்ளையோட சுத்தின உன்னை கண்டதுண்டமா வெட்டி போட்டுடுவேன்'' அப்பாவின் தீவிர குரல் என்னை எதுவும் செய்யவில்லை. தலைகுனிந்தே நின்று இருந்தேன். 

''பேசுறானா பாரு, ரண்டு பொட்ட புள்ளைக வீட்டுல இருக்கு மறந்துட்டியாவே'' அம்மா ஆயாசபட்டார். 

''சத்தியம் பண்ணுவே, இல்லைன்னா இப்பவே நாங்க செத்துப் போயிருவோம் அதோ அவள்களையும் சேர்த்துட்டு'' அம்மாவும் அப்பாவும் ஒரு சேர சொன்னார்கள். 

''இனி மேல் அந்த புள்ளையோட நான் சுத்தமாட்டேன்'' சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். 

இந்த பூலோக சரித்திரம், காதலுக்கு தரித்திரம். இந்த காதல் முன்னால் எதுவும் எம்மாத்திரம்? காதல் பற்றி நிறைய நிறைய படித்தேன். காவியங்கள், கதைகள், கவிதைகள் காதலைப் போற்றி சிறப்பித்துக் கொண்டிருந்தன. சகட்டு மேனிக்கு வராத இந்த காதல் ஒரு சரித்திரமாகவே தெரிந்தது. இந்த காதலுக்கு முன்னால் எதுவும் எனது கண்களுக்குத் தெரியாத போது, நீ இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன், நான் இல்லாவிட்டால் நீ செத்துவிடுவாய் என்றெல்லாம் படித்து முடித்து இருந்தேன். பல விசயங்கள் படிக்க படிக்க மனம் பக்குவம் கொண்டது. 

காதலர்கள் எல்லாம் அவசர குடுக்கைகளாக இருந்து இருக்கிறார்கள் என புரிந்து போனது. காதலில் விவேகம் மிகவும் அவசியம் என்பதை ஒரு காவியம் சொல்லிய விதம்தனை படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன். 

சத்தியத்தை மீற வேண்டிய சூழலை உருவாக்கிட நினைத்தேன். இந்த காதலுக்கு முன்னால் அந்த சத்தியம் எல்லாம் எங்க ஊரு முனியாண்டி சாமிக்கு இடப்பட்ட சர்க்கரைப் பொங்கல் என கருதினேன். 

ஒரு நாள் இரவு அதுவும் அமாவசை இருட்டு. அந்த புள்ளையை சந்தித்தேன். 

''என் வீட்டுல சத்தியம் வாங்கிட்டாங்கடீ'' என்றேன். 

''என் வீட்டுலயும் அதே பிரச்சினைதான்'' என தேம்பி தேம்பி அழுதாள். 

''நான் ஒரு திட்டம் வைச்சிருக்கேன், அதுபடி நடப்போம்'' என்றேன். 

''என்ன திட்டம், ஓடிப்போறதா?'' என அழுகையின் ஊடே கேட்டாள். 

நான் படித்த காவியத்தை அவளிடம் மிகவும் ரகசியமாக ஆந்தைக்கு கூட கேட்டு விடாமல் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவளும் சம்மதம் சொன்னாள். 

இரு வீட்டார் சம்மதம் சொல்லி காதலுக்கு மரியாதை செய்வது, கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தையுடன் வந்து நின்றவுடன் ஏற்றுக்கொள்வது என்றெல்லாம் இவ்வுலகில் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்யும். இன்னும் என்ன என்ன காரணங்கள் காட்டியோ  காதல் எதிர்ப்புகளை நிறைய சம்பாதிக்கும். நொண்டி சாக்குக்கு எல்லாம் காதல் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கும். நாங்கள் இது போன்ற அந்த பிரமையில் இருந்து வெளியே வந்து இருந்தோம். 

எனது யோசனைப்படியே அவளும் நடந்து கொண்டாள். இப்போதெல்லாம் ஊர்க்காரர்கள் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தார்கள். நாங்கள் நேரில் பார்த்தாலும், பார்க்காதது போன்றே சென்றோம். எதுவும் பேசிக் கொள்வது இல்லை. 

காதலுக்கு மொழி அவசியமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள். காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது மிகவும் கடினம் என்றெல்லாம் சொல்லித் திரிவார்கள். ஆனால் பேசாமல், பார்க்காமல் காதலை எங்களுள் வளர்த்துக் கொண்டிருந்தோம். பேசாவிட்டால் ஓடிவிடக் கூடியதா காதல்? பார்க்காவிட்டால் பறந்து விடக்கூடியதா காதல்? 

பாசமாக வளர்த்த என்னை அந்த புள்ளையை காதலித்தேன் என்ற ஒரே ஒரு காரணம் காட்டி தங்களை மாய்த்து கொள்வது என முடிவு செய்த அம்மாவும், அப்பாவும். காதலித்தேன் என ஒரு ஒரே காரணம் காட்டி என்னை மகன் இல்லை என்று முடிவு செய்த அவர்களின் செயல்பாடுகள் விசித்திரமானவை தான்.  

ஊர்ப்பழி வந்து சேருமே எனும் ஒரு அச்சுறுத்தலும், மகள்களை எப்படி கரை சேர்ப்பது என்கிற கண்றாவி கவலையும் இந்த காதல் எல்லாம் அருவெருப்பான விசயமாகவே இன்னமும் அவர்களுக்கு தெரிகிறது. இதில் கள்ளக்காதல், நொள்ளைக் காதல் வேறு. இன்னும் சில காலங்களில் நான் சொன்ன ரகசியத்தின் படி  நானும் அந்த புள்ளையும் நடந்து கொண்டு இருப்பதால் எனது பெற்றோர்கள், அவளது பெற்றோர்கள், ஏன் எங்கள் ஊரே மாறிவிடும். 

ரகசியம் சொன்ன காவியத்தின் சிறுபகுதி  இதுதான். 

என் பெயர் ராம். அவள் பெயர் சீதா. என் குலமும் அவளது குலமும் ஒன்று. என் பணமும் அவளது பணமும் ஒன்று. என் உறவினரும், அவளது உறவினரும் ஒன்று. தராசில் நிற்க வைக்க நானும் அவளும் எல்லா விதத்திலும் சமம். இனி எங்களுள் காதல் வரின் அதற்கு எதிர்ப்பு இல்லை. 

ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கிய மறுகணம் அவளை மட்டுமே காதலிப்பது என்பது கூடாது. அவளை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அந்த பெண்ணும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். காதல் ஒருங்கிணைக்கும், உருக்குலைக்காது. 

காதலித்து திருமணம் புரிந்த பின்னரும் வரும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகள் எல்லாம் காதலை மிகவும் கொச்சைப்படுத்துகின்றன. இவர்கள் காதலித்துதானே கல்யாணம் பண்ணினார்கள் என்றே கேள்வி எழுப்பபடுகின்றன. காலத்திற்கேற்ப நமது ஆசைகள் நிராசைகள் காதலை கொச்சைப்படுத்த தயங்குவதே இல்லை.  காதல் எப்படி வரும் என்றே எவருக்கும் தெரிவதில்லை. காதல் எப்படி போகும் என்றே எவருக்கும் புரிவது இல்லை. 

ஆனால்...

காதல் புரிந்து கொள்ளும். காதல், புரியாவிட்டால் மட்டுமே கொல்லும் .

Sunday 7 July 2013

பரிணாமத்தில் ராமர் போட்ட கோடு

எனது மனநிலையும், எனது செயல்பாடுகளும் என்னை மிகவும் வாட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. எதற்காக நான் இப்படி இருக்கிறேன், எதற்காக இப்படி செயல்படுகிறேன் என்ற எண்ணம் என்னை சுற்றிக் கொண்டே வருகின்றன. என்னை எவரேனும் கட்டுப்பாட்டில் வைத்து இப்படித்தான் நான் வாழ வேண்டும் என தீர்மானித்து கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்களா என்றெல்லாம் என்னுள் தீவிர யோசனை சில நாட்களாய் வந்து கொண்டே இருக்கிறது. நானா இப்படி நடந்து கொள்வது என்கிற எண்ணம் என்னை உருக்குலைய செய்து கொண்டிருந்தது.

அப்போது 'பக்தா' எனும் அழைப்பு என்னை உலுக்கி விட்டது. என்னைத் தேடி எதற்கு இந்த சாமியார் வந்து தொலைய வேண்டும் என்ற எண்ணத்துடன் 'என்ன' என மட்டு மரியாதை இல்லாமல் கேட்டு வைத்தேன். 'நீ ஏதோ சஞ்சலத்தில் அல்லாடிக் கொண்டிருப்பது போன்று தெரிகிறதே' என்றார். 'யார் இந்த சாமியார், நான் சஞ்சலத்தில் உட்பட்டால் இவருக்கு என்ன' என எண்ணிக்கொண்டு 'உன்கிட்ட வந்து நான் ஏதாவது சொன்னேனா, பெரிசா கேட்க வந்துட்ட' என கோபத்துடன் அவரை நோக்கி சொன்னேன். 'நீ சொன்னால்தான் நான் வர வேண்டும் என்பது என்றில்லை, உனக்கு ஏதாவது நேரும் எனில் நான் அங்கே இருப்பது எனக்கு சௌகரியமான ஒன்று' என்றார் மேலும்.

'நா உன்கிட்ட பேச எதுவும் இல்லை, நீ பேசாம போயிரு' என கத்தினேன். சாமியார் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். 'போனு சொல்றேனில்ல' என மறுபடியும் உறுமினேன். சாமியார் வீட்டு வாசற்கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றார். 'போய் தொலையட்டும்' என்றே கோபம் தணிந்தேன்.

சிறிது நாழிகைக்குப் பின்னர் 'பக்தா' என்றே ஒரு அழைப்பு வந்து சேர்ந்தது. இம்முறை சாமியார் எதுவும் பேசாமல் நின்றார். 'என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்றேன். 'நீ சஞ்சலத்தில் உட்பட்டு இருப்பது எனக்கு சௌகரியமாக இல்லை, அதனால் ராமருக்கு அணில் செய்த சிறு உதவி போல் உனக்கு செய்யலாம் என்றே வந்தேன்' என்றார்.

'ராமர், அணில்' எனக்கு சாமியாரிடம் இதுகுறித்து கேட்க வேண்டும் என தோன்றியது. 'அணில் அப்படி என்ன ராமருக்கு உதவி செய்தது?' என்றேன். 'லங்கேஷ்வரம் செல்ல ராமர் பாலம் கட்டியபோது, அணில் ஒரு புறம் மண்ணில் புரண்டு, உடம்பில் ஒட்டிய மண்ணை அடுத்த பக்கத்தில் சென்று கொட்டி விட்டு மீண்டும் மறுபுறம் வந்து மண்ணை உடலில் ஒட்டிக்கொண்டு அடுத்த பக்கம் சென்று கொட்டியது. அணிலின் இந்த செய்கையை கண்டு ராமர் மனம் நெகிழ்ந்து அந்த அணிலின் முதுகில்  மூன்று விரல்களால் தடவி கொடுத்தபோது விழுந்த கோடுகள் தான் அந்த வெள்ளைக் கோடுகள்' என்றார் சாமியார்.

அணில் கதை கேட்டு நான் நெகிழ்ந்து போனேன். ஒரு சின்ன அணிலுக்கு எப்படி அப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்றே எனது மனம் நினைத்தது. 'என்ன யோசனை' என்றார் சாமியார். 'தன்னால் இயன்ற உதவியை அணில் நம்மால் என்ன ஆகும் என எண்ணாமல் செய்தது கண்டு மனம் பரவசமானது' என்றேன். 'எவருக்கேனும் துன்பம் நேர்கையில் அவருக்கு முடிந்த அளவு சிறு உதவி செய்தல் நலம்' என்றார் சாமியார். 'மனதில் எந்த சஞ்சலமும் இனி வேண்டாம்' என்றார்.

'ஆமாம் சாமி, இவ்வுலகில் எல்லா அணிலுக்குமா மூன்று கோடுகள் இருக்கின்றன' என்றேன். இந்த அணில் வம்சம் நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது. வெவ்வேறு வகையான அணில்கள் இவ்வுலகில் உண்டு. ஆனால் மூன்று கோடுகள் கொண்ட அணில்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே உண்டு. வட இந்தியாவில் ஐந்து கோடுகள் கொண்ட அணில்கள் வகையும் உண்டு. சில பறக்கும் அணில்கள் கூட இந்த புவியில் உண்டு; என்றார் சாமியார்.

'ஆமாம் சாமி, இந்த ராமாயணம் நடந்த கால கட்டத்திற்கு முன்னர் இந்த மூன்று கோடுகள் கொண்ட அணில்கள்  இந்தியாவில், இலங்கையில் இல்லையா?' என்றேன். 'மனம் சஞ்சலம் ஆகாது, வெள்ளை அணில்களும் தற்போதைய காலத்திலும் உண்டு' என்றார் சாமியார். பட்டென விழித்துக் கொண்டேன்.

இனிமேல் இப்படித்தான் இருக்க வேண்டும், என்னைப் பற்றி எனக்குள் உயர்வான எண்ணம் வேண்டும் என்றே உறுதி கொண்டேன். அணில் ராமருக்கு செய்தது சிறு உதவிதான், எனக்கு செய்தது பெரும் உதவி. கோடுகள் போட அணில்கள் தேடுகின்றேன்.






Thursday 20 June 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 5

இலகிமா, இதை காற்றை போல் மென்மையாதல் என்றே குறிப்பிடுகிறார்கள். வானத்தில் பறக்கும் சக்தியை இது கொடுக்கும் என்றும், நீரில் மீது நடக்கும் சக்தியை தரும் என்றே கருதப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருகில் ஒரு சித்தர் இப்படி வானில் பறந்ததாக சமீபத்தில் ஒரு கதை படித்தேன்.

ஒல்லியான உருவம் கொண்டவரை 'காற்று அடித்தால் உன்னை தூக்கிக் கொண்டு போய்விடும்' எனும் ஒரு நகைச்சுவை சொல்வழக்கு உண்டு. பறப்பவை எல்லாம் பறவைகள் என்றுதான் குறிப்பிடப்பட்டு வருகின்றன, ஆனால் மனிதன் பறக்கும் தன்மையை பெற்று இருக்கவில்லை. ஆனால் ஹனுமார் பறந்து சென்றே சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்ததாக புராணங்கள் குறித்து வைக்கிறது.

இவை எல்லாம் அமானுஷ்ய தன்மைகள் என்றும் சொல்லப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே எங்கே ஈர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அங்கே பறக்கும் தன்மையை மனிதன் பெற இயலும். உதாரணத்திற்கு நிலவை குறிப்பிடலாம். ஒரு பொருளின் நிறை எந்த இடத்திற்கு சென்றாலும் மாறாது, ஆனால் ஒரு பொருளின் எடை மாறும்.

ஒரு பொருளின் எடையானது அந்த இடத்தின் ஈர்ப்பு விசையின் தன்மையை பொறுத்தே அமைகின்றன. பூமியின் ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு பத்து நியூட்டன் என்றே கணக்கிட்டு வைத்து இருக்கிறார்கள். வியாழனில் இந்த ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு இருப்பத்தி நான்கு நியூட்டன். இப்படி ஒவ்வொரு கோள்களிலும் ஈர்ப்பு விசை மாறுபாடு அடைகிறது. இந்த ஈர்ப்பு விசை ஒரு பொருளின் நிறையை பொருத்து அமைகிறது எனலாம். ஒன்றில் ஈர்ப்பு அதிகமாக அதிகமாக பிரச்சினைகள் அதிகமாகும்.

ஒரு விசயத்தில் பற்று கொண்டு அதனிலே உழன்று மன நோயிற்கு உட்பட்டு பாதிப்புக்கு உள்ளாவோர் நிறையவே உண்டு. அங்கே 'மனம் பாரமாக இருக்கிறது' என பொருள். இப்பொழுது அவர்கள் மிகவும் கனமாக உணர்வார்கள். அந்த நபர்களின் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் எவரேனும் அவருக்கு வாய்த்தல் அவர்கள் மிகவும் இலகுவாக உணர்வார்கள். 'இப்போதான் மனசு ரொம்ப லேசா இருக்கு' இதுதான் இலகிமா.

மனசு லேசாக இருக்கும்போது காற்றில் பறப்பது போன்ற ஒரு உணர்வு வரும். மென்மையான தன்மை நம்மில் உருவாகும். இப்படி மென்மையான தன்மை வரும் பட்சத்தில் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்கும் எண்ணம் அடியோடு ஒழிந்து போகும். நல்லதையே நினைக்கும், நல்லதையே செய்ய துடிக்கும் எண்ணங்கள் மட்டுமே பீறிடும்.

இப்படிப்பட்ட உணர்வு இந்த உலகத்தில் அத்தனை எளிதாக நாம் அடைய இயலாது என்றாகி விட்டது. பிரச்சினைகளால் உந்தப்பட்டு எவரால் நமக்கு தொல்லை வருமோ, என்ன என்ன எழரைகள் வந்து சேருமோ எனும் அச்சத்தில் வாழ்க்கையை கழித்து கொண்டு இருக்கும் மானுடருக்கு இந்த மென்மையான தன்மை ஒரு அமானுஷ்ய தன்மையாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை.

இப்படிப்பட்ட மன அழுத்தத்தில் சிக்கிக் கொண்டு இருப்போருக்கு ஆறுதல் தரவே அகிலாண்டீஸ்வரி வரம் புரிகிறார். கோவிலுக்கு செல்வோம், நூலகங்களுக்கு செல்வோம். இறைவனிடம் மனம் விட்டு பேசுவோம். அவர் எதிர்பேச்சு எதுவும் பேசமாட்டார். எவரிடமும் சென்று நமது குறைகள் பற்றி கேலி பண்ண மாட்டார். ஆனால் ஒன்றே ஒன்று, இறைவனிடம் சொல்லிவிட்டோம், நமது குறைகள் தீர்ந்துவிட்டது என நாம் நம்பிக்கை கொள்வோம். மனம் லேசாகிவிடும். அப்படியே வாழப் பழகுவோம் .

பிரச்சினைகளில் மூழ்கி தவிப்போருக்கு வெளிவரவே இறைவன் எனும் பாடம் நமக்கு சொல்லப்பட்டது. ஆனால் இந்த இறைவனையும் பிரச்சினைக்கு உட்படுத்தி அசிங்கபடுத்தி பார்ப்பதில் நமக்கு நிகர் எவருமில்லை.

''ஏன்  ஒருமாதிரியா இருக்கே, என்னப்பா பிரச்சினை?''

''ஒண்ணுமில்லை''

''இதுதான் பிரச்சினையா?''

''இல்லை, அது வந்து...''

பிரச்சினைகளில் இருந்து வெளிவர வேண்டுமெனில் மனதை லேசாக மாற்ற முயற்சிப்போம். இலகிமா, சித்தர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அவசியம்.