Wednesday 19 June 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 14

காயத்ரி கர்மவினை என சொன்னதும் நான் பேசாமல் எழுந்து சென்று விட்டேன். எனக்கு இந்த கர்மவினை எல்லாம் சுத்த பொய் என்றே தோன்றியது. ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல்கள் கொண்ட உயிரினம் தோன்றிட என்ன அவசியம் வந்து சேர்ந்தது என்றே எண்ணினேன்.

மறுநாள் நானும் காயத்ரியும் கல்லூரிக்கு சென்ற வழியில் நான் எதுவும் பேசாமல் நடந்தேன். காயத்ரியும் எதுவும் பேசாமல் நடந்து வந்தாள். ஆனால் என்னால் பேசாமல் இருக்க இயலவில்லை.

''என்ன எதுவும் பேசாமல் வர''

''என்ன பேசனும்''

சில நேரங்களில் நமது மனம் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால் மிகவும் விந்தையாக இருக்கிறது. நூல் பல கற்பினும் உண்மை அறிவே மிகும் என்பது எனக்கு மிகவும் அதிசயம் தந்த வரிகள்.  படித்த முட்டாள்கள் எனும் அடைமொழி எனக்கு மிகவும் நேசிப்புக்குரியவை. இதையே ஒரு பொருளாக பேச நினைத்தேன்.

''நூல் பல கற்பினும் உண்மை அறிவே மிகும் தெரியுமா காயூ?''

''என்ன சொல்ல வர?''

''அந்த வரிக்கு அர்த்தம் தெரியுமானு கேட்டேன்''

''தெரியும், அதுக்கு இன்ன இப்போ?''

அவளது பிடி கொடுக்காத பேச்சில் எனக்கு பிடித்தம் இல்லை. படித்த முட்டாள்கள் என்றே சொல்லி வைத்தேன். அவளுக்கு கோபம் வந்து இருக்க வேண்டும்.

''என் அக்காவை பத்தி எதுவும் பேசனும்னா நேரடியா பேசு''

''காயூ, நான் எப்போ என்ன சொன்னேன்''

''படித்த முட்டாள்கள் சொன்ன''

''கர்ம வினையை கை காட்டுபவர்கள் படித்த முட்டாள்கள் என்றேன்''

''என்னையவா முட்டாள்னு சொல்ற''

வினையே வேண்டாம் என்று பேசாமல் இருந்திட நினைத்தேன். ஆனால் அவளோ மிகவும் கோபம் கொண்டாள்.

''எதுக்கு எடுத்தாலும் கர்ம வினை கர்ம வினைன்னு சொல்றியே, அதுக்கு என்ன அர்த்தம்?''

''அதுக்கு அது அது அப்படித்தான் நடக்கும்னு அர்த்தம், நீ சொன்னியே பல நூல் கற்பினும் உண்மை அறிவே மிகும் அப்படின்னு, அது கூட கர்மவினையின் செயல்பாடு. இப்படி இப்படி வாழனும்னு ஒரு வழிமுறை இருக்கறப்போ எதுக்கு மனுசங்க எல்லாம் தடுமாறனும், சொல்லு பார்க்கலாம்''

காயத்ரியின் மனதில் அவளது தந்தையின் செயல்பாடு பெரும் பாதிப்புதனை ஏற்படுத்தி இருந்ததை உறுதி படுத்தி கொள்ள முடிந்தது.

''அது வந்து....''

''முருகேசா, எப்படிடா இருக்க?'' வழியில் நான் கேட்ட சுபத்ராவின் வார்த்தைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. சுபத்ரா பத்தாம் வகுப்பு வரை என்னோடு படித்தவள். மெல்லிய உருவம். எப்போதும் கலகலப்பான பேச்சு. தினமும் தவறாமல் எனக்கும் சேர்த்து அவள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வருவாள். என்னை விட மிகவும் நன்றாகவே படிப்பாள்.

அவளது தந்தையின் வேலை மாற்றம் காரணமாக பத்தாம் வகுப்பு முடித்த கையோடு வேறு ஊரு சென்றுவிட்டார்கள். இரண்டு வருடங்கள் பின்னர் இன்றுதான் அவளை முதன் முதலில் பார்க்கிறேன். சுபத்ராவை பார்த்த மாத்திரத்தில் காயத்ரியை பார்த்தேன்.

(தொடரும்) 

Sunday 9 June 2013

கணினி தெரிந்த அர்ச்சகர் தேவை

லண்டன் ஸ்ரீமஹாலக்ஷ்மி (http://www.srimahalakshmitemple.net) ஆலயத்தில் கணினி (கம்ப்யூட்டர்) தெரிந்த அர்ச்சகருக்கு வேலை வாய்ப்பு.

இறைவனுக்குத் தொண்டு செய்ய விருப்பமுள்ள அர்ச்சகருக்கு (சிவாச்சாரியார் அல்லவது வைணவம்) கணினியில் போதிய அளவு அடிப்படை திறமை இருத்தல் வேண்டும் (word, excel, powerpoint, access). கோவிலில் பெறப்படும் நன்கொடைகள், பூஜை மற்றும் அர்ச்சனை போன்ற கணக்கு வழக்குகளை சரிப்பார்த்தல் அவசியம்.

பக்தர்களின் குறிப்புகளை கணினியில் சேமித்தல், கோவிலின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குளை ஒழுங்கு மற்றும் மேம்படுத்துதல் போன்ற அர்ச்சகர் பணியுடன் கூடிய இந்த கணினி சம்பந்தமான பணியில் விருப்பமுள்ளவர்கள் ஆலய நிர்வாகிகளை இந்த இ-மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும். info@srimahalakshmitemple.net

உங்கள் விண்ணப்பங்களை ஜூன் மாதம் 25ம் தேதிக்குள் அனுப்பவும்.

மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம், அதில் தங்கும் வசதி, உணவு வசதி, வரி கட்டுதல், இன்சூரன்ஸ்  பிடித்தம் போக முப்பத்து ஆறாயிரம் ரூபாய் சம்பளமாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.