Tuesday 26 March 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள்-13

காயத்ரியும் நானும் என்ன சொல்வது என தெரியாமல் ரங்கநாதன் வீட்டில் இருந்து கிளம்பினோம். சில விசயங்கள் மிகவும் விசித்திரமாகவே காட்சி அளிக்கிறது. கர்மவினை என்னை துரத்தியது.

''உங்க அக்கா பண்ணின காரியத்தை நீ பார்த்தியா''

''ம்ம்''

''இதெல்லாம் கர்ம வினையா?''

''ஆமா''

''இல்லை. இது தன்வினை. தன்வினை தன்னைச் சுடும். உங்க அக்கா எதுக்கு ரங்கநாதனை காதலிக்கனும், அப்புறம் வேணாம்னு சொல்லி நடிக்கனும். இதெல்லாம் ஒரு நல்ல பொண்ணு செய்ற காரியமா? அதுவும் நம்மகிட்ட எதுவும் சொல்லாம!''

''நீ கேட்டு இருக்கனும், நான் அவகிட்ட எதுவும் விவரமா கேட்டது இல்ல, அவளும் என்கிட்டே சொன்னது இல்ல''

''ஓஹோ அதுதான் கர்ம வினையா?''

''ஆமா''

எனக்கு காயத்ரி மீது இனம் புரியாத கவலை வந்து சேர்ந்தது. கர்ம வினை என்பதில் கருத்தாக இருக்கிறாளே என அச்சம் வந்து சேர்ந்தது. ஒருவேளை எங்களது காதல் கை கூடாமல் போனால் கர்ம வினை என சொல்லிவிடுவாளோ என அச்சம் வந்து சேர்ந்தது. வீட்டை வந்து சேர்ந்தபோது இருட்டி இருந்தது. காயத்ரியின் அக்காவிடம் நேராக சென்றேன்.

''என்ன சொன்னாங்க''

''அந்த பையனுக்கு வேற பொண்ணு பார்த்துட்டாங்களாம்''

காயத்ரியின் அக்காவின் முகம் ஏமாற்றத்தில் உறைந்து போனது போல இருந்தது.

''இல்ல அக்கா, நீயும் அவரும் காதலிக்கிறதா சொன்னாங்க. உன்னைத் தவிர வேற பொண்ணை அவர் கல்யாணம் பண்ண மாட்டாராம், பார்த்தா ரொம்ப நல்லவரா இருக்காருக்கா''

''காயூ நீ வேற வீட்டுக்குப் போனியா''

''சும்மா இரு முருகேசு, அக்கா வா தனியா பேசனும்''

அக்காவும் தங்கையுமாய் மாடிக்கு சென்றார்கள். நான் எனது அம்மாவிடம் சென்றேன். அப்பாவும் அமர்ந்து இருந்தார்.

''போன காரியம் என்ன ஆச்சு''

''அது எல்லாம் ஒன்னும் இல்லம்மா, எந்த பிரச்சினையும் இல்ல. கல்யாண செலவு வந்து இருக்கு''

''என்ன சொல்ற முருகேசு''

ரங்கநாதன் வீட்டில் நடந்த விசயத்தை விரிவாக சொன்னேன்.

''ரொம்ப சந்தோசமான விசயம் தானே''

''ஆமாம்மா, ஆனா காயத்ரி அக்கா தான்''

''தன்னோட குடும்ப நிலையை நினைச்சி அப்படி ஒரு முடிவுக்கு அவ வந்து இருப்பா''

அப்பாவின் ஆருடம் சரியாகவே எனக்குப் பட்டது. எனது தலையில் சுற்றிக் கொண்டு இருந்த கர்ம வினை என் முன்னாள் வந்து விழுந்தது. அப்பாவிடமும் அம்மாவிடமும் கர்ம வினை பற்றி சொன்னேன். அப்பா சிரித்துக் கொண்டே எழுந்தார். அம்மா முகத்தை சுளித்தார்.

''உங்க அம்மாவை கட்டிக்கிட்டது என் கர்ம வினை''

''ஆமா ஆமா, உங்களை கட்டிக்கிட்டது என் கர்மவினை''

''அம்மா, அப்பா. அப்படின்னா நான் உங்களுக்கு பிறந்தது கர்மவினையா''

வேகமாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தேன். பறந்து விரிந்த வானம். அதில் நட்சத்திரங்கள். ஒரு சின்ன நிலா. இவை எல்லாம் எந்த கர்ம வினையால் உருவானவை. இது ஒரு நிகழ்தகவா.

'Species are adopted to environmental conditions and these environmental conditions must favour to support life forms. Unless the environmental conditions support the life, there is little chance for anything to develop in that particular environment'

கர்ம வினையை தாண்டி கல்லூரியில் ஆசிரியர் சொன்ன வாசகம் தலையில் வந்து உட்கார்ந்தது.

''முருகேசு, சாப்பிட வாப்பா''

அம்மாவின் அழைப்பு சத்தம் கேட்டு உள்ளே சென்றேன். காயத்ரி, அவளது அக்கா, என் அப்பா சாப்பிட அமர்ந்து இருந்தார்கள். அப்பாதான் முதலில் ஆரம்பித்தார்.

''உங்க அப்பா பத்தி எல்லாம் கவலைப் படாதம்மா, நான் எல்லாம் அந்த பையன் கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன். இந்த வாரம் அவங்க உன்னை பொண்ணு பார்க்க வரட்டும். அந்த பையன் கிட்ட நானே சொல்றேன்''

அப்பாவின் பேச்சு முடிந்ததும் நான் சொன்னேன்.

''எதுக்கு எப்ப பார்த்தாலும் பொண்ணு பார்க்க வரனும், மாப்பிள்ளை பார்க்க போனா என்ன, அதனால இந்த வாரம் நாம போகலாம், காயூ என்ன சொல்ற''

''ம்ம், அக்காவுக்கு முழு சம்மதம்''

வரும் ஞாயிறு அன்று ரங்கநாதன் வீடு செல்வதாக முடிவு செய்தோம். நானும் காயத்ரியும் மாடிக்கு சென்றோம்.

''உன் அக்கா கிட்ட என்ன பேசின''

''கர்ம வினை''

(தொடரும்)

Friday 15 March 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 4

அடுத்தது கரிமா. இதை விண்டன்மை என்றும் உடலை மிகவும் பருமனாக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். எந்த ஒரு விசயத்தாலும் நமது உடலை அகற்ற இயலாதபடி தடிமனாக்குதல். இதெல்லாம் ஒரு விளையாட்டுத் தனமாகவே இருக்கிறது. மலைகளை, பாறைகளை எல்லாம் சுக்கு நூறாக்கிவிடும் தொழில்நுட்ப கால கட்டத்தில் உடலை தடிமனாக்கி எதன் மூலமும் அசைக்க இயலாத தன்மை என்பதெல்லாம் சற்று கடினமான விசயம் தான்.

பொதுவாகவே உறுதி என்றால் மலைகளை குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட உறுதியுடன் கூடிய உடல் பெறுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. நமது உடலில் மிகவும் முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்கள் கூட்டு தன்மையுடன் பல மூலக்கூறுகளை உருவாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட தனிமங்கள், மூலக்கூறுகள் எல்லாம் நாம் உண்ணும் உணவின் மூலம் பெற்றுக் கொள்கிறோம். திடகாத்திரமான உடல் என்பதெல்லாம் தவத்தால் வருவதில்லை. நாம் உண்ணும் உணவின் மூலமும், நாம் கடைபிடிக்கும் உடற்பயிற்சி மூலமும் வருகிறது.

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பது போல உடலின் வலு வெவ்வேறாக பார்க்கப்படுகிறது. தசைகள், நரம்புகள், எலும்புகள் என ஆன உடம்பு காற்று அடித்தால் பறந்து விடும் என இருந்தால் அதன் மூலம் பயன் என்ன? அதே வேளையில் உடலானது வெறும் தசைகளால் பருத்து இருப்பது கரிமா எனப்பட மாட்டாது. இப்படிப்பட்ட கரிமா தனை பரிசீலனை செய்ய மல்யுத்தம் போன்ற வித்தைகள் எல்லாம் வந்து சேர்ந்தன எனலாம்.

உடலில் உள்ள உறுப்பு தானங்கள் எல்லாம் இப்போது பெருகி விட்ட கால சூழலில் உடலை பேணி காப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. எதற்கும் அசைந்து கொடுக்க கூடாது என்றே குறிப்பிடப்படுகிறது. அதாவது மனம் இங்கே பெருமளவில் பேசப்படுகிறது. எந்த ஒரு தீய சக்திக்கும் அசைந்து கொடுக்காத மனது தான் கரிமா. மனது திடத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் மட்டுமே உடலின் திடத்தன்மை வந்து சேரும். எண்ணங்களை திடப்படுத்துதல். உறுதியான எண்ணங்கள். சஞ்சலமற்ற செயல்திறன் கொண்ட எண்ணங்கள்.

மன உறுதி இல்லாத பட்சத்தில் உடல் பலம் ஒரு பலனும் அளிப்பது இல்லை என உணர்த்த வந்ததே இந்த கரிமா. இப்படிபட்ட சித்தியை அனைவரும் பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மனது பலவித விசயங்களால் பாதிப்புக்கு உள்ளாகி உடல் உபாதைகள் அதிகம் ஆகிக் கொண்டே வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் உடல் எப்படி வளர்ப்பது?

உடலில் உள்ள செல்கள் தம்மை தாமே பெருக்கி கொண்டும், தங்களை தாங்களே புதுப்பித்துக் கொண்டும் வருகின்றன. ஒரு மனித வாழ்வில் இந்த செல்களில்  ஏற்படும் மாற்றமே இளமை முதுமை என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது. மார்கண்டேயன் பற்றி அறியாதவர் இல்லை. இளமையுடன், வளமையுடன், உறுதியுடன் வாழ்வது என்பது நாம் நமது எண்ணங்களை உறுதிபடுத்துவதில் தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட கரிமா சக்தி பெற்றுவிட்டால் நம்மை எவரும்அசைக்க இயலாது என்பதுதான் உண்மை. உடல் உறுதிக்கு மன உறுதி அவசியம். மன உறுதி கரிமா. அணிமா, மகிமா, கரிமா! எண்ணங்களினால் ஆனது அஷ்டமாசித்திகள்.

(தொடரும்) 

Wednesday 6 March 2013

நீ பேசுவதில் இருக்கிறது

கல்யாணத்திற்கு முன்னர்
நீ பேசமாட்டாயா
என்றே இருந்தது
கல்யாணத்திற்கு பின்னர்
நீ எதற்கு பேசுகிறாய்
என்றே இருக்கிறது
எவரோ எழுதிய வரிகள்
அவை இனி நம் வாழ்வில்
வருமா புரியவில்லை 

என்னோடு பேச
வருபவர்களைவிட
உன்னோடு
பேசிக்கொண்டிருப்பது மட்டுமே
எனக்குப் பிடிக்கும்.

உன்னை என் அம்மாவிடம்
அழைத்து சென்று
அம்மாவிடம்
உன்னைப்போல் ஒரு பெண்
என்றே உன்னை
காட்டிடத் தோணும்

அம்மாவும் தனது பாரம்
குறைந்ததாய் கண்கள்
நனைத்து கொள்வார்
என்னை காத்திட
நீ கிடைத்தாய் என்றே
பூரித்து கொள்வார்

மௌனமாய் நீ அமர்ந்து
இருந்தால்
மரணத்தை தழுவுவது
போன்றே நெஞ்சில் ஊர்கிறது

மௌனத்தை கலைத்திட
வார்த்தை ஒன்றை
தேர்ந்தெடுத்திட தேடுகையில்
ஏதேதோ பேசி முடித்துவிட்டாய்

நீ பேசிய வார்த்தைகள்
எதுவுமே நினைவில் இல்லை
மௌனத்தில் நீ அமர்ந்து
கொள்வது
மரணத்தை நான்
தழுவுவது போன்றது

இனிமேல் நீ பேசுவதில் தான்
இருக்கிறது
நமது காதலும்
காதல் வாழ்வும்.