Wednesday 5 December 2012

அதர்மபுரி - சாதீய அரசியல்

தர்மபுரியில் ஏற்பட்ட கலவரத்தின் மூலம் பாதிக்கப்பட்ட சக மனிதர்களுக்கு எமது அனுதாபங்களும், இந்த கலவரத்தின் மூலம் உயிர் இழந்த சக மனிதர்களுக்கு எமது இரங்கல்களையும் தெரிவித்துக்  கொள்கிறோம். 

சக மனிதர்களின் மனதில் அமைதியும் நற்சிந்தனையும் வளரட்டும் என்றே வேண்டுகிறோம். 
-------------------------------

வேறொரு ஊரை சார்ந்த ரெட்டியார் சாதியச் சேர்ந்தவன் எங்கள் ஊருக்கு விடுமுறைக்காக வந்தபோது, எங்கள் ஊர் சக்கிலியர் சாதி பெண்ணின் கையை பிடிச்சி இழுத்து விட்டான் என்று ஊரெல்லாம் அன்று ஒரே பேச்சாகத்தான் இருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் குடும்பமார்கள் என சொல்லப்படும் சாதி வகையைச் சார்ந்தவர்கள், மூப்பனார் சாதி வகையைச் சார்ந்தவர்கள் அந்த ரெட்டியார் பையனை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள், அவனை அடித்து துவைக்க வேண்டும்  என இந்த மூன்று கிராமங்களுக்கு அன்று கிராமத் தலைவராக இருந்த எனது மாமாவிடம் அவர்கள் வந்து சொன்னபோது, எனது மாமாவோ என்ன ஏது என விசாரிக்கலாம் என சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள், இதே உங்க வீட்டு பெண்ணை கையை பிடிச்சி இழுத்து இருந்தா இப்படித்தான் விசாரணை பண்ணனும்னு சொல்லுவீங்களோ என கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த ரெட்டியார் பையன், தான் அவ்வாறு செய்யவில்லை என்றே சொன்னதாகவும், அவன் அவனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டதால் பிரச்சினை பெரிதாகாமல் போனது என்றே நினைவில் இருக்கிறது. இது கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் முன்னர் எனது கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம்.

நான் எனது வாழ்நாளில் இந்த சாதிய வேறுபாட்டு கருமங்களை எல்லாம் ஒரு பொருட்டாக பார்த்ததே இல்லை. கிரிக்கெட் விளையாடும் போது இந்த சாதி பேதங்கள் எல்லாம் உடன் விளையாடும் பையன்கள் பேசும்போது கூட எரிச்சலாக இருக்கும். எதற்கு இப்படி பிரிவினை பார்க்கிறார்கள் என்றே தோணும். அவர்கள் எங்களை சாமி என அழைப்பதுவும் கூட எனக்கு மிக மிக வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் அவர்களைத்தான் தோட்ட, காட்டு வேலைகளுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார்கள், இருப்பினும் ஏதோ ஒருவித வேறுபாடு இருந்து கொண்டேதான் இருந்தது. சாதி விட்டு சாதி திருமணம் செய்வது கூட அவ்வளவாக எனது கிராமத்தில் நடந்தது இல்லை. தேவர் சாதி பையனை காதலித்த ஒரே குற்றத்திற்காக தனது மகளை எரித்து அந்த குற்ற உணர்விலேயே இறந்து போன தாய் எனது கிராமத்தில் தான் இருந்தார். கல்லூரியில் இருந்து விடுமுறை காலத்தில் ஊருக்கு வந்தபோது இந்த செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த பையனும் சரி, பெண்ணும் சரி எனக்குத் தெரிந்தவர்கள்தான். இங்கே சாதி பிரச்சினை என்பதைவிட கௌரவ பிரச்சினை தான் பெரிதாக இருந்தது. ஆனால் எனது கிராமத்தில் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் பற்றி அரசல் புரசலாக செய்தி வெளிவரும் போது, அந்த சம்பந்தப்பட்ட கள்ளத் தொடர்பில் இருப்பவர்கள் எல்லாம் வேறு வேறு சாதியை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் வெட்கம் கெட்ட மனிதர்கள் என்றே நினைத்து இருக்கிறேன். இன்றைய கால சூழல் சற்றே மாறி இருக்கிறது எனலாம், இருப்பினும் இன்னும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகமாகவே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இன்னமும் பல இடங்களில் அவர்களைப் பற்றிய கண்ணோட்டம் பெரிதாக மாறிவிட்டதாகத் தெரியவில்லை.

என்னுடன் படித்த நண்பர்கள் என்னிடம் மிகவும் சகஜமாகவே பழகுகிறார்கள். சாதி வேறுபாடு எல்லாம் நான் பார்த்தது இல்லை என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் குறித்தான பார்வை அவர்களிடம் இன்னமும் மாறாமல் இருக்கிறது, அது மரியாதை நிமித்தமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். இப்படிப்பட்ட கிராமத்தில் சாதி பெயரை சொல்லி எவரும் பெரிய அளவில் அரசியல் செய்தது இல்லை. பெரிய கலவரங்கள் எதுவும் ஏற்பட்டது இல்லை என்றே நினைவில் இருக்கிறது.

தர்மபுரி - இந்த ஊரின் பெயரில் என்ன இருக்கிறது எனில் தர்மம் நிறைந்த நகரம் என்பதுதான். ஆனால் அங்கேதான் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த தர்மபுரி பற்றி கேள்விப்பட்டபோது ஏதோ வழக்கமான பிரச்சினை என்றுதான் இருந்தேன். இந்த பிரச்சினையின் தீவிரம் என்னவென பார்த்தபோது ஒரு உயர் சாதி என சொல்லப்படும் சமூகம், தலித் சமூகம் மேல் கொண்டிருக்கும் வெறித்தனமான வன்மம் என்றேதான் எண்ணத் தோணுகிறது. இந்த தர்மபுரி ஒரு காலத்தில் பிரிவினை அற்ற இடமாகத்தான் திகழ்ந்து வந்து இருக்கிறது. ஆனால் சாதி அரசியல் இன்று  தர்மபுரியை தங்களது சொந்த நலனுக்கு  சூறையாடி இருக்கிறது  என்பதை மறுக்கவே இயலாது. எல்லா இடங்களிலும் சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.  அந்த பிரச்சினையின் தீவிரம் என்னவென என்பதை அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். ஆனால் நமது மக்கள் உணர்ச்சி வசப்படும் நிலையில் தான் இருக்கிறார்கள். இந்த உணர்ச்சிவயப்படுதலை இந்த சாதி அரசியல் பண்ணுபவர்கள் தங்களுக்கு சாதகமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு பையன் குடும்பம், ஒரு பெண்ணின் குடும்பம். பிரச்சினை பெண் வீட்டார், பையன் வீட்டார். இத்தோடு முடிய வேண்டிய விசயம் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினை பல வருடங்களாக புகைந்து கொண்டேதான் இருந்து இருக்கிறது. உயர் சாதி என சொல்லப்படும் சமூகம் மரம் வெட்டும் செயலைத்தான் முதலில் இந்த பிரச்சினையில் கும்பலாக தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் திரைப்படங்களில் காட்டப்படுவது போல தலித்  சமூகத்தின் வீடுகளை எல்லாம் சூறையாடி இருக்கிறார்கள். இது மனிதர்களின் பயமுறுத்தல் செயல் என்றே சொல்லலாம். இனிமேல் இப்படி செய்வீர்களா என அவர்களின் மனதில் ஒரு தீராத காயத்தை ஏற்படுத்துவதுதான் அவர்களின் நோக்கம். இந்த துயர சம்பவத்திற்கு காவல் துறையினரும் உடன்போயிருக்கிறார்கள் என்கிறது தலித் மக்கள் இனம். பொருளாதாரத்தில் தாழ்வுநிலையில் இருக்கும் சமூக மக்களின் கண்ணீரை எவருமே துடைப்பாரில்லை, துடைக்க தயாராகவும் இல்லை. தனது சாதிக்காரன் முன்னுக்கு வந்தாலே வயிறு எரியும் நிலையில் இருக்கும் மக்கள் முன்னர் தாழ்த்தப்பட்டோர் என அடையாளம் கொண்டவர்கள் முன்னேறி நிற்பது எப்படி? இதற்காகவே அவரவருக்கு இருக்கும் அடையாளத்தை உடைத்து வெளியில் வாருங்கள் என சொன்னால் எவர் கேட்க போகிறார்கள்?

இந்த சூழலில் சாதிய கணக்கெடுப்பு வேறு! அனைத்து சாதி அமைப்புகள் கூட்டம் வேறாம். வெவ்வேறு நாடுகளுக்கு எல்லாம் சென்றாலும் சாதி அடையாளம் தொலைவதும் இல்லை. நமது ஊரில் தோன்றிய இந்த சாதி ஒழிய இன்னும் பல வருடங்கள் ஆகலாம். மேலும் இந்த கலவரத்தின் முழு விபரங்களை பத்திரிகைகள் விவரித்து கொண்டு இருக்கலாம். இன்னும் இன்னும் பலர் மேடைகள் போட்டு பேசிக்கொண்டு இருக்கலாம். இது போன்ற அவலங்களை எல்லாம் தாண்டி மனித சமூகம் எழுச்சி நடை போட்டு கொண்டுதான் இருக்கிறது, ஆனால் தன்னுள் ஒரு சாதி, இனம், மொழி, என அடையாளத்தை பச்சை குத்திக் கொண்டு திரிகிறது. அப்படி இருக்கும் வரை வேறுபாடுகள் என்றேனும் ஒருவகையில் எவரேனும் ஊதிவிட்டு வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள். அதற்கு எந்த காரணம் வேண்டுமெனிலும் ஒரு காரணம் ஆகலாம். தர்மபுரியில் ஏற்பட்ட பிரச்சினை மெதுவாக தமிழக பிரச்சினையாக மாறாமல் இருக்கட்டும். அதற்கு சாதி அரசியல் பண்ணுபவர்கள் சற்று ஒதுங்கி நின்றால் நல்லது.

மேலும் விபரங்கள் அறிய: தர்மபுரி கலவரம்  


Friday 30 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 2

அஷ்டமாசித்திகளில் முதலான அணுவைப் போல் சிறியது ஆதல் என்பது எவ்வகையில் சாத்தியம் என எவரேனும் பரிசோதனையில் இறங்கி இருக்கிறார்களா என்றால்புராண கதைகளில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் உண்மையிலே இது சாத்தியமா என்றால் இதுவரை நமது காலகட்டத்தில் எவரேனும் இப்படி முயற்சித்து வெற்றி கண்டு இருக்கிறார்களா என்றால் இல்லையென்றே உறுதியாக சொல்லலாம்.

ஆனால் புராண காலத்து கதாபாத்திரங்கள் அல்லது வாழ்ந்த ஜீவன்கள் எல்லாம் முனிவர்களின் சாபத்தினால் அணிமா நிலையை அடைந்து இருக்கின்றன என்றே குறிப்பு இருக்கிறது. அகலிகை சிறு கல்லாக மாறுதல் கூட ஒருவகையில் அணிமாவை சார்ந்ததுதான். கண்ணுக்கே உட்படாத அணிமா வகை என்பது ஒருவகை பண்புதான்.

அணிமா குறித்து சொல்லும்போதே அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்வோம். எத்தனையோ முறை ஸ்ரீரங்கம் சென்ற போதெல்லாம் இந்த திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம் சென்று பார்க்க வேண்டும் என தோணவே இல்லை. இதுவரை இந்த ஆலயத்திற்கு சென்றதும் இல்லை. அட்லாண்டீசும் லேமூரியாவும் என்ற கதை எழுதிய பொது கூட திருவானைக்கோவிலில் உள்ள நூலகம் என எழுதினேனே தவிர இந்த ஆலயம் பற்றி எழுதவில்லை.மேலும் சில தருணங்களில் திருவானைக்கோவில் வழியாக செல்லாமல் மாம்பழம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் சென்றது உண்டு. சிறுவயது காலம் தொட்டே இந்த ஸ்ரீரங்கநாதர் எனக்கு மிகவும் பழக்கமாகிப் போனவர்  என இருந்தாலும் திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் மட்டும் எனக்கு பரிச்சயமே இல்லை.  சிவ வழிபாடு எல்லாம் செய்யக்கூடாது என்று இல்லை, ஏனோ இந்த அகிலாண்டீஸ்வரியும் ஜம்புகேஸ்வரரும் எனக்கு தெரியாமலே போனது.

அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தபோது ஜம்புகேஸ்வரர் கண்ணுக்குத் தெரிகிறார். யார் இந்த அகிலாண்டீஸ்வரி? பொதுவாகவே இந்து புராணங்களில் ஒரே ஒரு தெய்வம் தான் பல உருவங்களில் பல பெயர்களில் அவதாரமோ அல்லது பூமியில் பிறப்போ எடுத்து வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம் தான். அவர்களின் பூமியில் எழுந்தருளல் குறித்து மிகவும் அற்புதமாகவே எழுதி வைத்து இருக்கிறார்கள். இவை எல்லாம் சத்தியமாகவே நடந்த செயலா என்றால் எனக்குத் தெரியாது. ஆனால் திருவானைக்கோவிலில் உள்ள ஆலயம் அதற்கு சான்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் என வரலாறும், அதோடு சம்பந்தமான புராண கதைகளும் உண்டு.

சிவன், உலகம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என கயிலையில் தவம் இருக்கிறார். சிவன் நினைத்தால் இந்த உலகினை எப்போதுமே நன்றாக வைத்து இருக்க முடியும், அதாவது தீயவைகள் எல்லாம் அழித்துவிட்டால் நல்லவை மட்டும்தானே மிஞ்சும். ஆனால் அந்த தீயவைகளை கூட நல்லவைகளாக மாற்ற வேண்டி சிவன் தவம் இருக்கிறார். சிவனின் தவத்தைக் கண்டு,  பார்வதி சிவனை நோக்கி பரிகாசம் செய்கிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை கைலாயிலத்தில் இருந்து பூமிக்கு சென்று தவம் மேற்கொள்ளுமாறு கட்டளை  என்ற சாபம் இடுகிறார். கணவன் மனைவிக்குள் இருக்கும் ஊடல் எல்லாம் சிவன், பார்வதியின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாகவே உண்டு. பார்வதி இவ்வுலக சுபிட்சத்திற்கு நான் தவம் இருக்கிறேன் என சொல்லிக்கொண்டு பூமியில் அகிலாண்டீஸ்வரியாக அவதாரம் மேற்கொள்கிறார்.

அப்பொழுது அவர் தெரிவு செய்த இடம் தான் காடுகள் நிறைந்த திருவானைக்கோவில். அங்கே அவர் ஒரு நாவல் மரத்தின் கீழே தனது தவத்தை மேற்கொள்கிறார். பதிபக்தி என சொல்வார்கள். தன்னை தனியாக அனுப்பிவிட்டாரே என கோபம் எதுவும் சொல்லாமல் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து லிங்கம் செய்து வழிபடுகிறார். மணலில் கயிறு திரிப்பது சாத்தியமற்ற செயலாக இருந்தாலும் இன்றைய அறிவியல் விசயங்களில் மணலுடன் சில வேதியல் பொருட்களை சேர்த்தால் மணலில் கயிறு  திரித்தல் சாத்தியம் தான். அன்றைய கால கட்டத்தில் தனது தவ வலிமையால் பார்வதி தண்ணீரில் லிங்கம் செய்து வழிபட்டது சாத்தியமாகவே இருக்க கூடும். தண்ணீர் பனிக்கட்டியான பின்னர் அதை சிவலிங்கமாக செய்வது மிகவும் சாத்தியமே. இதனை அப்பு லிங்கம் என்றே குறிப்பிடுகிறார்கள். 

அகிலாண்டீஸ்வரியின் தவத்தை மெச்சிய சிவன் ஒருவழியாக கடைசியில் அவருக்கு தரிசனம் தருகிறார். அப்பொழுது சிவன் ஒரு ஆசிரியராக, அகிலாண்டீஸ்வரி ஒரு மாணவியாக இருந்து ஞானம்தனை சிவனிடம் இருந்து பெற்று கொள்கிறார். அதனால் தான் இந்த திருவானைக்கோவிலில் சிவனுக்கும் அகிலாண்டீஸ்வரிக்கும் திருக்கல்யாணம் கூட நடைபெறுவதில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

திருவானைக்கோவில் பெயர் வரலாறு கூட மிகவும் சுவராஸ்யம் தான். சிவனின் பக்தர்களான மலையவன் மற்றும் புஷ்பதந்தா என்பவர்கள் கைய்லாயிலத்தில் வசித்து வந்தார்கள். இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டு புஷ்பந்தாவை பூமியில் ஒரு யானையாக உருவெடுக்க சபதம் போடா, புஷ்ப்தந்தா மலையவனை ஒரு சிலந்தியாக உருவேடுக்குமாறு சபதம் இடுகிறார்கள். இங்கே அணிமாவும், மகிமாவும் சாத்தியமாகிறது. மகிமாவின் மகிமை பற்றி அடுத்தத் தொடரில் பார்க்கலாம். பூமிக்கு உருமாறி வந்தாலும் ஜம்புகேஸ்வரம் என்ற நகரை அடைந்து அங்கே சிவனை பூஜிக்கிறார்கள். அங்கேயும் இவர்களின் சண்டை ஓயவில்லை. சிலந்தியானது நாவல் மர இலைகள் சிவலிங்கம் மேல் விழாமலிருக்க சிலந்தி வலை கட்டுகிறது. ஆனால் யானையோ அது லிங்கத்திற்கு மீதான அழுக்கு என அழித்து கொண்டு தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்கிறது. இதைக் கண்டு கோபம் கொண்ட சிலந்தி யானையை கொன்றுவிடுகிறது. இவர்களது பக்தியினை மெச்சி சிவன் இவர்கள் இருவருக்கும் மீண்டும் பழைய நிலையை கைலாயித்தில் தந்துவிடுகிறார்.

மலையவன் அடுத்தொரு பிறப்பில் கோச்செங்கண்ணன் எனும் அரசராக பிறப்பு எடுக்கிறார். செங்கண்ணன் எனும் பெயர் அவரது கண்கள் பிறப்பிலேயே சிவப்பாக இருந்ததால் வந்தது என்கிறது குறிப்பு. அதாவது ஜோசியர் குறித்த நேரத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை மாபெரும் சிறப்பு அடையும் என்ற நிலை. ஆனால் குழந்தை பிறக்கும் தருணம் முன்கூட்டியே வந்துவிட தாய் ஜோசியர் குறித்த நேரம் வரும் வரை தன்னை தலைகீழாக தொங்கவிடச் சொல்கிறார். அப்படி தலைகீழாக தொங்கவிட்டதால் குழந்தையின் கண்கள் சிவந்து போனது என்கிறது குறிப்பு. அறிவியல் சிந்தனை அன்றே கோலோச்சிதான் இருக்கிறது. கோ என்றால் அரசு, அரசர். கோச்செங்கண்ணன் பல சிவ ஆலயங்களை கட்டுகிறார். அப்படி கட்டிய ஒரு பஞ்சபூத ஆலயங்களில் ஒன்றானதுதான் திருவானைக்கோவில். இந்த ஆலயத்தில் ஒரு சிறு யானை கூட நுழையக் கூடாது என பழைய பகையை மனதில் வைத்து ஆலயம் எழுப்பினான் என சொல்வது உண்டு. ஆனாலும் யானைக்கு பெயர் வந்தது. திரு என்றால் சிறப்பு. சிவனை வழிபட்ட யானை. ஜம்பு அதாவது நாவல் மரங்கள் நினைந்த காடு. திருவானைக்கா என்பதுதான் முன்னர் இருந்தது. பின்னர் திருவானைக்கோவில் என மருவியது என்கிறார்கள்.

உலகம் செழிக்க பார்வதியே அகிலாண்டீஸ்வரியாக வந்து தவம் இருந்து கூட சிலந்தி யானையை கொன்றதாகத்தான் வரலாறு குறிக்கிறது. தெய்வபக்தி நிறைந்த இருவர் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பொறாமை எண்ணம் இருவரையும் அழிக்கிறது, இருப்பினும் தெய்வபக்தியால் யோகநிலை கைகூடுகிறது. ஆனால் இது தவறான ஒன்று. காதல், அன்பு, தெய்வீகம் என சொல்லிக்கொண்டு மற்றதை அழித்தல் முறை கேடான செயல். பற்று கொண்டு இருத்தல் என்பது பற்றற்று இருத்தல் போல் இருப்பது இல்லை.

நல்ல விசயங்கள் மனதில் இல்லாது போகும்போது நாம் கூனிக்குறுகி போகிறோம். இதுதான் உண்மையான அணிமா. எண்ணங்கள் சிறுத்து போதல் எனலாம்.

(தொடரும்)


Wednesday 28 November 2012

கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்?

பக்தா என்ற குரல் கேட்டதும் எனக்கு பயமாகவே போய்விட்டது. இத்தனை நாட்கள் நிம்மதி இன்று தொலைந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் தூக்கத்தை கலைத்து வீட்டின் ஜன்னல் கதவின் வழியாக பார்த்தேன். அங்கு சாமியார் நின்று கொண்டிருந்தார். வீட்டினை திறப்பதா வேண்டாமா என மிகவும் யோசித்தேன். மீண்டும் பக்தா நான் தான் சாமியார் வந்து இருக்கிறேன் என்றார்.

நான் கதவினை திறக்காமல் பேசாமல் சென்று படுத்து விட்டேன். இருந்தாலும் மனம் திக் திக் என அடித்து கொண்டிருந்தது. அப்பொழுது வீட்டின் கதவு திறந்து கொண்ட சப்தம் எனது பயத்தை மிகவும் அதிகமாக்கியது. மெதுவாக வீட்டின் வாசற்புறம் திரும்பி பார்த்தேன். ஆமாம், வீட்டின் கதவு திறந்து சாமியார் உள்ளே வந்து கொண்டிருந்தார். இந்த அம்மாவும், அப்பாவும் இந்த நேரத்தில் எங்கு தான் போய்த் தொலைந்தார்கள் என மனம் வெகுவேகமாக அடிக்கத் தொடங்கியது.

என்னிடம் மந்திர சக்தி இருப்பதை மறந்து விட்டாயா பக்தா என்றார் சாமியார். நான் அப்பொழுதுதான் தூங்கி எழுந்தவன் போல அடடே சாமியாரா, வாருங்கள் நான் நன்றாக தூங்கிவிட்டேன் அதனால் தான் நீங்கள் வந்தது கூட தெரியாமல் போய்விட்டது என்றேன். நான் கதவை சரியாக பூட்டித் தொலைக்கவில்லை என நினைத்துக் கொண்டேன். நான் சாமானியன், பொய் பேசலாம், ஆனால் சாமியார் எதோ மந்திர சக்தி மூலம் கதவை திறந்ததாக பொய் சொல்கிறாரே என மனதில் கோபம் வந்தது.

இந்த மதிய வேளையில் கூட உனக்குத் தூக்கம் வருமா? என்றார் சாமியார். தலைவலி சற்று அதிகமாக இருந்தது, அதுதான் தூங்கிவிட்டேன் என பொய் சொன்னேன். சரி சென்று முகம் அலம்பி கொண்டு வா, நாம் ஒரு இடம் போகலாம் என்றார். எனக்கு எரிச்சலாக போய்விட்டது. நன்றாக தூங்கி கொண்டு இருந்தானை எதற்கு இந்த ஆள் வம்பு செய்கிறார் என நொந்து கொண்டேன். எனக்கு தலைவலி மிகவும் அதிகமாக இருக்கிறது அதனால் நான் எங்கும் வர இயலாது என மீண்டும் ஒரு பொய் சொன்னேன்.

சாமி, நீங்கள் தான் மந்திர சக்தியால் கதவை திறந்து கொண்டு வந்தீர்கள் அல்லவா, அது போல எனது தலைவலியை மந்திர சக்தியால் போக்கிவிடுங்களேன் என சொன்னேன். இருக்கிற தலைவலியை போக்கலாம், ஆனால் இல்லாத தலைவலியை எப்படி போக்குவது? அது எந்த மந்திர சக்திக்கும் கட்டுக்கு அடங்காதே என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் அதிகமானது. நான் பொய் சொன்னது எல்லாம் இவருக்கு தெரிந்து இருக்குமோ என அச்சம் என்னை வாட்டியது. ஆனால் அவர் பொய் தானே சொல்லி இருக்கிறார் என எனது தலையணையை நகற்றிய போது வீட்டு கதவின் சாவி எனது கைக்கு அகப்பட்டது. சாமியார் எதோ மந்திர சக்தியால் தான் கதவை திறந்து இருக்கிறார் என முடிவுக்கு வந்த வேளையில் நிறையவே யோசிக்கிறாய் என்றார் சாமியார். உடனே கிளம்பு வா போகலாம் என்றார்.

எனக்கு வர விருப்பம் இல்லை என்றேன். அதைக்  கேட்டதும் சாமியார் சிரித்த சிரிப்பு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது என்றார் சாமியார். எனக்கு ஒரு நிமிடம் மயக்கமே வந்து விடும் போலிருந்தது. ஆமாம் எனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது, இந்த கேடு கெட்ட சாமியாரை நான் பார்க்கவே வேண்டாம் என நினைத்தாலும் வந்து தொலைத்து விடுகிறார். அதோடு மட்டுமில்லாமல் என்னை எங்கோ எனது விருப்பத்திற்கு மாறாக அழைத்து செல்வேன் என துடி துடிக்கிறார். வேறு வழியின்றி நான் கிளம்பத் தயாரானேன்.

வீட்டுக்கு வந்தவருக்கு எதுவும் தர வேண்டும் என தோணவில்லையா என்றார் சாமியார். கடவுளே இந்த சாமியாரை நீ கொன்று விட மாட்டாயா என நினைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வந்தேன். இவர் கெட்ட கேட்டுக்கு பழச்சாறா தர முடியும் என நினைத்தேன். சாமியார் சிரித்துக் கொண்டே எனது உடலில் எழுபத்தி ஐந்து சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. பரவாயில்லை குடிக்கிறேன் என வாங்கி கொண்டார்.

சாமியாருடன் நானும் கிளம்பினேன். நீ எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து அதை செய்து முடித்து இருக்கிறாயா என்றார் சாமியார். ஆமாம் செய்து முடித்து இருக்கிறேன் என்றேன். சாமியார் சிரித்து கொண்டே பொய் சொல்ல வேண்டும் என நினைத்து அதை செய்துதான் முடித்து கொண்டு இருக்கிறாய் என்றார். எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது. இவருக்கு எல்லாமே தெரிந்து இருக்கிறதே என நினைத்து சாமியாரிடம் நீங்கள் இந்த உலகத்தை சீரானதாக மாற்ற நினைக்கலாமே என்றேன். நான் நினைத்து என்ன செய்ய, அந்த கடவுள் நினைக்க வேண்டுமே என்றார் சாமியார். ஆமாம் சாமி, அந்த கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் நீங்கி கோபம் கொப்பளித்தது. நல்லதை செய்ய நாம் நினைத்தால் அதை தீயதில் சென்று முடிக்கும் கடவுள் என்ன கடவுள் என்றேன். நல்ல கடவுள் என்றார் சாமியார். எனக்கு இதனால் தான் இவரை பார்க்கவே பிடிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் கடவுளுக்கு வக்காலத்து வாங்குவார். எங்கோ என்னை அழைத்து கொண்டு வந்துவிட்டார் போல என நினைத்தேன். அதற்குள், நாம் வர வேண்டிய இடம் வந்துவிட்டது என்றார் சாமியார்.

அந்த இடத்தில் எதுவுமே இல்லை. மரம், செடி கொடிகள் என எதுவுமே இல்லை. மெல்லிய காற்று மட்டுமே வீசிக் கொண்டு இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதோ இப்படிப்பட்ட இடத்தில் இருந்துதான் மரங்கள், செடிகள், மனிதர்கள், பூச்சிகள், புழுக்கள் என எல்லாமே உருவானது என்றார் சாமியார். சாமி இவைகள் எல்லாம் இறைவனால் படைக்கப்படவில்லையா? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என சாமியார் சொல்லிக் கொண்டே நான் சொல்ல வந்தது உனக்கு புரிந்து இருக்கும் என சொல்லி மறைந்து போன சமயம் பார்த்து நல்ல நாள் அதுவுமா இன்னும் என்ன தூக்கம் என அப்பா என்னை பிரம்பால் ஓங்கி ஒரு அடி அடித்தார். உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் வலிக்குமோ என நினைத்து கொண்டே நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என வலியால் துடித்துக் கொண்டே எழுந்தேன்.