Wednesday 31 October 2012

அல்வா கிண்டும்

நடிகையாகும் முன்னரே
நன்மங்கை
அட்டகாசமாய் கிண்டுவார் அல்வா
அல்வாவின் ருசியை
ஆர்ப்பரித்து பேசி செல்வர்

பாதம் அல்வா பாங்குடனே
பிஸ்தா அல்வா பிசகாமல்
கேரட் அல்வா கவனத்துடன்
இனிப்பை அளவுக்கு
சற்று தூக்கலாய்
கிண்டிய அல்வாவுக்கு
கிறங்கித்தான் போவோர் பலர்

நடிகையான பின்னரும்
நன்றாகவே கிண்டுவார் அல்வா
அல்வாவின் பக்குவம்
அவருக்கு மட்டுமே தெரிந்தது போல்
தினமும் கிண்டித்தான் வைப்பார்

அல்வாவை எவருக்கும் 
அவராக சென்று தந்ததில்லை 


அரசியலுக்கு வந்த பின்னர்
அல்வாவின் தேவை
அளவுக்கும் அதிமாகிப் போனது
ஆட்கள் எல்லாம்
வைத்துக் கொள்வதில்லை
அவரேதான் எசமானி
சாமானியனும் மறுக்காமல்
அல்வாவின் பெருமை பேசுவர்

அளவுக்கு அதிகமான அல்வா
கிண்டியவருக்கு ஒருபோதும்
தந்ததில்லை பிரச்சினை
தானாக சென்று
உண்டு களித்து இருந்தோர்க்கு
உள்ளதே எக்கணமும் பிரச்சினை

அல்வாவை எவருக்கும்
அவராக சென்று தந்ததில்லை
சொல்வாக்கு இல்லாது போனாலும்
செல்வாக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
கிண்டித்தான் மட்டுமே வைக்கிறார் அல்வா


Tuesday 30 October 2012

காதலில் வக்கிரம்

எனக்கு நீ கிடைக்காமல் போனால் 
எவருக்குமே நீ கிடைக்காமல் 
போகக் கடவது என்றே 
சாபம் இட்டதுண்டு 

தினந்தோறும் நீ வரும் பேருந்தில் 
அன்று நீ வராததை கண்டு 
அந்த பேருந்து கவிழட்டும் 
என்றே நினைத்தேன் 

உனது அழகிய முகத்தை 
நான் பார்க்கக் கூடாது 
என்று சொன்ன உன் தந்தைக்கு 
பாடம் புகட்ட 
அமிலத்தை அவரது  முகத்தில் 
தெளித்துவிட துடித்தேன் 

எனது காதலை உன்னிடம் 
சொன்னபோது 
நீ மறுத்து வெறுத்து ஒதுக்கிய 
மறுகணம் 
நான் இறந்துவிடலாம் என்றே 
கலங்கினேன்

காதலும் காதல் சார்ந்த 
இடம் கல்லறை 
என அனைவரும் 
சொல்லிவிடட்டும் என 
உன்னையும் அன்றே 
கொன்று ஓரிடத்தில் நம்மிருவரையும் 
புதைக்க பயணித்தேன் 

உள்ளத்தில் உள்ள காதலை 
தேக்கி வைக்க இயலாமல் 
உள்ளத்தில் உள்ளது எல்லாம் 
உன்னிடத்தில் மீண்டும் சொன்னபோது 
நான் தவிக்க வேண்டும் என்றே 
நீ என்னை தவிர்ப்பதாக சொன்னாய் 

என்னில் மட்டும் இல்லை 
காதலில் வக்கிரம் 
உன்னிடத்திலும் உண்டு 
கண்டுகொள்!

Saturday 27 October 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 11

கர்ம வினை என்று சொன்னபோதே  எனக்குள் ஏற்பட்ட குழப்பம் பெரியதாகவே இருந்தது. இது குறித்து நான் காயத்ரியிடம் மேலும் விவரமாக கேட்க நினைத்தேன். ஆனால் அவளோ மிகவும் அமைதியாக இருந்ததால் எப்படி கேட்பது என்றே நினைத்தேன்.

''அப்படினா நீ என்னை மறந்துடுவியா'' என்றேன். அதாவது மனிதர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே எல்லாம் இருந்தால் காயத்ரி ஒன்று ஆம், அல்லது இல்லை என்று சொல்லிவிடலாம். பதிலுக்கு காத்து இருந்தேன்.

''அதன் சொன்னேனே கர்ம வினைன்னு'' என்றாள். 'புரியலை கொஞ்சம் விளக்கமா சொல்' என்றேன். 'நீ இந்த காலேஜுக்கு வர முன்னால என்னைப் பார்த்தியா? இதற்கு முன்னால எத்தனை கேர்ல்ஸ் நீ பாத்து இருப்ப. என்கிட்டே வந்து எதுக்கு லவ் சொன்ன'. இதெல்லாம் கர்ம வினை என்றாள்.

ஒன்று நடப்பதும், நடவாமல் இருப்பதும் கர்ம வினை எனில் நமது கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறது என்பதற்கே ஒரு அர்த்தமும் இல்லாமல் போகிறதே என நினைத்து ''நாம நினைச்சா எல்லாத்தையும் ஒரு கட்டுக்குள்ள கொண்டு வந்துராலாமே'' என்றேன். ''கட்டுக்குள்ள கொண்டு வந்துதான் பாரு'' என்றாள்.

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பமில்லை. வீடு நோக்கி நடந்தோம். அம்மாவிடம் இது குறித்து கேட்க வேண்டும் போலிருந்தது. வழக்கத்திற்கு மாறாக காயத்ரியின் அக்கா வீட்டிற்கு வந்திருந்தார். அம்மாவின் முகம் கவலையில் தோய்ந்திருந்தது.

''என்னம்மா, ஒரு மாதிரியாய் இருக்க'' என்றேன். நான் வந்ததை கூட கவனிக்காதவர் போலே தென்பட்டார். மீண்டும் அம்மாவை உலுக்கினேன். 'வாப்பா' என்றவர் அடுக்களையில் நுழைந்தார். காயத்ரி என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

''அம்மா'' என்றேன்.

''பிரச்சினைக்கு மேல பிரச்சினை வந்தா என்னடா பண்ண முடியும்?'' என்ற அம்மாவின் வார்த்தை சற்றே நடுக்கம் கொண்டிருந்தது. ''விவரமா சொல்லும்மா'' என்றேன்.

''காயத்ரியோட அக்காகிட்ட ஒருத்தன் இன்னைக்கு வம்பு பண்ணியிருக்கான். இவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போய்ட்டானாம். அவனை இவளுக்கு தெரியும்னு சொல்றா'' என்றாள். ''பூ இவ்வளவுதானாம்மா, இதுக்கு எல்லாம் நீ எதுக்கு நடுங்குற'' என்றேன். ''டே பெரிய விவகாரமா ஆயிரமாடா'' என்றார் அம்மா.

''எல்லாம் கர்ம வினைம்மா'' என்றேன். ''என்ன சொன்ன நீ, கர்ம வினையா'' என்றார் அம்மா. ''ஆமாம்மா காயத்ரி அப்படித்தான் சொன்னா'' என்றேன். ''ம்ம் நாம வாங்கி வந்த வரம் அப்படி'' என்றார் அம்மா. ''யாரும்மா நாம கேட்காத வரத்தை எல்லாம் கொடுத்தது'' என்றே சொல்லி வைத்தேன். அதற்குள் அம்மா காபி எல்லாம் தயாரித்து முடித்து இருந்தார்.

நாங்கள் அனைவரும் அமர்ந்து முறுக்குதனை கடித்துக் கொண்டு காபிதனை அருந்தி கொண்டிருந்தோம். காயத்ரியின் அக்காவிடம் பையனின் விபரம் வாங்கிக் கொண்டேன். காயத்ரி நீ எதுவும் வம்பு பண்ணாத என என்னை எச்சரித்தாள்.

''பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள்'' என்றேன். இப்போ எதுக்கு சம்பந்தமில்லாம பேசற என்றார் அம்மா. ''தூசி துகளாகி, துகள் ஈறாகி, ஈர் பேனாகி, பேன் பெருமாள் ஆனது, அந்த பெருமாளை ஆக்கியது பெண்கள்'' என்றேன். காயத்ரி என்னை கோபமாகப் பார்த்தாள்.

(தொடரும்)