Tuesday 9 October 2012

எதற்காக பொய் பேசுகிறோம்?

''நீங்கள் பொய் பேசும் பழக்கம் உடையவரா?''

''ஆமாம், எப்போதாவது பேசுவது உண்டு''

''எதற்காக பொய் பேசுவீர்கள்?''

''தேவை ஏற்படின் அதற்காக பொய் பேசுவேன்''

''எந்த மாதிரியான தேவைகள்?''

''நான் பிறருக்கு நல்லவராக இருக்க வேண்டும் எனும் தேவை ஏற்படும் போதெல்லாம், எனது வாழ்வாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் பொய் பேசுவேன்''

''பொய் பேசுவது மிகவும் கடினமான ஒன்றா?''

''அது ஒரு கலை. எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை''

''பொய் பேசுவது ஒரு நோய் என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது. அது என்ன நோய்?''

''பொய் ஒரு தொற்று நோய். ஒரு பொய் சொல்லிவிட்டால் அது தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும். அது அடுத்தவரிடமும் சென்று பரவிக்கொண்டு இருக்கும். 

இதுவரை எத்தனை முறை பொய் சொல்லி இருப்பீர்கள்?''

''கணக்கில் இல்லை''

''அப்படியெனில் நீங்கள் முதலில் சொன்னது பொய்யா?''

''எப்போதாவது பொய் பேசுவேன், ஆனால் அதை கணக்கில் வைத்துக் கொண்டது இல்லை''

''நாம் பொய் பேசுவதன் உண்மையான நோக்கம் என்ன தெரியுமா?''

''பிறரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான், இது கூடவா தெரியாது. பிறரை ஏமாற்றவும் பொய் சொல்லலாம்''

''எதற்கு பிறரை ஏமாற்ற வேண்டும்?''

''நாம் நன்றாக வாழ வேண்டுமெனில் பிறரை ஏமாற்றத்தான் வேண்டும். இது இயற்கை விதி''

''இயற்கை விதியா?''

''இல்லாத கடவுளை இருப்பதாக சொன்னது கூட பொய் தான்''

''எவர் சொன்னது?''

''ஒரு சொற்பொழிவு கூட்டத்தில் ஒருவர் சொன்னார்''

''அவர் சொன்னது உண்மை  தான் என்பது தெரியுமா?''

''ஆமாம், இல்லை இல்லை. அவர் சொன்னது பொய்''

''அது எப்படி தெரியும்?''

''எனக்குத் தெரியும்''

''நீ அவர் சொன்னதை நம்பாததால் அவர் சொன்ன விசயம் உனக்கு உண்மையாகத் தெரியவில்லை. நீ ஒப்புக் கொள்கிறாயா?''

''இல்லை, அவர் சொன்னது முழுக்க முழுக்க பொய்''

''உனக்குள் ஏற்படும் பயம் ஒன்றுதான் உன்னை பொய் சொல்ல வைக்கிறது என்பது உனக்கு தெரியுமா?''

''இருக்கலாம்'' 

''பயம் இல்லாத பட்சத்தில் பொய் சொல்ல வாய்ப்பு இல்லாமல் போகும் அல்லவா?''

''அப்படி சொல்ல முடியாது. அப்படியும் சொல்லலாம்''

''சொல்ல முடியுமா, முடியாதா?''

''முடியும், பயம்  இல்லையெனில் பொய் தேவை இல்லை''

''வாழ்வில் எந்தவொரு பயம் இல்லாத பட்சத்தில் உண்மையாக இருக்க இயலும்  என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது, ஆனால் இப்போது தெரியும்''

''ஒன்றை தெரியாமல் சொல்வது பொய் இல்லை, தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி சொல்வதுதான் பொய், அதாவது தெரியுமா?'' 

''புரியலை''

''தெரியாமல் சொல்வது அறிவீனம். அறிவீனத்தை அறிவால் போக்கி கொள்ளலாம். நீ அறிவாளியா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாகத் தெரியாது''

''முட்டாளாக இருப்பது எளிது. முட்டாளாக நடிப்பது கடினம். நீ முட்டாளா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாக தெரியாது''

''இவ்வுலகில் எப்படியாவது வாழ வேண்டும் என்றே உயிரினங்கள் போராடுகின்றன. அதில் மனிதர்கள் விதிவிலக்கல்ல. தனது வாழ்விற்கு பங்கம் ஏற்படும் எனில் அதில் இருந்து தப்பிக்க பொய் சொல்வது மனிதர்களின் இயற்கை குணம். பொய் சொல்கிறோம் என்கிற ஒரு உணர்வு கூட அப்போது இருப்பதில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் மனிதர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது பொய் இல்லை என்று மேலும் மேலும் பொய் சொல்வார்கள். நீ அறிவாளி இல்லை, முட்டாளும் இல்லை. அப்படியெனில் நீ என்னவாக இருக்க கூடும்?''

''எனக்கு தெரியாது. அதுதான் சொன்னேனே நான் எப்போதாவது பொய் பேசுவேன்''

''பொய் பேசுபவரா நீங்கள்! ஒருநாளைக்கு எத்தனை முறை பொய் பேசுகிறீர்கள் என்பதை குறிப்பில் வைத்து கொள்ளுங்கள். பொய் பல நேரங்களில் உண்மை போன்றே உங்களுக்குத் தோற்றம் அளிக்கும்'' 

''ஆமாம், நீங்க பொய் பேசுவீங்களா''

''பொய், அது என்னனு எனக்கு தெரியாது''

''....''



Friday 5 October 2012

சாட்டை வலிக்கிறது

ஒரு படைப்பாளியின் நோக்கம் என்ன? ஒரு திரைப்படத்தின் நோக்கம் என்ன? சமூக ஆர்வலர்களாக தங்களை காட்டிக் கொள்ள முயற்சிக்கும் படைப்பாளிகள் என்னதான் செய்ய முயற்சி செய்கிறார்கள்? ஒரு திரைப்படத்தின் நோக்கம் வணிக ரீதியாக லாபம் அடைவது ஒன்றுதான். மற்றபடி எல்லாம் சமூகத்திற்கு இதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம், அதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் என சொல்லிக்கொள்வது எல்லாம் வெறும் கண்துடைப்புதான். எந்த ஒரு படைப்பாளியும் வெட்கம் கொள்ள வேண்டியது, வெட்டியாக படம் பிடிப்பதும், வெட்டியாக எழுதுவதும் தான். 

சமூக அவலங்களை தங்களது படைப்புகள் மூலம் துடைத்து எறிந்து விடலாம் என்றோ, சமூக அவலங்களை படம் பிடித்து காட்டுகிறேன் என தங்களது திறமைகளை பறைசாற்றிக் கொள்ள இவர்கள் கையாள்வது ஒரு ஊடகம். அவ்வளவுதான். 

சினிமா என்பது ஒரு தொழில். அதில் சேவை எல்லாம் செய்ய முடியாது. ஆனால் சேவை செய்வது போல நடிக்கலாம். நடித்து மக்களை கண்ணீர் விட வைக்கலாம். 'உச்' கொட்ட வைக்கலாம். படம் பார்த்து கெட்டுப் போனேன் என சொன்னவர்கள் ஏராளம். படம் பார்த்து திருந்தினேன் என சொன்னவர்கள் மிக மிக  குறைவு. ஒரு குடும்பம் திருந்தினாலே போதும் என்கிற முனைப்பு எல்லாம் திரைப்படங்களுக்கு சரிபட்டு வராது. அப்படி என்னதான் இந்த திரைப்படங்கள் சொல்ல வருகின்றன. 

அரசு பள்ளி ஒன்றின் இயலாத தன்மையை, ஒரே ஒரு ஆசிரியர் அடியோடு மாற்றி கட்டுகிறார். இது திரைப்படத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை எல்லாரும் அறிவார்கள். அதைத்தான் இந்த சாட்டை எனும் திரைப்படம் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் செய்து முடித்து இருக்கிறது. படத்தைப் பார்க்கும் போது ஒரு கற்பனையான உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அவலக் காதல். இதைத் தாண்டி படிக்க வேண்டும் எனும் வேகம் பள்ளி மாணவர்களிடம் வர வேண்டும் என்பதை இந்த சாட்டை கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லி இருக்கலாம். அது இந்த கற்பனை உலகத்துக்கு இன்னமும் வலிமை சேர்த்து இருக்கும். 

அத்தனை மாணவர்கள் திருந்த ஒரு ஆசிரியர் மட்டும் பொறாமை உணர்வுடன் வலம் வருகிறார். ஆஹா மிகவும் சாமர்த்தியமாக கடைசியில் மனம் மாறுகிறார். படம் ஹீரோயிசம் சொல்லி சென்றதே தவறே அடிப்படை பிரச்சனைகளை தொட்டு செல்லாதது பெரும் குறைதான். 

நான் படித்த பள்ளி அரசு பள்ளிதான். அந்த ஊரில் தனியார் பள்ளி ஒன்றும் உண்டு. இரண்டு பள்ளிக்கும் எப்போதுமே ஒரு போட்டி இருக்கத்தான் செய்யும். தனியார் பள்ளியின் சதவிகிதம் அரசு பள்ளியின் சதவிகிதத்தைவிட கொஞ்சம் கூடத்தான். அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடிக்கும் உரிமை இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களை எதிர்க்கும் தன்மை அடியோடு குறைவு. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயப்படத்தான் செய்வார்கள். போராடி படித்தும் அந்த பள்ளியின் முதல் மாணவன் பெற்றது வெறும் எழுபது இரண்டு சதவிகிதமே. இதற்கு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்வது எப்படி சரியாகும் என்றே இன்றும் நினைத்து பார்க்கிறேன். நான் படித்து களைத்ததை விட விளையாடி களைத்த நேரம் அதிகம். 

தன்னார்வம் இல்லாத எவரும் முன்னேறியதாகவோ, தம்மில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவராகவோ இதுவரை எந்த வரலாறும் எழுதி வைத்தது இல்லை.  

இந்த திரைப்படம் பலருக்கு தன்னார்வம் ஏற்பட வைக்க முயற்சி செய்து இருக்கிறது. ஆனால் தன்னில் ஒரு தன்னார்வம் இல்லாமல் போனதுதான் பெரும் குறை. சினிமா எப்போதும் சினிமா என்ற வட்டத்திற்குள்  மட்டுமே இருக்கட்டும். அது சமூகத்தை திருத்திவிடும் எனும் கனவு காண்போர்களுக்கு விழும் சாட்டை அடி பெரிய வலியைத்தான் தரும். 

படம் பார்த்த பின்னரும் திருந்தாத சமூகம் கண்டு இந்த படத்தை இயக்கிய, நடித்த, தயாரித்த இயக்குனர்களுக்கு வலிக்குமா?! 

Thursday 4 October 2012

நட்சத்திர பதிவர் இல்லாமல் தவிக்கும் தமிழ்மணம்

சார், உங்க பிள்ளைகள் மீது எத்தனை அக்கறை வைத்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? என்றே ராஜ் வீட்டின் உள்ளே வந்தார் ராம்.

அமருங்கள், வந்ததும் வராதுமாக என்ன கேள்வி இது. என்ன விசயம்? என்றே கேட்டார் ராஜ்.

'நேற்று தற்செயலாக உங்களிடம் பேசியபோது, உங்கள் பிள்ளைகள் எப்படி வேண்டுமெனில் இருக்கட்டும் என்று பேசினீர்கள். அது எனக்கு உறுத்தலாக இருந்தது. மேற்கொண்டு அதுகுறித்து நான் பேச வேண்டும் என சொன்ன போது வீட்டிற்கு வாருங்கள் பேசலாம், இப்போது நேரமில்லை என சொல்லிவிட்டு சென்றுவிட்டீர்கள். எனக்கு இரவெல்லாம் தூக்கமே இல்லை. அதுதான் அவசர அவசரமாக உங்களைத் தேடி வந்துவிட்டேன்''

''அவர்களின் சுதந்திரம் தான் நமது சுதந்திரம். அவர்கள் சுயமாக எல்லாம் தெரிந்து கொண்டு போராடி வளரட்டும், அப்போதுதான் வாழ்வின் அர்த்தம் புரியும் என்ற கோணத்தில் தான் நான் அவ்வாறு சொன்னேன்''

''ஒரு நல்ல பாதையை நாம் தான் காட்ட வேண்டும், அந்த பொறுப்பு எல்லா பெற்றோர்களுக்கும் உள்ளது. பிள்ளைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டாத பெற்றோர்களால்தான் பெரும்பாலான பிள்ளைகள் தடம் மாறி போய்விடுகின்றன''

''அப்படி எப்படி நீங்கள் சொல்லலாம்? எனது பிள்ளைகள் அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் மிகவும் ஒழுக்கமாகவும், நியாயமாகவும் நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்''

''உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகளின் விசயத்தில் எப்படி?, ஆமாம் மனைவி, பிள்ளைகள் எங்கே?''

''அவள்  கொஞ்சம் கண்டிப்பாக இருப்பாள் , ஆனால் முழு கண்டிப்பு என்றெல்லாம் சொல்ல இயலாது. மனைவி அவளது தோழி வீட்டிற்கு சென்று இருக்கிறாள். பையனும், பொண்ணும் அவர்கள் நண்பர்களோடு விளையாட சென்று இருப்பார்கள்''

''உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் எல்லாம், அதுவும் பள்ளிகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற விசயங்களில் எல்லாம் நீங்கள் இருவரும் தலையிடுவது உண்டா?''

''அப்படி எல்லாம் இல்லை. எனக்கு நிறைய அலுவல்கள் உண்டு, அவளுக்கும் நிறைய அலுவல்கள் உண்டு''

''இதைத்தான் சொல்கிறேன், பிள்ளைகளின் மீதான அக்கறை என்பது மிகவும் குறைவு. எல்லா பிள்ளைகளும் கேட்டுப் போக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இப்போதெல்லாம் இ மெயில், பேஸ்புக், டிவிட்டர் என சோசியல் நெட்வொர்க் என பெருகிக் கொண்டே போகிறது. இதில் அவர்கள் ஈடுபாடு கொண்டு தங்களது வாழ்வில் அக்கறை செலுத்தாமல் போகலாம்''

''நீங்கள் எதற்கு இப்படி என்னை பயமுறுத்துகிறீர்கள்? நானோ அவர்கள் மிகவும் நேர்மையாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்றே இருக்கிறேன். இதை எல்லாம் எனக்கு சொல்ல நீங்கள் யார் என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது''

''எதிர்கால சந்ததியினர், எதிர்கால சந்ததியினர் என சொல்லி நமது சந்ததியினர் பொறுப்பின்மையுடன்  நடந்து கொண்டால் எப்படி எதிர்கால சந்ததியினர் முன்னேற இயலும். எதற்கும் நான் அடுத்த வாரம் வருகிறேன். உங்கள் பையன், பெண் இருவரது பள்ளி நடவடிக்கைகள், உங்களிடம் உண்மை பேசுகிறார்களா, எப்படி நடந்து கொள்கிறார்கள் என அறிந்து எனக்கு சொல்லுங்கள். நான் இதுகுறித்து கட்டுரை எழுதி தமிழ் திரட்டி ஒன்றில் இணைக்க வேண்டும். அந்த திரட்டி நட்சத்திர பதிவர் இன்றி திணறிக் கொண்டு இருக்கிறது''

'' சரி சொல்கிறேன், வந்த உங்களுக்கு ஒரு காபி கூட தரவில்லை''

''பரவாயில்லை, அடுத்த முறை எனக்கு விருந்து வைத்துவிடுங்கள்''

ஒரு வாரம் ஒரு வினாடியில் கழிந்து போனது. ராம் ராஜுவை ஒரு பூங்காவில் சந்திக்க வேண்டும் என பிரியப்பட்டு அழைக்கிறார். ராஜ் சம்மதம் தெரிவித்து வருகிறார்.

''நீங்கள் சொன்னது சரிதான், என் பிள்ளைகள் என்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் மிகவும் தவறான பாதையில் போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த ஒரு வாரத்தில் ஊர்ஜிதம் செய்து கொண்டேன்''

''இதற்குதான் உங்களை நான் பூங்காவிற்கு வர சொன்னேன். வீட்டில் வைத்து பேச இயலாது. சரி, தெரிந்ததும் என்ன செய்தீர்கள்''

''காட்டு கத்தல் கத்தினேன். இரண்டு அறை கூட அறைந்துவிட்டேன். இனிமேல் இப்படி நடக்கமாட்டோம் என அழுதார்கள்''

''சரியாகி விடும் என நினைக்கிறீர்களா''

''ஆமாம்''

''இதுதான் பொறுப்பின்மை. அது எப்படி ஒரு நாளில் சரியாகும். நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வர வேண்டும். பிள்ளைகள் இனி சாமர்த்தியமாக நடந்து கொள்ளப் பார்ப்பார்கள். உங்களுக்கு இதமான விசயங்களை மட்டுமே சொல்லி உங்களை மேலும் ஏமாற்றப் பார்ப்பார்கள். வயது நிலை அப்படி, அவர்களின் பழக்கங்கள் அப்படி. நிதானமாக மாற்றப் பாருங்கள்''

''கவனமாக இருக்கப் பார்க்கிறேன்''

''நீங்கள் உங்கள் பிள்ளைகளின் குருநாதர். உங்களைப் பார்த்தே உங்கள் பிள்ளைகள் வளரும். சரி போனால் போகட்டும், பாவம் என்றெல்லாம் இருக்காதீர்கள். அதிக கண்டிப்பும் அவசியமற்றது. விசயங்களை மிகவும் தெளிவாக பேசுங்கள். என்ன சொல்கிறீர்களோ அதன்போல நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்று சொல்லி, நீங்கள் வேறு விதமாக நடந்தால் உங்கள் பிள்ளைகள் நம்ம பெற்றோர்களே இப்படி என இறுமாப்பு கொள்வார்கள்''

''விருந்து ஒன்று ஏற்பாடு செய்கிறேன்''

''அதெல்லாம் வேண்டாம். ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்தது அதுவே போதும்''

''எனது கண்களைத் திறந்து விட்டீர்கள்''

''தயவு செய்து ஒருபோதும் மூடிவிடாதீர்கள்''.