Wednesday 19 September 2012

கசாப்பு கடைக்காரர் கையில் காப்பு கட்டலாமா?

இந்தியா பயண கட்டுரைத் தொடரில் இருந்து சற்று விலகிச் செல்லலாம் என நினைக்க வைத்த ஒரு விசயம் இது. பொதுவாகவே இந்த இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் மனிதனை ஒரு கட்டுபாடுக்குள் இருக்க கொண்டு  வரப்பட்டவைதான் என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை, இருப்பினும் இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் எந்த அளவுக்கு பின்பற்ற முடியும் என்பதில் ஒரு பல பரீட்சையே செய்து கொள்ளலாம் என்றுதான் எண்ணத் தோணுகிறது.

 சென்ற வருடம் லண்டனில் உள்ள கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்ற போது, கையில் காப்பு கட்டச் சொன்னார்கள். இந்த பிரமோற்சவம் வருடாந்தோரும் ஆகஸ்ட் மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும். பத்து நாட்களில் கடைசி ஞாயிறு அன்று தேர்த்திருவிழா நடைபெறும். திங்கள் கிழமை அன்று விழா இனிதே முடிவடையும். இப்படி இருக்கும் பட்சத்தில் சில கட்டுபாடுகள் சொன்னார்கள். மனைவியுடன் உறவு கொள்ளாது இருத்தல். அசைவ உணவு சாப்பிடாது இருத்தல், சுருக்கமாகஸ் சொன்னால் அக சுத்தம், புற சுத்தம் என சுத்தமாக இருத்தல். லண்டனுக்கு வெளியில் செல்லாது இருத்தல் போன்ற கட்டுபாடுகள். நான் ஏற்கனவே ஸ்பெயின் தீவான மயோர்கா செல்ல முடிவு எடுத்து இருந்ததால் காப்பு கட்ட வேண்டாம் என நினைத்து காப்பு கட்ட மறுத்துவிட்டேன்.

ஆனால் இந்த வருடம் காப்பு கட்ட வேண்டிய சூழல் வந்தது. முதலில் வேண்டாம் என்றுதான் நினைத்தேன், ஏனெனில் எனக்கு இது போன்ற சடங்கு சாத்திரங்களின் கட்டுபாடுக்குள் சிக்கி கொள்ள விரும்புவதில்லை. இதைக் கட்டினால் இது எல்லாம் செய்யக் கூடாது என சொல்லப்படும்போது அதைக் கட்டிக்கொண்டு செய்யக் கூடாததை செய்தால் என்ன நடக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் சற்று அதிகமாகவே உண்டு. எனக்கு காப்பு கட்ட வேண்டிய நேரம் வந்தபோது ஐயர் சற்று அதிகமாகவே தயங்கினார். எனது மன நிலை அவர் அறிந்து வைத்து இருந்தாரா என தெரியவில்லை. விழா முடிந்ததும் கேட்டுவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.

சரி, கட்டுங்கள் சாமி என்று சொல்லி கெட்டியாக கட்டியாகிவிட்டது. எதுக்கு கட்டினோம் எனும் மனநிலை வேறு. வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் காப்பு கட்டிவிட்டு வந்துவிட்டேன் என காட்டினேன். எதற்கு இதெல்லாம் என்றே கேட்டார்கள். ஏனெனில் நான் எப்போதுமே இதுபோன்று செய்து கொண்டது இல்லை. கட்டிவிட்டு விட்டார்கள் என்றேன் அப்பாவியாய். உங்கள் சம்மதம் இல்லாமலா கட்டினார்கள் என்றதும் இல்லை வேறு வழியின்றி கட்டிக்கொண்டேன் என சொன்னதோடு நாம் எனது கையில் காப்பு இருக்கும் வரை சற்று தள்ளி இருக்க  வேண்டும் என்றேன். இதை  மீண்டும் மீண்டும் சொல்லி வைத்தேன். அருகில் அருகே தூங்குவது கூட தவறோ என்று மனைவி சொல்ல அதெல்லாம் எவர் சொன்னது என்று அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்றே சொல்லியாகிவிட்டது.

முதல் நாள் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் அன்பின் மிகுதி அதிகமாகவே இருந்தது. அடுத்த நாள் இரவு மிகவும் அன்பாக பல விசயங்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில் எங்கள் இருவருக்குள் ஒன்றுமே இல்லாத விசயம் குறித்து கருத்து வேறுபாடு வந்தது.  ஏதேனும் ஒரு மாலை வேளையில் ஒரு புது வீடு பார்க்கலாமா என்றார் மனைவி. நானோ இந்த பத்து நாட்கள் என்னை எங்கும் அழைக்காதே என்று சொன்னேன். இதுதான் நடந்தது. அதற்கடுத்து எதற்கு பத்து நாட்கள் எதுவும் செய்ய கூடாது என்று ஆரம்பித்து சின்ன ஊடல். எனக்கோ என்ன இது என தோணியது. நம்மை இறைவன் பிரித்து வைக்க சதி பண்ணுகிறான் என்று காப்பு மீது பழியை போட்டு விட்டு இரண்டாம் கழிந்தது. காப்பு குறித்து எனது மனைவி சற்று பயந்தே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காப்பு கையில் இருக்கிறது, கவனம் என்றே சொன்னார். அன்னியோன்யம் அநியாயத்திற்கு விலகி நின்றது. எனக்கே ஆச்சர்யம்.

மூன்றாம் நாள் மீண்டும் சகஜ நிலை. அன்றுதான் நினைவு வந்தது, அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும், அங்கே இந்த வாரம் கிட்டத்தட்ட ஐம்பத்தி நான்கு கினி பிக்ஸ் கொல்ல வேண்டும் என. அது எனது ஆய்வகத்தில் உள்ள மற்ற நபரின் வேலை. அவருக்கு முன்னரே இதே வேலையில் உதவியதால் இந்த முறையும் செய்ய வேண்டிய நிலை. இந்த வேலையை ஒரு வாரம் தள்ளிப்போட்டு இருந்து இருக்கலாம். ஆனால் காப்பு கட்டப் போகிறேன் எனும் நினைப்பு எல்லாம் முன்னரே இல்லை. அதனால் எல்லா கினி பிக்ஸ் வந்து சேர்ந்துவிட்டது. செய்தே ஆக வேண்டிய சூழல்.  அடடா, ஆராய்ச்சி வேலையில் பல உயிரினங்களை கொல்ல வேண்டி இருக்கிறதே, இதை மறந்து கையில் காப்பு கட்டிவிட்டோமே என நினைத்தேன். அதை மனைவியிடம் சொல்லி வைக்க, உங்களை எல்லாம் எவர் காப்பு கட்ட சொன்னது என்றார்.

வேலைக்கு சென்றேன். கையில் இருக்கும் கயிறு குறித்து தற்போது எவரும் கேள்வி கேட்கவில்லை. இதற்கு முன் சில வருடங்கள் முன்னர் இந்தியா சென்று திரும்பிய போது கையில் கோவிலில் வாங்கிய கருப்பு கயிறு கட்டி இருந்தேன். வேலை இடத்தில் ஒரு உணவு விருந்தில் கையில் என்ன கருப்பு கயிறு என சைனா மாணவன் கேட்க நான் பதில் சொல்லும் முன்னரே கடவுள் நம்பிக்கை இல்லாத எனது ஆசிரியர் அந்த கயிறு இவன் உயிரை காப்பற்றும் என்று சிரித்து வைத்தார். அன்று மாலையே கயிறுதனை கழற்றிவிட்டேன். இந்தியாவில் இருந்தபோது எல்லாம் முருகன் டாலர் வைத்த கயிறு, கையில் கருப்பு கயிறு. அட அட என்ன பக்தி மாயம். எல்லாம் தொலைந்து போனது, என்னையும் சேர்த்து.

முதல் நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. அடுத்த நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. கையில் இருந்த காப்பு மனதை உறுத்தவே இல்லை. எந்த ஒரு விசயத்திற்கும் காழ்ப்புணர்வு கழித்த மனம் சுத்தமாக இருந்தால் போதும் என்றே உலகில் சொல்லி இருக்கிறார்கள். காப்பு கட்டிய காரணத்தால் மட்டுமே அக சுத்தம், புற சுத்தம் கவனிக்க வேண்டிய ஒன்றில்லை. அக சுத்தம், புற சுத்தம் எல்லாம் எல்லா நேரங்களிலும் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை எவரேனும் மனித குலத்திற்கு பொட்டில் அடித்தாற்போல் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தினம் தினம் கையில் இருக்கும் காப்பு நினைவுறுத்துவதை போல சொல்லி வைப்பார்களா?

இதற்குதான் இந்த மதத்தில் கசாப்பு கடைக்காரர் மற்றும் நிமிடந்தோறும் நாராயண நாராயணா என சொல்லும் நாரதர் கதை உலகுக்கு சொல்லப்பட்டது. கசாப்பு கடைக்காரர் மோட்சம் அடைந்ததை கண்டு, உன் பெயரையே இரவும் பகலும் உச்சரிக்கும் தனக்கு இன்னமும் மோட்சம் கிட்டாதது குறித்து நாராயணரிடம் கேட்கிறார் நாரதர். அதற்கு நாரணனோ இதோ இந்த கிண்ணத்தில் இருக்கும் எண்ணையை கொட்டிவிடாமல் சுற்றி வா என்கிறார். சுற்றி வருகிறார் நாரதர். எத்தனை முறை நாராயணா சொன்னாய் என்கிறார் நாரணன். நமோ நாராயணா, எனது கவனம் எல்லாம் கிண்ணத்தில் இருக்கும் எண்ணை கொட்டிவிடக்கூடாது என்பதில் தான் இருந்தது, பெயர் உச்சரிக்கவே மறந்து போனேன் என்கிறார் நாரதர். நாராயணன் சிரிக்கிறார். நாரதர் அர்த்தம் புரிந்து கொள்கிறார். இறைவன் பெயரில் மட்டும் சுத்தம் என விரதம், முடி கட்டுதல், பாதை யாத்திரை நடத்தல் என செய்வதை விட எல்லா காலங்களிலும் மனிதர்கள் நியாயம், தர்மம் என கட்டுபாடுக்குள் இருக்க ஒரு காப்பு வேண்டும். அதை எங்கே பெறுவது, எப்படி எல்லாருக்கும் கட்டுவது? 

Friday 14 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 4

முதலில் நல்லியில் துணிகள் வாங்கலாம் என ஐயர் அழைத்து சென்றார். வேஷ்டிகளும், துண்டுகளும் மட்டுமே அதிகமாக வாங்கினார். நல்லியில் முடித்து கொண்டு லிஸ்ட் கொடுத்த பொருட்கள் வாங்க மீண்டும் அதே இடத்திற்கு சென்றோம். ஆடி கார்த்திகை என்பதால் கோவிலில் கூட்டம் நிறைந்து இருந்தது, அதோடு அந்த பாதையை அடைத்து வைத்து இருந்தார்கள். காரினை நிறுத்த எங்குமே இடம் இல்லை. என்ன செய்வது என புரியாமல் முழித்து நின்றோம். 

அப்போது ஒரு சின்ன கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்த பக்கத்தில் அப்படி அப்படியே கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடம் நோக்கி காரினை நிறுத்தினோம். ஐயர் பைக்கில் முன்னமே அந்த இடம் சென்று இருந்ததால், டிரைவர் நண்பர் காரிலிருந்து கடையை நோக்கி சென்றார். அப்போது ஒரு வேன் பக்கத்தில் வந்து நின்றது. மற்றொரு கார் எங்கள் கார் மறித்து நின்றது. எப்படி இந்த வேன், கார் எல்லாம் எடுப்பது என மலைப்பாக இருந்தது. 

நிறைய பொருட்கள் என்பதால் ஒரு சைக்கிள் ரிக்சாவில் கொண்டு வருகிறோம் என தகவல் வரவே காத்து இருந்தோம். அதே போல எடை நிரப்பும் வண்டி ஒன்றில் அனைத்து பொருட்களும் வந்து இருந்தது. அதற்கு முன்னர் அருகில் இருந்த வேன் மிகவும் குறுகிய இடைவெளியில் அந்த இடத்தை விட்டு சென்றது கண்டு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் காருக்கு முன் இருந்த கார் அப்படியே நின்று கொண்டு இருந்தது. 

சாக்கு மூட்டைகள் காரின் பின்புறம் ஏற்றினார்கள். துரியோதனன் தனது வீட்டினை வைக்கோல் மூலம் அடைத்து விட்டது போல காரின் பின்புறம் அடைக்கப்பட்டது. ஹோமம் கட்டைகள் சில வண்டியின் மேற்புறம் போட்டார்கள். அதே குறுகிய இடைவெளியில் கார் பயணித்தது கண்டு ஹூம் என்றே பெருமூச்சு விடத் தோணியது. எத்தனை நெரிசல்களிலும் லாவகமாக கார் ஓட்ட வேண்டுமெனில் இந்தியாவில் மட்டுமே கற்று கொள்ள இயலும். 

கார் பயணித்த சில வினாடிகளில் போக்குவரத்து போலீசார் காரினை ஓரம் கட்ட சொன்னார். மறுபடியும் குளிர் தாளுக்கு பிரச்சினையா என நினைக்க, டிரைவர் நண்பர் சென்று பேசிக்கொண்டே இருந்தார். என்ன பிரச்சினையோ என தெரியாமல் காருக்குள் அமர்ந்தே இருந்தோம். திரும்பி வந்தவர் காரில் லோடு ஏற்றியது குற்றம் என சொல்வதாக சொன்னார். அப்போது இன்சூரன்ஸ் படிவம் கேட்க இவரோ இரண்டு நாட்கள் காலாவதியாகிப் போன இன்சூரன்ஸ் படிவம் வைத்து இருந்தார். புதுப்பிக்கப்பட்ட இன்சூரன்ஸ் படிவம் வீட்டில் இருப்பதாக சொல்ல எனக்கோ 'அடக்கடவுளே' என்று இருந்தது. கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் வரை கேட்பதாக சொன்னார். சரி கட்டிவிட்டு வாருங்கள் என்றேன். அதெல்லாம் தேவையில்லை என சொன்னவர் போலிஸ் ஒருவருக்கு தொலைபேசி போட்டு பேசினார். 

அந்த நேரம் வந்த ஐயர் சென்று அவர்களிடம் பேச, அவர்களோ மிகவும் உறுதியாக இருப்பதாகவே தெரிந்தது. நம் மீது தான் குற்றம், இதில் அவர்கள் மீது என்ன கோபப்பட வேண்டி இருக்கிறது என்று நினைத்தே நான் எப்போதுதான் காரினை விடுவார்கள் என யோசித்தவாறே அமர்ந்து இருந்தேன். காரினை பிடித்து வைத்துக் கொள்வார்களா என்று அப்பாவியாய் கேட்டேன். இதோ வருகிறேன் என டிரைவர் நண்பர் சென்றார். அவர் கையில் வைத்து இருந்த போனை எடுத்து போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்தார். அவரும் சிறிது நேரம் பேசிவிட்டு இவரிடம் போனை கொடுத்தார். சிறிது நேரத்தில் டிரைவர் நண்பர் முன்னூறு ரூபாய் கட்டிவிட்டு வந்தார். அந்த ரசீது பார்த்தபோது வேகமாக சென்றதற்காக அபாரதம் போட்டு இருந்தது. ஹூம் இந்தியா. 

எல்லோரும் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள். நேர் வழியில் இங்கே வாழ்வது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் இந்த இந்தியாவை ஒருபோதும் சீர்திருத்த போவதில்லை. இன்சூரன்ஸ் படிவம் வைக்காத குற்றத்திற்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். லண்டனில் எல்லாம் இன்சூரன்ஸ் படிவம் எல்லாம் கையில் வைத்து இருப்பதில்லை. கார் எண் தட்டினால் போதும், காரின் மொத்த வரலாறும் தெரியும். இன்சூரன்ஸ் புதுபிக்கபட்டதா நகல் வேண்டும் என்று வேறு அந்த போலீசார் கேட்டாராம். அங்கேயே பேக்ஸ் வசதி வைத்து இருந்தால் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி ஏதேனும் தவறு எனினும் இத்தனை நாளுக்குள் நகல் அனுப்பி வை என விட்டுவிடலாம். காரினில் லோடு ஏற்ற கூடாது என்பதற்கான சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. 

எனக்கு இனி எத்தனை போலீசார் பிடிப்பார்களோ எனும் அச்சம் வேறு. அடுத்த நாள் ஹோட்டலில் இருந்து கிளம்பும் முன்னர் இன்சூரன்ஸ் படிவம் வந்தால் மட்டுமே காரை எடுத்து செல்லலாம் என நான் சொல்லி வைத்தேன். அதைப்போலவே டிரைவர் நண்பரின் அண்ணன் அங்கும் இங்கும் அலைந்து மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். கிராம பகுதியில் ஸ்கேன், பேக்ஸ் எல்லாம் வசதி ஒன்றும் பெருகிவிட வில்லை. டிரைவர் நண்பர் எவ்வளவோ சொல்லியும் நான் இன்சூரன்ஸ் படிவத்துடன் தான் செல்ல வேண்டும் என சொன்னது வீணான விசயமாகவே இருந்தாலும், முக்கியமான விசயமாகவே எனக்கு தெரிந்தது.  அதற்கு பின்னர் எவரும் காரை பிடிக்கவே இல்லை. 

நகரத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என நினைத்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு வரை செல்ல வேண்டிய நிர்பந்தம். எனவே மீண்டும் அதே போக்குவரத்து நெரிசல். விஜயகாந்த் வீடு சென்றபோது மாலை மணி மூன்று. சாலையில் குழி தோண்டி போட்டு இருந்தார்கள். அவரது வீட்டில் காவல் போடப்பட்டு இருந்தது. இருப்பினும் எவரும் எளிதாக செல்லுமாறு வீட்டின் வெளிவாயில் திறந்தே இருந்தது. 

சென்னையில் இருந்து கிராமம் நோக்கிய பயணம். நகரத்தை விட்டு வெளியேறவே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிப்போனது. கார் சென்ற வேகம் மிரள செய்தது. இடம் செல்கிறார்கள், வலம் செல்கிறார்கள். ஒரு ஒழுங்கு முறை இல்லை. மெதுவாக செல்லும் வண்டி வலம் செல்கிறது. ம்ஹூம். போதும் போதும் என்றாகிவிட்டது. 

இரவெல்லாம் பயணித்து வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி ஒன்று. அப்பாடா என்று இருந்தது. தமிழகம் மட்டுமே இப்படியா! 

(தொடரும்) 

Wednesday 12 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 3

கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என்பதால் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க லண்டனில் இருந்து வருகை தந்த ஐயர் அவர்களை சந்திக்கும் ஏற்பாடு இருந்தது. நேராக கோயம்பேடு வந்து விடுங்கள் அங்கே இருந்து பாரிமுனை பக்கம் செல்லலாம் என சொன்னார். 

நாங்கள் அவரை சந்தித்த நேரம் மாலை நான்கு மணி மேல் இருக்கும். பைக்கில் வந்தவர் காரில் ஏறாமல் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். நேரம் ஆகி கொண்டு இருக்கிறதே, கடைகள் எல்லாம் மூடிவிடுவார்கள் எனும் அச்சம் வேறு. சின்ன சின்ன தெருக்களில் கார் சென்றபோது எத்தனைவிதமான இடைஞ்சல்களில் இந்தியாவில் வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது என எண்ணிக் கொண்டேன். 

அவரது வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்குள் சென்றபோது நேரத்தின் மீதுதான் கண் இருந்தது. சில இயந்திரங்களை  முன்னரே வாங்கி வைத்ததாக காட்டினார். இவர் லண்டனில் ஏற்கனவே பணி புரிந்துவிட்டு மீண்டும் லண்டனில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்காக ஓராண்டு முன்னர் தான் லண்டனில் உள்ள கோவிலில் இணைந்தார். வெளிநாட்டில் பணி புரிவதன் மூலம் வாழ்க்கையின் தரம் உயர்ந்துவிடுவதாக அவர் சொன்னபோது மறுக்க இயலவில்லை. ஆனால் அதற்கடுத்து நான் கண்ட காட்சிகள் இந்தியாவில் உள்ள திறமைமிக்க வியாபாரிகள் போல உலகில் காண்பது சற்று கடினம் தான் என்றே எண்ண தோன்றியது. 

முதலில் தேவையான ஆராதனை பொருட்கள், கலசங்கள், குத்துவிளக்கு, குடை என வாங்கிட மிகவும் குறுகலான தெரு ஒன்றில் சென்றோம். இருபுறமும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவ்வப்போது சாலையில் ஆட்டோ வந்து போய் கொண்டிருந்தது. நடப்பதற்கே மிகவும் கடினமாக இருந்தது. அந்த தெருவில் இருந்த சில கடைகளில் விசாரிக்க ஒரே பொருளின் விலை வேறு வேறாக இருந்தது. சரி என ஐயர் தனக்கு தெரிந்த ஒரு கடைக்கு அழைத்து சென்றார். கடை மிகவும் சிறிதாக இருந்தது. இந்த கடையில் என்ன பொருட்கள் இருந்து விடப்போகிறது என நினைக்க மாடிக்கு அழைத்து சென்றார்கள். அங்கே நிற்கவே இடம் இல்லாமல் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. எந்த பொருள் கேட்டாலும் அங்கே வேலை செய்தவர் ஓடோடி எடுத்து காண்பித்தது ஆச்சர்யமாக இருந்தது. இல்லாத பொருளை கூட இல்லை என சொல்லாமல் இரண்டு நாட்கள் கழித்து வாங்கி கொள்ளுங்கள் என கணக்கு போட்டபோது ஓரிரு மணி நேரங்களில் லட்சம் ரூபாய்க்கான வியாபாரம்! சில்லறை வியாபார கடைகள் முதலாளிகளிடம் பேசினால் தான் கடைகளின் நிலவரம் புரியும் என நினைக்க கடைகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து போய் கொண்டிருந்தார்கள் மக்கள். 

அடுத்தொரு கடை. அங்கே ஹோமத்திற்கு தேவையான கட்டைகள், குங்குமம் போன்ற பொருட்கள். அந்த கடையும் சிறிதாகத்தான் இருந்தது. நாங்கள் அந்த கடையை சென்றடைந்தபோது இரவு பத்து மணி இருக்கும் என்றே நினைக்கிறேன். கடையை மூடும் நேரம். லிஸ்ட் கொடுங்க, இரண்டு நாள் கழிச்சி வாங்கிகோங்க என்றார். அவரது மேசையில் கணினி இல்லை, கால்குலேட்டர் இல்லை. ஒவ்வொன்றாக சொல்ல விலை போட்டு கொண்டே வருகிறார். இது கிடைக்கும், இது பக்கத்து கடையில்  வாங்கிகொள்ளுங்கள் என வேகமாக சொல்லிக்கொண்டே செல்கிறார். அடுத்து விறு விறுவென மொத்த கணக்கையும் போட்டு காட்டியபோது எனக்கு சரிபார்க்க மனமே வரவில்லை. சரி முன் பணம் கொஞ்சம் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். 

துணிகள் இனிமேல் வாங்கமுடியாது, நல்லி சில்க்ஸ் நாளை வாருங்கள் என ஐயர் இடம் சொல்லி அனுப்ப இரவு சாப்பாடு மெக்டோனல்ட்ஸ் சென்று நாங்கள் சாப்பிட்டோம். நான் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான். எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. அவனுக்கு தமிழ் தெரியாதோ என நான் நினைக்க அங்கே வேலை பார்க்கும் மற்றொரு பையனிடம் தமிழில் பேசினான். சரி என நான் மீண்டும் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் மட்டுமே என்னிடம் பதில் சொன்னான். தமிழில் சொல்லுங்க என நான் சொன்னது அவனது காதில் விழவே இல்லை. மொழி தொலைந்து போய் விடும் அநாகரிகம்! நகரத்தில் மட்டுமே இப்படி, அதனால் அச்சப்பட தேவையில்லை என்றே டிரைவர் நண்பர் சொன்னார். 

பன்னிரண்டு மணிக்கு ஹோட்டல் அடைந்தபோது அன்றைய தின அலைச்சல் எல்லாம் தொலைந்திட மீண்டும் பெய்த மழைத் தூறலில் சிறிது நேரம் நடந்தோம். காலையில் எழுந்தபோது எட்டு மணி மேல் ஆகி இருந்தது. கிளம்பி தயாராக பத்து மணி ஆகி இருந்தது. இனி சாப்பாடு கிடையாது என நினைத்து ஹோட்டலில் இருக்கும் உணவகம் செல்ல பத்தரை மணி வரை உணவகம் திறந்து இருக்கும் என்றார்கள். கொஞ்சம் நிம்மதி. இட்லி, பொங்கல் வடை என நமது உணவு. பேசாமல் இந்த உணவுக்காகவே இந்தியாவில் வாழ்ந்துவிட்டு போகலாம் என்றே தோணியது. 

திடீரென எனது மனைவி, அதோ ஒரு நடிகை என்றார் (வீட்டில் சன் டிவி, டிவிடி படம் நாங்கள் பார்ப்பது உண்டு). நாங்கள் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து மூன்று நாற்காலி தள்ளி தனது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார் நடிகை ஜெனிலியா. அவரைப் பார்க்க வேண்டும் என எவரும் ஓடவில்லை. அங்கே பலரும் சாதாரணமாகவே இருந்தார்கள், நாங்கள் உட்பட. அங்கே மிகவும் சாதாரணமாக அவராலும்  இருக்க முடிந்தது. இந்தியாவில் சினிமாவிற்கு என ஒரு தனி இடம், சினிமா கலைஞர்களுக்கு என தனி மரியாதை இருந்தாலும் அங்கே எதுவும் தென்படவில்லை. 

ஹோட்டலில் இருந்து சென்னை வரவே மதியம் ஆகிப்போனது.  மீண்டும் வேறு சில கடைகள் சென்றோம். நல்லியில் சாமிக்கு தேவையான உடைகள் வாங்கினோம். புது நல்லி, பழைய நல்லி என இருப்பது அன்றுதான் தெரிந்து கொண்டேன். சென்னையில் இருந்த சகோதரர் வீடு சென்றோம். அங்கிருந்து மற்றொரு உறவினர் வீடு சென்றோம். மேலும் சில உறவினர்கள் வீடு இருந்தாலும் செல்ல இயலவில்லை. உறவினர் வீடு சென்றபோது இரவு பத்து மணி. தைக்க கொடுக்கப்பட்ட துணி வாங்கிட அன்று முடியாமல் போனது. நாளை எப்படியாவது வாங்கித்தான் ஆக வேண்டும். சென்னையில் இருந்த போக்குவரத்து நெரிசல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல ஆகும் நேரம் எல்லாம் கணக்கில் வைத்து ஹோட்டலில் இருந்து நாளை மறுநாள் அப்படியே அங்கிருந்து நகரத்திற்குள் வராமல் கிராமம் சென்று விடலாம் என நினைத்தோம். 

அடுத்த நாள் வழக்கம்போல காலை உணவு. அன்று போக்குவரத்து போலீசார்... இந்தியா என்றுமே இந்தியாதான். 

(தொடரும்)