Thursday 2 August 2012

எல்லாம் அந்த காலமய்யா

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்
நிகழ்காலமும் கடந்த காலம்
ஆகும் வரை.

ராமநாதனும், ராமச்சந்திரனும் பால்ய கால நண்பர்கள். ராமநாதனை சந்திப்போம் என்று ஒருபோதும் ராமச்சந்திரன் நினைத்ததே இல்லை. ராமச்சந்திரனை சந்திப்போம் என்று ஒருபோதும் ராமநாதனும் சிந்தித்தது இல்லை. ஆனால் இருபது வருடங்கள் பின்னர் ஒரு நாள் இவர்களுக்கு இடையில் சந்திப்பு நடந்தேறியது. பழைய கதைகளை பேசி கசிகின்றன இவர்களது பொழுதுகள்.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்.

ராமநாதன் தனது கதைகள் சொல்லி முடிக்க, ராமச்சந்திரன் தனது கதைகள் சொல்லி முடிக்க இவர்களின் இருபது வருட வாழ்க்கை பரிமாறப்படுகிறது. இந்த இருபது வருட கால கட்டத்தில் ராமச்சந்திரனால் ராமநாதனுக்கோ, ராமநாதனால் ராமச்சந்திரனுக்கோ எந்த வித உதவியோ, உபத்திரவமோ இல்லை. இருவரும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழலில் வாழ்ந்துதான் பழகிப் போனார்கள்.

'ராமநாதா, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் துடிதுடிச்சி போயிருவேன், ஞாபகம் இருக்கா' என்ற ராமச்சந்திரனை நோக்கி 'உனக்காக நம்ம கணக்கு வாத்தியார் மண்டையை பொளந்தேன், இன்னும் அவர் என்னை மறந்து இருக்க மாட்டாரு' என்றார் ராமநாதன்.

'அது எல்லாம் அந்த காலமய்யா, சுதந்திரமா சுற்றி திரிஞ்சி நமக்கு எந்தவித பொறுப்பும் இல்லாம அந்த காலம் எல்லாம் திரும்ப வருமாய்யா' என்றார் ராமச்சந்திரன்.

'நம்ம பிள்ளைகள இப்போ அதே நிலைமைக்கு நம்மால விடமுடியுதா, நம்ம காலம் வேற' பெருமூச்சு விட்ட ராமநாதன்.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்.

இ மெயில், செல்பேசி எண்கள் என பரிமாறிக் கொண்டார்கள். இந்த சந்திப்பு ஒன்றும் திட்டமிட்டது அல்ல. இனிமேல் சந்திப்புகள் திட்டமிடப்படும். இனி நடப்பவைகளை பற்றி பேச இருபது வருடங்கள் இனி காத்துக் கொண்டிருக்க வேண்டியது இல்லை, இருபது நொடிகள் போதும். தொழில்நுட்ப வசதிகள், வாய்ப்புகள் என எல்லாம் பெருகிக்  கொண்டே போகின்றன.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்
நிகழ்காலமும் கடந்த காலம்
ஆகும் வரை. 

Friday 20 July 2012

எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு

இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை.

நான் மெதுவாக அவரிடம் சென்று "சாமி" என்றேன்.

மூடிய கண்களைத் திறந்தவர் "என்ன இந்த பக்கம்" என்றார்.

"எங்கே உங்கள் சிஷ்ய கோடிகள்"

"கடந்த சில நாட்களாக எவரும் இங்கே தென்படவில்லை"

"என்ன காரணமாக இருக்கும்"

 "தெரியவில்லை"

"சாமி நீங்கள் சற்று கிளுகிளுப்பான சாமியாராக இருந்து இருந்தால் எல்லாரும் மயக்கத்தில் வந்து இருந்து இருப்பார்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் பூமி, ஆகாயம், நட்சத்திரம் என சொல்லிக் கொண்டிருந்தால் எவர் உங்களைத் தேடி வருவார்கள்"

"இதோ நீ வந்து இருக்கிறாயே"

 எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அட கருமமே, என நினைத்துக் கொண்டு

"இல்லை சாமி, பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே என்று வந்தேன்".

"சரி உட்கார்"

நான் மறு பேச்சின்றி அமர்ந்தேன்.

"நீ பூமி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சொன்னாய் அல்லவா"

"ஆமாம் சாமி, பக்தா என என்னை எதற்கு கூப்பிட மறுக்கிறீர்கள்"

"பக்தா என்றால் உனக்குப் பிடிக்காதே, சரி சரி பூமி பற்றி கேள்"

"ஆமாம் சாமி இத்தனை கோளங்கள் இருக்க பூமியில் உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கு காரணம் இயற்கை தேர்வு என சொல்கிறார்களே, அதாவது ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை என்று"

"சரி, ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை, அப்படியெனில் இந்த இயற்கை இப்படி இருக்க வேண்டுமென எவர் படைத்தது?"

அட கண்றாவியே என நினைத்துக் கொண்டு

"சாமி, இயற்கை தானாக உருவானது அதனால் தான் இயற்கைத் தேர்வு"

சாமி கலகலவென சிரித்தார்.சோளிகளை எடுத்தார். சிதறடித்தார். எல்லாம் ஆங்காங்கே உருண்டு புரண்டு நின்றது.

"மொத்தமாக இருந்த சோளிகளை சிதறடித்தது நான். நான் சிதறடிக்காமல் இருந்து இருந்தால் எப்படி அவை சிதறும்"

"சாமி இந்த சோளிகள் எங்கே இருந்து வந்தது?"

"எதற்கு கேட்கிறாய்?"

"எல்லாம் ஒரு கணக்குதான்"

"ஓஹோ, நீ என்ன சொல்ல வருகிறாய் என புரிகிறது"

"இவ்வுலகில் உள்ள மொத்த சக்தியும் இதுவரை மாற்றம் அடைந்தது இல்லை என்கிறார்களே"

 "எந்த வகையான மாற்றம்"

"புரியவில்லை"

"இதோ சோளிகள் எப்படி ஒரு பொருளில் இருந்து உருவானதோ, அந்த பொருளானது எப்படி வேறு ஒரு பொருளில் இருந்து உருவானதோ அதைப்போலவே சக்தியும் மாற்றம் கொள்ளும்"

 "சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது?"

"இரண்டும் ஒன்றுதான். சக்தியும் விசையும் வேறு வேறு"

"சக்தியின் அளவு வேறுபாடு அடையவில்லை, அதனை உருவாக்கவும் முடியாது,  அழிக்கவும் முடியாது என்றால் என்ன அர்த்தம்? இப்படித்தான் இருக்க வேண்டும் என இயற்கைத் தேர்வு செய்ததா? எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு என்று சொல்லுங்களேன்"

"இறைவன் தவிர எல்லாமே இயற்கைத் தேர்வு தான், போய் வா"

"எதற்கு சாமி இப்படி விட்டேந்தியாக பதில் சொல்கிறீர்கள்"

"பிறகு என்ன, இறைவன் ஒருவனே அனைத்தையும் தேர்வு செய்தவன். இதில் இயற்கைத் தேர்வு, செயற்கைத் தீர்வு என்றெல்லாம் சொல்லக் கொண்டிருந்தால்  எப்படி"

"சாமி, தேர்வு, தீர்வு. எவ்வளவு அழகான பதில். இயற்கைத் தேர்வு செய்ய வாழ்க்கைக்குத் தீர்வு கிடைக்கும்"

"இறைவன் தீர்ப்பு இறுதி தீர்ப்பு"

சாமியாரை அழைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு இடத்தில் அளவு கடந்த கூட்டம். என்னவென விசாரித்ததில் புதிதாக ஒரு சாமியார் வந்து இருப்பதாகவும் பல விசயங்களை மிகவும் எளிமையாக சொல்வதாகவும் சொன்னார்கள்.

சாமியாரைப் பார்த்தேன்.

"சாமி, நீங்க கொஞ்சம் புரியும்படியா பேசினா எல்லாரும் உங்களைத் தேடித்தான் வருவாங்க"

 "எல்லாம் இயற்கைத் தேர்வு"

"சாமி, இறைவன் தீர்ப்பு இல்லையா?"

உன் சோலிய பாரு என சாமி தனது வேடம் கலைக்க, நான் என் தூக்கம் தொலைக்க  விட்டத்தில் இருந்த பல்லி  ஒன்று எனது வாயின் அருகில் எச்சம் விட்டுச் சென்றது. இனி அங்கே சிறு பருக்கள் முளைக்கும்.

ஆமாம் இவ்வுலகில் எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு?

(முற்றும்)

Thursday 19 July 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 5

தியரி அதாவது கோட்பாடு, தேற்றம். நமது சிந்தனைகள் இந்த தியரி எனப்படுவதை சுற்றியே நிகழ்கிறது. சோதனைகள் செய்யும் முன்னர் இந்த தியரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தியரிக்கான சிந்தனையின் மூலம் என்ன என்பது குறித்து அவரவருக்கு அந்த வேளையில் ஏற்படும் சிந்தனை குறித்தே சொல்ல முடியும்.

ஒரு உதாரணத்திற்கு புத்தர். இப்போது புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஒரு தியரி. ஆசை என்பதன் அளவு எது? துன்பத்தின் அளவு எது? என்பதெல்லாம் இங்கே விவரிக்கப்படவில்லை. மிகவும் எளிமையாக சொல்லப்பட்ட கோட்பாடு இது. ஆசையே துன்பத்திற்கு காரணம். இப்போது இந்த சிந்தனை எப்படி புத்தருக்கு எழுந்தது. இப்போது நாம் சொல்லப்போவது கூட ஒரு தியரி தான். ஆனால் உண்மை என்ன என்பது புத்தருக்கு மட்டுமே வெளிச்சம். அரண்மனையில் சுகவாசம் அனுபவித்த புத்தர் வெளியில் சென்று பார்க்கும்போது மக்கள் இன்னல்படுவதை காண்கிறார். அங்கே அவருக்கு எதற்கு மக்கள் இன்னல் படுகிறார்கள் எனும் சிந்தனை எழுகிறது. அதற்கான காரணம் என்னவென பார்க்கும்போது அவருக்கு ஆசை என்ற ஒன்று பிடிபடுகிறது. அப்படியே ஒரு மரத்தடியில் அமர்கிறார். கண்களை மூடி அமர்கிறார். மக்கள் துன்பபடுவது ஆசையின் காரணம் தான் என நினைவில் கொள்கிறார். அதை பின்னர் உலகுக்கு அறிவிக்கிறார். இப்போது இந்த கோட்பாடுதனை சோதனைக்கு உட்படுத்தலாம்.

இரு நபர்கள் எடுத்துக் கொள்வோம். ஒருவர் ஆசையே படாதவர். இருப்பதே போதும் என இருப்பவர். மற்றொருவர் அளவுகடந்த ஆசை கொண்டவர். அது வேண்டும், இது வேண்டும் என அலை பாய்பவர். பொதுவாக எல்லோர் வீட்டில் கணவன், மனைவி இப்படித்தான் இரண்டு துருவங்களாக இருப்பார்கள் என்பது வேறு விசயம். ஆசையே இல்லாதவர் துன்பத்துடன் வாழ்கிறாரா, ஆசை கொண்டவர் துன்பமின்றி வாழ்கிறாரா என அவர்களது வாழ்க்கையை இருபது ஆண்டு காலம் கவனித்து வருவோம். பொதுவாக போதும் என இருப்பவர் துன்பம் கொள்வது இல்லை என்பது ஒருவித தியரி. அதன்படியே போதும் என இருப்பவர் இருபது வருடம் முன்னர் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்பவும் இருப்பார். அதாவது எந்த வித முன்னேற்றமோ, வசதிகளோ, வாய்ப்புகளோ பெருக்காமல், ஏனெனில் அவருக்கு எவ்வித ஆசையும் இல்லை. இருப்பினும் சில தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இவர்  துன்பம் அடைகிறார். இப்போது அவரைப் பொறுத்தவரை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு துர்பாக்கியம் கொண்டவர். ஆனால் அவருக்கோ அப்படி இருப்பதே ஆனந்தம். மற்றவர் அப்படி இல்லை. ஆசையின் காரணமாக போராடி நல்ல வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்கிறார். இதன் காரணமாக அவர் கொண்ட துன்பம் அதிகம். இல்லாது இருப்பவர் போதிய வசதி இல்லாமல் துன்பம் அடைகிறார். இருப்பவர் மேலும் மேலும் வசதிகள் வேண்டுமென துன்பம் அடைகிறார். இப்போது ஆசை கொண்டவரும் துன்பம் அடைகிறார். ஆசை இல்லாதவரும் துன்பம் அடைகிறார். இதன் காரணமாக ஆசை ஒரு காரணி. ஆனால் ஆசை மட்டுமே துன்பத்திற்கு காரணம் இல்லை என இந்த சோதனையின் முடிவில் தீர்ப்பு எழுதப்படும்.

இப்படி கோட்பாடுகளை கொண்டு எழுதப்பட்டுத்தான் முக்காலமும். அந்த கோட்பாடுகளை சொன்னவர்கள் தங்களுக்குள் உணர்ந்து கொண்ட விச யத்தை சொன்னவர்கள் உண்டு. அதே வேளையில் கணிதம், பௌதிகம், பூகோளம் என கணக்கீடு முறையால் இப்படித்தான் இருக்கும் என சொன்னவர்கள் உண்டு. தங்களுக்குள் உணர்ந்து கொண்டு சொன்ன விச யத்தை நிரூபிக்க கதைகள் எழுதலாம். ஆனால் அதை ஒரு சோதனை மூலம் நிரூபிப்பது சற்று இயலாத காரியம். கணக்கீடு முறையால் சொன்ன விசயங்களை சோதனைகள் மூலம் நிரூபிக்கலாம். அப்படி நிரூபிக்க முடியாது போனால் அந்த கோட்பாடு தவறு என்றே முடிவுக்கு கொண்டு வரப்படும்.

இப்படி பல சிந்தனைகளை உருவாக்கும் நரம்பு மண்டலத்தில் எவர் இதற்கான விதைகள் விதைத்தது. உங்கள் வீடு ஒன்று. உங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் பல. இப்போது ஒரே விசயம். அந்த ஒரே ஒரு விசயத்தை வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என பாருங்கள். இந்த சோதனையை வீட்டில் செய்து பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு தாளில் எழுதி கொள்ள வேண்டும். பின்னர் அனைவருக்கும் வாசித்து காண்பியுங்கள். சிந்தனைகளுக்கான காரணம் என்னவாக இருக்கும்?

ஒன்று கண்ட, கேட்ட விசயங்களின் நேரடி, மறைமுக பாதிப்பு.  மற்றொன்று எதற்கும் தொடர்பே இல்லாத ஒரு சிந்தனை. இப்படி எதற்குமே தொடர்பே இல்லாத சிந்தனை ஒன்று உண்டா?

மாணிக்கவாசகர் பாடுகிறார்.

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஒளியும், இருளும் நீயன்றி எதுவும் இல்லை. தோன்றியவைகளும், தற்போது தோற்றத்தில் இல்லாதவைகளும் நீயன்றி எதுவும் இல்லை. முதலுமாய், முடிவுமாய் என முதலும் முடிவும் இல்லாதவன் நீயன்றி எதுவும் இல்லை.

முக்காலமும் எப்படி மாணிக்கவாசகர் அறிந்தார்?

(தொடரும்)