Friday 4 November 2011

திரு. ஞாநி கதை விடுபவரா?

திரு ஞாநி ஒரு டுபாக்கூரா? என்பதற்கும், திரு ஞாநி கதை விடுபவரா, காதில் பூ சுற்றுபவரா என்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது ஆனால் அர்த்தம் என்னவோ ஒன்றுதான். டுபாக்கூர் என்பது கொச்சை தமிழ், இழிவுபடுத்தி சொல்லப்படும் வார்த்தை. கதை விடுபவர் என்பது சுத்த தமிழ், வஞ்ச புகழ்ச்சி அணியை தழுவியது. 

கதை விடுபவர் என்பதற்கும் கதை சொல்பவர் என்பதற்கும் கூட வித்தியாசம் இருக்கிறது. கதை சொல்பவர் என்பது ஒருவரின் செயலை நல்லவிதமாக குறிக்கிறது, அதே வேளையில் கதை விடுபவர் என்பது ஒருவரின் செயலை கெட்டவிதமாக குறிக்கிறது. அதாவது ஏமாற்றுக்காரர் என்கிற தொனியில் அது அமைகிறது. 

இப்பொழுது திரைப்படம் என்றால் என்ன? அது ஒரு கனவு தொழிற்சாலை எனவும், பொழுதுபோக்கு கலை எனவும் குறிப்பிடப்படுகிறது. கற்பனைகளின் கூடாரம் என்று கூட குறிப்பிடலாம். ஒரு திரைப்படத்திற்கான அளவுகோல் எது? மக்களின் ரசனைக்கு ஏற்றமாதிரி எடுப்பதா? சிறந்த கதையுடன் அல்லது சிறந்த கதையாக இல்லாவிட்டாலும் சிறப்பான திரைக்கதை கொண்டதா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதா? இப்படி பல கேள்விகள் இந்த திரைப்படத்தை குறித்து எழுந்தாலும் அது ஒரு கனவு மட்டும் கற்பனை தொழிற்சாலை என்பது உண்மை. 

நடந்த விசயங்களை சொன்னாலும் அது ஒரு கதை வடிவமே. உண்மையான பாத்திரங்களை சொல்ல முடியாது. திரைப்படம் சமூகத்தை சீரழிக்கின்றன என்றும், சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பது அவ்வப்போது நடைபெறும் சில விசயங்கள் உறுதிபடுத்தினாலும் முழுமையான தாக்கத்தை, ஒட்டுமொத்த சமூக மாற்றத்தை திரைப்படங்கள் கொணர இயலுவதில்லை. நமது கற்பனைகளை, ஆதங்கங்களை வடிவமாக கண்டு மகிழும் நிலையில் இருப்பவர்கள்தான் நாம். அதற்காகவே ஒரு எம் ஜி ஆரோ, ரஜினியோ பெரும் புகழ் அடைய வழிவகுத்தது. 

தமிழில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. தமிழில் நல்ல படங்கள், மசாலா படங்கள், குப்பை படங்கள் என பிரித்து பார்த்தால் ஐம்பது சதவிகிதம் குப்பை படங்களும், நாற்பத்தி ஐந்து சதவிகிதம் மசாலா படங்களும் மீதி ஐந்து சதவிகிதம் மட்டுமே நல்ல படங்கள் என பிரித்துவிடலாம். சிறந்த பொழுதுபோக்கு படங்கள்தனை  விரும்பும் மக்கள் அதிகம் உள்ளவர்களே தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு பல மசாலா படங்கள் சாட்சி. இதில் கதை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். 

இப்படிப்பட்ட சூழலில் திரு ஞாநி அவர்கள் ஒரு சிறந்த படம் எடுக்க வேண்டும் எனும் முனைப்போடு ஒரு செயலில் ஈடுபட்டார்கள். அதாவது ஆள் பிடிப்பது. நல்ல படங்கள் வரவேண்டும் என முனைப்புடன் இருப்பவர்களை சேர்த்து ஒரு படம் எடுப்பது. இன்றைய காலகட்டத்தில் குறைந்த செலவில் படங்கள் எடுப்பது மிகவும் அரிதான விசயம். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் குழுவினர்கள் என பார்த்தால் ஒரு நிறுவனம் போலவே அந்த படத்தில் பங்கு பெற்று இருப்பவர்கள் இருப்பார்கள். அதற்காக செலவாகும் தொகை மிகவும் பெரிது. அதைப்போலவே அந்த திரைப்படத்தின் வாடிக்கையாளர்கள் என பார்த்தால் மிகவும் அதிகம். அதன் காரணமாகவே பல கோடி செலவு செய்து லாபம் அடையவும் செய்கிறார்கள். இதனால் இந்த திரைப்படம் எடுப்பது சாதாரண விசயம் இல்லை என்பதை பலரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். 

சமீபத்தில் எனது நண்பர் செல்வமுரளி தனது விசுவல் மீடியா நிறுவனத்தை விரிவாக்கம் செய்துள்ளார். அவருக்கும் வாடிக்கையாளர் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் விளம்பரம் செய்தது மிகவும் குறைவே. இது ஒரு சிறிய நிறுவனம், மிகப் பெரிய நிறுவனமாக வளரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் திரைப்படம் என்பது அப்படியல்ல. அது ஒரு பொழுதுபோக்கு சித்திரம். உடனடி லாபதாரர்கள் ஒரு படத்தின் மூலம் பார்க்கலாம், அதைப்போலவே பெரும் நஷ்டம் அடைபவர்களையும் காணலாம். 

திரு. ஞாநி அவர்களின் விளம்பரம் இப்படித்தான் இருந்தது. 

'நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம். 

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். 

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும். 

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்'

அதற்கான எனது மறுமொழி இப்படித்தான் இருந்தது. 

'இப்படி அவசர அவசரமாக ஒரு படம் எடுத்து எதைச் சாதிக்க நினைத்து இருக்கிறீர்கள். ஒரு படத்தின் மூலம் சமுதாயத்தில் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள். இதுவரை வெளியான படங்கள், கதைகள் சாதித்தது என்ன? தனிமனிதனின் முயற்சியினால் மட்டுமே ஒவ்வொருவரும் சாதித்து காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் காரணங்கள் குறிப்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைதான். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து திருந்தினேன் என ஒரு காந்தி தான் சொன்னார், நாடகம் பார்த்த பலர் எங்கே போனார்கள்?

ஒரே ஒரு படம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மாற்றுமாறு எடுங்கள், பாராட்டுகிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி எனக்கு என்னவோ மனிதர்களை முட்டாளாக்க முயற்சிப்பதாகத்தான் படுகிறது. இருப்பினும் தங்கள் முயற்சி நன்மை பயக்குமெனின் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.'

இந்த உரையாடல் எனது வலைப்பூவில்  நடந்த வருடம் ஆகஸ்ட் 2009. திரு ஞாநி அவர்கள் தங்களது இலக்கை அடைந்தாரா? இலக்கை நோக்கிய பயணம் தொடர்கிறதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. திரு ஞாநி நீங்கள் கதை விடுபவரா? என்கிற கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது. 

இவரைப்போலவே ரூபாய் 30,000 முதலீடு செய்யுங்கள், ஒரு அழகிய படம் எடுத்து காட்டுகிறேன் என முயற்சி செய்து கொண்டிருக்கும் நண்பர் திரு. கேபிள் சங்கர் எனும் சங்கர் நாராயண் இலக்கை அடைந்தாரா? இந்த திரைபடத்தின் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களுக்காக மூலதனம் செய்பவர்கள் மூலம் நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டு நிறைய பொருளாதாரம் ஈட்டிட்டால் மேலும் மேலும் இது போன்ற நிகழ்வுகள் பெருகும். வாழ்த்துகள். 

இவர்களை போன்றே பல கனவுகளுடன் வாழும் பலர் தங்கள் இலக்குகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற பெரும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வெற்றி பெற வாழ்த்துகள். எங்களது  ஆய்வில் பத்து பதினைந்து வருடங்கள் போராடி ஒரு மருந்தினை கண்டுபிடித்து உலக மக்களை நோயிலிருந்து விடுபட செய்தாலும்  எங்களுக்கு கிடைக்கும் வரவோ வெறும் வாய். 

ஒரு மருந்தினை கண்டுபிடிக்கிறேன், நீங்கள் மூலதனம் செய்யுங்கள் என உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்பது எனக்கு தெரியும். :) 

Thursday 3 November 2011

பெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்

யோவ் எந்த காலத்துல இருக்க, என்ன பேச்சு பேசு பேசற. பொண்ணுக வேலைக்கு போக கூடாதா! நல்லா இருக்குயா ஞாயம். 

ஏய்யா அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குனு சொன்னவங்களை எதிர்த்து அந்த காலத்துல போராட்டம் தொடங்கனவங்களை கேலி பண்றியா.  

இப்போ எல்லா துறைகளிலும் பொண்ணுக கொடி கட்டி பறபற அப்படின்னு பரபரப்பா முன்னேறிட்டு வராங்க. என்னய்யா பேச்சு பேசற. 

பேசாம இந்த இடத்தை உட்டு ஓடிப் போயிரு. இல்லை விளக்கம்மாத்து அடி, செருப்பு அடி அப்படின்னு எல்லா அடியும் வந்து விழுகும். 

ராஜாராம் மோகன்ராய் தெரியுமாய்யா உனக்கு, பெண்கள் தங்களுடைய அடிமைத்தனத்தில் இருந்து மீளனும் அப்படின்னு ஒரு புரட்சியையே பண்ணுனவரு. 

படிக்காத காலத்துலேயே காடு மேடுன்னு ஓயாம வீட்டுக்கும் காட்டுக்கும் உழைச்சி ஓடா போனவங்கய்யா இந்த தாய்மாருக. நாலு காசு சம்பாதிச்சி நகை நட்டுன்னு வீடு வாசனு திறமையோட வாழறவங்களையா வேலைக்கு போகாதேன்னு சொல்ற. சொந்த காலுல தைரியமா நிற்குறாங்க. 

மேடம் க்யுரீ தெரியுமா உனக்கு, உனக்கு அவங்களை எப்படி தெரியும்? ஒரு சல்சா தெரியும், அதைவிட்டா ஒரு குல்சா தெரியும். பிசிக்ஸ்ல, கேமிசிட்ரில நோபல் பட்டம் வாங்குனவங்க. தன்னோட ஆராய்ச்சிக்கே உயிரை விட்டவங்கய்யா. 

இங்க பாரு, இத்தனை சொல்லியும் அசையாம நிற்குற. ஆளுக வராங்காட்டியும் ஓடிப்போயிரு. தான் படிச்சி, தங்களோட புள்ளைகள படிக்க வைச்சி, சமைச்சி, அலசி, குடும்பத்தை கட்டிக்காக்குற  பொண்ணுங்க இருக்கிற உலகத்துல என்ன உதாரு விடற. 

புரட்சி பொண்ணுங்க வாழற உலகம் இது. அவங்களை இப்படி உசுப்பேத்தி அடிமைபடுத்தலாம்னு மட்டும் கணக்கு போடாத. 

'பேசியாகிவிட்டதா, நான் கொஞ்சம் பேசலாமா'

என்னத்த பேசப் போற, அதான் ஒரு வரி அம்மணமா சொல்லிருக்கியே. வேலைக்கு போகாதீங்கன்னு. யாருயா அவங்களுக்கு சோறு போடுவா. அவங்க அடுத்தவங்க கையை ஏந்தி நிற்கனுமா. நீ துரை, வேலைக்கு போய்ட்டு வந்து ஹாயா காலு மேல காலு போட்டு உட்காருவா. அவங்க உனக்கு பணிவிடை செய்யணும், அதுவும் பெண் குழந்தைன்னா அழுகாம அத்தனை வேலையும் செய்யணும். என்னத்தையா பேச போற. 

'சரி சரி பேசுங்க, நான் நீங்க பேசி முடிக்கிறவரைக்கும் காத்து இருக்கேன்'

உனக்கு நெஞ்சுல எத்தனை தைரியம் இருந்தா இன்னும் பேச போறேன்னு இங்க நிற்ப. பேசு, நீ பேச பேச உனக்கு விழற அடியோட எண்ணிக்கை கூடத்தான் செய்யும். 

'நான் பொண்ணுங்களை படிக்க வேண்டாம்னு சொல்லல. வேலைக்கு போகவேண்டாம்னு சொன்னேன். ரொம்ப பேரு குடும்ப சூழல் காரணமாத்தான் வேலைக்கு போறாங்க. வேலைக்கு போகணும்னு நினைச்சி அவங்க போகறது இல்லை. நீங்க சொன்னீங்களே மேடம் க்யூரி அவங்க மாதிரி வாழறவங்க ரொம்ப குறைச்சல்.  பஸ்லயும், ரெயிலுளையும் அடிச்சி பிடிச்சி அவங்க வேர்த்து விறுவிறுத்து வேலைக்கு போறது பார்த்து கஷ்டமா இருக்கு. போகப் பொருளா பொண்ணுகளை பார்க்குற பூமிய நினைச்சி கவலயா இருக்கு. அதுவும் அவங்களுக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்தப்பரம் வேலைக்கு போய் குழந்தைய கவனிக்க முடியாம, வேலையிலும் மனசு ஒட்டாம பாவம் அவங்களை நினைச்சி பரிதாபமா இருக்கு. நீங்க சொன்னீங்களே, வீட்டுல வேலை, வெளியில வேலை. பாவம் இல்லையா. வசதி வாய்ப்புக்காக இப்படி அவங்களை சின்னபின்னாமாக்குறது தப்பில்லையா. தாங்களே இஷ்டப்பட்டு வேலைக்கு போனா போகட்டும். ஆனா ' 

என்ன ஆனா. நீ என்ன பொண்ணுகளை காக்க வந்த ரட்சகனா. அவங்க வேலைக்கு போகமாட்டேன்னு அடம் பிடிச்சாங்களா. வேலைக்கு போகமாட்டோம்னு போர்க்கொடி தூக்குனாங்களா. அரசியல் தலைவிங்க, கம்பெனி முதலாளிங்க அப்படின்னு இருக்கறாங்க, நீ என்னமோ பேசற. 

'இல்லை, விபச்சாரத்தை தொழிலா நடத்துறவங்களை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னேன். உடலை காட்டி பணம் சம்பாரிக்கிற தொழிலுக்கு போக வேணாம்னு சொன்னேன். சின்ன சின்ன குழந்தைங்க எல்லாம் வைச்சி தொழில் நடத்துறாங்களே அவங்களுக்கு துணை போக வேணாம்னு சொன்னேன். சினிமா படத்துல ஒரு மெழுகு பொம்மையாட்டம், அளவு துணி பத்தாத பெண்ணாட்டம் பண்ற தொழிலு வேணாம்னு சொன்னேன், அடிமைத்தனமா பாக்குற வேலைக்கு வேணாம்னு சொன்னேன், அடிமையா வேலை செய்ற வீட்டு வேலை கூட வேணாம்னு சொன்னேன், எதோ பெத்துக்கரனும் அப்படின்னு இல்லாம, சும்மா சும்மா பெத்துக்குற வேலையும் வேணாம்னு சொன்னேன்'

பேச்சை மாத்துறியா. ஆளுங்க வராங்க. ஓடிப்போயிரு. 

ஆண்களே, பெண்களே வேலைக்கு விருப்பத்துடனே செல்கிறேன் என உங்களால் உறுதிமொழி கொடுக்க இயலுமா? 

வேலைக்கு செல்வதின் உண்மையான நோக்கம் என்ன, பணம் சம்பாதிக்கவும், புகழ் சம்பாதிக்கவும் தானா? 

வேலைக்கு செல்வதினால் அடைந்த லாபங்களும், அடைந்த துயரங்களும் தான் எத்தனை?

வேலைக்கு செல்வதின் மூலம் உங்களால் நிம்மதியாக வாழ முடிகிறதா? மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டோர் எத்தனை? 

நாட்டில், உலகில் வேலையில்லா திண்டாட்டம் பெருக்கெடுத்து ஓடுகிறது? எதனால். 

சிந்திப்பீர். 

Wednesday 2 November 2011

வேலைவெட்டி இல்லாத வலைப்பதிவர்களா நாம்?

யார் என்றே தெரியாத புதிய எண் அலைபேசியில் ஒலித்தது. சற்று தயக்கத்துடனே எடுத்தேன். தெரியாத எண்கள் வந்தால் சற்று யோசனையாகவே இருக்கும். ஆனால் பதில் பேசாமல் இருப்பதில்லை. அதுவும் அலைபேசியில் 'மிஸ்டு கால்' என இருந்தாலும் திருப்பி அந்த எண்ணுக்கு அழைத்து யார் என்ன என கேட்டுவிடுவது அவ்வப்போது வழக்கம்.

சரி என பேச ஆரம்பித்தேன். 

'எப்படி இருக்கீங்க' என விசாரணையோடு தொடங்கியது பேச்சு. பால்ய நண்பர் என தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார். எப்படி எனது எண் கிடைத்தது என கேட்டு வைத்தேன். நண்பர்களிடம் கேட்டு வாங்கினேன் என்றார். மிகவும் சந்தோசமாகவே பல விசயங்கள் பேசினார். 

அத்தோடு விட்டு இருந்தால் இப்படி ஒரு தலைப்பில் நான் ஒரு வீண் பதிவு போட வேண்டி வந்திருக்காது. இதற்கு முன்னர் ஒரு நண்பர் இப்படித்தான் அழைத்து புத்தகங்கள் எல்லாம் வெளியிட்டு இருக்கியாமே, சொல்லவே இல்லை என்கிற ரீதியில் தமிழை விடாமல் இன்னமும் கெட்டியாக பிடித்து இருப்பதற்கு பாராட்டி தள்ளிவிட்டார். ஆனால் இவரோ சற்று வித்தியாசமான தோரணையில் பேச ஆரம்பித்தார்.

'உன்னோட ப்ளாக் படிச்சேன்'

'ஓ அப்படியா, நான் ப்ளாக் எல்லாம் எழுதறது எப்படி தெரியும்'

நான் ப்ளாக் எழுதுவது எனது நண்பர்கள், உற்றார், உறவினர் என பலருக்கும் தெரியாமல்தான் சில மாதங்கள் முன்வரை இருந்தது. முகநூல், அடடா எப்படியெல்லாம் தமிழ்படுத்துகிறார்கள், ஒன்றில் எனது இணைப்பை தர அங்கிருந்து சிலருக்கு எனது ப்ளாக் தெரியும். தமிழுல எழுதுற, நல்லா இருக்கு என ஒரு சில பாராட்டுகள் மட்டுமே. மற்றவர்கள் எதுவும் மூச்சு விடவில்லை. அப்பாடா என இருந்தது. 

நான் புத்தகம் வெளியிடும் வரை அந்த புத்தக விசயத்தை அத்தனை ரகசியமாக வைத்திருந்து அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை தந்தேன். சொல்லவே இல்லை என்கிற பாணியில் தலையில் கொட்டாத குறைதான். நான் எனது ஆய்வு விசயமோ, புத்தக விசயமோ எவரிடமும் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தது, எழுதுகிறோம், ஏதோ வாய்ப்பு கிடைத்தது ஆராய்ச்சி செய்கிறோம் என்கிற போக்கில்தான் செல்வதுண்டு. அதனால் தான் இந்த பிளாக்கில் எல்லாவற்றையும் எழுதி குவித்துவிடுகிறேன் போல, தற்போது கூட முகநூல் தனை மூடிவிட்டேன். சில மாதங்கள் முன்னர் ட்விட்டர் தனை மூடிவிட்டேன். எதற்கு அநாவசியமாக உபயோகபடுத்தாத ஒன்றை வைத்திருக்க வேண்டும் என நிறுத்தி வைத்து விட்டேன். நான் பொதுவாக நெட்வொர்க் தளங்கள் எதிலும் என்னை இணைத்து கொள்வதில்லை. 

பழைய நண்பர்கள், புது நண்பர்கள் என வா, வந்து சேர் என அழைப்பு விடுவார்கள், நான் பெரும்பாலும் தட்டி கழித்துவிடுவேன். எதற்கு இதெல்லாம் என்கிற ரீதியில் இருப்பேன். இப்பொழுது கூட கூகுள் பிளஸ் என்ற ஒன்றில் இணைந்தேன். எத்தனை நாள் அங்கிருப்பேனோ தெரியாது. இப்படி நான் எனது இணைய உலக இணைப்பை மிகவும் சிக்கனமாகவே வைத்திருக்க அவரது பேச்சு இப்படியாக போனது. 

சரி விசயத்துக்கு வருவோம்.

'ஒருநாள் உன் பெயரை கூகுள் பண்ணிப் பார்த்தேன், அதுல இருந்து உன்னோட ப்ளாக் வந்தேன், இன்னும் தமிழுல கிறுக்கற அந்த பாழாய் போன பழக்கம் போகலையா' 

'என்ன சொல்ல வர' 

'அதான், ஒரு நோட்டுல எப்ப பார்த்தாலும் எழுதிகிட்டே இருப்ப, நான் கூட சொல்லலை நீ எழுத்து பைத்தியமா போக போறேன்னு'

'இப்போ அதுக்கு என்ன இப்போ'

'உன் ப்ளாக்ல வெட்டித்தனமா எழுதிட்டு இருக்கியே, உனக்கு வேலை வெட்டி இல்லையா'

'என்னாச்சு'

'நீ எழுதி இந்த நாட்டை திருத்த போறியா, கவிதை கவிதைனு எழுதி உனக்கு கவிஞர் பட்டம் காலேஜ்ல கொடுத்தாங்க, நான் கூட நீ மாறி இருப்பேன்னு நினைச்சேன், உன் பொண்டாட்டி உன்னை ஒன்னும் சொல்லமாட்டாளா'

'இரு இரு, என்ன பிரச்சினை'

'நீ வெட்டியா எழுதுறதை நிறுத்திட்டு உருப்படியா ஏதாச்சும் பண்ணு, எத்தனை புக் இதுவரைக்கும் உன்னோட ஆராய்ச்சி சம்பந்தமா எழுதி இருக்க, எத்தனை ஆராய்ச்சி பேப்பர் வெளியிட்டு இருக்க, எத்தனை கான்பெரென்ஸ் போயிருக்க'

'அதுதான் பேப்பர் எல்லாம் பாத்துருப்பியில, அதைப்பத்தி பேசறது. இந்த ப்ளாக் பத்தி பேசி எதுக்கு உன் நேரம் வீணாக்குற. அதுவும் என்னோட உதிரி நேரத்துல எழுதுறேன், இந்த வருசம் பாத்தியா, ரொம்ப கம்மியாதான் எழுதி இருக்கேன், அதுவும் சாப்பாடு டயத்துல அப்புறம் தூங்க போகறதுக்கு முன்னம், இப்படி அப்ப அப்ப தோணுறதை எழுதிவைச்சி வெளியிடுவேன், இப்படி தமிழுல எழுதுறது கூட எனக்கு உருப்படியா தெரியுது, நீயும் எழுதி பழகு, எல்லாம் உருப்படியா போகும்'

இதற்கு பதிலாக அவனிடம் இருந்து திட்டு வார்த்தையுடன் தொடங்கியது அடுத்த பேச்சு. 'உன்னை மாதிரி என்னை லூசுன்னு நினைச்சியாடா, இந்த தமிழை மறந்து பல வருசம் ஆச்சு, எத்தனை புக் போட்டுருக்கேன் தெரியுமா, எத்தனை பேப்பர் வெளியிட்டு இருக்கேன் தெரியுமா, இதோட அம்பது கான்பரென்ஸ் போயிருக்கேன், போய் கூகுளுல தேடிப்பாரு'

'ஆமா அத்தனை வெளியிட்டு என்ன சாதிச்ச'

'நான் ஒரு அசிடன்ட் ப்ரோபாசர் இப்போ'

'அது உன் வேலை, நீ என்ன சாதிச்ச அதை சொல்லு. ஒரு மருந்தை கண்டுபிடிச்சியா, நண்பர்கள் பழக்கம் பிடிச்சியா, உன்னை பத்தி தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஏதேனும் தெரியுமா, அதை விடு சமுதாயத்தில ஏதேனும் விழிப்புணர்வு கொண்டு வந்தியா, நாங்க தமிழுல எழுதி பெரிய புரட்சி பண்ணிட்டு வரோம், அது தெரியுமா எதுக்கும் ப்ளாக் படிச்சு பாரு, புரியும்' 

'அந்த கருமாந்திரத்தை என்னை எதுக்குடா படிக்க சொல்ற, எல்லாம் வெட்டி பயலுக, கிடைக்கற நேரத்தை இப்படி எழுதறோம்னு எழுதி வீணடிக்கிற'

அந்த திட்டு வார்த்தை என்னை கோபம் அடைய செய்தது. 

'சரிடா, இத்தோட நிறுத்திக்கோ, ஏதோ பல நாட்கள் அப்புறம் பேசறேன்னு பார்த்தா நான் தமிழுல எழுதறதை பாத்து வயித்தெரிச்சலுல பேசற மாதிரி தெரியுது. இந்த ப்ளாக் எழுதறவங்களைப் பத்தி ஒரு வரலாறு தெரியணும்னா எதுக்கும் அடுத்த மாசம் என்னோட ப்ளாக் பக்கம் எட்டிப்பாரு, ஒவ்வொரு சாதனையாளர்கள் பத்தி நான் எழுதறேன். இங்க எழுதறவங்க என்ன வேலை வெட்டி இல்லாதவங்கனு நினைச்சியா'

'போடா தெரியும், நீ எழுதினதுதான் படிச்சேனே, தமிழ் பதிவர்கள்னு. அதே கிறுக்கல், அப்போ நோட்டு, இப்போ நெட்டு' 

'என்னை இப்ப என்ன பண்ற சொல்ற'

'நிறுத்துடா, எழுதறதை நிறுத்து. உருப்படியா வேலையைப் பாரு. பொண்டாட்டி புள்ளைங்க குடும்பத்தை கவனி'

'அதெல்லாம் சரியாத்தான் நடக்குது, எதுக்கு இப்படி வீணா புலம்புற, உனக்கு வேணும்னா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறேன். அதுல எழுது. blogconsultancy எப்படி இருக்கு'

அதற்கடுத்து அவன் திட்டியவாறே போனை கட் பண்ணினான். பாவம் அவனுக்கு தெரியாது, இதைக்கூட எழுத்தில் வைப்பவர்கள் தான் இந்த ப்ளாகர்கள் என்று. 

மீண்டும் அவன் இதை படிக்க கூடும். மறுமுறை அவனது எண்கள் தெரிந்தால் பேசுவதா வேண்டாமா!