Thursday 1 July 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8

இருவரும் கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்ததும், இருவரையும் புன்முறுவலுடன் நாகராஜன் வரவேற்றார். தனது மேசையின் முன்னால் இருந்த இருக்கையை காட்டினார்.

''உட்காருங்க''

இருவரும் தயக்கத்துடனே அமர்ந்தார்கள்.

நாற்பத்தி எட்டு வயது நிரம்பிய நாகராஜன் திடகாத்திரமான தோற்றம் கொண்டவர். முகத்தில் எப்போதும் ஒரு புன்முறுவல் இருந்து கொண்டே இருக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் மிகவும் மரியாதையாகவே பேசும் வழக்கம் கொண்டவர். இவருக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. இவரது தந்தை நிறுவிய இந்த கல்லூரியை தொடர்ந்து நிர்வகித்து வருகிறார். வயதாகிப் போனாலும் இவரது தந்தை அவ்வப்போது இந்த கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.

''மக்கள் ஒற்றுமை இயக்கம், கட்சியோட பேரு ரொம்ப நல்லாருக்கு, ஆனா நம்ம கல்லூரிக்குள்ள கட்சி நடவடிக்கைகள் எல்லாம் இருக்க வேணாம். உங்க கட்சி நடவடிக்கைகள், கூட்டங்கள் எல்லாம் உங்களோட படிப்பை பாதிச்சிராம பார்த்துக்கோங்க. படிச்சி முடிச்சிட்டு இதைச் செய்யுங்கனு நான் சொல்லலை, தாராளமா கட்சி ஆரம்பியுங்க‌''

''ரொம்ப நன்றி சார், நிச்சயம் கல்லூரிக்குள்ள கட்சி நடவடிக்கைகள் எதுவும் செய்யாம பாத்துக்கிறோம் சார்'' என்றான் ரகுராமன்.

''பிரியா, சமூக நல சேவகியா வருவீங்கனு பார்த்தேன், அரசியல் தலைவியா புது குறிக்கோள் எடுத்து இருக்கீங்க, பாராட்டுகள்'' என சிரித்தார் நாகராஜன்.

''அரசியல் மூலம் சமூக சேவை சிறப்பா செய்யலாமே சார்'' என நிறுத்தினாள் சண்முகப்பிரியா.

''தாராளமா செய்யலாம், ரகுராமன் நீங்க என்னை சாயந்திரம் என் வீட்டுல வந்து பாருங்க, ம்ம்... ஒரு ஆறு மணிக்கு, நிறைய பேசனும்''

''நன்றி சார்''

இருவரும் அறையைவிட்டு வெளியே வந்ததும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

''பிரியா, நீ வீட்டுல பேசிட்டுதான் எல்லாம் செஞ்சியா''

''இல்லை, இன்னும் இதைப்பத்தி நான் வீட்டுல பேசலை. உன்கிட்ட பேசிட்டு போனதும் நேரா நான் இருக்கற‌ சமூக நல அமைப்புல விசயத்தைச் சொல்லி கொஞ்சம் பேரை காலையில இங்க வர சொன்னேன்''

''வீட்டுல சொல்லி இருக்கலாமே''

''ம்ம்... சரி ஃபிரெண்ட்ஸ்ங்க கேட்டா பிரின்சிபால் என்ன சொன்னாரோ அதை மட்டும் சொன்னாபோதும்''

மதிய உணவு வேளையில் அனைவரும் என்ன ஆனது என விபரம் தெரிந்து கொண்டார்கள்.

''இதுதான் நம்ம பிரின்சிபால்கிட்ட எனக்கு பிடிச்சது'' என்றான் ஒருவன்.

சந்தானலட்சுமி, ரகுராமனிடம் 'இனிமேலாவது காலேஜுல இதைப் பத்தி எதுவும் பேசாத' என எச்சரித்தாள். ரகுராமன் அதன் பின்னர் கட்சியைப் பற்றி மாலை முழுவதும் பேசவே இல்லை.

மாலையில் சரியாக ஆறு மணியளவில் நாகராஜனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ரகுராமன். வீடு மிகவும் பளிச்சென இருந்தது. முன்புறத்தில் மலர்ச்செடிகள் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது. வீட்டு வாசலில் நாகராஜனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இவனுக்காக காத்திருந்தவர் போல நாகராஜன் ரகுராமனை வரவேற்றார்.

வீட்டின் உள்ளே சுவர்களில் இயற்கை காட்சிகள் அடங்கிய படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தது. இருக்கைகள் அழகாக இருந்தது. ஆங்காங்கே வரையப்பட்டஓவியங்களும் தென்பட்டன. வீட்டின் அழகில் பிரமித்துப் போன ரகுராமன் நின்று கொண்டிருந்தான்.

''உட்காருங்க ரகுராமன்''

ரகுராமன் அமர்ந்தான்.

''பிரியா இங்கே வாம்மா''

சண்முகப்பிரியா அங்கே வந்தாள். அவளையும் அமருமாரு சொன்னார்.

''காபி, டீ என்ன குடிக்கிறீங்க ரகுராமன்''

''காபி குடிச்சிட்டுதான் வந்தேன் சார், அதனால எதுவும் வேணாம் சார்''

''என்னோட பொண்ணு இந்த கட்சி விசயத்துல சம்பந்தபட்டு இருக்காங்கனு உங்களை கூப்பிடலை ரகுராமன், எனக்கும் உங்களை மாதிரி உங்க‌ வயசுல கனவு இருந்தது. அதெல்லாம் எதுக்கு, நம்மாள முடிஞ்ச அளவு சமூகத் தொண்டு புரிவோம் அப்படினு எங்க அப்பாவோட அறிவுரையை கேட்டதோட இல்லாம அதுதான் சரினு எனக்கு மனசுக்குப் பட்டதால அந்த கனவை அப்படியே விட்டுட்டேன். நிறைய நல்ல மாணவர்களை உருவாக்கலாம்னு மனசுல என்னோட அப்பாவோட கல்லூரி கனவுல என்னையும் இணைச்சிட்டேன். ஆனா இந்த கல்லூரி ஆரம்பிக்க நாங்க பட்ட கஷ்டம் நிறைய. நாங்க ஆரம்பிக்க நினைச்சது பொறியியல் கல்லூரியோ, மருத்துவ கல்லூரியோ இல்லை. இப்போ இருக்கிற வணிகவியல், பொருளாதாரவியல், சமூகவியல் அப்படினு ஒரு கல்லூரி ஆரம்பிக்க நினைச்சப்போ எத்தனை தடைகள், அதையெல்லாம் தாண்டி இப்போ ஒரு நல்ல சிறந்த கல்லூரியா உருவாகி இருக்கறதுக்கு காரணம் நல்ல மாணவர்கள், நல்ல ஆசிரியர்களோட ஒத்துழைப்பு''

''என் மகன் நிறைய மதிப்பெண்கள் வாங்கி பொறியியல் துறை படிக்க போறேனு சொன்னார், படிக்கட்டும்னு விட்டேன். இன்னைக்கு அவர் அமெரிக்காவில இருக்கார். பிரியாவுக்கு மருத்துவமோ, பொறியியலோ இஷ்டம் இல்லை. இவங்க என்ன படிக்க விருப்பப்படறாங்களோ படிக்கட்டும்னு இருந்துட்டேன், நீங்கதான் உங்க வாழ்க்கையை தீர்மானிக்கனும்''

பேசிக்கொண்டிருந்த போதே பலகாரங்கள், இனிப்புகள் தண்ணீர் என மேசையில் வந்து வைத்தார் நாகராஜனின் மனைவி மகேஸ்வரி.

''எடுத்துக்கோங்க ரகுராமன்''

''நன்றி சார்''

''ஒரு கட்சியோட முழு வெற்றி அந்த கட்சியில இணையற உறுப்பினர்களோட செயல்பாடுல, கட்சித் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளார்களுனு நிறையவே இருக்கு. எல்லாம் நல்லா அமையனும், அல்லது அமைச்சிக்க கடும் முயற்சி எடுத்துக்கனும். இன்னைக்கு கல்லூரி வாசலுல‌ காலையில நடந்த விசயத்தை வைச்சித்தான் எல்லா விசயமும் எனக்கு கொண்டு வந்தாங்க. கல்லூரியில இதை பேச வேணாம்னுதான் உங்களை இங்க வரச் சொன்னேன்''

''சரி மாநில கட்சி, தேசிய கட்சி எது உங்களோடது?''

''எனது நோக்கம் தேசிய கட்சிதான் சார், முதல தேவையான வாக்குகள் சேகரிச்சி மாநில கட்சி அங்கீகாரம் தேர்தல் ஆணையம் மூலமா பெறனும், அப்படியே கட்சியை பக்கத்து மாநிலங்களுக்கு விரிவடைய செஞ்சி முதல் கட்டமா ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா அப்படினு நம்ம தமிழ்நாட்டோட சேர்த்து நல்ல வாக்குகள் வாங்கி தேசிய கட்சி அங்கீகாரம் பெறனும் சார்''

இதைக் கேட்டதும் நாகராஜன் ரகுராமனது கைகளைப் பிடித்து குலுக்கினார். அவரது கண்களில் பெரும் நம்பிக்கை தெரிந்தது.

''உங்களுக்கு என்ன உதவி வேணுமோ, அதை என்கிட்ட தயங்காம கேளுங்க ரகுராமன், நிச்சயம் செஞ்சி தரேன், என்னை மாதிரி எத்தனையோ பேர் நிச்சயம் இருப்பாங்க''

''ரொம்ப தேங்க்ஸ்பா''

ரொம்ப நன்றி சார்''

''படிப்புலயும் கவனம் இருக்கட்டும்''

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ரகுராமன் மிகவும் சந்தோசத்துடன் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

தனது கனவுகள் சாத்தியப்படாதவைகள் என ஒதுங்கிப் போய்விடும் மனிதர்கள் யாவரும் சற்று சிந்தித்து அந்த கனவுகளை அடைய வேண்டிய முயற்சியில் இறங்கினால்தான் என்ன? கனவு மெய்ப்பட வேண்டும் என பாரதிக்கு மட்டும் தான பாட வருமா?

(தொடரும்)

Wednesday 30 June 2010

காமம் - 6

கண்ணம்மா பற்றி எழுதும்போது இப்படித்தான் எழுதுகிறார் பாரதியார். இந்த பாடல்களில் இருக்கும் காதல் ஒரு சஞ்சலமாகவே பாரதிக்குத் தோணவில்லை. அது ஒரு மாபெரும் இன்பமாகவே அவருக்கு இருந்து இருக்கிறது.

1 காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே.

2 . நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று
சரண மெய்தினேன்

காதல்தனை மையமாக வைத்து வேண்டும்போது மிகவும் அழகாகவே பாடுகிறார்.

பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்.

இந்த காதல் ஆசை மோகம் எனும் கட்டுக்குள் விழுந்துவிடும் போது பாரதியார் தள்ளாடுகிறார். ஒரு விரக்தியின் நிலையில் இருந்தே மகாசக்திக்கு விண்ணப்பம் வைக்கிறார்.

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடு.

இந்த பாடலை கேட்கும்போது மோகம் அத்தனை கொடியதா? என்றே கேள்வி எழுந்துவிடுகிறது. மனைவியின் விருப்பத்திற்கோ, கணவனின் விருப்பத்திற்கோ எதிராக இருவருக்குள் ஏற்படும் கலவி கள்ளத்தனம் என்கிறது சட்டம். மனைவியானவர், கணவன் தன்னை மோசம் செய்துவிட்டார் என வழக்கு போடலாம் என்கிறது அந்த சட்டம். இதோ இப்படிப்பட்ட மோகம் மிகவும் கொடியதுதான். அவரவர் சுய விருப்பத்திற்காக காதல் இங்கே பலி கொடுக்கப்படுவதுதான் உண்மை.

ஒரு பாடலை (பாடல் கீழே தரப்பட்டு உள்ளது) எழுதிய காரணத்திற்காக மட்டுமல்ல, துறவி வேடம் கொண்ட துரோகத்தனத்திற்காக பட்டினத்தார் மேல் எனக்கு கோபம் இருந்தது  உண்டு. புத்தரை  துறவி என கருதுவதில்லை, ஒரு துரோகியாகத்தான் அவர் எனது கண்ணுக்கு தென்பட்டது உண்டு.

பட்டினத்தார் ஒரு தாம்பத்ய உறவை எத்தனை கீழ்த்தரமாக எழுதிவிட்டார் என்றுதான் தோன்றியது. தான் வாழும் வாழ்க்கை முறையை உயர்த்திப் பேசி அடுத்தவர் வாழும் முறையை தாழ்த்திப் பேசும் சராசரி மனிதரை போல்தான் அந்த பாடல் தோன்றியது. இதில் காதல் எங்கே இருக்கிறது. வெறும் காமம் என்றுதான் பார்த்து இருக்கிறார் பட்டினத்தார். அதன் காரணமாக பரிதாபம் மட்டுமே அவர் மீது மிஞ்சுகிறது.

நாப்பிளக்கப் பொய் உரைத்துனவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

இதோ பத்திரகிரியார். என்ன விளையாடுகிறாரா? கவிதையின் வரிகளுக்கு வேண்டுமெனில் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?

வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்?

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்?

இந்த பாடல் எல்லாம் வந்தவிதத்திற்கான காரணம் காதல் தொலைந்து போனதுதான். காமம்தனை முன்னிறுத்தி வாழ்ந்த மன்னர் கால வழக்கம் இவருக்கு பெரும் எரிச்சலை தந்து இருக்கலாம். ஆக, காமம் அத்தனை கொடியதா?

சூர்ப்பனகை கொண்ட காம வேட்கையை கம்பர் இப்படித்தான் விவரிக்கிறார்.

நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள்

வான்தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள்
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள்

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவேன் போக்கு அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்

எவர் மீதும் எப்படி வேண்டுமானாலும் ஆசை வந்து தொலையும். ஆனால் காதல் ஒரு முறையோடு வந்துதான் நிற்கும். காதல் வேறு, ஆசை வேறு. காதல் ஆசையாய் மாறாதவரை பாரதியின் மோகத்தை கொன்றுவிடு வரி அவசியமில்லை. ஆசை காதலாக மாறும்போது அங்கே நின்னை சரணடைந்தேன் என்றுதான் பாடத் தோன்றும்.

எனக்கு நின்னை சரணடைந்தேன் எனும் பாடல் மிகவும் அதிகமாகவே பிடித்து இருக்கிறது.

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 7



7.

ரகுராமன் தனக்கு எவரும் ஆதரவு தரவில்லை என்பதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டான். இதை சந்தானலட்சுமியிடமும் சொன்னான். அதற்கு அவளும் 'நீ பட்டுதான் தெரிஞ்சுக்கவேனு இருந்தா என்ன செய்ய முடியும்' என ஒரே வாக்கியத்தில் முடித்தாள்.

எத்தனை திரைப்படங்கள் சமூக அக்கறை பற்றி வந்திருக்கிறது. எத்தனை கதைகள் சமூக அக்கறை பற்றி எழதப்பட்டு இருக்கிறது. எத்தனை சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. எத்தனை சமூக நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் சமூகத்தில் சில விசயங்கள் அப்படி அப்படியேதான் இருக்கின்றன.

ரகுராமனின் யோசித்துக் கொண்டிருக்கும்போதே சண்முகப்பிரியா அவனை நோக்கி வந்தாள். சண்முகப்பிரியா சமூக அக்கறையில் அதிகம் நாட்டம் கொண்டவள். ஆனால் தனது சமூக அக்கறையை பிறரிடம் சொல்லிக் கொண்டதில்லை. தலைமுடியை பின்னலிட்டு கொள்வதில் அவளுக்கு அலாதிப் பிரியம். சுடிதார் அணிவதை விட அதிகம் தாவணி அணிவதில்தான் அவளுக்கு ஈடுபாடு. தமிழ் நிறம் என்றோ வட இந்திய நிறம் என்றோ சொல்லிவிடமுடியாதபடிதான் இருந்தாள்.
 

''ரகு, உன்கிட்ட பேசனும்'' என்றாள் சண்முகப்பிரியா.
 

''சொல்லு பிரியா, என்ன விசயம்'' என்றான் ரகுராமன்.

''நீ கட்சி ஆரம்பிக்கப் போற விசயம் பத்தி நானும் கேள்விபட்டேன், ஏன் பெண்கள் இதில் ஈடுபாடோட இருக்கமாட்டாங்கனு நினைச்சிதான் எங்க யாருகிட்டயும் நீ கேட்கலையா'' என்றாள்.

''லட்சுமிகிட்ட பேசினேன்'' என்றான் ரகுராமன்.

''நான் உன் கட்சியில சேர்ந்துக்கிறேன், ஆனா ஒண்ணு இப்போ இருக்கிற எந்த கட்சியைப் பத்தியோ, அவங்களோட கொள்கையைப் பத்தியோ நீ எப்பவும் தாக்கிப் பேசக்கூடாது. நம்ம கட்சியோட கொள்கை, நாம மக்களுக்கு எப்படியெல்லாம் நல்லது செய்வோம் அப்படிங்கிற எண்ணம்தான் நமக்கு இருக்கனும்'' என்றாள்.

''பிரியா, நிசமாத்தான் சொல்றியா, உங்க வீட்டுல ஏத்துப்பாங்களா, நாளைக்கே நீ கல்யாணம் பண்ணிப் போனப்பறம் புகுந்த வீட்டுல சரினு சொல்வாங்களா, நல்லா யோசிச்சிக்கோ பிரியா'' என்றான் ரகுராமன்.

''ரகு, நீ அதைப்பத்தியெல்லாம் அநாவசியமா கவலைப்படாதே, நீ என்னை உன் கட்சியில சேர்த்துக்கோ, அவ்வளவுதான்'' என்றாள்.

''கட்சியோட பேரு பிடிச்சிருக்கா'' என்றான் ரகுராமன்.

''மக்கள் ஒற்றுமை இயக்கம், நல்லாத்தான் இருக்கு, கட்சியை எப்பத் தொடங்கலாம்'' என்றாள்.

''சீக்கிரமா, ரொம்ப தேங்க்ஸ் பிரியா'' என ரகுராமன் சொன்னபோது அவனுக்குள் நம்பிக்கை பிரகாசமிட்டது.
 

இந்த விசயத்தை சந்தானலட்சுமியிடம் பகிர்ந்து கொண்டான் ரகுராமன். 'என்னை கழட்டிவிட்டுடமாட்டியே' என்றாள் சந்தானலட்சுமி. ரகுராமன் சிரித்துக்கொண்டே 'நான் செய்றதைப் பாத்துட்டு நீ என்னை கழட்டிவிடாம இருந்தா சரி' என்றான். 'அப்படி நடந்துக்கிரமாட்டேனு நினைக்கிறேன்' என சொல்லிவிட்டு கிளம்பிப் போனாள்.
 

அன்று இரவே கட்சியின் கொள்கைகள் என எழுத ஆரம்பித்தான் ரகுராமன். முதல் கொள்கை என சண்முகப்பிரியா சொன்னதையே எழுதினான்.
 

1. சக மனிதர்களை மரியாதையுடனும், அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளும்விதமாக நடந்து கொள்வது கட்சியினரின் முதன்மை கடமை.
 

எழுதிய பின்னர் வாசித்துப் பார்த்தான். நன்றாக இருந்ததுபோல் இருந்தது. இதை சண்முகப்பிரியாவிடம் காட்டலாம் என எண்ணியவன் பாடப்புத்தகங்களை எடுத்து படிக்கலானான்.
 

கல்லூரி வாசலில் சற்று தள்ளி ஐம்பது பெண்களுடன் சண்முகப்பிரியா நின்று கொண்டிருந்தாள். அவர்களைச் சுற்றி அந்த ஊர்க்காரர்களும் நின்று கொண்டிருந்தார்கள். எவருக்கும் என்ன ஏதுவென புரியவில்லை. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர யார் என்னவென சொல்லிக்கொள்ளவும் இல்லை.
 

கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மாணவியர்களும் நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ரகுராமன் கல்லூரிக்கு வந்து சேர்ந்தான். வழியில் அவனை மறைத்த சண்முகப்பிரியா 'இதோ இவங்க எல்லாரும் நம்ம கட்சியில உறுப்பினரா சேர விருப்பம் தெரிவிச்சி இருக்காங்க' என்றாள். ரகுராமன் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனான்.
 

''பிரியா என்னதிது'' என ஆச்சரியம் விலகாமல் கேட்டு வைத்தான் ரகுராமன்.

''நம்ம கட்சி உறுப்பினர்கள், எனக்குத் தெரிஞ்ச சமூக நலனில் அக்கறை கொண்ட பெண்கள், இன்னும் இருக்காங்க'' என்றாள்.

அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான் ரகுராமன். இந்த வாரம் சனிக்கிழமை ஒரு சின்ன கூட்டம் போட்டு பேசலாம் என தனது எண்ணத்தைத் தெரிவித்தான் ரகுராமன். ஊரில் இருப்பவர்களில் சிலர் விபரம் கேள்விபட்டு தாங்களும் கலந்து கொள்வதாகச் சொன்னார்கள். ரகுராமன் மனதில் கட்சியின் செயல்பாட்டினை வரைய ஆரம்பித்தான்.

கல்லூரியில் பதினொரு மணியளவில் கல்லூரியின் முதல்வர் நாகராஜன் ரகுராமன், சண்முகப்பிரியா இருவரையும் தனது அறைக்கு வரச் சொல்லி உத்தரவு அனுப்பி இருந்தார். அப்போது பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் முகம்மது இருவரையும் கல்லூரி முதல்வரை பாடம் முடிந்ததும் சென்று பார்க்கச் சொன்னார்.

மனித சக்தி என்பது அளப்பரிய சக்தி என்பது அனைவரும் அறிந்துதான் இருக்கிறார்கள். பாரதி மட்டும்தான் பாடி வைப்பாரா? நல்லதோரு வீணை செய்தே என! அனைவருமே எப்போது பாடப் போகிறார்கள் என்பது எப்போதோ?

(தொடரும்)