Tuesday 22 June 2010

எங்கம்மாவுக்கு கல்யாணம்

இருபத்தி மூன்று வயதுடைய இளம்பெண் என்னிடம் இப்படித்தான் வந்து சொன்னாள். ''எங்கம்மாவுக்கு அடுத்த வாரம் திங்கள் கிழமை கல்யாணம், நீங்க அவசியம் வந்துருங்க''. இதை என்னிடம் அவள் சொன்னபோது அவளிடத்தில் எந்தவித தயக்கமும் இல்லை. கூச்சமும் இல்லை. எனக்குத்தான் வெட்கமாக இருந்தது.

அதோடு அவள் நிறுத்தவில்லை, அவள் தனது தாயின் திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் தானே முன்னின்று செய்யப் போகிறேன் என சொன்னபோது எனக்கு மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. ஒரே ஒரு புன்னகை. ''ம், வருகிறோம்'' என்றுமட்டும் சொன்னேன்.

 எனக்குள் எத்தனையோ கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது. இருந்தாலும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்து கொள்வதில் என்ன தடை இருந்துவிடப் போகிறது?.

பிடிக்காமல்  வாழ்ந்து கழிக்கும் நாட்களைவிட, பிடித்து கழிக்கும் நாட்கள் அதிகம் இருப்பின் அதுவே வாழ்க்கையின் வெற்றி. ஆனால் நாம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் நம்மை சமாதானப்படுத்திக் கொள்கிறோம். பிடித்த விசயங்கள் என நாம் செய்வது மிகவும் குறைவு. பிடிக்காத விசயங்கள் எனினும் அதை நாம் செய்வது மிகவும் அதிகம்.

ஒருவனுக்கு  ஒருத்தி எனும் கோட்பாடு நன்றாகத்தான் இருக்கிறது. விவாகரத்து பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் மனதில் ரணங்களுடன் எதற்கு எவரும் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும். எதிலும் ஒரு திருப்தியில்லாத தன்மை இருப்பதன் அடிப்படை காரணம் எது.

புரிந்து  கொள்ளல், ஒருவரின் கருத்தோடு மற்றவர் ஒத்துப் போதல் என்பது ஏன் சாத்தியமில்லை. பிடிக்காவிட்டாலும் வாழ்ந்து கழித்துவிட்ட நமது முன்னோர்கள் நமக்கு சொன்னது குடும்ப உறவு விட்டுப் போகக் கூடாது என்பதுதான். இதற்காக மொத்தமாக வலி சுமந்து வாழும் வாழ்க்கை எதற்கு?

வாழ்க்கையில் நிம்மதி என்பதன் அளவுகோல் வேறுபடுகிறது. இந்த வேறுபாட்டினால் மனம் வெறுத்து வாழ்பவர்கள் அதிகம்தான். தனக்காக வாழ்பவர்கள் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவே இருக்கிறார்கள். பிறருக்காக வாழ நினைப்பவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் சுமக்கிறார்கள்.


மறுமணம் என்பது மறுக்கப்பட வேண்டிய விசயமல்ல. எனினும் திருமணங்கள் தோற்றுப்போவதன் அடிப்படை காரணம் அறிந்து கொள்ளல் அவசியமாகிறது. எது எப்படி இருப்பினும்  நமது சந்ததியினரும் எங்கம்மாவுக்கு கல்யாணம் என சொல்லாமல் இருக்கும் காலம் எக்காலமோ?

அடியார்க்கெல்லாம் அடியார் 18

நீலகண்டனின் இறுதிச் சடங்கில் பலரும் கலந்து கொண்டனர். பரமேஸ்வரனும், சிவநாதனும் கலந்து கொண்டார்கள். கதிரேசனின் அன்னையும், தாத்தாவும் கலந்து கொண்டார்கள். இறுதிச் சடங்கு முடிந்த கணமே அனைவரும் அவரவர் ஊருக்குத் திரும்பினார்கள். மூன்றாம் நாள் காரியம் முடியும் வரை கதிரேசனும் அவனது அம்மாவும், தாத்தாவும் அங்கே தங்க வேண்டியதாகிவிட்டது. பார்வதிக்குத் துணையாக செல்லாயி இருந்தார். மூன்றாம் நாள் காரியம் முடிந்து புளியம்பட்டிக்கு அம்மா, தாத்தாவுடன் திரும்பினான் கதிரேசன்.

புளியம்பட்டியில் கதிரேசனிடம் எதிர்காலம் குறித்துச் சொல்லுமாறு சிலர் வீட்டிற்கு வந்து சென்றார்கள். செல்லாயிக்கு கோபமாக வந்தது. தனது மகன் சாமியார் இல்லை என சொல்லியும் வம்பாக வந்து செல்கிறார்கள் என எண்ணும்போது மனம் மிகவும் வாடியது. சில தினங்களாகவே இவ்வாறு நடக்க கதிரேசனிடம் பேசினார் செல்லாயி.

''ஏன்பா, அந்த பொண்ணு உன்னை கல்யாணம் பண்ண சம்மதிக்குமா?'' என்றார். ''அந்த தாத்தா செத்துப் போனது எனக்கு கஷ்டமா இருக்குமா, அந்த பொண்ணு சம்மதிச்சா என்ன, சம்மதிக்காட்டா என்ன, இப்ப எதுக்கும்மா அந்த பேச்சு'' என்றான் கதிரேசன். ''அதுக்கில்லைப்பா, நமக்கும் அவங்களுக்கும் ஒத்து வருமா?'' என பேச்சை நிறுத்தினார் செல்லாயி. ''வராமலே போகட்டும்மா, இப்போ எதுக்கு அந்த கவலை, பாவம் அவங்களே கவலையில இருக்காங்க, அங்கேயிருந்து இங்கே வந்ததும் ஏன்மா இந்த கவலை'' என்றான் கதிரேசன்.

செல்லாயி எழுந்து கொண்டே ''இருக்கற என் உசிருப் போயிரக்கூடாதேனுதான்ப்பா'' என்ரார். இதைக் கேட்ட கதிரேசன் ''அம்மா, ஏன்மா இப்படி உடைஞ்சி போற, நான் தான் சொல்லிட்டேன்ல, குடும்ப வாழ்க்கையிலே இருப்பேனுட்டு'' என்றான். ''அந்த பொண்ணு கிடைக்காட்டாலும்மா'' என்றார் செல்லாயி. கதிரேசன் அமைதியானான். ''சொல்லுப்பா'' என்றார் செல்லாயி. ''என்னம்மா சொல்ல சொல்ற? அந்த பொண்ணு இல்லாட்டாலும் தான்'' என்றான் கதிரேசன். வேதனையிலும் வேதனை வந்து சேர்ந்துவிடக் கூடாதென விவரமாகத்தான் சொன்னான் கதிரேசன். ஆனாலும் செல்லாயிக்கு நம்பிக்கையில்லை, மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

விடுமுறை கழிந்து கல்லூரிக்குச் செல்லும் தினம் வந்ததும் தனது அன்னையிடம் தைரியம் சொன்னான் கதிரேசன். ''நீதான்பா என் உலகம்'' என்றார் செல்லாயி. கதிரேசனின் கண்கள் கலங்கியது. ''உன் சந்தோசம்தான்மா என் சந்தோசம், இனிமே என்னோட நடவடிக்கையில கவனமா இருப்பேன்மா, நீ கவலைப்படாதேம்மா, என்னோட நல்லதுக்குத்தானே நீ எல்லாம் செய்வ, ஊர்க்காரங்க என்னை சாமியாராப் பார்த்தாக்கூட நீ சந்தோசப்படும்மா'' என கிளம்பும் முன்னர் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினான் கதிரேசன். ''ரொம்ப சந்தோசம்பா'' என்றார் செல்லாயி.

கல்லூரித் தொடங்கியது. நீலகண்டனின் வீட்டுப் பக்கம் செல்லும்போதெல்லாம் தன்னை அறியாமல் அங்கேயே சில நிமிடங்கள் நிற்பான் கதிரேசன். கண்களில் கண்ணீர் கொட்டும். ஆதரவில்லாமல் நின்றபோது ஆதரவு தந்தவர், அன்பு உறவுகளைத் தந்தவர். தன்னால் முடியாதபோதும் ஓரிடம் காட்டிச் சென்றவர். நீலகண்டன் தன்னிடம் கேட்ட 'சிவனை, தமிழை மறந்துட்டியோ' எனும் கேள்வி மனதைச் சுட்டுக் கொண்டே இருந்தது.

ஒருநாள் சிவன் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்தான் கதிரேசன். அன்றைய தினம் மாலையில் சிவநாதனும் ஆலயத்திற்கு வந்திருந்தார். கதிரேசன் சிவநாதன் வந்ததை கவனிக்கவில்லை. அதே ஆலயத்தில் வைஷ்ணவி தனது தோழிகளுடன் வந்து இருந்தாள். வழிபட்டு முடித்த மறுகணம் கதிரேசன் பாடினான்.

''மொழியில்லா உலகத்திலே நீயும் மொழியாய் இருந்தாய்
வழியில்லா பாதைதனிலே வழியாய் வந்தாய்
ஆதியும் அந்தமும் இல்லாதவன் நீயென என்றே
சேதியும் வந்ததென்ன சொல்சிவனே.''

இந்த பாடலைக் கேட்டவுடன் சிவநாதன் கதிரேசனை நோக்கி விரைந்தார். ''பாடாதேனு சொன்ன பிறகும் நீ பாடிக்கிட்டேதான் இருக்க'' என்றார் சிவநாதன். கதிரேசன் மெளனமாக நின்றான். ''இனிமே பாடாதே'' என்றார் சிவநாதன். ''சார் என்னைத் தப்பா நினைக்காதீங்க, நான் பாடறப்போ நீங்க கேட்காம இருக்க முடியுமா, இந்த கோவிலுனு இல்லை, ரொம்ப இடத்திலே பாடிக்கிட்டே இருக்கேன்'' என்றான் கதிரேசன். சிவநாதன் கதிரேசனை முறைத்துப் பார்த்தார். ''ம் பாடு'' எனச் சொல்லிவிட்டு சிவனை நோக்கி வணங்கினார். ஆனால் அவர் இன்று எதுவும் பாடவில்லை. வணங்கியவர் கதிரேசனை நோக்கி ''ம் பாடு'' என்றார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


இதையெல்லாம் வைஷ்ணவியும் தோழியரும் கவனித்தார்கள். பாடி முடித்த கதிரேசனிடம் ''இந்த பாட்டு எப்படி நல்லா இருக்கு, அதுமாதிரி நல்லா பாட்டு எழுது, அப்புறம் பாடு, அரைகுறையா தெரிஞ்சி வைச்சிக்கிட்டு அதுவும் சொல்சிவனேனு ஏன் பாடுற'' என சொல்லிவிட்டு நகர்ந்தார் சிவநாதன். கதிரேசன் கண்கள் கலங்கியபடி நின்றான்.

வைஷ்ணவியும் தோழியர்களும் கதிரேசனிடம் வந்தார்கள். ''அவர் சொல்றபடி ஏன் அரைகுறையா தெரிஞ்சி வைச்சிட்டுப் பாடுற, நிறைய கத்துக்கிட்டு பாடு'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் கண்கள் கலங்கியபடியே நின்று கொண்டிருந்தான். இரவாகியும் கோவிலிலேயே இருந்தான். கோவில் நடை சாத்தப்போகிறோம் என்றார் குருக்கள். கோவிலை விட்டு வெளியேறினான் கதிரேசன்.

கோவிலின் வாசலில் வைஷ்ணவி நின்று கொண்டிருந்தாள். ''இந்தா கோவில் பிரசாதம், ஏன் அப்படியே உட்கார்ந்துட்ட, உன்னை தொந்தரவு செய்ய வேணாம்னு அங்கே உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தேன், விடுதிக்கு போகுற நேரம் வேற ஆகுது. என் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அனுப்பியிருக்கேன். பாட்டு சரியில்லைனு சொல்லிட்டோம்மா, அவர் சொன்னது சரிதான், நீ பேசாம சொல்பெருமாளேனு பாடு'' என்றாள் வைஷ்ணவி. ''பிரசாதம் வாங்கியவன், அதெல்லாம் இல்லை வைஷ்ணவி, எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லை'' என்றான் கதிரேசன். ''அப்ப சரி'' என வைஷ்ணவி விடைபெற்றுச் சென்றாள். கதிரேசன் 'சொல்பெருமாளே' என சொல்லிப் பார்த்தான். 'சொல்பெருமானே'' பொருத்தமா இருக்குமோ என எண்ணினான்.

(தொடரும்)

Sunday 20 June 2010

நுனிப்புல் (பாகம் 2) 8


8. கேசவன் பூங்கோதை


வீட்டுக்குள் அனைவரும் வந்து அமர்ந்தனர். கேசவனின் தாய் மோகனா கேட்டார்.


‘’வீட்டுல அம்மா அப்பா இல்லையா’’ 


‘’கல்யாணம் முடிஞ்சதும் சோலையரசபுரம் போய்ட்டாங்க, என்ன விசயமுனு தெரியலை’’ 


அனைவருக்கும் பலகாரங்களும், இனிப்பும் எடுத்து வைத்து உபசரித்தான். அத்தை கமலாவை வரச் சொல்லுமாறு பழனியிடம் சொல்லி அனுப்பினான் வாசன். குளிர்பானங்கள் கேட்டவர்களுக்கு கடையில் வாங்கி வைத்திருந்த குளிர்பானங்கள் தந்தான். அத்தை கமலா வந்ததும் மற்றவர்களுக்கு காபி போட்டுக் கொடுத்தார்கள். பூங்கோதையின் தந்தை கோபாலிடம் வாசன் பேசினான்.


‘’நாளைக்கு திருமலைக்கு கிளம்பறீங்களா’’ 


‘’ஆமாம்பா, அங்க இரண்டு நாளு இவங்களை தங்க வைச்சிட்டு அனுப்பி வைக்கலாம்னு இருக்கோம், நீங்க கூட திருவில்லிபுத்தூருக்கு ஏதோ செடி விசயமா வரதா விநாயகம் சொன்னாரு, வந்தா எங்க வீட்டுல தாராளமா தங்கலாம்பா’’ 


‘’ஆமா அப்பா, பெரியவர் விருப்பப்பட்டா உங்க வீட்டில தங்கிக்கிறோம், மலைப்பகுதியெல்லாம் போகனும்’’ 


கேசவன் வாசனிடம் அவர்களுடன் வரச் சொன்னான். அதற்கு வாசன் ஏதோ சில விசயங்களை எல்லாம் சரி பண்ணனும் அதுக்காக புதன்கிழமை கிளம்பலாம்னு சொல்லி இருக்கார் பெரியவர் என்று சொன்னதும் சரி என கேசவன் சம்மதித்தான். பார்த்தசாரதியும் விஷ்ணுப்பிரியனும் பேசிக் கொண்டிருந்தார்கள். வாசன் அவர்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். கமலா வாசனிடம் தனியாய் அழைத்து கேட்டார்.


‘’அம்மா சேலை எதுவும் எடுத்து வைச்சிருக்காங்களா, இருந்தா கொடு தம்பி, பொண்ணுக்குத் தரனும்’’ 


‘’தெரியலை அத்தை, அப்படி எதுவும் கொடுக்கனுமா’’ 


‘’இருந்தா பாரு, இல்லைனா பரவாயில்லை’’ 


வாசன் தேடிப் பார்த்து ஒரு சேலையை கொண்டு வந்து தந்தான்.


சேலையுடன் வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்து கமலா பூங்கோதையிடம் தந்தார். பூங்கோதை அதனை வாங்கிக் கொண்டு கமலாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். பார்த்தசாரதி வாசனிடம் பேச வேண்டும் என அழைத்தார். நிலைமையை புரிந்து கொண்ட வாசன் பார்த்தசாரதியை பூஜையறைக்குள் அழைத்துச் சென்றான். விஷ்ணுப்பிரியனும் உடன் சென்றார். பார்த்தசாரதி பேசினார்.


‘’குழந்தை விசயத்தை வெளியில் சொல்லிட வேண்டாம்னு சொன்னேன், பூசாரி தாயாக நிற்கிறீயேனு சொல்றார், இதோ இப்படி துண்டு காகிதத்தில எழுதி வேற யார்கிட்டயோ கொடுத்து இருக்க’’ 


வாசன் அமைதியாய் எதுவும் பேசாமல் நின்றான். 


‘’இந்த கல்யாணம் எந்த பிரச்சினை இல்லாம நடந்துருச்சு, இனியும் பிரச்சினை இல்லாம இருக்கனும்னு நினைச்சா நீயே பிரச்சினை கொண்டு வந்துருவ போலிருக்கே வாசன்’’ 


வாசன் மீண்டும் அமைதியாகவே இருந்தான். விஷ்ணுப்பிரியன் குறுக்கிட்டார்.


‘’பதில் சொல்லுங்க வாசன்’’ 


வாசன் சற்றும் கூட யோசிக்காமல் விஷ்ணுப்பிரியன் சொன்ன விசயத்தை அப்படியே பார்த்தசாரதியிடம் சொன்னான். அதிர்ச்சி அடைந்தவர் தடுமாறினார்.


‘’விஷ்ணு, என்ன காரியம் பண்ணிட்ட’’ 


‘’பார்த்தா’’ 


‘’இனிமே இதுபற்றி என்கிட்ட எதுவும் பேசாத விஷ்ணு, இப்படி அநியாயமா என்னை ஏமாத்தி இப்படி அவசர கல்யாணம் பண்ண வைச்சிட்ட’’ 


வாசன் உடனடியாக சுதாரித்துக் கொண்டான்.


‘’நீங்க இப்படி பேசிக்கிட்டு இருந்தா பிரச்சினை பெரிசாயிரும், வாங்க வெளியில போவோம்’’ 


வாசன் தீபம் ஏற்றி தீபாராதனை காட்டினான். பார்த்தசாரதியின் உடல் நடுங்கியது. அவரது குரல் உடைந்தது.


‘’என்னை ஏமாத்திட்டல்ல, ஒரு நல்ல குடும்ப உறவு கிடைச்சதுனு விடறேன் ஆனா விஷ்ணு’’


வாசன் பார்த்தசாரதியினை சமாதனப்படுத்தினான். பார்த்தசாரதியின் முகம் வாடியது. கனவு ஒன்று நொறுங்கிப் போவதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்தார். வாசனது வீட்டிலிருந்து விரைவாக பார்த்தசாரதி வெளியேறினார். அனைவரும் அவரை பின் தொடர்ந்து வெளியேறினார்கள். விடைபெற்றுக் கொண்ட பார்த்தசாரதியால் ஜோதியிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கேசவனது வீட்டினை அடைந்ததும் ஜோதியிடம் விபரம் சொன்னார். ஜோதி சந்தோசப்பட்டாள். அந்த சந்தோசத்தை சுபாவிடம் தெரிவித்தாள். சுபா விஷ்ணுப்பிரியனைத் தேடினாள். 


‘’அதெல்லாம் இல்லை, உடனே சோதனை செய்ய வேண்டும், கரு உள்ளேதான் இருக்கும் எப்படியும் இரண்டு வாரத்தில தெரிஞ்சிரும், விஷ்ணு விளையாடறார் நேத்துல இருந்தே ஒரு மாதிரிதான் இருந்தார், வரட்டும்...’’ 


அதைக்கேட்டுக்கொண்டே விஷ்ணுப்பிரியன் உள்ளே வந்தார்.


‘’சோதனை பயனளிக்காது, தேவையில்லை, நான் கருவை உருவாக்கவே இல்லை’’ 


சுபாவிற்கு பயங்கர கோபம் வந்தது. மனதை அடக்கிக் கொண்டவள் சுவரை நோக்கிய வண்ணம் நின்றாள். ஜோதி சுபாவினை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். பார்த்தசாரதி அங்கிருந்த மேசையில் தனது தலையை கவிழ்த்துக் கொண்டார். விஷ்ணுப்பிரியன் அடுத்த கட்ட திட்டமாக கேசவனுக்கும் பூங்கோதைக்கும் இந்த விசயம் சொல்வது என வாசன் குறுக்கிடும் முன்னர் அவசரமாக செயல்பட்டார். அவர்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என கேசவனிடம் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தவர் கேசவனை உடனே சந்தித்தார். முழுவிபரங்களும் சொன்னார்.


‘’எதுக்கு இத்தனை சிரமம்’’ 


‘’முயற்சி பண்ணினது வழி கிடைக்கல, அதனால திருமண விசயத்தை நிறுத்த வேண்டாம்னு சொல்லாம விட்டுட்டேன்’’ கேசவன் சற்று அதிர்ச்சி அடைந்தான், வாசனிடம் பேச வேண்டும் என கிளம்பினான். விஷ்ணுப்பிரியன் தடுத்தார். 


‘’எதுக்கு இப்போ வீண் பிரச்சினை வாசனுக்கும் தெரியும், சொல்லிட்டேன் உங்களுக்கு திருமணம் ஆயிருச்சி புது வாழ்க்கை தொடங்குங்க நீங்களே குழந்தை பெத்துக்கோங்க’’ 


அப்பொழுது பூங்கோதை வந்தாள். விஷ்ணுப்பிரியன் விலகிச் சென்றார். பூங்கோதையிடம் கேசவன் நடந்ததை சொன்னான். கேசவன் மேல் மெதுவாக சாய்ந்தாள் பூங்கோதை.


‘’ம் இருந்துட்டுப் போகட்டும் என்னை உங்களைப் பிடிச்சிருக்கு தானே, உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாம குழந்தைப் பெத்துக்கிரலாம்’’ 


‘’அப்படின்னா நீ அந்த குழந்தைய சுமக்காம போனதுக்கு வருத்தப்படலையா’’ 


‘’அந்த குழந்தையை சுமக்கனும்னு முழு மனசா இருந்து செஞ்சேன், உங்களை பார்க்கறவரைக்கும், கல்யாணம் கூட வேணாம்னுதான் சொன்னேன் ஆனா கல்யாணம் வரைக்கும் வரவைச்சி இப்ப இவர் இப்படி சொன்னா நாம பிரியனுமா’’ 


கேசவன் பூங்கோதையை கட்டிப்பிடித்துக் கொண்டான். அவர்களுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த அறையினுள் அந்த இனிய பொழுதினிலே நுழைந்தனர். இருவரும் மனம் விட்டு எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பேசினார்கள். கேசவன் பூங்கோதையின் மேல் உயிரை வைத்தான். பூங்கோதை கேசவன் மேல் தனது உயிரை வைத்தாள். அறையின் கதவு பூட்டிக்கொண்டது. 


அதே வேளையில் வாசன் விஷ்ணுப்பிரியனின் செயல்கள் குறித்தும், மாதவி வரைந்து தந்த படம் குறித்தும் தீவிர யோசனையில் இறங்கினான். கேசவனிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணி இருந்தவனுக்கு சோலையரசபுரம் தர்மலிங்கத்திடம் இருந்து வந்த தொலைபேசியால் யாரிடமும் சொல்லாமல் வீட்டினைப் பூட்டிவிட்டு சோலையரசபுரத்திற்கு விரைவாக சென்றான். அங்கு அவனுக்காக சோதிட சாஸ்திரி நம்பெருமாள் காத்துக் கொண்டிருந்தார். 


(தொடரும்)