Wednesday 26 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 13

மதுசூதனனை உள்ளே அழைத்து அமர வைத்தான் கதிரேசன். என்ன விபரம் எனக் கேட்டபோது விடுதியில் தன்னால் ஒரு பெரிய பிரச்சினை உண்டாகிவிட்டதாகவும், தானே பொறுப்பேற்றுக்கொண்டு விடுதியை விட்டு வெளியேறி வந்ததாகவும் தனது ஊருக்கு தகவல் தந்துவிட்டதாகவும் கூறியவன் தங்குவதற்கு ஒரு இடம் தேட வேண்டும் என்றான். கதிரேசன் நீலகண்டன் எழுந்ததும் கேட்டு சொல்வதாக சொன்னான். ஆனால் மதுசூதனன் தனக்கு வேறு ஒரு இடம் வேண்டும் என்பதில் குறிப்பாய் இருந்தான். 

இருவரும் வெளியே சென்று தேடினர். அப்பொழுது வழியில் வந்த  நாமம் அணிந்த ஒருவரிடம் மதுசூதனன் தனக்கு எங்கேனும் ஒரு வீடு அறை வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்டான். என்ன விபரம் என கேட்டவரிடம் நான் வைணவன் என ஆரம்பித்து கதையை சொன்னான் மதுசூதனன். நாமம் அணிந்தவர் மதுசூதனனுக்கு தனது வீட்டிலேயே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். தனது வீட்டு முகவரி தந்துவிட்டு காலையில் வருமாறு சொன்னார். கதிரேசன் மகிழ்ந்தான். உனக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும்னு நினைச்சியா என சிரித்தான் மதுசூதனன். 

''எங்களோட தங்கி இருந்து இருக்கலாமே, ஏன் நாங்க சைவம்னு யோசிக்கிறியா?'' என்றான் கதிரேசன். ''இல்லை, நானும் சேர்ந்து எதுக்கு தொல்லை தரனும்னுதான் வேறு வீடு பார்க்கச் நினைச்சேன்'' என்றான் மதுசூதனன்.

இத்தனை நாள் சமண சமயம் பற்றி பேசாத கதிரேசன் அன்று சமண சமயத்தைப் பற்றி மதுசூதனனிடம் கூறினான். மதுசூதனன் கோபம் கொண்டவனாய் ''அது எல்லாம் வைணவத்தைப் பத்தி தப்பா சைவர்கள் எழுதியது'' என்றான். அதற்கு கதிரேசன் ''அப்படின்னா சைவத்தைப் பத்தி தப்பா வைணவர்கள் எழுதியதா?'' என்றான். மதுசூதனன் யோசித்தான். ''நீ நல்லாப்படிச்சிப் பாரு வேத மதம்னும், திருஞானசம்பந்தரைப் பத்தியும் கூட அவதூறா எழுதியிருக்காங்க'' என்றான் கதிரேசன். மதுசூதனன் ''ஏன் இப்போ இதைப்பத்தி என்கிட்ட பேசுற,  நானே விடுதியில ஒரு பிரச்சினைக்கு ஆளாகி வந்துருக்கேன், அப்படியிருந்தும்'' என கூறினான். ''இல்லை எனக்கு என்னமோ மொத்த வரலாறு திரிக்கப்பட்டு இருக்குனு மனசுக்கு தோணுது, அதான் உன்கிட்ட சொன்னா நீயும் என்ன ஏதுனு பார்ப்ப'' என்றான் கதிரேசன். ''பார்க்குறேன், ஆனா இப்ப வேணாம், நாளைக்கு நான் சிவநாதன் சாரை வேறப் பார்க்கனும்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விட்டான்.

உறங்கிக் கொண்டிருந்த நீலகண்டன் 'கதிரேசா கதிரேசா' என அழைத்தார். ''தாத்தா'' என்ற கதிரேசன் அவரது அறையில் விளக்கைப் போட்டுப் பார்த்தான். நீலகண்டன் கதிரேசனை அருகில் அழைத்து அவனது தலையில் கையை வைத்தார். அடுத்த சில விநாடிகளில் அவரது கண்கள் அசைய மறுத்தது. ''தாத்தா'' என அலறினான் கதிரேசன். மதுசூதனன்  அறைக்குள் ஓடி வந்தான்.

நீலகண்டனின் உடல் அசைவற்றுப் போனதைக் கண்டு பதறிய கதிரேசன் மதுசூதனனை அவர் அருகில் இருக்கச் சொல்லிவிட்டு மருத்துவரை அழைக்க ஓடினான். நீலகண்டனையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மதுசூதனன். திருநீறு இன்னும் அழியாமல் அவரது உடலில் ஒட்டி இருந்தது. திருநீறு தாங்கிய நெஞ்சில் தனது கையை வைத்தான் மதுசூதனன். பாடினான். குரல் தழுதழுத்தது.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

அவரது நெஞ்சில் கையை வைத்து பலமாக அழுத்தியபடியே பாடி முடித்தவன்  ''எம்பெருமானே சிவனே உதவி செய்யீரோ'' என ஓங்கி நெஞ்சை அழுத்தினான். திடுக்கிட்டு விழித்தார் நீலகண்டன். ''தாத்தா'' என அழைத்தான். ''செத்துட்டேன்னு நினைச்சேன், உயிர்ப்பிச்சைப் போட்டியோ'' என மதுசூதனனை படுக்கையிலிருந்தபடியே கைகள் எடுத்து கும்பிட்டார் நீலகண்டன். அவரது கட்டிலின் அருகில் இருந்த புத்தகத்தில் வரிகள் கண்டான் மதுசூதனன்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

அந்த வேளையில் மருத்துவருடன் கதிரேசன் உள்ளே நுழைந்தான். கதிரேசன் நீலகண்டன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான். நீலகண்டனைப் பரிசோதித்த மருத்துவர்  ''இப்போதைக்கு பயப்படுறமாதிரி ஒண்ணுமில்ல சில பரிசோதனை செய்யனும்'' எனக் கூறிவிட்டு நாளை அதிகாலை நீலகண்டனை மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு சென்றார். இருவரும் நீலகண்டனின் அறையிலேயே இருந்தார்கள். நீலகண்டன் மேற்கொண்டு பேசாமல் தூக்கம் வருவதாக தூங்கினார்.


''என்ன செய்தாய், எப்படி எழுந்தார்'' எனக் கேட்டான் கதிரேசன். தான் தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட முதலுதவி செய்தேன் என்றான் மதுசூதனன். மதுசூதனனை கட்டிப்பிடித்தான் கதிரேசன். தூக்கம் கண்களைச் சுழட்ட கட்டிலுக்கு அருகிலேயே உறங்கினார்கள்.

நீலகண்டன் காலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு பூசிக்கொண்டு வழக்கம்போல பூஜை அறையில் அமர்ந்தார். அவருடன் கதிரேசனும் அமர்ந்தான். சிறிது நேரத்தில் மதுசூதனனும் பூஜை அறைக்குள் நுழைந்தான். ''பெருமாளை அங்க வைச்சி நீ பூஜை பண்ணு'' என பூஜை அறையில் ஓரிடம் காட்டினார் நீலகண்டன். 


பூஜைகள் முடிந்து மருத்துவமனைக்குச் சென்றார்கள். அதிகாலையிலேயே நீலகண்டனின் இதயம், இரத்தம் சிறுநீர் என பரிசோதனை தொடங்கியது. கல்லூரிக்குச் செல்லும் வேளை நெருங்கிட மதுசூதனனை கல்லூரிக்குப் போகச் சொன்னான் கதிரேசன். மதுசூதனன் உடனிருப்பதாக சொன்னான். சில நாட்கள் கழித்து வரச் சொன்னார் மருத்துவர். வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தார் நீலகண்டன். கதிரேசன் சங்கரன்கோவிலுக்கு தகவல் சொன்னான். கல்லூரிக்கு செல்லாமல் அவருடனே இருந்தான்.

மதுசூதனன் புதிய வீட்டிற்கு சென்று தனது பொருட்களை வைத்துவிட்டு மதிய வேளையில் கல்லூரியில் சிவநாதனை சந்தித்தான். சிவநாதன் அவனை கடுமையாக எச்சரித்தார். சாதி மத வேறுபாட்டினை எவரேனும் தூண்டும் வகையில் நடந்தால் கல்லூரியில் இருந்து விலக்கிவிடுவதாக கூறினார். தனது தவறை உணர்ந்த மதுசூதனனுக்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதாக கூறி அனுப்பினார். கல்லூரியில் மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டனர்.

அன்று மாலையில் அனைவரும் சங்கரன்கோவிலில் இருந்து வந்து சேர்ந்தார்கள். நீலகண்டனை அவர்களுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள். கதிரேசன் தனித்து தனியாய் நின்றான். மதுசூதனன் அப்பொழுது நீலகண்டனின் வீட்டிற்குள் நுழைந்தான். 


(தொடரும்) 

Friday 21 May 2010

புகைபிடித்தலும், தண்ணி அடித்தலும்

ராமானுசபுரம்னு தமிழ்நாட்டுல தெற்கால இருக்கற ஊருலதான் சின்னசாமி வாழ்ந்து வந்தான்.

சின்ன வயசுல வயக்காட்டுல கூலிக்காக ஓடியாடி வேலை செஞ்சிட்டிருந்த காலத்தில வெங்கடசனோட சேர்ந்து முத முதல தோட்டத்தில மறைஞ்சி நின்னு குடிக்க ஆரம்பிச்ச சிகரெட்டு பழக்கத்தை சின்னசாமி தொடங்கினப்போ அவனுக்கு பதினேழு வயசுதான். அதக்கப்பறம் அந்தப் பழக்கத்தை நிறுத்திக்கவே இல்லை. வெங்கடேசன் படிச்சி பட்டம் வாங்கி திருச்சியில வேலைக்குச் சேர்ந்துட்டான், ஆனா இந்த சின்னசாமி ராமனுசபுரத்தைவிட்டு எங்கயும் போகலை. படிச்சிட்டு இருக்கறப்போ ஊருக்கு எப்பவாச்சும் வர வெங்கடேசன், சின்னசாமிகிட்ட 'சிகரெட் பழக்கத்தை விட்டுடா'னு சொன்னாலும் சின்னசாமி விடுறதா இல்லை.

அதோட விட்டானா சின்னசாமி, இருவது, இருவத்தி ரண்டு வயசுலேயே உடல் அலுப்புக்குனு வயக்காட்டு வேலை முடிஞ்சதும் கொஞ்சம் சாராயம் வாங்கி குடிக்க ஆரம்பிச்சான். அதுவே கொஞ்சம் அதிகப்படியாப் போக ஆரம்பிச்சிருச்சி. குடிக்காம அவனால ஒருநாளும் இருக்க முடியல. இருந்தாலும், குடிச்சிட்டு அவனோட வீட்டுல போய் பேசாம படுத்துக்குவான் சின்னசாமி. ரோட்டுல கத்தறது, கெட்ட கெட்ட வார்த்தை பேசறதுனு எதுவுமே பண்ணமாட்டான் சின்னசாமி.

இப்படி இருந்த சின்னசாமிய, தங்கராசு மக கல்யாணி விரும்பினா. அப்போ சின்னசாமிக்கு வயசு இருவத்தி மூணு இருக்கும், கல்யாணிக்கு பத்தொன்பதுதான் இருக்கும். இந்த காதலு விசயத்தை சின்னசாமிகிட்டயும் அவ சொல்லி வைச்சா. கூடவே ஒரு கட்டளை போட்டுட்டா. 'எப்போ சிகரெட்டையும், குடியையும் விடறியோ அப்பதான் கட்டிக்குவேனு' சொன்னதும் 'சரி சரினு' சொன்ன சின்னசாமிக்கு சாராயம் குடிக்காமலும், சிகரெட்டு பிடிக்காமலும் இருக்க முடியல. கல்யாணியை சின்னசாமிக்கு ரொம்பவேப் பிடிச்சிப் போயிருந்துச்சு. இருந்தும் என்ன செய்ய?

கல்யாணிகிட்ட 'என்னைக் கட்டிக்கோ, கல்யாணத்துக்கப்பறம் மாறிருவேன், உடம்பு வலி அதான் குடிக்கிறேனு' ஒரு நொண்டிச் சாக்கு சொன்னான் சின்னசாமி. அதுக்கு கல்யாணி 'ஏன் நானும்தே காட்டுல மேட்டுல வேலை செய்யலயா, உடம்பு வலிக்குதுனு நா குடிக்கிறேனா' னு ஒரே வெட்டா வெட்டிப் பேசிட்டுப் போயிட்டா.

சின்னசாமி யோசிச்சிப் பார்த்துட்டு ஒரு வாரம் சிகரெட், குடியை விட்டான், ஆனா அவனால அதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியல. 'குடிகாரப் பயலுக்கு என் மகளைத் தரமாட்டேனு கல்யாணியோட அப்பா ஒத்த காலுல நின்னுட்டாரு, அதோட அந்த கல்யாணியும் சின்னசாமிகிட்ட இப்படி இருக்க உன்னோட என்னால குடும்பம் நடத்த முடியாதுனு சொல்லிட்டுப் போயிட்டா'

இதனால மனசு உடைஞ்ச சின்னசாமி சிகரெட்டும், சாராயமும் கொஞ்சமா, கொஞ்சமா விட முயற்சி பண்ணினான். சின்னசாமிய 'திருத்திப் புடலாம்' னு கல்யாணிக்கு லேசா கூட நம்பிக்கை வரவேயில்லை. கல்யாணி நினைச்சமாதிரியே மறுபடியும் சின்னசாமி குடிக்க ஆரம்பிச்சிட்டான். 'இனி இந்த போக்கத்தவனை நம்பி புரயோசனமில்லைனு' கல்யாணி அப்பா சொன்னதைக் கேட்டு கல்யாணி வேற கல்யாணம் கட்டிட்டுப் போயிட்டா.

இந்த சின்னசாமிக்கு தன் மேல கோவம் கோவமா வந்துச்சு. என்ன பண்ண? யாருமே பொண்ணு தரமாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த சின்னசாமியும் கல்யாணி நினைப்புலயே இருந்துருவேனு ஒரு வசனம் பேசினான். அவன் பேசினது வசனமாத்தான் இருந்துச்சினாலும், அப்படியே வாழ ஆரம்பிச்சிட்டான்.

சின்னசாமிக்கு வயசு ஏறிக்கிட்டேப் போக ஆரம்பிச்சிச்சு. சிகரெட்டுல கார்பன் மோனாக்ஸைடுனு ஒரு காத்து இருக்கு. அந்த காத்து நம்ம உடம்புல இருக்கற செல்லுக்கு போகறதினால குறைச்சலான ஆக்ஸிஜன் தான் செல்லுக்கு எல்லாம் கிடைக்கும். அதனால செல் எல்லாம் வலிமை குறைஞ்சி போயிரும். அதோடு மட்டுமா, சிகரெட்டுல டார் னு ஒரு எழவும் இருக்கு, அந்த எழவு புத்து நோய கொண்டு வந்து சேத்துரும். அப்புறம் நிக்கோட்டினு சொல்வாங்க, அதுதான் திரும்ப பிடி, திரும்ப பிடினு வம்பு பண்ணும். இப்படி சிகரெட்டு குடிக்கிறதுனால மூச்சுக்குழாயில இருக்க சின்ன சின்ன இழை போல இருக்க செல் எல்லாம் செயல் இழந்து தூசுகள எல்லாம் பிடிச்சி வைக்காது, அதனால நுரையீரலு வீங்கிரும்.

இதனால சின்னசாமி தளர ஆரம்பிச்சிட்டான். அவனோட வயசு என்னவோ இருவத்தி எட்டுதான். அதோட அவன் குடிச்ச சாராயம் அவனோட கல்லீரலுக்குப் பிரச்சினை தர ஆரம்பிச்சிச்சு. அப்படியும் கூட அவனால அதை நிறுத்த முடியல. சின்னசாமி எப்பப் பார்த்தாலும் இரும ஆரம்பிச்சிட்டான். அதனால அவனுக்கு இருமல் சின்னசாமினு பட்டப்பேரு கூட வைச்சிட்டாங்க. பாவி மனுசன், திருந்தறமாதிரி தெரியல. என்ன பண்ணுவான் சின்னசாமி!

இப்படி அவனோட கதையை கொஞ்ச நாளைக்கு முன்னால பார்க்குல எதேச்சையா என்கிட்ட பேசிட்டிருந்த வெங்கடேசன் ஒருநா சொன்னதும்,  உடனே சின்னசாமியப் போய் பார்க்கனும் போல இருந்திச்சி.

சின்னசாமிகிட்ட  பக்குவமா பேசினேன். சிரிச்சிகிட்டே சொன்னான் சின்னசாமி. 'எல்லாத்தையும் விட்டுறேன்னு'  ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அவன்கிட்ட நிக்கோட்டின் பேட்ஜ் கொடுத்து எல்லாம் சொல்லிட்டு வந்தேன். கொஞ்ச நாளைக்கப்பறம் அதே பார்க்குல வெங்கடேசனை பார்த்தப்ப சொன்னான். சின்னசாமி இப்போ குடிக்கிறது இல்லை, பிடிக்கிறது இல்லைன்னு.

குடிச்சி  கேட்டுப் போன சாம்ராஜ்யம் இருக்கு. குடிக்கிறவங்க, பிடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு வாதாடற கூட்டம் இருக்கு. இவங்களை யாரு கெட்டவங்கனு சொன்னா, அளவுக்கு அதிகமா எதை செஞ்சாலும் உடம்பு கேட்டு போயிரும்னு தானே சொல்றாங்கனு நினைச்சிகிட்டு சின்னசாமியை பார்க்கப் போயிருந்தேன்.

சின்னசாமி என்னைப் பார்த்து கும்பிட்டான். 'என்ன பழக்கமிது'அப்படின்னு சத்தம் போட்டேன். எனக்கு கல்யாணிபோல பொண்ணு கிடைப்பாளானு கேட்டான். எதுக்கு அப்படின்னு கேட்டேன். இப்போதான்ஆம்பளைங்க மாதிரி பொம்பளைங்களும் குடிச்சிட்டும் பிடிச்சிட்டும் இருக்காங்களாமேனு சொன்னான். கலாச்சார சீரழிவு அப்படின்னு என்ன என்னமோ பேசினான் சின்னசாமி. நிக்கோட்டின் பேட்ஜ் வேணுமான்னு கேட்டேன், வேணாம்னுட்டான். இத்தனை வருஷ உத்தியோகத்துல என்னால ஒரு சின்னசாமியைத் தான் திருத்த முடிஞ்சது.

இதை நினைச்சி நான் என்ன தண்ணி அடிக்கவா முடியும், இல்லைன்னா ஊதித்தான் தள்ள முடியுமா? பொழப்பு அத்தவங்க பண்ற வேலை அதுனு கண்ணுல படற சின்னசாமிக்கெல்லாம் நிக்கோட்டின் பேட்ஜ் தந்துக்கிட்டுதான் இருக்கேன். தலையில ஒட்டிக்கோனு தூக்கி வீசிட்டு, புகைய என் முகத்துல ஊதிட்டு போறவங்களப் பாக்குறப்ப மனசு வலிக்கும். அதுக்காக நான் லாட்ஜ் எல்லாம் போடறது இல்ல. வருஷம் ஓடிருச்சி. பத்தோ பதினைஞ்சி சின்னசாமிகளை, ரெண்டோ மூனோ சின்னசாமினிகளை திருத்தினேன். வாழ்ந்துட்டு இருந்தப்ப எனக்கு ஒரு யோசனை வந்துச்சு, சிகரெட், சாராயம் உருவாக்கிறதை நிறுத்தினா என்னனு. எந்த தொழில் அதிபர்களும் என் பேச்சு கேட்கலை. என்ன பண்றது. இந்த வாழ்க்கைன்னாலே அப்படித்தான்.

இந்தாங்க நிகோட்டின் பேட்ஜ். நிகோடின் பற்றி மேலும் அறிய

Thursday 20 May 2010

நுனிப்புல் (பாகம் 2) 4

4 திருமண வைபவம்
தேவகி உறங்கிக்கொண்டு இருந்தாள். பூங்கோதை மீண்டும் மாதவியை எழுப்பினாள். உறக்கம் கலையாதவளாய் விழித்தாள் மாதவி.

‘’என்னங்க பூங்கோதை’’

‘’எனக்கு வாந்தி வரமாதிரி இருக்கு, என்கூட வர முடியுமா’’

மாதவி அவசரமாக எழுந்தாள். பூங்கோதையினை அழைத்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள். வீட்டில் மின்விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்பட வழியின்றிப் போனது.

மாதவி பூங்கோதையின் தலைப்பகுதியினையும், கழுத்துப் பகுதியினையும் தொட்டுப் பார்த்தாள். சூடாக இருந்தது. பூங்கோதை வாந்தி எடுத்தாள்.

‘’அலைச்சல்னால வந்து இருக்கும் பூங்கோதை, யார்கிட்ட ஒண்ணும் சொல்லிக்கிற வேணாம்ங்க பூங்கோதை’’

‘’இது அலைச்சல்னா வந்த வாந்தியோ, என்னவோ மாதவி எனக்கு பயம்மா இருக்கு, தாலி கட்டறப்ப ஏதாவது நடந்திருச்சின்னா என்ன பண்றது மாதவி’’

‘’கவலைப்படாதீங்க பூங்கோதை, மணி இப்போ ஒன்னுதான் ஆகுது, நல்லா தூங்கினா சரியாயிரும், இதுதான முதல் தடவை வாந்தி’’

‘’ம்’’

‘’அலைச்சல்னாலத்தான் இருக்கும்’’

கருவினை கருப்பையில் வைத்து இன்றோடு இரண்டு வாரங்கள்தான் ஆகிறது. கருவினை வைத்ததும், திருவிழா நடந்ததும், கல்யாணப் பேச்சு பேசியதும், திருமணம் நடக்கும் வேகமும் வாரங்கள் பல கடந்துபோல் தெரிகிறது. காலத்தின் வேகம்தனை யாரும் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆனால் காலம் ஒரே சீரான வேகத்தில்தான் சென்று கொண்டு இருக்கிறது, என்றாவது பூமி தன்னைத் தானே சுற்றும் நாட்களும், சூரியனை சுற்றும் நாட்களும் குறைந்ததாக, அதிகரித்ததாக ஏதேனும் கணக்கு இருக்கிறதா? இல்லை கணக்குப் பார்க்கத் தவறிவிட்டார்களா? பழைய பஞ்சாங்கத்தையேப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் நமக்குச் சொல்லத் தெரிகிறது.

பூங்கோதையை பத்திரமாக அழைத்து வந்து உறங்க வைத்தாள் மாதவி. உறங்க முடியாமல் தவித்தாள் பூங்கோதை. தைரியமான பெண் எனினும் சில நேரங்களில் மனம் சஞ்சலம் தவிர்க்க முடியாததுதான். மாதவி பூங்கோதையில் தலையை தடவிக்கொண்டே சொன்னாள்.



‘’தூக்கம் வரலைங்களா பூங்கோதை, நாளைக்குக் கல்யாணத்துக்கப்பறம் என்ன கவலை, உங்க மனசை புரிஞ்சவர்தான் உங்களுக்கு கணவனா வரப்போறார் அதனால எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிச்சிக்குவார், தைரியமா தூங்குங்க, அப்படியே எது நடந்தாலும் வாசன் மாமா எதுக்கு இருக்கார்’’

வாசனால் என்ன அப்படி செய்து விட முடியும்?, இது பூங்கோதையும் கேசவனும் அவரவர் குடும்பத்தாரும் சம்பந்தபட்ட வாழ்க்கை. இருப்பினும் மாதவியின் அந்த ஆறுதல் மொழி கேட்டபின்னர் பூங்கோதை கண் அயரத் தொடங்கினாள்.

திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்த பின்னர் ஊர் அடங்கி அயர்ந்து இருந்தது. வாசன், பார்த்தசாரதி மற்றும் பலர் மாதவியின் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தனர். சேகர் அய்யாவோ, சுந்தரனோ, அருணோ திருமணத்திற்கு வர இயலாத நிலை என கூறிவிட்டார்கள். சாரங்கன் திருமணத்திற்கு முதல்நாளே வந்திருந்தார், குரு வீட்டில் சாரங்கன் தங்கி இருந்தார். அந்த இரவு நேரத்தில் சாரங்கனிடம், குரு சொன்ன விசயங்கள், சாரங்கனுக்கு விபரீத ஆசையை உருவாக்கியது.

நடு இரவில் வாசன் திடுக்கிட்டு விழித்தான். திருமண முன்னேற்பாடுகளில் திருமால் பற்றி விசாரிக்க வாசன் மறந்தே போனான். திருமால் பற்றிய தகவல்கள் பாரதியிடம் இருந்து வராதது அந்த இரவில் வாசனுக்கு மிகவும் கவலையை அதிகரித்தது. அதுவும் இன்று காலையில் சென்று திருமாலைப் பார்த்து வருவதாக பாரதி நேற்று தகவல் சொல்லி இருந்தாள். இந்த நினைவுகள் வாசனது உறக்கத்தை கலைத்து இருந்தது. விஷ்ணுப்பிரியனின் நடவடிக்கைகளும் வாசனுக்கு ஒருவித அச்சத்தை தர ஆரம்பித்து இருந்தது.

அதிகாலைப் பொழுது விடிந்ததும், அனைவரும் திருமண விழாவிற்கு தயாராகிக் கொண்டு இருந்தனர். வாசன் உறங்காமல் பல வித சிந்தனைகளில் நேரம் போக்கிய பின்னர் திருமண விழாவிற்கு தயாரானான். சற்று அயர்ச்சியாக காணப்பட்டான். வாசன் தனது வீட்டிற்கு சென்று சில விபரங்களை எடுத்துக் கொண்டான். பூங்கோதைக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள். மாதவியிடம் ஒரு சில விசயங்கள் பேசினான். மாதவி தைரியம் சொன்னாள்.

வாசன் பின்னர் விநாயகம் பெரியவர் வீட்டிற்குச் சென்றான். அங்கு விஷ்ணுப்பிரியன் தங்கவில்லை என்பதை அறிந்தான். ஆனால் இது குறித்து அங்கு அவன் மேலும் பேசவில்லை. விநாயகம் பெரியவர்தான் விசாரித்தார்.

‘’வா வாசா, எல்லா ஏற்பாடுகளும் சரியா இருக்குல்ல, முதல்ல பொண்ணு கோவிலுக்குப் போகட்டும், அப்புறம் மாப்பிள்ளைப் போகட்டும் நீயே முன்ன நின்னு இந்த கல்யாணத்தை நடத்து’’

‘’நீங்களே நடத்தி வைங்க அய்யா’’

நேரம் மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது. திருமால் குறித்தும் பெரியவரிடம் பேசினான் வாசன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வாசனது வீட்டில் இருந்து மேள தாளங்களுடன் பூங்கோதை பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மாதவி பூங்கோதையின் அருகிலேயே இருந்தாள். பூங்கோதை மாதவியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

சற்று நேரம் பின்னர் கேசவன் மேள தாளங்களுடன் பெருமால் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். வாசன் கேசவனுடன் இருந்தான். பூங்கோதை கோவிலின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டாள். கேசவன் கோவில் வாசல் அடைந்ததும் பூங்கோதை கோவிலுக்குள் நுழைந்தாள். கோவிலுக்குள் நுழைந்த மறுகணம் பூசாரி சொன்னார்.

‘’தாயா வந்து நிற்கிறியேம்மா’’

இந்த வார்த்தைகள் கேட்ட விஷ்ணுப்பிரியனும் பார்த்தசாரதியும் கேள்வியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பூங்கோதைக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.

‘’ஆமாம், தாய்க்கும் தாயானவருக்கு தாயா வந்து நிற்கிறாங்க, நாங்கதான் இந்த உடை அலங்காரம் பண்ணினோம் பூசாரி அய்யா’’

மாதவி பதில் சொன்னதை கேட்டதும் விஷ்ணுப்பிரியன் மனதுக்குள் சிரித்தார். வாசன் இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தான்.

கேசவன் பூங்கோதையின் இடது பக்கத்தில் வந்து நின்று கொண்டான். கோவிலுக்குள் மிகவும் குறிப்பிட்டவர்களே இருந்தனர். கோவிலுக்கு முன் இடப்பட்ட பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெருமாளுக்கு தீபாரதனை காட்டப்பட்டது. புதிதாக எழுப்பபட்டிருந்த மண்டபத்தில் இருந்த குழந்தை வடிவ சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. வாசன் தன்னை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டான். வாசனின் உடல் முக பாவனைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்தார் விஷ்ணுப்பிரியன். மாதவி வாசனைப் பார்த்து கண்களால் பேசினாள். வாசனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. மாதவி பூங்கோதையிடம் பேசிக் கொண்டே இருந்தாள். பூங்கோதையின் கவனமெல்லாம் தான் மயக்க நிலை அடையக்கூடாது என்பதிலும் வாந்தி எடுத்துவிடக் கூடாது என்பதிலும் தான் இருந்தது.

மணப்பெண்ணும், மணமகனும் அமரவைக்கப்பட்டார்கள். அனைவரின் ஆசிர்வாதங்கள் பெறுவதற்காக மஞ்சள் கயிறு மகுடம் சூட்டிக் கொண்டது. அர்ச்சனை செய்திட மங்கலகர வண்ணம் பூசிய அரிசிகள் தரப்பட்டது. பூக்கள் தனது பிரிவை எண்ணி வருந்தாது மலர்ந்து சிரித்துக் கொண்டு இருந்தது. வளர்ந்து இருந்த நெருப்பின் முன்னமாய் வாய்மை வாயடைத்து நின்றது. ஓரிரு மந்திரங்கள் உபசரித்தார் பூசாரி. பெரியவர் நடத்தி வைத்தார். கேசவன் தாலியை கையில் வாங்கினான். தாலியை பூங்கோதையின் கழுத்தில் கட்டாமல் புதிய சிலையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். மேளத்தின் சப்தம் அதிகரித்தது.

‘’தாலியைக் கட்டுங்க’’

வாசன் கண்கள் சிவக்க ஆரம்பித்தது. முதலில் கைகள் ஆடின, பின்னர் தலையும் உடலும் சேர்ந்து ஆடியது. மாதவி பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தாள். விஷ்ணுப்பிரியன் மனதில் திட்டம் நிழற்படமாக ஓடியது. பூசாரியின் குரலைக் கேட்ட கேசவன் பூங்கோதையின் கழுத்தில் தாலியைக் கட்டினான். மணமக்களை அனைவரும் வாழ்த்தினார்கள். வாசன் மயங்கி விழுந்தான். பூங்கோதை பயந்து போனாள். மயக்கம் தெளிவிக்கப்பட்ட வாசன் கோவிலினை விட்டு வெளியே வந்து நின்றான். ஊரின் வழக்கப்படி தயார் செய்யப்பட்டு இருந்த திருமண படிவத்தில் வாசன் கையொப்பமிட்டான். மூன்று படிவங்களில் ஒன்றை மணமகளிடமும், ஒன்றை மணமகனிடமும் தந்துவிட்டு மூன்றாவதை கிராமத்திற்கும் என எடுத்துக்கொண்டான். வாசனின் மயக்கம் பற்றி ஊரே பேசியது. முத்துராசு பொன்னுராஜூவிடம் கூறினார்.

‘’வாசுவை அப்படியே உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டச் சொல்ல வேண்டியதுதான்’’

‘’இரண்டு வருசம் போகட்டும்’’

அப்பொழுது பொன்னுராஜூக்கு ஒரு யோசனை தோன்றியது. வாசனின் பெற்றோர்களிடம் சொன்னார் பொன்னுராஜ். இப்பொழுதா என யோசித்தவர்கள் சரி போய் வரலாம் என மூவரும் திருமணச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கிளம்பிச் செல்ல ஆயத்தமானார்கள்.

மணமக்கள் கோவிலில் இருந்து வீடு நோக்கி நடந்தார்கள். அப்பொழுது பெரியவர் வாசனை அழைத்தார்.

‘’நீ இப்படி பலவீனமா இருக்கறது நல்லதில்ல, உடம்பைப் பார்த்துக்கோ வாசா, நாம புதன்கிழமை திருவில்லிபுத்தூர் போறோம்’’

‘’உடம்பு நல்லாத்தான் அய்யா இருக்கு, ஆனா மனசுதான் ஆட்டி வைக்குது’’

கூட்டத்துடன் கெட்டி மேளம் கொட்டிச் சிரித்து நகர்ந்தது. கல்யாணச் சாப்பாடு இனிதே நடைபெற்றது. வாயார வாழ்த்தி வயிறார உணவருந்தி திருமணத்திற்கு வந்தவர்கள் விடைபெறத் தொடங்கினர். அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றவாரே கேசவனின் வீட்டில் மணமக்கள் அமர்ந்து இருந்தனர். கண்டெடுக்கப்பட வேண்டியவைகள் என மணமக்களைத் தேடச் சொன்னார்கள். தொலைத்து விடாத வாழக்கையை இருவரும் தேடிக்கொண்டார்கள். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த வாசன், மாதவியிடம் பேசினான்.

‘’நல்ல வேளை நீ கல்யாணத்துக்கு வந்த’’

‘’மறுபடியும் மயங்கி விழுந்துட்டீங்க மாமா, ஆனா பூங்கோதைக்கு வர இருந்த மயக்கத்தை எப்படி மாமா உடனே மாத்த முடிஞ்சது’’

‘’ம், பேசுவ, அப்படியே அந்த பெருமாள் தாத்தாவை நான் சுமக்கலாம்னு இருக்கேன்’’

‘’அதுக்கு நீங்க தேவையில்லை மாமா, ம், நானும் தேவகியும் இன்னைக்கு சாயந்திரமே கிளம்பறோம் மாமா, முதல்ல எங்க வீட்டுக்குப் போய்ட்டு பிறகு உங்க வீட்டுக்கு வர்றோம்’’
வாசனிடம் கூறிவிட்டு கேசவனிடமும் பூங்கோதையிடமும் விடைபெற்றுக் கொண்டு தேவகியுடன் கிளம்பினாள் மாதவி.

வாசனது பெற்றோர்களும், பொன்னுராஜும் சோலையரசபுரத்திற்கு ஒரு முக்கிய வேலையாகச் செல்வதாக கேசவன் வீட்டிலிருந்த வாசனிடம் வந்து சொல்லிவிட்டு தேவகியையும் மாதவியையும் பாதுகாப்பாக சென்று வருமாறு கூறிவிட்டு சோலையரசபுரம் சென்றார்கள். சிறிது நேரத்தில் கேசவன் வீட்டில் இருந்து வாசன் தனது வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் அருகில் சென்றதும், விஷ்ணுப்பிரியன் தனியாய் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். வாசனுக்கு ‘திக்’கென்றது.

(தொடரும்)