Friday 14 May 2010

எனக்குப் பிடித்த ஆழ்வார்கள்

மதம் என்பதெல்லாம் கடந்து ஒரு பார்வை இருக்குமெனில் அதில் இருக்கும் ரசனைகள் அத்தனை அழகு. இதைத்தான் தெய்வீக உணர்வு என சொல்வார்கள். மதம் கடந்த ஒரு உணர்வு இருப்பது மிக மிக அவசியம் தான். இப்பொழுது ஆழ்வார்கள் என எடுத்துக்கொள்ளும் போது இந்து மத சாயலும், இந்து மத உட்பிரிவான வைணவ சாயலும் வந்து சேரும். அதைத் தவிர்த்து விட இயலாது. ஆனால் அதையும் தாண்டிய  ஒரு பார்வை என்பது ஒரு வித பூசி மொழுகுதல் என்றே அர்த்தப்படும்.ஆனால் எனக்கு இந்த மதம் தாண்டிய வாசம் பிடித்து இருக்கிறது.

இந்த ஆழ்வார்கள் பிடித்துப் போனதால் எனக்கு எந்த சாயமும் தேவை இல்லை. இப்படித்தான் எனக்குப் பிடித்தவர்கள் என ஒவ்வொரு மனிதரைப் பற்றி எழுதும் போது அவர் என்ன மதம், என்ன சாதி என்பதெல்லாம் ஒரு விஷயமாகவே முன் வைக்கப்படக் கூடாது என்பது எனக்கு சௌகரியமாக இருக்கும். ஆனால் எனது துரதிர்ஷ்டம் இவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய சாயம் பூசப்பட்டு விட்டது, அல்லது பூச வேண்டிய சூழலுக்கு  தங்களை உட்படுத்திக் கொண்டார்கள்.

பன்னிரண்டு  ஆழ்வார்கள் என சொன்னதும் எனக்குள் எழுந்த கேள்வி, எதற்காக பன்னிரண்டுடன் நின்று போனது என்பதுதான். அதற்கடுத்து எவருமே ஆழ்வார்கள் ஆகும் தகுதியைப் பெறவில்லையா என யோசித்தபோதுதான் ஆழ்வாரோடு நாயன்மார்களும் எனும் கவிதை எழுந்தது.

நான் குடும்பஸ்தன். சகல ஆசைகளும் உடையவன். எனக்கு கடவுள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். என் தேவைக்கு கடவுள் எனக்குத் தேவை எனும் சுயநலம் நிறைந்த மனிதர்கள்  வாழும் உலகில் இந்த ஆழ்வார்களுக்கு எப்படி கடவுள் முதலாகிப் போனான்? ஒரு கால கட்டம் கடந்ததும் தங்களை இறைப்பணிக்கு என ஒதுக்கிக் கொண்டார்கள். கடவுளை தொழுது வாழும் வாழ்க்கை என்பது கடினமானது.

இதைத்தான் எனது தந்தை அடிக்கடி சொல்வார். திருவள்ளுவர் நெசவுத் தொழிலாளர். அவர் ஒருவரிடம் நூல் வாங்கி வேலை செய்வது உண்டு. ஒரு முறை  திருவள்ளுவர் நூல் விற்பவரை காண வீட்டுக்குச் செல்கிறார். அப்பொழுது நூல் விற்பவரின் மனைவி அவரது கணவர் பூஜை அறையில் இருப்பதாக சொல்கிறார். அதற்கு திருவள்ளுவர் பூஜை அறையில் இருக்கிறாரா, நூல் கணக்கை சரி பார்க்கிறாரா எனக் கேட்கிறார். உடனே நூல் விற்பவர் பூஜை அறையில் இருந்து ஐயனே என திருவள்ளுவரை நோக்கி ஓடி வருகிறார்ர். என் மனதில் பூஜை அறையில் இருந்து கொண்டு நூல் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் என வருத்தம் தெரிவிக்கிறார். அதாவது தனது மனதில் சகல ஆசைகளும் வைத்துக் கொண்டு இருப்பவர்களால் தெய்வத்தை உண்மையாக தொழுதல் சாத்தியம் இல்லை என்பதுதான் இந்த விசயத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் நீதி.

இப்படி எல்லா நேரங்களிலும் உலக வாழ்க்கையை பற்றிய பெரும் சிந்தனையில் இருந்து விலக முடியாமல் இருக்கும் என்னால் எப்படி கடவுள் மீது ஒரு உண்மையான பக்தியை செலுத்த இயலும். வெறுமனே இறைவா என இரு கை கூப்பி கோவில் சென்று வணங்குவதால் நான் ஒரு பக்தனாக முடியுமா? கவிதையில் முடித்தேன். நாணிக் கொள்கிறேன்  என!

மதம் தாண்டிய ஒரு பார்வை மட்டுமல்ல. தனி மனிதருக்கு என சொந்தம் அல்லாத கடவுள் எனும் பார்வை மிகவும் சுகம் தரும். எனினும் இறைவனை தனது சொந்தம் என கொண்டாடிய இந்த ஆழ்வார்கள் எனக்குப் பிடித்துப் போனார்கள். ஆழ்வார்கள் மட்டுமா? என்றால் இல்லை என்றே சொல்வேன்.

யார்  அந்த பன்னிரண்டு ஆழ்வார்கள். ஆண்டாள், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், திருமங்கயாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார். இந்த ஆழ்வார்கள் பற்றி  படிக்க இதோ இந்த தளத்தை அணுகலாம். வேறு பல தளங்களும் இருக்கும். மிகவும் சுவாரஸ்யமாகவே எழுதிஇருக்கிறார்கள். பேயாழ்வார், பூதத்தாழ்வார் என இருவருக்கும் ஒரே விஷயத்தை எழுதி இருக்கிறார்கள்.

ஆண்டாள் பற்றி முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன். திருப்பாவை பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்ததாகும். அதைப் போன்றே தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பச்சை மாமலை போல் மேனி எனும் பாடல் எனக்கு மிக மிகப் பிடித்தது. இதை அடியார்க்கெல்லாம் அடியார் கதையில் நான் உபயோகப்படுத்திய இடம் சற்று வித்தியாசமாக இருந்தது என தோழி ஒருவர் சொன்னபோது அட இப்படியும் அமையுமோ என எண்ணத் தோன்றியது. அடுத்ததாக   பெரியாழ்வார் எழுதிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்னை மெய் மறக்கச் செய்யும். 

இப்படி ஆழ்வார்கள் பிடித்தது மட்டுமின்றி நாயன்மார்களும் மிகவும் பிடித்துப் போனார்கள். இவர்களுக்குள் சண்டை சச்சரவு இருந்தது உண்டு எனவும் யார் பெரியவர் எனும் போட்டியும் இருந்தததாகவும் கதைகள் உண்டு. இரு இயக்கங்கள் என இருந்தால் யார் பெரியவர் எனும் சச்சரவு இருக்கத்தான் செய்கிறது, ஒரு இயக்கமென இருந்தாலும் ஏற்படும் சச்சரவு தவிர்க்க இயலாதுதான்.

அரசராக இருந்தவர் ஆழ்வாரானார் அவர் குலசேகர ஆழ்வார். வழிப்பறி செய்து இறைவன் தொண்டு செய்த ஆழ்வார் எனவும் இருந்தார் அவர் திருமங்கை ஆழ்வார் . என்னதொரு விளக்கம் தந்தாலும் எனக்கு இவர் இப்படி செய்ததில் உடன்பாடில்லை. நம்மாழ்வார் மிகவும் போற்றப்படுகிறார். இவரை புகழ்ந்து பாடியே ஒருவர் ஆழ்வார் ஆனார் அவர் மதுரகவி ஆழ்வார்.  

இவர்கள்  பாடிய பாடல்கள் என நாலாயிர திவ்விய பிரபந்தம் எனும் இசைத் தட்டு வாங்கி வைத்து இருகிறேன். தமிழ் வரிகளுக்காக இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்தான்.

Thursday 13 May 2010

நுனிப்புல் (பாகம் 2) 3

3. திரும்பிய திருமால்
நிதானமாக வீட்டினுள் திருமால் நுழைந்ததும் பாரதியும் கிருத்திகாவும் எழுந்தனர்.
‘’என்ன எழுந்துட்டீங்க, உட்காருங்க, என்னை மன்னிக்கனும், இப்படி உங்களை அதிக நேரம் காக்க வைச்சதுக்கு’’
‘’பரவாயில்லை சார், நாங்க இப்படி நின்னுகிட்டே பேசிட்டு கிளம்பறோம் எங்களுக்கு படிக்கிற வேலை இருக்கு சார்’’ என்றாள் கிருத்திகா.
‘’தப்பா எடுத்துக்க வேணாம், போன இடத்திலே கொஞ்சம் தாமதமாயிருச்சி, மதிய உணவு சாப்பிட்டுட்டு போங்க, இனி உங்களை தனியா உட்கார வைச்சிட்டுப் போக மாட்டேன்’’
‘’இன்னொரு நாளைக்கு வர்றோம் சார்’’
கிருத்திகாதான் பேசினாள். திருமால் பாரதியினைப் பார்த்தார். பாரதி கிருத்திகாவை அமரச் சொன்னாள். இருவரும் மீண்டும் அமர்ந்தார்கள். பாரதி திருமாலிடம் கேள்வி கேட்டாள்.
‘’உங்களைப் பத்தி சொல்ல முடியுமா’’
‘’என்னைப் பத்தியா’’
‘’அதாவது உங்க குடும்பம், பெருமாள் தாத்தா பத்தி விபரங்கள் சொல்லுங்க’’
திருமால் சிரித்தார். அப்பொழுது பெண்மணி ஒருவர் வீட்டினுள் நுழைந்தார். பாரதியையும் கிருத்திகாவையும் நோக்கி வணக்கம் சொன்னார். யாராக இருக்கும் என யூகித்துக் கொண்டவர்கள் வணக்கம் தெரிவித்துக் கொண்டார்கள். அவரும் வணக்கம் தெரிவித்தவாறே சமையலறையில் நுழைந்தார். அவரை திருமால் அறிமுகப்படுத்தினார்.
‘’இவங்கதான் என் மனைவி யோகலட்சுமி’’
திருமால் தனது குடும்ப விபரங்களைக் கூறிக் கொண்டே வந்தார். தனக்கு நான்கு வயதில் தீபக் என ஒரு பையனும், இரண்டு வயதில் தீபா என ஒரு பொண்ணும் இருப்பதாக கூறினார். திருமால் தான் சாத்திரம்பட்டியில் பிறந்து வளர்ந்ததாகவும், சென்னைக்கு பல வருடங்களுக்கு முன்னால் வந்து விட்டதாகவும், இங்கு ஒரு ஆஸ்ரமம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். பாரதி அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டாள். பாரதிக்கு திருமால் கூறிய ஊர் கேள்விப்பட்டது போல் இருந்தது, ஆனால் நினைவிற்கு வரவில்லை. இதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு பின்னர் கிருத்திகா சமையலறைக்குள் நுழைந்தாள்.
‘’பெருமாள் தாத்தா பத்தி சொல்லுங்க’’
மெளனமானார் திருமால். வீட்டின் சன்னல் வழியே வானம் பார்த்தார். மிகவும் யோசிப்பது போல் தென்பட்டது.
‘’அவரைப் பத்தி உங்களுக்கு விபரம் தெரிஞ்சா சொல்லுங்க’’
‘’சொல்றேன்’’
‘’அப்படின்னா சொல்லுங்க’’
‘’பெருமாள் போன வருசம் சாத்திரம்பட்டி போயிருக்கார், அங்க என்னைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கார் ஆனா அவரால என்னை சென்னைக்கு வந்து பார்க்க முடியாத சூழ்நிலை போல, எனக்கு கடிதம் போட்டிருந்தார். அவர் எங்க எங்க என்ன பண்ணினாருன்னு எல்லா விபரத்தையும் எழுதி எனக்கு அனுப்பி இருந்தார், அதுல அந்த சாத்திரம்பட்டி முகவரியை குறிப்பிட்டு இருந்தார், எனக்கு மிகவும் முக்கியமான வேலை இருந்ததால நானும் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பிட்டேன். கிருத்திகா சொன்னதிலிருந்து அவருக்கு கடிதம் கிடைச்சிருச்சி, ஆனா என்னைப் பார்க்க வர விருப்பமில்லை போல’’
‘’அவரைப் பத்திய விபரமெல்லாம் எதுக்கு உங்களுக்கு அவர் எழுதனும்’’
‘’அங்க யாராச்சும் என்னை முக்காலம் உணர்ந்த ஞானினு சொல்லு இருப்பாங்க’’
‘’நாங்களும் அப்படித்தான் நினைச்சோம், ஆமா உங்க குழந்தைங்க எங்க’’
‘’நாங்க வேலை பார்க்குற இடத்தில விட்டு வந்துருக்கோம்’’
திருமால் கூறிய அந்த வேலை விபரங்கள், இட அமைப்பு பாரதியை மிகவும் வியப்புக்கு உள்ளாக்கியது.
‘’எப்படி இவ்வளவு எளிமையா இருக்க முடியுது’’
‘’இது கூட ஒருவகைக்கு ஆடம்பரம் தான்’’
திருமாலிடம் இருந்து பல விசயங்கள் சேகரித்தாள் பாரதி. எல்லாம் குறித்துக் கொண்டவள் ஒரு காகிதம்தனை தந்து வாசனுக்கு ஒரு கடிதம் எழுதித் தாருங்கள் என விண்ணப்பம் வைத்தாள்.
‘’என்ன எழுதனும், நீங்க என்னை வந்து பார்த்தீங்கனு சாட்சி கடிதமா, ஓ தாராளமா எழுதி தரேன்’’
அழகாக ஆறு வரிகள் எழுதி தனது முகவரியையும் குறிப்பிட்டு பாரதியிடம் தந்தார். பாரதி படித்துப் பார்த்தாள்.
‘’நீங்க தேதி எழுத மாட்டீங்களா’’
‘’எழுதற வழக்கமில்லை’’
பாரதிக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆஸ்ரமத்திற்கு மதிய வேளையில் செல்லலாமா என கேட்டதற்கு திருமால் இன்று வேண்டாம், மற்றொரு முறை பார்க்கலாம் என்றார்.
அப்பொழுது சமையல் அறையில் இருந்து வெளிவந்தாள் கிருத்திகா.
‘’என்னய்யா, நேர்காணல் முடிஞ்சதா’’
‘’உன் தொந்தரவு இல்லாம எல்லாம் நல்லபடியாவே முடிஞ்சது’’
பாரதியின் பதிலை கேட்டுச் சிரித்துக் கொண்டே கிருத்திகா திருமாலிடம் கேட்டாள்.
‘’சார் நீங்க உண்மைதானே சொன்னீங்க, ஏன்னா இவ கனவை நம்பி கண்ணீர் விடுவா, கவலைப்படுவா பாவம் என் சிநேகிதி’’
‘’எனக்கு உண்மையா பட்ட விசயங்கள் சொன்னேன்’’
பாரதி குறுக்கிட்டாள்.
‘’கிருத்தி சமையலுக்கு உதவி பண்றேன்னு எல்லாம் சாப்பிட்டாச்சா’’
சமையல் தயாராக இருப்பதாக திருமாலின் மனைவி கூறினார். பாரதியும் கிருத்திகாவும் சாப்பிட்டார்கள். உணவு மிகவும் வித்தியாசமாக இருந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு நன்றி கூறிவிட்டு கிளம்பினார்கள்.
திருமால் அவர்களிடம் அவர்களது முகவரியைக் கேட்டார். பாரதி பதில் சொன்னாள்.
‘’எங்க முகவரியா, உங்களைப் பார்க்க வேண்டி வந்தா நாங்களே வந்து பார்த்துக்கிறோம், அப்படியே தேவைனு பார்த்தா பெருமாள் தாத்தா எழுதின கடிதம்தான் வேணும், ஆனா நீங்க கண்ணுல கூட காட்ட மாட்றீங்க, ஆஸ்ரமத்துக்கும் கூட்டிட்டுப் போக மாட்றீங்க அதனால வாசனே வந்து நேரில வாங்கிக்கிரட்டும்’’
யோகலட்சுமி கிருத்திகாவைப் பார்த்தவாறே கூறினார்.
‘’எல்லா விபரமும் கிருத்திகா என்கிட்ட சொல்லியாச்சு’’
பாரதி கிருத்திகாவை அர்த்தமுடன் பார்த்தாள். கிருத்திகா புன்னகைத்தாள்.
‘’வாசன் முகவரி தரலையே’’
திருமால் சிரித்துக்கொண்டார்.
‘’குளத்தூருக்கு எதுக்கு முகவரி, கடிதம், தேவைனு மட்டும் வர வேண்டாம், எப்பவும் வாங்க, வரதுக்கு முன்னாடி விபரம் சொல்லிருங்க’’
பாரதியும் கிருத்திகாவும் நன்றி கூறிவிட்டு கிளம்பினார்கள்.
‘’கிருத்தி, நீ எதுக்கு நம்ம முகவரி எல்லாம் தந்த’’
‘’என்னோட முகவரி மட்டும்தான் தந்து இருக்கேன்யா, என்னய்யா பண்ணிடப் போறாங்க, நீ ஏன்யா இப்படி பயப்படற, பதட்டப்படற அவங்க ரொம்ப நல்லவங்கய்யா, யோகலட்சுமி அக்கா சில விசயங்கள் சொன்னாங்கய்யா’’
 ‘’ம் சொல்லு’’
‘’அந்த அக்கா ரொம்ப அறிவாளிய்யா, நாம பார்த்தோமே திருமால், அவருக்கு முக்காலமும் தெரியுமாம்யா, ஆனா தெரிஞ்சது போல நடந்துக்கிர மாட்டாராம்யா ஒரு சாதாரணமான மனுசரைப் போலத்தான் வாழ்வாராம்யா’’
.‘’உன்னுடைய விளையாட்டுக்கு அளவே இல்லை கிருத்தி’’
‘’அந்த அக்காதான்யா சொன்னாங்கய்யா’’
பாரதி கிருத்திகாவை முறைத்தாள். கிருத்திகா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பேருந்து நிறுத்துமிடத்தில் வந்து நின்று கொண்டார்கள். வில்லிவாக்கம் வழி செல்லும் பேருந்து வந்து நின்றது.
(தொடரும்) 

Wednesday 12 May 2010

எங்க, குறை தீர்க்கும் சாமி


பொய்க்குதிரையாட்டம் பார்த்த நானும்
குதிரையாட்டம் போட ஏறிக்கொண்டேன்
ஆடு குதிரை ஆடு குதிரை என்று
நான் ஆடியே பலமுறை சொன்னபின்னரும்
முன்னங்காலை மட்டும் தூக்கி
முன்னும் பின்னும் போகாம நிற்க
கல்குதிரைக்கு என்ன விளங்கப்போகுதுனு
கலக்கமில்லாம இறங்கிடப் போறேன்
ஆடும் குதிரையிலத்தான் நானும்
ஏறிவிளையாடப் போறேன்

கவனமா ஒன்னுமட்டும் கேளுங்க
கல்லில் ஆக்கி வைச்ச கடவுள்கிட்ட
எங்க குறைதீரு குறைதீரு என்று
ஏமாளியாக நிற்க வேணாம்
என்ன செய்யனுமோ அதை
குறையில்லாம நீங்க செஞ்சிக்கிட்டா
கலக்கம் தானாப் போயிரும்
கடவுள்தான் உதவுனாருனு மனசும்
லேசாகப் போயிரும்.