Tuesday 2 February 2010

காமம் - 2

காமம் - 1 படிக்க இங்கே அழுத்தவும்.

காமம் பற்றி எழுத வேண்டியதன் அவசியம் என்ன? இதனை எழுதுவதன் மூலம் பிறருக்கு என்ன பயன் இருந்துவிடும் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது என என்னிடம் கேட்கப்பட்டபோது என்னால் என்ன பதில் சொல்லியிருக்க முடியும் என்பதை இப்போதைக்கு நீங்கள் யூகம் செய்து கொள்ளுங்கள்.

பலரின் கவனமானது மறைத்து வைத்திருக்கப்படும் விசயங்களில்தான் அதிகமிருக்கும் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள், அதாவது அது என்னவாக இருக்கக்கூடும், எப்படி இருக்கக்கூடும் என்கிற ஒருவித தேடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடிய விசயங்களில் மனம் நாட்டம் கொள்கிறது.

ஆடைகளே இல்லாமல் எத்தனை பேர் உலகில் நிர்வாணமாக வாழத் தயார் எனக் கேட்கப்பட்டால் 'அடச் சீ, இதென்ன மானங்கெட்ட நினைப்பும், கேள்வியும்' என்றே பதில் வந்து சேரும். ஆனால் சமணர்கள், சில முனிவர்கள் நிர்வாணமாக வாழ்ந்தார்கள் எனும் கதை கேட்டதுண்டு,  நிர்வாணமாக வட இந்தியாவில் வாழும் 'சித்தர்கள்' என அழைக்கப்படும் மனிதர்கள் பற்றிய விசயத்தை, நிர்வாணமாகவே இருந்திட வேண்டும் என்கிற கட்டுப்பாடோடு கூடிய கடற்கரை பகுதிகள், வீட்டினுள் நிர்வாணமாகவே வாழ்ந்து வரும் 'இயற்கைவாதிகள்' என தொலைகாட்சியில் காட்டியது உண்டு.

இப்பொழுது மானம் என்பது அங்கங்களை மறைத்து வாழ்வது எனச் சொன்னால் மருத்துவ உலகத்தை கொஞ்சம் உற்று நோக்குங்கள். மருத்துவ உலகத்தில் காமம் என்கிற வார்த்தைக்கு கொஞ்சமும் இடம் கிடையாது. இந்தியத் திருநாட்டில் எப்படி எனத் தெரியவில்லை, ஆனால் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எல்லாம் ஆண்களும் மருத்துவ தாதிகளாகப் பணியாற்றுகிறார்கள்.

ஆனால் எவரும் எந்த நாட்டிலும் நிர்வாணமாக செல்ல முடியாது. நிர்வாணமாக விளையாட்டு அரங்குகளில் ஓடித் திரிந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நிர்வாணமாக எவரேனும் வாழ நினைத்தால் அவர்கள் மனநிலை பிறழ்வுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கக் கூடும் என்கிறார்கள். கிழிந்த ஆடையில் தங்களை மறைத்துக் கொள்ள இயலாமல் தவிக்கும் மனிதர்கள் எத்தனை பேர். உண்ணவே உணவின்றி உலகத்தில் ஒரு பகுதி தத்தளித்துக் கொண்டுதானிருக்கிறது.  எனினும் விலங்குகளின் நிர்வாணம், குழந்தைகளின் நிர்வாணம் நமது கண்களுக்கு ஏன் அருவெறுப்பாகத் தெரிவதில்லை! மனதில் எழுதப்பட்டது எல்லாம் தவறுதலாகவே எழுதப்பட்டு வந்திருக்கிறது. எதை எதை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டுமோ அது மட்டுமே வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் எனப்படும் நாகரீகம் விதைத்தது மனிதர்களாகிய நாம் தான். மறுப்பதற்கில்லை.

நமக்குச் சொந்தம் அல்லாத பிறிதொரு பொருளின் மீது ஆசைப்பட்டாலே அங்கே நமது மானம் தொலைந்துவிடுகிறது என்கிறது நமது முன்னோர்களின் சொல்வளம். அப்படியெனில் எத்தனை பேர் மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும் கேள்வி எழுமெனில் கிராமத்து வழக்கச் சொல்லாகிய 'மானங்கெட்ட பொழப்பு' என எளிதாகச் சொல்லிவிடலாம்.

காமத்துப்பால்தனை இப்பொழுதெல்லாம் படிக்கும்போது மனதில் எவ்வித குற்ற உணர்வுகளும் ஏற்படவில்லை. காமம் பற்றிய திருவள்ளுவரின் பார்வை காதலைச் சார்ந்தே இருக்கிறது எனச் சொன்னால் அங்கே காதல் என்று அவர் எழுதியிருக்கலாம், ஆனால் காமம் என்றே எழுதப்பட்டு இருக்கிறது. காமத்தினால் பயன் எதுவெனின் எனச் சொல்லும்போது ஊடல், உணர்தல், புணர்தல் என்கிறார். காதலில் ஊடல் இல்லை, புணர்தல் இல்லை, காதலில் உணர்தல் மட்டுமே உண்டு. இதைத்தான் ஒரு கவிதையில் எழுதினேன், காதல் புரிந்து கொள்ளும் என. இதைப் படித்தவர்கள் காதல் புரிந்து கொல்லும் என்றார்கள். சில திருக்குறள்களைப் பார்வைக்கு இணைக்கிறேன்.

மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

எத்தனை பேர்தனை வேண்டுமெனிலும் காதல் செய்யலாம், ஆனால் காமம் ஒருவரின் மீதுதான் இருக்க வேண்டும் என்பதுதான் சரியெனச் சொன்னால் காதலை கொச்சைப்படுத்தியதாகவேத் தோன்றும்.

இப்பொழுது கவிதையை நினைவுபடுத்துவோம், காதலில் ஆசை கடுகளவும் இல்லை, காதலில் காமம் தர்மம் இல்லை. காதல் ஒருபோதும் கொச்சைப்படுவதில்லை. மாறாக இச்சை கொண்ட காமம் கொச்சைப்பட வைக்கிறது.

முதன்முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு சொன்ன பதில் உலகில் எவருக்கேனும் எப்பொழுதேனும்  பயன் பெறும் என்கிற நோக்கத்தில்தான் எனது எழுத்துதனை அமைத்துக் கொண்டேன், அதில் காமம் மட்டும் விதிவிலக்கா?

(தொடரும்)

Monday 1 February 2010

வித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)

பயணம் 5


எங்களுடன் நார்வே நாட்டினைச் சார்ந்த வயதான தம்பதியர்களும் இணைந்து கொண்டார்கள். துபாய் நகரைவிட்டு சவுதி அரேபியா வரை செல்லும் சாலையில் வாகனம் பயணித்தது. இருபுறங்களிலும் பாலைவனங்கள் தென்பட பாலைவன செடிகளும் ஆங்காங்கே தனித்து நின்று கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலான பிராயணத்திற்குப் பின்னர் ஓரிடத்தில் வாகனத்தின் சக்கரங்களில் காற்றழுத்தம் குறைக்கப்பட்டது. 

பின்னர் மேடு பள்ளங்கள் நிறைந்த பாலைவனத்தில் வாகனம் பிரயாணிக்க 'சரிதான்' என நினைத்துக்கொண்டிருக்க திடீரென மேடான பகுதிக்குச் சென்று பின்னர் கீழிறங்குவதும், மேலேறுவதுமாய் வாகனத்தில் வித்தை காண்பிக்க உடல் குலுங்கியதோடு வயிறும் கலங்கியது. உற்சாகத்தில், பயத்தில் ஆ ஓ என வயதான தம்பதியர்கள் அலறிய சப்தத்தை அசைபடம் போட்டு பார்த்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்களை, கடவுளைப் பிரார்த்தனை செய்ய வைத்தது அந்த வாகன விளையாட்டு. நவீன் தன் பங்குக்கு வாந்தி வருவதாக இருமுறை கூறி வாகனம் நிறுத்தப்பட்டது. 

அந்த மணலில் இறங்கி நடந்து சுற்றிப் பார்த்திட மணலில் கோலம் இட வைக்கப்பட்ட புள்ளிகளாய் செடிகள். ஒட்டகங்கள் காட்சி கண்டோம். ஓட்டுநரிடம் தினமும் வருவீர்களா எனக் கேட்டபோது ஆம் என சொன்னவர், சில தினங்கள் மழை பெய்து இருந்ததால் நேற்றைய தினம் வாகனம் செலுத்த மிகவும் சிரமப்பட்டதாக வாகன ஓட்டி சொன்னார். மேலும் எங்கள் தொழில் இது என்பதால் சிரமம் இருப்பினும் செய்துதான் ஆகவேண்டும் என அவர் சொன்னபோது ஏதோ மனதில் இடைஞ்சல் செய்தது. இன்று அந்தப் பிரச்சினை இல்லை எனச் சிரித்துக் கொண்டார். 

பின்னர் சிறப்பு விருந்தினர்களாக ஓரிடம் சென்றோம். அது பாலைவனத்திலேயே அமைந்து இருந்தது. பலர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள். அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. உணவு மிகவும் சிறப்பாக இருந்தது. சைவம் அசைவம் என பிரித்து வைத்திருந்த விதமும், ஆண்கள், பெண்கள் என தனித்தனிப் பிரிவாக வைத்திருந்த விதமும் சிறப்பாகவே இருந்தது. பின்னர் நடன நிகழ்ச்சியை ஐம்பது வயதுமிக்க இளைஞியும், 25 வயது மிக்க இளைஞரும் ஆட அனைவரும் பார்வையாளர்களாக சென்று இருந்தோம் என்றால் தான் அது சரியாகும். நடனக் கலைஞர்களுடன் ஆர்வத்துடன் படம் எடுத்துக்கொண்டனர் பலர். சிலர் மேடையேறி ஆடவும் செய்தனர். 

இந்நிகழ்வுகளுக்கு முன்னர் ஒட்டக சவாரிதனை செய்ய விருப்பமில்லாமல் பாவமாக ஒட்டகத்தைக் கண்டுவிட்டு வந்தோம். சந்தோசமாக பலர் சவாரி செய்து மகிழ்ந்தார்கள். ஒட்டகமும் எங்கள் தொழில் இது என சொல்லி இருக்குமோ?! 

இரவு ஹோட்டல் வந்து சேர வழக்கம்போல பத்து மணி ஆகியிருந்தது. வழக்கம்போல வசந்தபவன். மறுநாள் காலையில் எழுந்து ஜுமிரா மால் சென்றோம். அது ஒரு தனி நகரமாக நிர்மாணிக்கப்பட்டதாக சொன்னார்கள். உள்ளே பல கலைபொருட்கள் வாங்கும்படியாய் இருந்தது. லதாவிடம் பேசினேன் அபுதாபிக்கு வர இயலாமல் இருப்பதாக. லதாவோ அவரது கணவர் நேற்று துபாய் வந்ததாகவும், தொடர்பு கொள்ள வசதியில்லாததால் அழைக்கமுடியவில்லை எனவும் கூறினார். பின்னர் தானே ஏர்போர்ட் வருவதாக சொல்ல நான் வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

அங்கிருந்து நேராக மால் ஆஃப் எமிரேட்ஸ் சென்றோம். அங்கே பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தோம். பின்னர் வைரமாளிகை சென்றோம். டிராகன் மால் சகோதரி சுந்தராவின் வீட்டில் அருகில் இருப்பதாக சொல்லி இருந்தார். அவரது வீட்டுக்குச் சென்று பின்னர் அங்கே செல்லலாம் என அவர் சொல்லி இருக்க எங்களுக்கோ பனிச்சறுக்கு விளையாட்டில் நேரம் ஆகி கொண்டிருக்க நேராக டிராகன் மால் சென்றோம். சீனா வசம் போல டிராகன் மால்!

அங்கிருந்து சகோதரியின் வீடு பக்கம் என நினைத்து டாக்ஸியில் செல்ல சகோதரியின் வீட்டினைக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறினோம். சகோதரி வழி சொல்லியும் டாக்ஸி டிரைவருக்குப் புரியவில்லை, எனக்கு பாதை கொஞ்சமும் தெரியவில்லை. கிருஷ்சிவா அவர்களை முன்னதாக அழைத்தேன், அவர் வேலைக்குக் கிளம்பிவிட்டார் என கூறினார். நல்லவேளை அவரைக் காத்திருக்க வைக்கவில்லை எனத் தோணியது. நேரத்தை, வீடு கண்டுபிடிக்கிறேன் என டாக்ஸி கொன்று கொண்டிருந்தது. ஆனால் ஆச்சரியம் இருபது நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் கொண்டு வந்து சேர்த்தார் அவர். வந்து கொண்டிருந்தபோதே புவனாவின் கணவர் எங்களுக்காகக் காத்திருப்பதாக புவனா தகவல் சொல்ல எனக்கோ 'அடடா' என ஆகிவிட்டது. 

பின்னர் புவனாவின் கணவரை ஹோட்டலில் சந்தித்துப் பேசினோம். மிகவும் நன்றாக பேசினார். பேருந்தில் தான் ஷார்ஜா செல்ல வேண்டும் எனவும் ஒரு மணி நேரம் மேல் ஆகும் என அறிந்தபோது வருத்தம் மேலிட்டாலும் அவரைப் பார்த்துப் பேசியதில் அளவில்லாத சந்தோசம் நிறைந்து இருந்தது. பின்னர் சகோதரி தனது குடும்பத்தோடு எங்களை வழியனுப்ப வந்திருந்தார். அன்று அவரின் அன்பால் 'சரவண பவன்' சென்று உணவருந்தினோம். அருமையான சொந்தங்களை எனக்கு அறிமுகப்படுத்திய துபாய் பயணம் ஒரு வித்தியாசமான பயணமாகவே இருந்தது. வியாபார நுணுக்கங்களைப் பற்றி அன்றும் பேசிக்கொண்டிருந்தோம், பல நல்ல விசயங்களை சகோதரியின் கணவர் சொல்லிக் கொடுத்தார். போராடி வாழ்வில் வெற்றி கண்டு கொண்டிருக்கும் ஒரு மாமனிதரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டேன். 

துபாயில் இன்னும் சிலநாட்கள் தங்கி இருக்கலாம் எனும் ஏக்கத்தை துபாய் நகரமும், அங்கே நான் கண்ட அன்பு உறவுகளும் மனதில் விதைத்ததை வாழ்வில் ஒரு பெரிய விசயமாகத்தான் கருதுகிறேன். என் மகன் என்னிடம் கேட்டது 'இங்கே யாரும் நம்மிடம் பணம் கேட்டு நிற்கவில்லையே, ஏன்?' எனக்கு மிகவும் யோசனையாகத்தான் இருந்தது. எல்லாரும் எல்லாம் பெற்றிருக்க ஏதேனும் வழியுண்டோ? ஆனால் வாகன ஓட்டி சொன்ன ஒரு விசயம் சற்று அதிர்ச்சியாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. 



''துபாயில் உழைக்கும் வர்க்கத்தினர்க்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை, உழைக்கும் வரை அவர்களது உழைப்பை உறிஞ்சிவிட்டு அவர்களை ஓட விரட்டிவிடும், எதையும் தந்து அழகுப் பார்க்காது. எப்பொழுது உழைக்கும் வர்க்கத்தினர்க்கு ஒரு நாடு மதிப்பைத் தரவில்லையோ அந்த நாடு ஒரு காலத்தில் தனது மொத்தச் செல்வத்தையும் இழந்து அனாதையாகிவிடும். அப்படித்தான் இப்போது 'அல்லா' இந்த துபாயினை தண்டித்துக் கொண்டிருக்கிறார், இனியாவது துபாய் திருந்தட்டும்'' என அந்த வாகன ஓட்டி சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எதற்கெடுத்தாலும் இறைவன் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என மனிதர்கள் நினைக்கிறார்கள்! 

''துபாயில் மட்டுமே சட்டத்தில் மற்ற அரபு எமிரேட்ஸ் நாடுகளைத் தவிர விதிவிலக்காக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்கள் இங்கே அனுமதிக்கப்படுகிறது. குடித்துக் கொண்டு ஒருவர் வாகனத்தை ஓட்டும்போது பிற உயிர்கள் பறிக்கப்படுகிறது என அறிந்தும் ஏன் ஒருவரை குடிக்க அனுமதிக்க வேண்டும், குடிப்பதைத் தடைசெய்து இருக்கும் மற்ற அரபு நாடுகள் போல இங்கும் தடை செய்ய வேண்டும்'' என சொன்ன வாகன ஓட்டி அடிக்கடி புகைபிடித்துக் கொண்டிருந்தது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. எப்படி மனிதர்கள் மட்டும் தங்களது செயல்களை மிகவும் அருமையாக பிறருக்கு எதுவும் தெரியாதது போல நியாயப்படுத்திவிடுகிறார்கள்! 



இனி சென்னை! 

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)

பயணம் 4
துபாய் மால் செல்வதா, மால் ஆஃப் எமிரேட்ஸ் செல்வதா என டாக்ஸி டிரைவரிடம் கேட்க அவர் மால் ஆஃப் எமிரேட்ஸ் செல்லுங்கள் என அறிவுரை சொல்லி அங்கேயே வாகனத்தைச் செலுத்தினார். அங்கு செல்லும் வழியில்தான் துபாய் மால் தெரிந்தது. வாகனத்தைத் திருப்பச் சொல்லலாம் என நினைத்துக் கொண்டிருக்க இருக்கட்டும் என ஒரே முடிவாக மால் ஆஃப் எமிரேட்ஸ் சென்றோம். வாகன ஓட்டி அரபு மொழியில் அவ்வப்போது பிரார்த்தனைச் சொல்லிக் கொண்டே ஓட்டினார். ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

முன் தினம் மழை பெய்ததாலோ என்னவோ வியர்க்கவும் இல்லை, வெயிலும் அதிகம் இல்லை. துபாய் மிகவும் அருமையாக இருந்தது. மழை விழாமல் இருக்க பயணம் சிறப்பாக இருந்தது. மால் ஆஃப் எமிரேட்ஸ் மிகவும் அற்புதமாக இருந்தது. அரபு பெண்களின் கைகளில் விலையுயர்ந்த பைகள் தென்பட்டன. பிரிட்டனை அலங்கரிப்பது போன்ற ஒரு தெருவும் அங்கே இருந்தது. இலண்டனில் பார்த்திருந்ததை விட அங்கே பார்த்த கடைகள் அதிகமே. ஒரு அரபு பெண் கடைக்குள் நுழைந்துவிட்டால் பொருள் வாங்காமல் வெளியே வரமாட்டார் என்பது எழுதப்படாத விதி போல! 

சீரான ஒழுங்கமைப்பு மனதை கொள்ளை கொண்டது. அங்கேயே பனி சறுக்கு விளையாட்டுத் திடல் அமைத்து இருந்தார்கள். நேரமின்மை காரணமாக அன்று மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது. 

இரவு நெருங்கிக் கொண்டிருக்க அங்கிருந்து நேராக கோல்ட் சவுக் எனும் தங்க ஊருக்குள் சென்றோம். அங்கே இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பல கடைகள் வைத்து இருந்தார்கள். விலை ஊர் ஊருக்கு வித்தியாசம் இல்லை, ஆனால் தங்கம் துபாயில் வித்தியாசமாக நன்றாக இருக்கும் என சொன்னார்கள். தங்கம், வைரம் வாங்கப் போய் விலைபார்த்து விலைமதிக்க முடியாத முத்துமாலை ஒன்றை வாங்கிக் கொண்டு ஹோட்டல் திரும்பினோம். 

சாப்பிட என்ன செய்யலாம் என, இரவு ஒன்பதரை மணி ஆகிவிட, யோசிக்கையில் வசந்த பவன் நினைவுக்கு வந்தது. வழிகேட்டு வழிமாறாது வசந்தபவன் சென்றடைந்தோம். இந்த ஹோட்டலிலும் தங்கலாம் என சகோதரி யோசனை தந்து இருந்தார்கள். ஹோட்டலைப் பார்த்ததும் நல்ல வேளை என மனதுக்குப் பட்டது. முகப்பு ஒருமாதிரியாக இருந்தாலும் சாப்பிடும் முதல் மாடி மிகவும் நன்றாக இருந்தது.

தோசை இட்லி என மிகவும் அருமையாக இருந்தது. உண்டு களித்தோம் பின்னர் ஹோட்டலுக்கு வந்து வரவேற்பறையில் பன்னிரண்டு மணிக்கும் மேலாக அமர்ந்திருந்து பேசிக் களித்திருந்தோம். 

அன்றுதான் மாலையில், ஏழு மணி இருக்கும், கிருஷ்சிவா அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன் என நினைக்கிறேன். பரஞ்சோதியார் கிருஷ்சிவா எண்ணினைத் தனிமடலை முன்னரே எனக்குத் தந்து இருந்தார், பரஞ்சோதியாரிடம் பேசியபோதும் இவ்விசயத்தை நினைவுபடுத்தினார். நான் கிருஷ்சிவா அவர்களை நேரில் சந்திக்க மிகவும் ஆவல் கொண்டேன், அவரும் ஆவல் கொண்டார். அவர் தங்கியிருக்கும் இடமும் நான் இருந்த ஹோட்டலும் அதிக தூரம் இல்லை. ஆனால் நான் அங்கே இருந்தவரை அவரைச் சந்திக்க வாய்ப்பின்றி போனது, வாய்ப்பினை ஏற்படுத்தாமல் விட்டது வருத்தம் அளிக்கத்தான் செய்தது. துபாய் விட்டு கிளம்பும்வரை ஏன் அவரைப் பார்க்காமல் விட்டுவிட்டோம் என மனவருத்தம் மேலிட்டது எனக்கு வித்தியாசமாக இருந்தது. ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர், நல்ல உழைப்பாளி, பழகுவதற்கு இனிமையானவர் என பழகாமலேயே மனதில் அவரைப் பற்றி ஒரு எண்ணம் உதித்தது. 

எமிரேட்ஸ் மால் செல்லும் முன்னர் அடுத்தநாள் திட்டம் குறித்து ஹோட்டலில் பேசியிருந்தோம். அடுத்த தினம் துபாய் ஊர்தனை டாக்ஸியில் சுற்றினோம். ஒரு இடத்தில் நான் புகைப்படம் பிடிக்க, அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஒரு பாட்டி அவரைத்தான் புகைப்படம் பிடிக்கிறேன் என நினைத்து அரபு மொழியில் திட்டுவது தெரிந்தது. கிராமம் போன்று இருந்தது அப்பகுதி. கட்டிடங்கள் என பழையதாய் இருந்தது. 

ஒரு மசூதியில் 11 மணிக்கு முன்னதாக சென்றால் அனைத்து மதத்தினரும் செல்லலாம் என வாகன ஓட்டி சொல்ல மணியோ 11.30 ஆகி இருந்தது. வெறிச்சோடி வெயிலில் வாடிய கடற்கரையும் கண்டேன். நதியில் கால்கள் நனைத்தோம். பின்னர் அழகிய கலைகள் பொதிந்த இடத்தையும் கண்டோம். கடலுக்குள் அமைத்த பாதை, பிரும்மாண்டமான ஹோட்டல் என கண்டோம். பனைமர வடிவில் அமைக்கப்பட்ட நகரம் என பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். கட்டிடங்களாலேயே தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது துபாய். மதிய உணவினை வசந்தபவனிலேயே உண்டு களித்தோம். 

துபாயில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் பாலைவன பாய்ச்சல்தனை வாகனத்தில் செய்வதற்கு ஆயத்தமானோம்.