Monday 21 September 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 2

வீட்டுக்குத் திரும்பாமல், திரும்பிச் சென்றால் அம்மா ஏதாவது நினைக்கக்கூடும் என கண்கள் கலங்கியவாறே தொடர்ந்து நடக்கத் தொடங்கினான் கதிரேசன்.

கல்லூரியானது சிங்கமநல்லூரிலிருந்து சற்று உள்ளே தள்ளி அமைந்து இருந்தது. சிங்கமநல்லூர்தனை ஒரு நகரமோ, அல்லது ஒரு கிராமமோ எனச் சொல்லிவிட முடியாதபடி இருந்தது.

மாணவியர்கள் விடுதியானது கல்லூரி வளாகத்திலிருந்து சற்று தள்ளி இருந்தது. மாணவர்கள் விடுதி கல்லூரிக்கு உட்பட்ட இடத்திலேயே அமைந்து இருந்தது. எஞ்சினீயரிங் கல்லூரியும், பாலிடெக்னிக்குடன் சேர்ந்தே இருந்தது. பாலிடெக்னிக்கில் பெரும்பாலும் மாணவர்களே சேர்ந்து இருந்தார்கள். இந்த கல்லூரியை நிறுவி இதோடு எட்டு வருடங்கள் ஆகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருபவர் சிவநாதன். இவர் ஒரு சிவபக்தர். மிகவும் கண்டிப்பானவர். கருநிற முடியும், துறுதுறுவென இருக்கும் இவரது செயலும் இவரை இளமையானவராகவேக் காட்டிக் கொண்டிருக்கிறது. கல்லூரியை ஒட்டி பெரிய சிவன் கோவில் ஒன்றையும் அவர் கட்டி இருந்தார். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் மற்றும் சிங்கமநல்லூர் ஊர்க்காரர்களும்அந்த சிவன் கோவிலுக்குச் செல்வது உண்டு.

கதிரேசன் சிங்கமநல்லூர் சென்று அடையும்போது மாலை நேரம் ஆகிவிட்டது. விடுதிக்குச் செல்லும் முன்னர் நேராக தான் கொண்டு வந்திருந்த தகரப் பெட்டியை கோவிலின் வாயிலில் ரசீது கொடுப்பவரிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சிவன் கோவிலின் உள்ளே சென்றான் கதிரேசன். சிவனை வணங்கிவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு பின்னர் விடுதியைச் சென்று அடைந்தான். வரிசையாக பல மாணவர்கள் அவரவர் தாய் தந்தையரோடு நின்று இருந்தார்கள். தானும் அவர்கள் வரிசையில் சென்று நின்று கொண்டான்.

அனைவரும் உற்சாகமாகத் தென்பட்டார்கள். அம்மாவை இம்முறையும் உடன் அழைத்து வந்திருக்கலாமோ என கதிரேசனுக்கு மனதில் பட்டது. கண்டிப்பும், கோபமும் அதிகமே நிறைந்த விடுதி காப்பாளர் தெய்வேந்திரனிடம் சென்று அறைக்கான எண்ணையும், அறைக்கதவுக்கான சாவியையும் பெற்றுக்கொண்டுவிட்டு ‘ஒவ்வொரு சனிக்கிழமை ஊருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வரலாமா சார்’ எனக் கேட்டான் கதிரேசன். ‘நீ ஊருலேயே இருக்க வேண்டியதுதானே, படிக்க வந்தியா ஊருக்குப் போக வந்தியா’ எனக் கடுமையாகவேச் சொன்னார் அவர். கதிரேசனுக்குப் பின்னால் நின்று இருந்தவர்கள் பயந்துதான் போனார்கள். ஆனால் கதிரேசன் பயப்படாமல் ‘படிக்கத்தான் வந்தேன் சார், வாய்ப்பு இருக்குமானு கேட்டேன்’ என்றான். முறைத்தார் தெய்வேந்திரன். தலையை குனிந்து கொண்டான் கதிரேசன். ‘ரூமுக்குப் போ’ என அதட்டியவர் கதிரேசன் பெயரை மனதில் பதித்தார்.

தயக்கத்துடனே அறையில் சென்று தனதுப் பெட்டியை வைத்துவிட்டு சுற்றிப் பார்க்க தனக்கு முன்னரே இரண்டு பேர் அந்த அறைக்கு வந்திருப்பது தெரிந்தது. ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர் தங்கிக்கொள்ளலாம். கட்டில் எல்லாம் கிடையாது. தரையில்தான் படுத்துக் கொள்ள வேண்டும். அறையில் புதிதாக வர்ணம் பூசி இருந்தது தெரிந்தது. மிகவும் சுத்தமாக இருந்தது. பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டான் கதிரேசன்.

பெட்டியைத் திறந்தான். பெட்டியில் உள்புறம் ஒட்டப்பட்டு இருந்த சிவன் அபயம் அளித்துக் கொண்டு இருந்தார்.

‘தென்னாட்டுச் சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

எனச் சொல்லிக்கொண்டே சின்னத் தலைகாணியும், போர்வையும் எடுத்து கீழே வைத்தான். தட்டு, டம்பளர், மிட்டாய், சேவு, முறுக்கு என எல்லாம் எடுத்து வைத்தான். பெட்டியை மூடினான். கதிரேசன் அறையில் தங்கிக்கொள்ளும் இரண்டு மாணவர்கள் உள்ளே வந்தார்கள்.

சிறிது நேரம் பின்னர் மூவரும் அறிமுகம் செய்து கொண்டார்கள். ஒருவன் நாகராஜன், காரியநேந்தல். மற்றொருவன் கார்த்திகேயன், வடமதுரை. அப்பொழுது அறைக்குள் தெய்வேந்திரன் வந்தார். ஒவ்வொரு பெயராக அழைத்தார். மூவரும் ஆம் என்றார்கள். கதிரேசனுக்கு அருகில் வந்தார் தெய்வேந்திரன். கதிரேசனை ஓங்கி ஒரு அறை விட்டார் அவர். 'சிவனே' என்று அலறினான் கதிரேசன்.

அருகில் இருந்து இருந்தால் அம்மா உன்னையே அழைத்திருப்பேன் என மனதுக்குள் கேவினான். ‘என்ன தைரியம் இருந்தா நீ வந்ததும் வராததுமா என்னை எதிர்த்துப் பேசுவ’ என்றார் தெய்வேந்திரன். மெளனமானான் கதிரேசன். ‘இங்க ஒழுக்கம்தான் முக்கியம். பெரியவங்களை மதிச்சி நடக்கனும். எதிர்த்துப் பேசினா கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிருவேன், ஒழுங்காப் படிச்சி வெளியேப் போக வழியைப் பாரு’ எனத் திட்டிவிட்டுச் சென்றார். மற்ற இருவரும் நடுங்கினார்கள். கதிரேசன் பெட்டியைத் திறந்தான்.

‘உள்ளூர ஆசையில் ஒருவினாவும் கேட்டு வைத்தேன்
எள்ளிநெருப்பாடி என்மேல் எச்சமிட்டுச் சென்றார்
அம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்
சும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’

கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. துடைக்க மன விருப்பமில்லாமல் தொடர்ந்து மெல்லிய குரலில் பலமுறை இதே பாடலைப் பாடினான். மற்ற இருவரும் பயத்துடனே இருந்தார்கள். கதிரேசனின் கண்கள் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த சிவன் படத்தின் மேல் நிலையாய் நின்றது.

(தொடரும்)

Friday 18 September 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 1


புளிய மரங்கள் அதிகம் வளர்ந்து செழித்து இருந்த அந்த கிராமம்தான் புளியம்பட்டி. வாகன வசதிகள் எல்லாம் இல்லை. ஆனால் சாலையெல்லாம் போடப்பட்டு இருந்தது. லாரிகள் புளியம்பட்டிக்கு அருகில் இருக்கும் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளி செல்லும், அதற்காகவே இந்த சாலைகள் பயன்பட்டுக் கொண்டிருந்தது.

கிராமத்தில் பள்ளிக்கூட வசதியும் கிடையாது. அருகில் இருக்கும் சின்னாளம்பட்டிக்குத்தான் ஐந்து வரை படிக்கச் செல்ல வேண்டும். படிக்கச் சிரமப்பட்டு ஊர் சுற்றுபவர்களே இங்கு அதிகம். விவசாயத்தையும், நெசவுத் தொழிலையும் மட்டுமே நம்பி, ஊரில் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்களாக ஆவதென்பது சாத்தியமில்லாமல்தான் இருந்து வருகின்றது. இதில் மணல் லாரியில் வேலைக்குச் செல்பவர்களும் உண்டு. சிறுக சிறுக பணத்தை சேமிக்கலாம் என்றால் உடல் வலி நீங்கும் என சாராயமும், வெற்றியாளர்கள் என நிரூபிக்க சீட்டாட்டமும் பணத்தை பழுது பார்க்கும். பொறுப்பற்றவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்களெனில் அவர்களது தந்தையர்களும் பொறுப்பில்லாமலே இருந்து வருகிறார்கள். வீட்டு வேலை பார்ப்பதோடு தோட்ட வேலையென பார்த்து கிடைத்தவரை போதும் என அடுப்படிக்குள் புகைந்து போகும் தாய்மார்கள்தான் இங்கு அதிகம்.

வார இறுதி நாட்கள் என வந்துவிட்டால் ஒரு பஞ்சாயத்தாவது நடக்காமல் இருக்காது. சத்தமும் சண்டையுமாகவே அந்த நாட்கள் கழியும். பின்னர் எதுவும் நடக்காதது போல அனைவரும் சகஜமாக பழகி கொள்வார்கள். சாதிப் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கும். ஆனால் வெட்டிக் கொள்ளமாட்டார்கள். இப்படி மிகவும் பின் தங்கிப் போய் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாமல் இறந்து போனவர்களும், இருந்து போகப்போவோர்களும் கிராமத்து கணக்கில் அதிகமாகவே தெரியும்.

அந்த புளியம்பட்டியில் வசித்து வந்த செல்லாயி தனது ஒரே மகன் கதிரேஷனை கஷ்டப்பட்டு பன்னிரண்டு வரை படிக்க வைத்து விட்டார். படிப்பினை சிரமம் இல்லாது படித்து வளர்ந்தான் கதிரேசன். கதிரேஷனுக்கு நான்கு வயதாகும் போதே காச நோயினால் அவனது தந்தை முருகேசன் சிவலோக பதவி அடைந்தார். புளியம்பட்டியில் மறுமணம் எல்லாம் செல்லுபடியாகாது. செல்லாயி தனது மகனே வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார்.

அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு குறுக்கே பாலிடெக்னிக் படிப்பு வந்து நிற்கிறது. கதிரேசன் இன்று சாயந்திரம் விடுதிக்குச் சென்று சேர்ந்து, நாளையிலிருந்து படிப்புத் தொடங்க வேண்டும். விடுதிக்கான பணத்தை மாதம் தவறாமல் கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் செல்லாயி கதிரேசனை மேற்கொண்டு படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். கதிரேசனும் படிப்பின் மேல் கொண்ட அக்கறையினால் சரியென கேட்டுக் கொண்டான். மன உறுதியுடன் செல்லாயி இருந்தாலும் மகனைப் பிரிந்து இருப்பது என்பது கடினமானதாகத்தான் இருக்கும் என உணரத் தொடங்கினாள். கண்கள் கலங்கியவாறே முறுக்கு, கடலை மிட்டாய், சேவு என எல்லாம் எடுத்து வைத்து 'பத்திரம்பா' என வழி அனுப்பியபோது இருந்த பாதி உயிரும் போனதாகவே உணர்ந்தாள் செல்லாயி.

ஓட்டு வீட்டிலிருந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவாரே நடந்தான் கதிரேசன். ஊரின் எல்லையைத் தாண்டிச் செல்லும் முன்னர் ஓடிப்போய் அம்மா முகத்தை மறுபடியும் பார்த்துவிட்டு வரலாமா என்றுதான் இருந்தது கதிரேசனுக்கு.

(தொடரும்)

Wednesday 16 September 2009

மெருகு

சாகுபடி என தலைப்பு இடப்பட்டு
தமிழ் வார்த்தைகளால்
எண்ணங்கள் அலங்கரிக்கப்பட்டு
மேசையின் மீது
கவிதை ஒன்று
மிதந்து கொண்டு இருந்தது

விழிகள் கொண்டு
படித்துப் பார்க்கையில்
அற்புதம் எனப் பாராட்டி
அக்கவிதைக்கு ஒரு கவிதை
எழுதிவிட நெற்றி விரிந்தது

மீண்டும் வாசித்ததில்
வார்த்தை அலங்காரம்
பாமரனுக்குப் புரியுமோ
எண்ணியவாறே
கருவினைச் சிதைக்காது
வார்த்தைகள் மாற்றி
அக்கவிதையை வளர்த்தபின்
பல உள்ளங்களை
சாகுபடி செய்யும் என
இதயம் சிலிர்த்தது

உண்மை சமுதாயத்தின்
உணர்வு தாக்கம்தனை
ஒவ்வொரு ஜீவனிலும்
புகுத்திவிடும் என
அந்த படைப்பினை
கர்வம் கொண்டு பார்த்த பொழுது

''அம்மா
ஏதாவது போடுங்கம்மா''
வீட்டு வாசலில் இருந்து வந்த
சப்தம் கேட்டு
சில வரிகள் தன்னை
சாகுபடி கவிதையில் சேர்த்துவிடலாம்
என எண்ணியே
வாசலில் நின்றவருக்கு
நன்றி சொல்லி
எனக்கு மட்டும் இருந்த உணவை
அவருக்கு கொடுத்துவிட்டு
திரும்புகையில்
என் வெற்றுப்பானைகள்
மெருகேறி இருந்தன.