Saturday 5 September 2009

அன்புள்ள காதலிக்கு,

நான் எழுதிய
காதல் வரிகள்
கானல் வரிகள் அல்ல
அவை கானல் வரிகளானால்
அதை எழுதிய
எனது கைகள் என்னவாகும்?

தேனைப் பெற்றது மலரின் குற்றமா?
அதை நுகரவந்த வண்டின் குற்றமா?
இல்லை இல்லை
அதை வளர்த்த நிலத்தின் குற்றம்.

உன்னை நினைக்க
மனதில் இடம் இருக்கிறது
உன்னை மணக்க
சட்டமும் இடம் கொடுக்கிறது
ஆனால்...
மாலையோடு நான் வந்தால்
மயான வாசலில்
நிற்க வேண்டுமாம், காற்றில்லாமல்
நான் சொல்லவில்லை
அன்பே!
உன் தந்தை சொன்னார்

உன் தந்தையின் முடிவு
என் வாழ்வின் முடிவாகுமா?
நீ
வந்தால் எரிகிறேன்!
அல்லால் புதைகிறேன்!
நாட்கள் வித்தியாசமாகலாம்
அதுபற்றி
நான் சிந்திக்க வேண்டியதில்லை!

கடற்கரைக்கு நம் கால்கள்
நடக்கவில்லை
கவலை அலையை கடக்கத்தான்
நாம் நீந்த வேண்டும்
சுண்டலுக்கு கை நீட்டி நாம்
சுட்டுக் கொள்ளவில்லை
சுடுகாட்டிற்குப் போகும் முன்
இணைய வேண்டும்!

வீட்டிற்கு நீ ஒரு பெண்தான் என்றாலும்
வீணாக நம் வசந்தத்தை கெடுப்பானேன்
மனம் ஊனமாய் பிறந்திருந்தால்
மங்கையே
உன் தந்தை யோசிக்கலாம்
என்நிலையை நான்
மீண்டும் கூறி
உன்னை ஏன் வதைப்பானேன்
வதைபட்டு வதைபட்டு
வாழ்க்கைக்கு சிதை வைப்பானேன்

காலத்தின் கோலம்
''கலப்பு மணத்திற்கு
கை நிறைய காசு''
நான் கொடுக்கவில்லை
அரசாங்கம் அவிழ்க்கிறது

உன் மனதால் என்னை எண்ணி
உயிரெல்லாம் ஓட்டம் விட்டு
என்னைப் பிரியச் சொன்னால்
எப்படி முடியும் உன்னால்
ஏன் விளங்கவில்லை அவர்களுக்கு!
''கல்யாணம்'' என்று கூறி
''கருமாதி'' வைப்பதற்கு
உன் தந்தைக்கு வழி வைத்து விடாதே!

பாவ செயல்களை
காலம் எப்படி சகித்துக் கொள்கிறதோ
காதலே
நீயும் அவற்றை சகித்துக் கொள்
வேண்டிய மட்டும் எடுத்துக் கூறி
விடைபெற்று வா
விழலுக்கு இறைக்கும் தண்ணீராகிப் போனால்
''விடுதலை'' என
விபத்தில் சிக்கிக் கொள்ளாதே
ஆறுமட்டும் அங்கேயே இரு
அப்பொழுதுதான் நம் காதலுக்கு
அர்த்தம் விளங்கும்

உடலுக்கு ஒப்பந்தம் என்றால்
உடனடியாக கிளம்பி வா
உயிருக்கு ஒப்பந்தம் என்றால்
அங்கேயே ''உலை'' வைத்துக் கொள்
இரண்டிற்கும் ஒப்பந்தம் என்றால்
இரண்டாண்டுகள் பொறுத்திரு
வாழ்வினை சீராக்க
வளமையை நான்
எதிர்பார்க்க வேண்டியுள்ளது

கண்களால்தான் பேசினோம்
ஆனால்
''காதலுக்கு கண் இல்லை''
என்கிறார்களே
கவனமாய் இரு
எனக்குச் சொந்தம் இருந்திருந்தால்
என்நிலை இன்று என் கதியோ?
கடவுளின் செயல்
அக்கவலை இல்லை எனக்கு!

முறையாக வந்து கேட்டால்
''முறை'' பார்த்து
அனுப்பி விடுவார்
முடியும் மட்டும் வருகிறேன்
நடுத்தர வர்க்கத்திற்கு
படகை நடுக்கடலில்
தனியாய் விட்டபாடுதான்!

சாதி பார்த்து
மணம் புரிய வேண்டுமாம்
சாதகம் பார்த்து
வழி பார்க்க வேண்டுமாம்
இவையன்றி
விழிபார்த்தது தவறா?

சாத்திர சம்பிரதாயங்களை
குறை சொல்லவில்லை
அவை சாத்தானாக உள்ளதே என
குறைபட்டுக் கொள்கிறேன்

இணையாத காதலுக்குத்தான்
இவ்வுலகில் மதிப்பு
அதற்காக நாம்
இணையாது போனால்
என்ன நியாயம்?
கடமைகளைச் சரியாய் செய்து வா
உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்!

தந்தையின் மனநிலைக்கு
ஏற்றவாறு தென்றலே
நடந்து கொள்
அதற்காக
இரவை பகலாக்கிக் கொள்ளாதே

முடியும் என்றிரு
நன்றாக உறங்கு
என்றாலும் ஒன்றரை மணிநேரம்தான்
உண்மையான உறக்கம்
அந்த ஒன்றரை மணி நேரத்தையும்
வருத்திவிடாதே

காலம் மாறிவிட்டதை
நான் சொல்லியா
உனக்குத் தெரிய வேண்டும்
காலைச் செய்திகளைப் பார்த்தால்
கண் முன்னால்
அனைத்தும் விளங்கும்
தொலைக்காட்சியைப் பார்
அதன் தொல்லைக்கும் முன்னால்
உன் தொல்லைகள்
ஒன்றும் பெரிதல்ல

ஆகாயத்தைப் பார்த்து
அடைய முடியவில்லையே
என ஆத்திரப்படுவதை விட
பூமியிலாவது நிற்கிறோமே
என பெருமைப்பட்டுக் கொள்!

பெண்கள் முன்னேற்ற சங்கம்
என்றும்
மகளிர் சங்கம்
என்றும்
இந்த மதி கெட்ட உலகில்
பலவும் வைத்து
போராடுவதைப் பார்
அந்நிலையை
உருவாக்கியது யார்?

நானும் கேட்டிருக்கிறேன்
வாழ்வின் கொடுமைக்கு
வரதட்சினை மட்டும்
காரணமல்ல
அதையும் மீறிய
அடிப்படை பிரச்சினைகள்
என்பதை!
நீயும் சங்கம் வளர்த்து
பங்கம் ஏற்படாமல்
பார்த்துக் கொள்

இந்த காதல் வரிகள்
உனக்கு மனமகிழ்ச்சி
ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்!

என்னைக் காணாத உனக்கு
இது ஓர் ஆறுதலாக இருக்கட்டும்
இது உன் தந்தையின்
போனால் கூட
எனக்கு ஒருவகையில் சந்தோசமே!
ஆனால்
நீ அதற்கு வழிவிடாதே

இன்னும் ஓரிரு வருடங்களில்
உன்னைக் காண வருவேன்
அதுவரையில்
எரிகின்ற தீபமாய்
சுடர்விட்டு இரு!

வெப்பத்திற்கு இங்கு
விளக்கம் சொல்ல வேண்டி இருக்கிறது
அங்கே குளிருக்கு விளக்கம்
சொல்ல வேண்டி இருக்கும்
இங்கே வெள்ளத்திற்கு
விளக்கம் சொல்ல வேண்டியிருந்தால்
அங்கே பஞ்சத்திற்கு
பதில் சொல்ல வேண்டியிருக்கும்
நாட்டின் இரு பக்கங்கள்
வாழ்வின் நிலையை
விளக்கி வைக்கும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
அதன் நிலைமையை
உணர்த்தி நிற்கும்

கவலை வந்தால்
அழுது விடு! முடியும் மட்டும்
அழுது விடு
மன உறுதியை
ஏற்படுத்திக் கொள்

இயற்கையின் மேல்
காதலை வளர்த்துக் கொண்டால்
இன்பமாய் இருக்கும்
அவ்வின்பத்தை உனக்குச் சொன்னால்
புரியாது
நீயும் நேசித்துப் பார்
பாசப்பட்டு இருப்பதை
புரிந்து கொள்வாய்

இரத்தத்தின் அளவை
கவனித்துக் கொள்
எண்ணங்கள் பாயும் முறையில்தான்
நமது இயக்கமும் உள்ளது
என்பதையும் உணர்ந்து கொள்

உலகவிசயங்கள் பலவும்
உனது காதுகளில்
கண்களில் பட்டிருக்கும்
சிந்தனை செய்து பார்
அவை உன்னை
கொஞ்சம் அமைதியாய்
இருக்க வழி செய்யும்

கனவுகளுடன் வாழாதே
அவை உன்னை
கணக்கில்லா துன்பத்தில் ஆழ்த்தும்

மாளிகையை கற்பனை செய்து
குடிசையையாவது கட்ட
முயல வேண்டும்! ஏன்
அந்த மாளிகையையே
கட்டிவிட வேண்டும்
வைராக்கியம் உள்ளவரை
வையத்தில் துன்பம் இல்லை
போராடத் துணிந்தவனுக்கு
போர்க்களம்தான் சரியான இடம்
புரிந்து கொள்

பண்பாடு சீரழிந்தால்
இந்த பாரதம்
பண்படாது என்பது
உனக்குத் தெரியும்
இப்பொழுது என்ன
பாரதம் பண்பட்டா
இருக்கிறது என்று
நீ கேட்பது புரிகிறது

உயிர் அலைகள்
உன்னை வந்து
மோதும் போது
என்னை மட்டும்
மோதாமல் இருக்குமா என்ன?

உன் நிலையை உணர்கிறேன்
ஜீன்களின் சாரம்சம் பற்றி
நீ படித்திருப்பாய்
அவைகளை இப்பொழுது
நாடி பிடித்து கொண்டிருக்கிறார்கள்

அதன் நாடி பிடிபட்டு
போனால்
நமது குழந்தைகளின்
எதிர்காலம் பொற்காலம்தான்

என்னே! எந்தன் அவசரம்
காதலுக்கு வழி கிடைக்காத போது
''பிறக்கும் முன் பேர்'' வைத்த
கதையாகி விட்டது
ஆனால் ஒன்று நிச்சயம்
சூரியன் மறைந்தால் தான்
நட்சத்திங்கள் தெரியும்
உன்னை மணந்தால் தான்
வாழ்வின் அர்த்தம் புரியும்

என்னிடம் பலர் கேட்டார்கள்
''காதல்'' ''காதல்'' ''காதல்''
என்கிறீரே
அதன் அர்த்தம் தெரியுமா என்று
நான் வள்ளுவனை
கை காட்டினேன்
கம்பனை எடுத்துரைத்தேன்
பாரதியை படித்துக் காட்டினேன்
அரபுவையும் இந்தியாவையும்
இணைத்துக் காட்டினேன்
இறுதியில்
உன்னையும் என்னையும்
சேர்த்துக் காட்டினேன்

எனக்கு நேரம் போவதே
தெரியவில்லை
காரணம் கேட்டால்
உந்தன் காதலும்
தமிழ்க் காதலும்
என்று விளக்குவேன்

இந்த காதல் வரிகள்
கானல் வரிகள் அல்ல
நம் வாழ்வின் வரிகள்
வசந்தம் வரும்.

Friday 4 September 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2

ரகுராமன் வீட்டிற்குச் சென்று தனது பாட்டியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

''போய் பொழப்பப் பார்க்க வழியப் பாரு, எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டனுட்டு''

''சொல்லுங்க பாட்டி''

''போறியா என்னடா, வந்துட்டான்''

பாட்டி எரிச்சலில் இருந்தார். ரகுராமன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். தாத்தாவிடம் கேட்டான் ரகுராமன்.

''நம்ம நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடினவங்க உண்டு பண்ணின கட்சி, அந்த கட்சிக்கு ஓட்டுப் போடாம வேறு எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுறது?''

''ஆனா இப்போ அந்த காங்கிரஸ் இல்லையே தாத்தா, இப்போ இருக்கிறது இந்திரா காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியோட கொள்கை என்ன தாத்தா?''

''உனக்கு என்ன வேணும் இப்போ, நானே உன் பாட்டி என்கிட்ட கோவிச்சிக்கிட்டு அப்படி ஓரமாப் போய் உட்கார்ந்திட்டானு கவலையா உட்கார்ந்திருக்கேன், போய் ரங்கசாமி கடையில எங்க ரெண்டு பேருக்கும் வடை வாங்கிட்டு வா''

''காங்கிரஸ் கட்சி கொள்கை என்னனு சொல்லுங்க தாத்தா, போய் வாங்கியாரேன்''

''அது அ.தி.மு.க வோட சேர்ந்தா அந்த கட்சியோட கொள்கை, தி.மு.க வோட சேர்ந்தா அந்த கட்சியோட கொள்கை, போடா, வாங்கிட்டு வெரசா வாடா''

ரகுராமன் கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு ரங்கசாமி கடையில் வடை வாங்குவதற்காக நின்றான். விவசாயம் பார்த்துக் கொண்டும், கிரிக்கெட் விளையாடித் திரியும் அழகர்பாண்டி ரகுராமனிடம் சொன்னான்.

''ஏலே ரகு, நீ என்னமோ கட்சி ஆரம்பிக்கப் போறீயாம்மே, எனக்கு ஒரு பதவி இருக்குல, நம்ம டீமுக்கு கேப்டன் பதவியே வேணாம்பா, கட்சிக்கு தலைவரு போஸ்டு வேணாம்னு சொல்லுவியல''

''சும்மா இருடா அழபா, பழனி பத்த வைச்சிட்டானுக்கும்''

''உடனே ஆரம்பி, இந்த கேப்டன் கட்சியை விட நிறைய ஓட்டு வாங்கி நாமதான் பெரிய கட்சினு சொல்லிக்குவோம், என்ன சொல்ற? அதில்லாம எவன் எவனோ கட்சினு ஒரு கொடியை வைச்சிட்டு அதை கிழிக்கப் போறேனு, இதை கிழிக்கப் போறேனு வாய் கிழியாத குறையா பேசறான், நாம் என்ன அவன் பேசறதையெல்லாம் கேட்டுட்டு இருக்கோம், நம்ம பொழப்ப நாம பார்க்கறதில்லையா. அதிருக்கட்டும், நாளைக்கு நீ மேட்சுக்கு வரலியனு வைச்சிக்கோ, வத்தனாங்குண்டுகாரங்கே நம்மளை ஒரு வழி பண்ணிருவானுங்க''

''எல்லோரும் என்னையவே பார்க்கறாங்கடா, அடக்கி வாசிடா, கருமம், கருமம்''

''தலைவா''

கடையின் பின்புறம் மறைந்திருந்த பழனிச்சாமி ரகுராமனின் காலில் சடாரென ஓடி வந்து விழுந்தான். ரகுராமன் திடுக்கிட்டான்.

''என்ன நக்கலா?''

''நீ கட்சி ஆரம்பிக்கிற தலைவா, நாங்க உன்கூட இருக்கோம் தலைவா, டேய் அழபா, கட்சியை நாளைக்கு வத்தனாங்குண்டுல வச்சி ஆரம்பிச்சிரலாம்டா''

ரகுராமன் கோபத்துடன் பேசாமல் இருக்குமாறு அவர்களை சத்தம் போட்டான். கடைக்காரர் ரங்கசாமி கட்டிக்கொடுத்த வடையை வாங்கிக் கொண்டான்.

''தம்பி நீ இந்த வெட்டிப் பயலுகளோட சேந்து வீணாப் பூராதே''

''யோவ் ரங்கு, சாமியாப் போயிருவ, யாரை வெட்டிப்பயகனு சொல்ற, தரிசு நிலத்தை வெளச்சல் நிலமா மாத்தினவங்க நாங்க, என்னடா அழபா''

''விடுறா, விடுறா, காபி போட்டு ஆத்திக்கிட்டு இருக்காரு, மூஞ்சியில ஊத்தினாலும் ஊத்திருவாரு, விவரங்கெட்ட மனுசன்''

''டேய் இப்படியே அலம்பல் பண்ணி அந்த தம்பியக் கெடுத்து குட்டிச்சுவராக்கிராதீங்கடா''

ரகுராமன் கடையை விட்டு நடக்கத் தொடங்கினான். பழனிச்சாமி ரகு பின்னால் ஓடினான்.

''ரகு என்னடா பேசாமப் போய்கிட்டு இருக்க, அவரு அப்படித்தான் டா''

''இது அப்படியே என் அப்பாகிட்ட போகும், அவரு ஏகத்துக்கும் கவலைப் படுவாரு, சும்மா வாயை வச்சிட்டு இருக்கமாட்டியா, விளையாடப் போங்க, நா சாயந்திரமா வரேன்''

தாத்தாவிடம் சென்று வடைப் பொட்டலத்தைத் தந்தான் ரகுராமன். பாட்டி சமாதானமாகி இருந்தார்.

''அடுத்த வருசம் எந்த கட்சிக்குத் தாத்தா ஓட்டுப் போடுவீங்க''

''எப்பவும் போலத்தான்''

பதிலைக் கேட்கப் பிடிக்காமல், ரகுராமன் ஊர் தலைவர் ராமசுப்புவினை சென்றுப் பார்த்தான். பஞ்சாயத்துத் தலைவராக இருப்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டான்.

''இந்த பஞ்சாயத்துத் தலைவராகிறதுக்கு நான் பட்டபாடு இருக்கே, என்னத்த சொல்றது, ஊருலயே ஒத்துமையா இருக்க மாட்றானுங்க, அந்த கட்சி இந்த கட்சினு நீ வேற சாதி, நான் வேற சாதினு ஒரே அடிதடி. நீயும் தானப் பாத்துக்கிட்டு இருக்க. போட்டி பொறாமைனு ஏண்டா பொது வாழ்க்கைக்கு வந்தோம்னு இருக்கு இப்போ, எல்லோரும் கூடி என்னை இதுல இழுத்து விட்டுட்டாங்க, இனி ஒதுங்கிப் போக முடியாது, ஏன் இவ்வள அக்கறையா கேட்கற''

''அடுத்த வருசம் நடக்கப் போற தேர்தலுல ஓட்டுப் போடனும் அதான் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுறதுனு முடிவு பண்ணலாம்னு கேட்டேன்''

''என்ன இதுக்குப் போய் ஒரு வருசம் முன்னமே யோசிக்கிற, நம்ம கட்சிக்கு கண்ணை மூடிட்டு ஓட்டுப் போடு, நம்ம கட்சியில உன்னை உறுப்பினராச் சேர்த்துவிடுறேன்''

''வேணாம்''

ரகுராமன் கிரிக்கெட் விளையாடும் மைதானத்துக்குச் சென்றான்.

''பழனியண்ணன் சொல்லுச்சு, நெசமாவே கட்சி ஆரம்பிக்கப் போறியாண்ணே''

இடது கை ஆட்டக்காரன் சுப்பிரமணி அப்பாவியாய் கேட்டான். ரகுராமன் ஒரு கட்சி ஆரம்பித்தால்தான் என்ன என அசட்டுத்தனமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் உடனடியாக செயல்படத் துணிந்து விடுகிறோம், ஆனால் மொத்த மக்களின் ஒட்டு மொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏன் தயங்கி பின்னடைகிறோம்?

(தொடரும்)

என்னுடைய ஆசிரியர்கள் - 1

மேலத்துலுக்கன்குளம் நடுநிலைப் பள்ளி

அரை வகுப்பு - ஐந்தாம் வகுப்பு வரை.

திருமதி. தவமணி, திருமதி. லீலாவதி மற்றும் திருமதி. தனலட்சுமி. இந்த மூன்று ஆசிரியைகளும் எனக்கு அத்தை முறை. இவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். நன்றாக சொல்லித் தருவார்கள். மற்றபடி குறிப்பிடும்படியாக எதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் இவர்களுடைய மகன்கள் (என்னை விட வயது மூத்தவர்கள்) எனக்கு நல்ல பழக்கம் என்பதால் இவர்கள் வீடு சென்று சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது என பிற்காலங்களில் செய்து இருக்கிறேன். இவர்களை டீச்சர் என அழைப்பதா அத்தை என அழைப்பதா என பல முறை அவர்கள் வீடு சென்றபோது குழம்பியது உண்டு. வணக்கத்திற்குரியவர்கள். மூன்றாம் வகுப்பு வரை இவர்கள் தான்.

நான்காவது வகுப்பில் மல்லாங்கிணர் சீனி வாத்தியார். இவர் பதில் புத்தகம் தந்து வினாக்களுக்கு பதில் எழுத சொன்னதாக எனக்கு ஞாபகம். அடிக்கமாட்டார். சிவப்பாக ஒற்றை இராமம் போட்டு வருவார். சிரித்த முகத்துடனே இருப்பார்.

ஐந்தாவது வகுப்பில் வத்தனாங்குண்டு வாத்தியாருக்கு என் மேல் கொள்ளைப் பிரியம். என்னை எப்பொழுதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். நுனிப்புல்லில் இவரை மனதில் வைத்து ஒரு ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளேன். திறமையாக பாடம் நடத்துவார். அடிக்க மாட்டார். நான் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியது இல்லை, ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் இராஜ்ஜியம்தான். ஆறாவது வகுப்புக்கு இந்த பள்ளிவிட்டு வேறு பள்ளி செல்ல நாங்கள் (4 நண்பர்கள்) முடிவெடுத்த போது பள்ளித் தலைமையாசிரியர் முதற்கொண்டு மிகவும் வருத்தப்பட்டார்கள். இப்படி நல்லா படிக்கிறவங்க எல்லாம் எட்டு வரைக்கும் இங்கு படிக்கலாம்தானே என சொன்னது, தலைமை ஆசிரியர் நடராஜன் அறை எனக்கு இன்னமும் நினைவில் வந்து போகும். ஆறாவது வகுப்பு ஆசிரியர் ஏழாவது வகுப்பு ஆசிரியர் எங்களுக்கு அவ்வப்போது பாடம் நடத்துவது உண்டு. ஏழாவது வகுப்பு ஆசிரியரைக் கண்டால் பயப்படுவோம். என்னை செதுக்கியதில் பெரும் பங்கு பெற்றவர்கள்.

மல்லாங்கிணர் மேல்நிலைப் பள்ளி

ஆறாவது வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை

அறிவியல் ஆசிரியை : எனது குரல் வளம் (பாடல் குரல் வளம் அல்ல) கேட்டு எப்படி கணீருன்னு ஒன்று இரண்டு சொல்றான் என பாராட்டியவர். மிகவும் கண்டிப்பானவர். நன்றாக சொல்லித் தருவார். இவரின் மகள் உமா மகேஸ்வரி எங்கள் வகுப்பில்தான் படித்தார். இவர் மாணவ மாணவியர்களை அடிப்பது உண்டு. நானும் வாங்கி இருப்பேன்.

கணித ஆசிரியை : மென்மையான குரலில் பாடம் எடுப்பார்கள். இவர்கள் நான் எட்டாவது படிக்கும்போது உடல் நல குறைவால் பணியை விட்டுவிட்டார்கள். திறமையான ஆசிரியை.

தமிழ் ஆசிரியை : எனது தமிழுக்கு வித்திட்டவர். இவரிடம் மதிப்பெண்கள் வாங்குவது கடினம் ஆனால் நான் 85க்கு குறையாமல் வாங்கி விடுவேன். என் மேல் அலாதிப் பிரியம் இவருக்கு. அடித்ததே இல்லை, ஆனால் அதிக கோபம் வரும். பாட்டு போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி ஊக்கம் தந்தவர். தமிழ் அருமையாக சொல்லித்தருவார்.

பாட்டு ஆசிரியை : எட்டாவது வகுப்பில் பாடச் சொல்லும்போது 'சலங்கையிட்டால் மாது' எனும் பாடலை பாடி கரகோசம் பெற்றேன். இப்பொழுது எனது ஆய்வகத்தில் நானாக பாடிக்கொண்டு இருந்தால் 'terrible voice' என எனது ஆய்வக நண்பர்கள் சொல்லும்போது சிரிப்பாக இருக்கும். கோபம் அதிகமாக வரும் இவருக்கு.

தொழிற்கல்வி ஆசிரியை : பாடம் எதுவும் எடுத்ததில்லை. பள்ளியில் உள்ள தாவரங்கள் பராமரிப்போம், நன்றாக அடி விழும். யாரும் ஓடியாடி வேலை செய்யமாட்டார்கள்.

ஆங்கில ஆசிரியர்: 'close the door' என ஒருமுறை ஆய்வாளர்கள் வந்த பொழுது என்னை அழைத்துச் சொல்ல திருதிருவென முழித்தேன். அப்பொழுது ஒரு மாணவி எழுந்து சென்று கதவை அடைத்துவிட்டு கைத்தட்டல் பெற்றார். நல்லாவே ஆங்கிலம் கற்று இருக்கிறேன்.
நன்றாக திட்டுவார். அடியும் விழும்.

அறிவியல் ஆசிரியர் : மிகவும் சிரிப்பாக பாடம் நடத்துவார். இவர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சேர்ந்ததெல்லாம் சிவலிங்கம், வாய்ச்சதெல்லாம் வைத்தியலிங்கம் என்பார். ஏலே என ஒரு அடி தருவார் சரியாக பதில் சொல்லாவிட்டால்.

வரலாறு ஆசிரியர் : மாடு மேய்க்கறவனெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்துருக்கான் என எங்களை மிரளச் செய்தவர். ஆங்கில பாடமும் ஒன்பதாவதில் இவர் தான். அடி இடியெனெ விழும். முதுகை பதம் பார்ப்பார்.

கணித ஆசிரியர் : முதலில் சீனிவாசன் ஆசிரியர் பத்தாவதில் பாதியில் இவர் சென்ற பின்னர் மொட்டையாண்டி ஆசிரியர் வந்தார். சீனிவாசன் ஆசிரியரை இழந்த கவலையில் இருக்க தனது அதிரடியால் எங்கள் மனம் கவர்ந்தவர் இவர். சீனிவாசன் ஆசிரியர் எனது பெயரை rathakrishnan என்பதை radhakrishnan என மாற்றியவர், பள்ளியில் முதல் மாணவனாக வருவேன் என ஆருடம் சொன்னவர். 8ம் வகுப்பில் இருந்து நான் தான் பள்ளியில் முதல் மாணவன். காரணம் ஏழாவதில் பள்ளியை விட்டுச் சென்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி. இந்த ஆசிரியர் என்னை ஒருமுறை inland letter வாங்கி வா என சொன்னதும் முதலில் inland letter வாங்கி பின்னர் பாதியிலே மனது மாறியவனாக திரும்பவும் சென்று வேறு கடிதம் வாங்கி தந்து திட்டு வாங்கி ஒழுங்கான கடிதம் கடைசியில் வாங்கி தந்தேன்.

மொட்டையாண்டி ஆசிரியர் கணிதத்தில் 100/100 வாங்க வேண்டும் என என்னிடம் தலையில் ஓங்கி அடித்து சொல்லியும் என்னால் 98 தான் வாங்க முடிந்தது. இரண்டு மார்க்குல போய்ருச்சே என என்னிடம் மதிப்பெண்கள் வாங்கிய தினம் அன்று வருத்தப்பட்டார். நான் பள்ளியின் முதல் மாணவனாக வந்தும் எனது மொத்த மதிப்பெண்கள் இவ்வளவு கேவலமாக இருக்கிறதே இதனை இந்த பள்ளியில் எழுதி வைத்து விடுவார்களே என வருத்தத்தில் இருந்தேன் நான் எடுத்த மதிப்பெண்கள் 359. பள்ளியில் பெயர் எழுதப்பட்டதை பெருமையாக படம் பிடித்து வைத்து இருக்கிறேன்.

எட்டாவது படிக்கும்போது நான் வேறு ஒரு அறிவியல் ஆசிரியருக்கு பயந்து செயல்முறை பாட வகுப்புக்கு செல்லாமல் இருந்தேன். எனக்கு படம் வரைய வராது. அவர் காலில் அடிப்பார். ஆதலால் நெஞ்சு வலிக்கிறது என ஒரு தோட்டத்தில் அமர்ந்து கண்ணீருடன் வரைவேன் அப்புறம் வீடு சென்று விடுவேன். இப்படி சில தினங்கள் நடந்ததும் என்ன இவனை காணோம் என திருமதி. சுப்புலட்சுமி அறிவியல் ஆசிரியை கண்டுபிடித்து பன்னிரண்டாவது சொல்லித்தரும் தமிழ் ஆசிரியரிடம் சொல்லி காலையில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் கடவுள் வாழ்த்து பாடும் முன்னர் எனது கன்னத்தை பிடித்து திருகி இப்படியெல்லாம் பண்ணுவியா என என்னை திட்டியதும் , 'நல்லா படிக்கிறவன் ஆனா என்னான்னு தெரியல' என அந்த ஆசிரியை சொன்னதும் என்னால் மறக்க முடியாத நினைவுகள். என்னை புடம் போட்டவர்கள் அந்த இரண்டு ஆசிரியர்களும்.

ஒரு முறை எனது அக்காவின் திருமணத்திற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது மாத தேர்வினை பொருட்படுத்தாமல் மூன்று நாட்கள் சென்ற போது இயற்பியல் ஆசிரியர் (எனது அண்ணனின் நண்பர்) பளார் என அறைந்து படிப்பு முக்கியம்னு தெரியாம எதுக்குடா நீ படிக்க வர என சொன்னது இன்னும் மறக்க முடியாது. பன்னிரண்டாவது வரை இருந்ததால் சிறப்பு பிரிவு ஆசிரியர்கள் அவ்வப்பொழுது வந்து எங்களுக்கு பாடம் எடுப்பது வழக்கம். வேதியியல் ஆசிரியர் இன்னமும் மனதில் நிற்கிறார். சிரித்த முகத்துடன் சொல்லித்தந்த விதம் மறக்க முடியாதது.

பத்தாம் வகுப்பு முடித்து செல்லும்போது அந்தப் பள்ளியில் கணிதப் பிரிவு இல்லாததால் கணிதப் பிரிவு வேண்டி அருப்புக்கோட்டை எஸ் பி கே செல்ல முடிவு எடுத்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்லும்போது 'நீ கஷ்டப்பட போற பாரு' என என்னை வாழ்த்தி அனுப்பிய பன்னிரண்டாவது வகுப்புக்கு சொல்லித்தரும் ஒரு தொழிற்கல்வி ஆசிரியர் அதிகமாகவே என்னை பயமுறுத்திவிட்டார்.

(தொடரும்)