Wednesday 26 August 2009

என் உயிர் நீ

உனைப் பற்றி ஒரு கவிதை
எழுதித் தர வேண்டுமென
உரிமையுடன் கேட்டாய்
உவகையுடன் சம்மத்தித்தேன்
இமைகள் மூடி திறக்கிறேன்
இருபத்தி ஐந்து ஆண்டுகள்
இன்னும் நீ கேட்ட கவிதைக்குப்
பிள்ளையார் சுழி கூடப் போடவில்லை.

உன்னை மட்டுமே நேசிக்க எனக்கு
உரிமம் தந்தவள் நீ
உறங்கிடும் போதும் எனை
காத்து நிற்பவள் நீ
எழுதத் தோணவில்லை இதற்கு மேல்.
காதலிக்கும்வரை கவிதை வார்த்தைகள்
கல்யாணத்திற்குப்பின்
வாழ்க்கையில் காதல் கவிதைகள்

கவிதை ஒரு பொய்த்தீர்மானம்
காதல் ஒரு மனத்தீர்மானம்
நிஜமான காதல் கவிதை உனக்கு
பொய்யான நிழல் கவிதை எதற்கு.

நுனிப்புல் - பாகம் 1 (1)

ஓம் நமோ நாராயணாய நம ஓம்
நீ என் அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை
நுனிப்புல் பாகம் - 1 தரவிறக்க

மனதெல்லாம் ஒருவிதமான சந்தோசம். சின்ன அமைதியும், சில்லென்ற காற்றும், காற்றின் ஓசையும் வாசனின் கண் இமைகளை மூடியவாறே வைத்து இருந்தன. வாசன் அந்த அற்புதமான நிகழ்வினை ரசித்தபடியே அவரது தோட்டத்தில் சாய்ந்து இருந்தான்.

வாசன் இருபத்திரண்டு வயது இளைஞன். அவனது கிராமத்தின் பெயர் குளத்தூர். இந்த அழகிய கிராமம் தமிழகத்தின் தெற்கில் அமைந்து இருந்தது. 150 வீடுகள் கொண்டதாய் தெருக்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டு கிராமம் மிகவும் அற்புதமாய் இருந்தது. கிராமத்தின் தெற்கில் ஒரு கோவில், வடக்கில் ஒரு கோவில், கிழக்கில் ஒரு கோவில் மற்றும் மேற்கில் ஒரு கோவில் என கோவில்கள் சூழ்ந்த கிராமம் பாதுகாப்பாக இருந்தது. நாணல் கோட்டை எனும் நகரத்தில் இருந்து தினமும் இரண்டு பேருந்துகள் ஏழு முறை ஊருக்குள் வரும். விவசாயம் ஊரின் பிராதன தொழில். 5 வகுப்புவரை கொண்ட ஒரு பள்ளி. 4 கி.மீ தொலைவில் உள்ள சோலையரசபுரத்திற்குத்தான் 12 வரை படிக்கச் செல்ல வேண்டும். மக்கள் கூடிப் பேச பொதுவாய் ஒரு திண்ணை. மரங்களும் செடிகளும் வண்ண வண்ண மலர்களும் பூத்து இருந்தன. தண்ணீர் நிரம்பிய குளம் இரண்டு இருந்தன. செம்மையான, செழிப்பான கிராமம், தெற்கில் கரிசல் மண்ணும், வடக்கில் செவந்த மண்ணும் கொண்டதாய் இனம் பிரித்து இருந்தது.

'வாசன், வாசன்' யாரோ அழைக்கின்ற சப்தம் கேட்டு, தன் தியானம் கலைத்து, வந்து நின்ற பெரியவரைப் பார்த்து வணக்கம் சொல்லியவாரே எழுந்தான் வாசன்.

''வாசன், என்ன மாலை நேர உறக்கமா?'' என்றார் பெரியவர் வினாயகம். 50 வயது மதிக்கத்தக்க பெரும் தனக்காரர், தாராள மனம் உடையவரும் கூட. திருமண பந்தம் என்ற ஒன்றை அறியாதவர். தனி மனிதனாகவே வாழ்ந்து கழித்துக் கொண்டு இருப்பவர். இவருக்கு ஒரு சகோதரர் மட்டும் உண்டு.

''வாங்க அய்யா, உட்காருங்க'' என அங்கு இருந்த கட்டிலை எடுத்துப் போட்டான் வாசன். ''இளநீர் கொண்டு வரேன்யா'' என்று வந்தவருக்கு இளநீர் வெட்டி வருவதற்காகச் சென்றான்.

''என் கேள்விக்கு பதில் இல்லையா'' என்று இளநீரை வாங்கியவாரே கேட்டார் பெரியவர். நாம் கேட்பதை கேட்போம் பதில் வந்தால் வரட்டும் என வாழும் மக்கள் உள்ள உலகில், ஒரு விசயம் கேட்டு அந்த விசயம் விவரம் அறிய ஆசைப்படுபவர் வினாயகம்.

சிரித்தான் வாசன். ''அய்யா நான் அமைதி தேடி அமர்ந்திருந்தேன், மாலை நேர உறக்கம் எல்லாம் ஒண்ணும் இல்லை அய்யா'' என்ற வாசகம் வினாயகத்திற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
''அமைதி தேடியா?'' புருவம் ஏறிட புரியாமல் விளித்த வினாயகம் விழித்தார்.

''என்ன ஆச்சர்யமா கேட்கிறீங்க அய்யா, உங்களிடம்... என்கிட்ட எதையோ தேடுவது போலே எனக்கு தெரியுத'' வாசன் வாக்கியம் முடிக்கும் முன் இடைமறித்தார் வினாயகம். ''வாசன் என்னப்பா எல்லாம் அறிந்தவன் போலே பேசற, அமைதி தேடுறேன்னு சொல்ற, உன்கிட்ட ஏதோ எதிர்பார்க்கிறேன்னு சொல்ற... ம், உண்மைதான் வாசன், உன் தோட்டம் எல்லாம் விலைக்கு தரியா?'' தறிகெட்டு வந்து விழுந்த வார்த்தைகள்! தடுமாறிப்போனான் வாசன். தந்தையிடம் கேட்காமல் நம்மிடம் ஏன் கேட்கிறார் என சந்தேகமாய் அவரை நோக்கினான்.
''என்ன வாசன் , என்ன பதில் சொல்லப்போற, உங்க அப்பாகிட்ட சொன்னா உன்கிட்ட கேட்கச்சொல்வார்'' என விசயம் அறிய வேதனைப்பட்ட்டார் வினாயகம். நிலைகுலைந்த வாசன், ''என்ன அய்யா திடீரென என் தோட்டத்தை விலைக்கு கேட்கறீங்க'' கருத்து அறிய கவலையுற்றான்.

வினாயகம் அவனை உற்று நோக்கியவாறே ''பதில் சொல்வேன்னு பார்த்தா, என்கிட்ட வினா கேட்கிற'' என்றவாரே ''இந்த கரிசல் மண்ணை எனக்கு கொடு, அதே அளவு என் செவல நீ எடுத்துக்கோ, சம்மதமா?'' பெரியவரின் வார்த்தைகள் பெரும் புதிராகவே இருந்தன. வாசன் அமைதியாய் அடம்பிடித்தான்.

''வாசன் நீ அமைதி தேடு, நான் வேண்டாம்னு சொல்லல, அதுக்குன்னு வார்த்தை பேசாம இருந்து அமைதி காத்தேன்னு வைச்சிக்கோ அப்புறம் வெளிச்சம் உனக்கும் இல்ல, எனக்கும் இல்ல, இப்பவே இருட்டிருச்சி'' அவசரப்பட்டார் வினாயகம். வாசன் தன்னை ஆசுவாசபடுத்திகொண்டான்.

''சரி, இருங்க அய்யா, கதவை அடைச்சிட்டு வரேன், பேசிக்கிட்டே போகலாம், யோசிச்சு சொல்ற விசயத்த, யோசிக்க கூட நிமிசம் இன்றி யாசிக்கிறது என்ன தர்மமோ'' என கூறியவாரே கதவை இழுத்து சாத்தினான். கதவு சாத்தப்பட்ட வேகத்தில் காற்றுக்கு வேதனை இருப்பது சப்தத்தில் தெளிவாக தென்பட்டது.

அவர்கள் நடந்தனர். வாக்கியங்கள் பரிமாறப்பட்டன. வார்த்தைகள் விட்டுகொடுக்கப்பட்டன. வினாயகத்தின் கண்களில் பெரிய கருணை தென்பட்டது. இனி சிரமம் இல்லை என தோன்றியது அவருக்கு. ஊர் எல்லை தொடுவதற்கும் தன் உள்ளத்தில் உள்ளவற்றை வாசனிடம் கொட்டி முடிப்பதற்கும், வாசன் எதையும் சிந்தாமல் தன் எண்ணத்தில் சேகரித்து வைப்பதற்கும் மிகச் சரியாக இருந்தது.

வாசன் தன் வீடு நோக்கி நடந்தான். இருட்டுத் தெரியவில்லை. ஊரெல்லாம் ஒரே வெளிச்சமாக இருந்தது. ''வாசா தோட்டவேலை முடிஞ்சதா'' என சேட்டூர் கிராமவாசி ராஜன் கேட்டார். ''முடிஞ்சதுண்ணே, இந்த பக்கம் என்ன இன்னைக்கு'' என தானும் கேட்டு வைத்தான். ''அது இல்லப்பா, இங்க ஆட்களை வேலைக்கு கூட்டிட்டு போகலாம்னு வந்தேன், இந்த ஊரு ஆட்கள் நல்ல வேலை செய்வாங்களே அதான்'' என ஊரின் பெருமை சொன்ன அவரை பார்த்து ''பார்போம்'' என அனுப்பிவிட்டு நடந்த வாசனை நோக்கி குழந்தைகள் குதூகலித்து சத்தம் போட்டு வந்தனர்.

வாசன் தினமும் இரவு 7 மணிக்கு அங்கு கூடி விளையாடும் குழந்தைகளுக்கு கதை, கவிதை சொல்வது வழக்கம். வீடு சென்று வருவதாக சொல்லிவிட்டு அவர்களை புத்தகம் கொண்டுவந்து படிக்கச் சொல்லி நகர்ந்தான். தாய் என்ன சொல்வாளோ என யோசனை அதிகமாக இருந்தது.

(தொடரும்)

மற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.

மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது வலைப்பூ எழுதுபவர்களின் சிந்தனை. ஒருவர் மற்றொருவரை அடித்தால் மற்றொருவர் அடுத்தவரை தொடர்ந்து அடிக்க வேண்டும் எனும் விளையாட்டு போல ஒருவர் ஒரு கருத்தை வைத்து எழுதிட அதே கருத்துடைய விசயத்தை தங்களது பாணியில் எழுதி ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.

பெரும்பாலானவை தொலைந்து போன விசயங்களுடன் ஒட்டிய விசயங்களை முன்னிலைப்படுத்திய விதம் மிகவும் அருமையாக இருந்தது. பொதுவாக நம்மிடம் இருக்கும் பொருளுக்கு நாம் அத்தனை மதிப்பு தருவதில்லை, நம்மிடம் எப்பொழுது ஒன்று தொலைந்து போகிறதோ அது குறித்த சிந்தனை அதிகமாகவே நமக்கு இருக்கும். இது இயல்பாகவே நடப்பது. இதுகுறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் 'மொக்கை' என இடுகைகள் இடப்பட்டதும் சரி, 'கவுஜ, கவிதை, அனுபவம்' என இடப்பட்ட இடுகைகளும் சரி ஒருவருடைய எண்ணத்தை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது குறிப்பிடப்பட்ட விசயத்தைப் பற்றி சற்றும் யோசிக்காமல் திடீரென என்ன எண்ணத் தோன்றுகிறதோ அதை வைத்து எழுதப்படும் நான்கைந்து வரிகள் எனலாம்.

இதையே சற்று நேரம் சிந்தித்து எழுதினால் வரும் சந்ததிகளுக்கு நல்லதொரு விசயத்தையும், எப்படிப் போராடி வெற்றி பெற்றோம் என்கிற நல்லதொரு எண்ணத்தையும் விதைக்கும் வண்ணமாக எழுத்து இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக அமைந்துவிடுகிறது, இப்போது எழுதப்பட்டவை எல்லாம் பயனற்றவை என கருத இயலாது. இது ஒரு விளையாட்டு என கொள்ளலாம். மூளை வளர்ச்சி அடையும் வகையில் கேளிக்கை செய்வோம் என்றுதான் பாடல் கூட இயற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் இவை திடீர் சிந்தனையின் வெளிப்பாடுகளே.

2003ல் தொடங்கப்பட்ட நுனிப்புல் பாகம் 1 எனும் நாவல் எழுதி முடிக்க மூன்று வருடங்கள் மேல் ஆனது. அதனை சொந்த செலவில் அச்சடித்து வெளியிட்டோம். இலண்டனில் உட்கார்ந்து கொண்டு எப்படிச் செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என புரியாமல் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில் அதிகமான எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள், வார்த்தைப் பிழைகள். புத்தகத்தைத் திரும்பிப் படிக்கும்போது மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. முதலில் எழுதப்படுவது நன்றாக இருந்தால்தான் பின்னால் எழுதப்படுவது இலகுவாக அனைவரையும் அடையும் என்றிருந்த நிலையை உணராமல் பல மாதங்கள் பின்னரே வெளிவந்தது அந்த நாவல்.

இந்த நாவலை வெளியிட எங்கு கேட்டாலும் உடனடியாக செயல்படுத்த முடியாத நிலையாகத்தான் இருந்தது. நூலகங்கள் எடுத்துக் கொள்ள வழி செய்ய முயற்சித்து கொண்டிருக்கையில் மனுவுக்கான இறுதிநாள் தவறிப்போனது. எழுதிய நான் இல்லாமலே நாவலை வெளியீடு செய்து பத்திரிகைகளுக்கு எல்லாம் செய்திகள் கொடுத்து பத்திரிகைகளில் இதுகுறித்து வெளிவந்த விசயம் மிகவும் மகிழ்வாக இருந்தது. இருப்பினும் நாவலை எப்படி எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது எனப் புரியவே இல்லை.

நண்பர்களின் முயற்சியினால் பல புத்தகங்கள் பலரைச் சென்றடைந்தன. ஆனால் மொத்தமாக எவரும் எடுத்து விற்பனை செய்ய முன்வரவில்லை, முறையாக நாங்கள் முயற்சிக்க வில்லை. பின்னர் பல்லவி வெளியீட்டாளரிடம் தொடர்பு கொண்டு நூலகங்களுக்கு மனு செய்தோம். நூலகங்கள் நாவலை எடுத்துக்கொண்டால் சரி, அப்படி இல்லையெனில் விற்பனை செய்து தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.

நாட்கள் சென்று கொண்டே இருந்தது, எதுவும் ஒரு முடிவு கிடைத்தபாடில்லை. நூலகங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சி செய்தி வந்தாலும், நூலகங்களிலிருந்து புத்தகங்கள் அனுப்பச் சொல்லி முறையான கடிதம் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருந்த நம்பிக்கையும் தொலைந்து போன நேரத்தில் நேற்று முன் தினம் நுனிப்புல் பாகம் 1 தனை அனுப்பச் சொல்லி கடிதம் வந்து சேர்ந்தது. அதைப் பார்க்கையில் நாவல் வெளியிட வேண்டும் எனும் சாதாரண ஆசை ஒரு வித்தியாசமான திசையில் பயணித்து ஒரு இலக்கை அடைந்துவிட்டதை எண்ணும்போது இப்பொழுது எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் எனது நாவலுக்கும் ஒரு இடம் கிடைத்துவிடும், மேலும் கொல்கத்தா, மும்பாய், டில்லி நகர நூலகங்களுக்கும் இந்த நாவல் பயணிக்கிறது என நினைக்கும் இப் பொழுது சிறப்பாகவே இருக்கிறது. எப் பொழுதும் சிறப்பாகவே இருக்கும் எனும் நம்பிக்கையும் பிறக்கிறது.