Friday 26 June 2009

பழங்காலச் சுவடுகள் - 9

விவிட்டிடம் அகிலா பேசினாள். இனிமேலாவது ஒரு சமுதாயம் உருவாக்கும்போது அன்பே உருவான சமுதாயமாக உருவாக்குமாறு கேட்டுக்கொண்டாள். விவிட் சிரித்தான். அது மட்டும் ஒருபோதும் உருவாக்கப்போவதில்லை என்றான். பொக்கிஷங்கள் எல்லாம் வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்க்கக்கூடியதாக இருப்பதாக கூறினாள். வேதநூல்கள் சொல்லும் நல்வழியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினாள். ஆனால் விவிட் எதையுமே கேட்பதாக இல்லை. அனைவருக்கும் அங்கே சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்து நாம் விடுதிக்கு செல்வது என நல்லது என கூறினார். இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். வாகனத்தில் வாகன ஓட்டி காத்துக்கொண்டிருந்தான். விடுதியை அடைந்தனர். சின்னச்சாமி நிம்மதியாய் உணர்ந்தார்.

''உலகம் எவ்வளவு மாறிவிட்டது, இப்படி பழமையிலே ஊறிப்போய் ஒருவரையொருவர் எப்படி வெட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்''

''வாழ்கிறார்களா? சாகிறார்களா? ம்ம் நீயும் தான் முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் இன்னும் சொல்லித்தந்து கொண்டிருக்கிறாய், போரினால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லி இனிமேல் போர் என்பதே நடக்கக்கூடாது என எந்த வரலாறு புத்தகமாவதுச் சொல்லித் தருகிறதா? இந்த மனிதர்கள் எப்பொழுது மூன்றாவது உலகப்போர் வரும் என விஷ விதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் போரினால் படும் அவலநிலைகள் என ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான், இலங்கை என நாடுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம், விவிட் சொன்னதுபோல் மனிதம் அற்றவர்களாக நாம் தான் இருக்கிறோம், பழங்காலத்தில் நடந்தது இன்று அதிக அளவில் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை நீயும் நானும் மறுக்க முடியுமா''

''தேன்நிலவுக்குத்தான் வந்தோம் ஆனால் இப்படி கொடூரமான வாழ்க்கை முறையை கண்டதும் இனிவரும் சந்ததியினர் பற்றி அச்சமாக இருக்கிறது''

''அன்பை போதிக்கும் முறை அழிந்து போய்விடுமோ என அச்சமாகவும் இருக்கிறது, அதே மனிதர்களிடம் நான் எப்படி நடுங்கிக்கொண்டே இருந்தேன் தெரியுமா, ஒன்று பேசுவதற்குள் ஒன்றாக நின்றுகொண்டே வாளினை எடுக்கிறார்கள், எதிரெதிர் நின்று கொள்கிறார்கள் பார்க்கவே உயிர் பறந்து போய்விடும் போலிருக்கிறது''

''பெரு நாட்டிற்குச் செல்ல வேண்டுமா''

''செல்லத்தான் வேண்டும்''

எகிப்தில் சிலநாட்கள் இருந்து பிரமிடுகள், கோவில்கள் எல்லாம் பார்த்தார்கள். நைல்நதியின் ஓரத்தில் செல்லவே அச்சமாக இருந்தது. ஆனால் பெரு செல்லும் நாளன்று வாகன ஓட்டியை விவிட் இருக்கும் பகுதிக்கு வாகனம் செலுத்தச் சொன்னாள். அங்கே அதே இடத்தில் சில குடிசைகள் முளைத்திருந்தன. பெரிய அழிவு நடந்ததிற்கான ஆதாரமே இல்லாது போன்று இருந்தது. ஒரு சுவடும் தெரியாமல் அழித்துவிட்டார்களே, ஆனால் என்றோ நடந்த போர்கால சரித்திரங்களை மட்டும் இன்னும் பாதாள அறையில் பாதுகாத்து வருவது ஏனோ என எண்ணிக்கொண்டே இருக்க விமானநிலையம் வந்து அடைந்தார்கள். வேதநூல்களும், நூலக நூல்களும் வைத்திருப்பதை நினைக்கையில் அகிலாவுக்கு மனம் என்னவோ செய்தது.

பெரு நாட்டினை அடைந்தார்கள். தென் அமெரிக்க நாடுகள் பெரும்பாலும் ஸ்பெயின் ஆதிக்கத்தில் இருந்தவை. பெரு நாட்டினை அடைந்ததும் கோவில்கள் தென்பட்டன. அனைவரு்ம் புன்னகை புரிந்தார்கள். என்ன உதவி வேண்டும் என தேடி வந்து கேட்டார்கள். வணங்கினார்கள். அகிலா ஆச்சரியம் அடைந்தாள்.
விடுதியை அடைந்தபோது விடுதியில் இருந்தவர்களும் மிகவும் அன்போடு உபசரித்தார்கள்.

சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு ஒரு கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இருந்தவர் பல உலக ரகசியங்கள் இங்கே புதைந்து இருப்பதாக சொன்னார். இந்தியாவுக்கும் பெருவுக்கும் பெரிய தொடர்பு இருப்பதாக கூறினார். கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. மாயன்கள் அஜ்டெக்குகள் பற்றி சொன்னார். அவர் சொல்ல சொல்ல ஆர்வமாக கேட்கத் தொடங்கினார்கள்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 8

இருவரும் ஒருவழியாய் விடுதியை அடைந்தார்கள். பிரமை பிடித்தது போல் இருந்தது. இனிமேல் இப்படி ஒரு தவறை செய்யக் கூடாது என சின்னசாமி எச்சரிக்கை செய்தார்.

''விவிட் அம்மா இறக்கும்போது இந்தியா இந்தியா என சொன்னார்களே''

''இப்ப என்ன வேணும் உனக்கு, இப்பதான் உயிர் தப்பிச்சி வந்திருக்கோம்''

''விவிடோட அப்பா எங்க இருக்காருனு சொல்லலையே''

''இப்ப என்ன வேணும் உனக்கு''

''நாளைக்கு அந்த இடத்துக்கு நாம போகனும்''

''உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அகிலா''

''போய்த்தான் ஆகனும்''

''பெரு நாட்டுக்கு கூட போக வேண்டாம், நாளைக்கே நாம இந்தியா போவோம்''

''நீங்க போங்க நான் வரலை''

''இங்க இருந்து என்ன பண்ண போற, நானே பயத்துல செத்துகிட்டு இருக்கேன்''

''பயம் தற்காப்புனு என்ன என்னமோ சொன்னீங்க''

''நீ பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சிட்ட''

''பொக்கிசங்கள் பாக்கனும்''

''தீயில போட்டு பொசுக்கப் போறான்''

அகிலா பிடிவாதம் பிடித்தாள். சின்னசாமி கோபம் அடைந்தார். ஆனால் அகிலா விடாமல் அடம்பிடித்தாள். இரவெல்லாம் யோசித்தார் சின்னசாமி. காலை முதல் வேலையாய் விடுதியை காலி பண்ணும் திட்டத்துடன் உறங்கினார். ஆனால் அகிலா வேறு திட்டம் வைத்து இருந்தாள். காலையில் எழுந்ததும் அகிலா தனது விருப்பபடியே நடக்க வேண்டும் என கூறினாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சின்னசாமிக்கு. சாவது என முடிவாகிவிட்டது என மெத்தையில் பொத்தென விழுந்தார் சின்னசாமி. அகிலா அவசரப்படுத்தினாள்.

வாகன ஓட்டி யாரும் வர மறுத்தார்கள். பெரும் சேதம் நடந்து இருப்பதாகவும் அந்த இடத்துக்கு செல்வது ஆபத்து எனவும் கூறினார்கள்.

''காவல் துறை எதுவும் செய்வதில்லையா''

''அப்பகுதியில் வாழும் மக்களிடம் யாரும் தொடர்பு வைத்து கொள்வதில்லை. இது போன்று இவர்களுடன் சேர்த்து மொத்தம் மூன்று கூட்டமைப்பு இருக்கிறது. அது அவர்களின் தனி பிரதேசம். இம்முறை பெரிய சேதம் நடந்துவிட்டதாகத்தான் தெரிகிறது. நைல் நதியை ரத்த நதியாக்கும் கூட்டங்கள். இந்நேரம் மற்ற இரு கூட்டங்களும் அங்கே வந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது''

''சற்று தொலைவில் எங்களை விட்டு விட்டு வாருங்கள்''

சின்னசாமி மிகவும் எரிச்சல் அடைந்தார்.

''அதான் வரமாட்டோம்னு சொல்றாங்கள இனி உன் பாடு''

''...''

ஒரு வாகன ஓட்டி சம்மதம் சொன்னார். சற்று தொலைவில் இறக்கிவிடுவதாக அழைத்துச் சென்றார். அகிலா வற்புறுத்தவே சற்று அருகிலேயே கொண்டு நிறுத்தினார்.

''காத்திருக்க முடியுமா''

''என்னை யாராவது தாக்காமல் இருந்தால் இங்கேயே இருப்பேன்''

சின்னசாமி திட்டிக்கொண்டே நடந்தார். அகிலா அப்பகுதியை அடைந்தாள். மக்கள் நடமாட்டம் இருந்தது. இடம் சுத்தமாக்கப்பட்டு இருந்தது. அருகில் நடந்து சென்றபோது இவர்களை நோக்கி ஒருவன் ஓடிவந்தான். சின்னசாமி தைரியம் வரவழைத்துக் கொண்டார். விவிட் அவன் பின்னால் ஓடி வந்தான். ஓடி வந்தவன் திரும்பி பார்த்து நின்றான். விவிட் அகிலாவிடம் கேட்டான்.

''இப்போ எதற்கு இங்கே வந்தீர்கள்''

''பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''...''

''என்ன நடக்கிறது இங்கே''

''எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது''

''நேற்றுதானே அமங்கலம் நடந்தது''

''நேற்று இன்றைய கணக்கில் வருவதில்லை''

''இவர்கள் எல்லாம் யார்''

''எங்கள் உறவினர்கள்''

''நேற்று நடந்தது பற்றி கவலை இல்லையா''

''பழையதை பற்றி பேச வேண்டாம்''

''அப்படியெனில் எதற்கு பொக்கிசங்கள் காக்கப்படுகிறது''

விவிட் திணறினான்.

''நீ சிந்து பெண்ணல்லவா அதுதான் இப்படி பேசுகிறாய்''

''நாங்கள் பெரு நாட்டுக்கு செல்ல வேண்டி இருக்கிறது, பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''சரி வாருங்கள்''

விவிட் அகிலாவையும் சின்னசாமியையும் பற்றி சொன்னான். ஒருவன் வாளை எடுத்தான். மற்றொருவனும் வாளை எடுத்தான். விவிட் கத்தினான். இரண்டு கூட்டமும் தனித்தனியாய் வேக வேகமாக நின்றது.

''என்னை பார்க்க வந்து இருக்கிறார்கள், விடுங்கள்''

அகிலாவுக்கு சுய நினைவில் இருப்பது போன்று எதுவும் தெரியவில்லை. சின்னசாமி முகம் வெளிறிப் போனது. சின்னசாமியின் கைகளைப் பிடித்தாள் அகிலா.

''அப்பவே சொன்னேன் கேட்டியா, சாமி வந்தது போல குதிச்ச''

''...''

பாதாள அறைக்குள் நுழைந்தார்கள். இருவரின் முகம் ஆச்சரியத்தில் அப்படியே கண்களை நிலை குத்தி நிற்க வைத்தது.

''இவை எல்லாம் சிந்து பகுதியையும் அதன் அருகில் இருக்கும் பகுதியையும் சார்ந்ததுதான், இதுதான் அலெக்சாண்டர் தந்த கேடயம்''

''உங்கள் தந்தை எங்கே''

''சிந்து பகுதிக்கு சென்று இருக்கிறார் அவர் வர ஒரு வருட காலம் ஆகும்''

''இவை வேத நூல்கள் அல்லவா''

''ஆம் எனது தந்தை மொழி பெயர்த்து எழுதியது அதோ அங்கே இருக்கிறது''

''மரண செய்தி கேட்டால் அவரின் நிலை''

''அதற்கெல்லாம் கவலைப்படமாட்டார்''

''நீங்கள் மானிட பிறவிகள் தானா''

''நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''வேத நூல்கள் வைத்து இருக்கீர்கள் ஆனால் மனிதம் அற்றவர்கள் என சொல்கிறீர்கள்''

''ஆம் மனிதம் அற்றவர்கள் நாங்கள்''

''வேதம் படித்தவர்களுக்கு நீங்கள் செய்வது இழுக்கு அல்லவா''

''மேலே வாளுடன் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லுங்கள்''

''என்ன பைத்தியகாரத்தனம் இது''

''இந்த சமவெளியில் நாங்கள் நன்றாகத்தான் இருந்தோம் எங்களிடம் துவேசத்தை நிரப்பினார்கள். நாகரிகம் வளர்த்த எங்களை மனிதம் அற்றவர்கள் ஆக்கியவர்கள் வேதம் என வேசம் போடுகிறார்கள்''

''புரியவில்லை''

''கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைகிறார்கள்''

''ஒரு சமுதாயமே அழிந்ததன் காரணம் நீங்கள்''

''ஒரு சமுதாயம் மட்டும் தான் அழிந்ததை பார்த்தீர்கள், மொத்த சமுதாயத்தையும் வேதம் பெயர் சொல்லி அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்''

''நீங்கள் பேசுவது தன்னையே அழித்துக்கொண்டு பிறரை குற்றம் சாட்டுவது போல இருக்கிறது''

''இதைப் பாருங்கள்''

அகிலா அதிர்ச்சியில் உறைந்து போனாள். சின்னசாமி சின்னாபின்னமாகிப் போனார்.

''இது ரோமப் பேரரசு. இது கிரேக்கப் பேரரசு. கிரேக்கன் காட்டிய கடவுளையெல்லாம் ரோமன் பெயர் மாற்றி காட்டினான் எங்கு பார்த்தாலும் ஒருவரையொருவர் வெட்டிக் கொன்றனர் இவையெல்லாம் ரத்தம் தோய்ந்த ஆடைகள்''

''...''

''இதோ வாளுடன் புறப்பட்ட மனிதமே அற்றவர்கள், தலையை சீவினார்கள். உங்கள் சிந்து பகுதியில் எடுத்தது''

''...''

''அடுத்தவர்களை வெட்டிக் கொல்வதிலே மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்ட கூட்டம் அதுதான் சொல்கிறேன் நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''இப்பொழுது மாறிவிட்டது அல்லவா''

''ஆம் வாளுக்கு பதில் வான வேடிக்கை நடக்கிறது நாங்கள் வாளுடன் மட்டுமே இருக்கின்றோம்''

''மனிதம் வளர்க்கலாம் அல்லவா''

''என் தந்தை சொல்வார். நிறம் பார்த்து வெட்டிக் கொல்லும்் கூட்டம் இருக்கிறதாம். இனம் வேறுபாடு பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நிலை பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நாங்கள் அழிய வேண்டும் என வெட்டிக் கொள்பவர்கள்''

''சிந்து பகுதிக்கு ஏன் சென்று இருக்கிறார்''

''ரத்தம் தோய்ந்த ஆடைகள் எடுக்க''

''...''

''பொக்கிசங்கள் பார்த்தாகிவிட்டதா''

''பார்க்க சகிக்கவில்லை''

''வேத நூல்களிலும் ரத்தம் படிந்து இருக்கிறது பாருங்கள்''

''துடைத்து தூய்மையாக்குங்கள்''

''எழுத்துக்கள் சேர்ந்து அழிந்து போகும்''

அகிலாவும் சின்னசாமியும் மேலே வந்தார்கள். பெண் தயாராக இருந்தார். விவிட் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டான். பாதாள அறைக்கு மேல், வீட்டினை உடனே எழுப்பினார்கள். குடிசையாய் தான் வெளியில் தெரிந்தது. உள்ளே குகையாய் அமைத்தார்கள். அகிலா அசையாமல் நின்று கொண்டிருந்தாள். சின்னசாமி மனிதம் பற்றி யோசிக்கலானார்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 7

சப்தம் கேட்டதும் பாதள அறையிலிருந்து பிரம்ட் மேல் தளத்துக்கு வந்தான். மற்ற இருவரும் பயத்துடன் பிரம்ட் ஐ பார்த்தார்கள்.

''என்ன ஆனது''

வாகனம் எரிந்து கொண்டிருப்பதை பிரம்டுக்கு காட்டினார்கள். கிரக் மிகவும் ஆத்திரம் கொண்டவனாக காணப்பட்டான். இவன் இரண்டாமவன். சொபிட் தனது கையில் போட்டிருந்த துணியை அவிழ்த்து மருந்து வைத்து எதுவும் நடக்காதது போல அமர்ந்து இருந்தான்.

''எல்லாம் இவனால் வந்தது''

மிக்கட் சொபிட்டை நோக்கிச் சொன்னான். கிரக் ஒரே பாய்ச்சலாக ஓடி சொபிட்டை உதைப்பதற்கு காலை தூக்கினான். சொபிட் இதை எதிர்பார்த்தவன் போல கிரக் காலினை பிடித்து சுழற்றிவிட்டான். கிரக் எதிர்பாராவிதமாய் கீழே விழுந்தான். இச்செயலை பார்த்த பிரம்ட் கத்தினான்.

''நாம் அழியப் போகிறோம்''

''பாதாள அறைக்குள் ஒளிந்து கொள்ளலாம்''

கிரக் எழுந்தவன் சொபிட்டை முறைத்தப்படியே பாதாள அறைக்குள் நுழைந்தான். பாதாள அறையை உள்புறமாக பூட்டினான் பிரம்ட். பிரம்ட் சொன்னான். மிக்கட் மட்டுமே பதில் பேசினான்.

''அனைவரும் நமது உறவுக்காரர்கள்''

''இனி உறவு கொண்டாட முடியாது''

''வாகனம் எரித்தவர்கள் நம்மை எரிக்காமல் விடமாட்டார்கள்''

''நாம் சில காலங்கள் கழித்து திரும்பியிருக்க வேண்டும்''

பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டின் கதவு நொறுங்கும் சத்தம் கேட்டது. அறையெல்லாம் தேடினார்கள்.

''பாதாள அறைக்குள் இருப்பார்கள், கல் கதவை உடைத்து நொறுக்குங்கள்''

''இது முறையல்ல என அப்பொழுதிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம் நீங்கள் நடந்து கொள்வது முறையில்லை''

சொன்னவரை முறைத்தார் அவர். பிரம்ட் ஒரு முடிவுடன் பாதாள அறையை விட்டு வெளியே வந்தான். பிரம்ட் ஐ கண்டதும் ஒருவன் வாளால் வெட்டப் பொனான். அவனை தடுத்து நிறுத்தியவர் பிரம்ட்டிடம் கேட்டார்.

''சொபிட் எங்கே, அவனை எங்களிடம் விட்டுவிட்டு நீ செல்லலாம்''

அதற்குள் பாதாள அறைக்குள் சிலர் இறங்காமலே குதித்தார்கள். வெளிச்சம் ஏற்ற உதவிய தீ அதி வேகமாக எரிந்தது. பிரம்ட் அப்படியே நின்றான். சொபிட் வெளியே இழுத்து வரப்பட்டான். பிரம்ட் பாதாள அறையை மூடச் சொன்னான். பாதாள அறைக்குள் சென்று வந்தவன் சொன்னான்.

''மரியாவையும் விவிட்டையும் காணவில்லை''

''அவர்களை விடு, இவன் தானே கையை வெட்டினான்''

சொபிட்டை ஓங்கி ஒரு அறை விட்டார். ஒருவன் உதைத்தான். சொபிட் கீழே விழுந்தான். பிரம்ட் கெஞ்சினான்.

''எங்களை விட்டு விடுங்கள் இனிமேல் நாங்கள் இப்பகுதிக்கு வரமட்டோம்''

''இப்படித்தான் உனது குடும்பம் ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்து தப்பித்து விடுகிறது. இம்முறை அது சாத்தியமில்லை''

''சொபிட் மட்டுமே குற்றவாளி மற்றவர்களை விட்டுவிடுவோம்''

''சொன்னது யார்''

''நானே சொன்னேன்''

''அப்படியென்றால் அவர்களுக்காக நீ மரணமடைய தயாரா உனது கூட்டம் இன்னமும் இவனுக்கு உதவியாக ஏன் பேசுகிறது முதலில் உங்களை வெட்ட வேண்டும்''

சலசலப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் ஆரம்பித்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட தொடங்கினார்கள். பிரம்ட் வாளினை எடுத்தான். கிரக்கும் மிக்கடும் வாளினை எடுத்தார்கள். சொபிட் அறையில் தீயை வைத்தான். இரு பிரிவுகளாக பெரும் சண்டை நடந்தது. வீட்டினில் தீ பரவிடவே வெளியே வந்தார்கள். வாகனம் எரிவதை பார்த்து விட்ட வந்த அந்த பகுதி மக்கள் எல்லாம் குவிந்தார்கள். குழந்தைகள் கதறின. பெண்கள் வாளினை எடுத்தார்கள். நிலவு வெளிச்சமும் தீ வெளிச்சமும் போதவில்லை.

பிரம்ட் பல நபர்களை வெட்டினான். சற்று நேரத்திற்கெல்லாம் பெரும் சேதம் நடந்தது. அனைவருமே கீழே விழுந்தார்கள். தீ வேகம் வேகமாக பரவியது. அவ்விடத்தை விட்டு தப்பித்தவர்கள் வெகு சிலரே. ஆனால் அதையும் பொறுக்காமல் காயங்களோடு அனைவரையும் வெட்டினான் கிரக். தீ முழுவதும் பரவியது. அந்த இடமே சாம்பலாகியது.

விவிட் பதட்டமடைந்தான். சென்றவர்களை காணவில்லையே என கலக்கமுற்றான். அகிலா கேட்டாள்.

''நடு இரவு தாண்டி விட்டது, இங்கிருந்து எப்படி செல்வது''

''வாகனங்கள் காலையில் வரும், சென்றுவிடலாம், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது''

பயத்துடன் இரவினை கழித்தார்கள். காலையில் வாகனங்கள் தென்பட ஆரம்பித்தன. ஒரு வாகனத்தை பிடித்து தனது பகுதிக்கு விரைந்தான் விவிட்.

அருகே செல்ல செல்ல எரி வாசனை அடித்தது கண்டு வாகன ஓட்டி அச்சமுற்றார். விவிட் ஓட்டச் சொன்னான். மொத்த பகுதியும் எரிந்து சாம்பலாகி கொண்டு இருந்தது. விவிட் ஓ வென அலறினான். மரியா மயக்கமுற்றார். அகிலாவும் சின்னச்சாமியும் பயத்தால் நடுங்கினர். வாகன ஓட்டி அவர்களை இறக்கிவிட்டு பணம் கூட வாங்காமல் வாகனத்தை எடுத்து சென்றார். மரியாவுக்கு மயக்கம் தெளிவித்து அப்படியே அமர்ந்துவிட்டான் விவிட்.

''என்ன கொடுமை இது இப்படி செய்து விட்டார்களே''

''பேசாமல் இரு அகிலா''

விவிட் சொன்னான்.

''நீங்கள் உங்கள் விடுதிக்கு செல்லுங்கள். நாம் வந்த இடத்தை அடைய இரண்டு மணி நேரம் ஆகும், அங்கிருந்து வாகனம் பிடித்து செல்லுங்கள்''

''நீங்கள் வரவில்லையா''

''தீ குழம்புகள் இருக்கின்றன, இதை தாண்டி உள்ளே செல்வது எளிதில்லை. மொத்த வம்சமும் அழிந்துவிட்டது''

மரியா பேச முடியாமல் இந்தியா இந்தியா என சொல்லிக்கொண்டே இறந்து போனார். அகிலாவும் சின்னசாமியும் அடக்கி வைத்திருந்த அழுகையை அடக்கமுடியாமல் கதறினார்கள். விவிட் ஓ என அலறினான். உடனே தாயை தூக்கிக் கொண்டு தீ குழம்புகள் பொருட்படுத்தாது ஓடினான். சின்னஞ்சிறு தீயில் போட்டான். தீயை மூட்டினான். உடல் எரிய தொடங்கியது. அகிலா மயக்கமானாள். சின்னசாமி கதறினார். விவிட மறுபுறம் ஓடினான். கற்கள் எடுத்தான். அதன் மேல் நடந்து தனது வீடு அடைந்தான். எல்லாம் எரிந்து அடங்கியிருந்தது. பாதாள அறையை ஒரு வழியாய் கண்டுபிடித்தான். திறந்து உள்ளே இறங்கினான். எதுவும் எரியாமல் அப்படி அப்படியே எல்லாம் இருந்தது.

அகிலா மயக்கம் தெளிந்தாள். விவிட் கண்ணுக்கு தெரியவில்லை. அங்கேயே அமர்ந்து இருந்தார்கள். விவிட் சிறிது நேரத்திற்கு எல்லாம் வந்தான்.

''பழங்கால பொக்கிசங்கள் எதுவும் சேதம் ஆகவில்லை''

''இவ்வளவு பேர் இறந்து விட்டார்களே, உனக்கு கவலை இல்லையா''

''தானே அழிவை தேடிக் கொண்டவர்கள் பற்றி எனக்கு என்ன கவலை''

''என்ன செய்யப் போகிறாய்''

''ஒரு பெண்ணை மணமுடித்து ஒரு சமுதாயம் இங்கே மீண்டும் உருவாக்கப் போகிறேன், இதுதான் சில ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னால் நடந்தது, பொக்கிசங்கள் காக்கப்படும் நீங்கள் கிளம்புங்கள்''

அகிலாவும் சின்னசாமியும் மெதுவாக பிரமிடுகள் நோக்கி நடந்தார்கள்.

''என்ன பொக்கிசங்கள் பார்க்கலாமா''

''அத்தனை பேரு செத்து கிடக்காங்க பொக்கிசங்கள் பாக்கப் போறியா, நம்மளை தீயில் போடாம விட்டானே''

''பெரு நாட்டுக்கு போக முன்னால இங்க வரனும்''

''ம்ம் தொலையனும்னு ஆசைப்படுற, நம்மால ஒரு சமுதாயமே தொலைஞ்சி போயிருச்சு''

''....''

கவலையில் கரைந்து கொண்டே நடந்தனர்.

(தொடரும்)