Friday 8 May 2009

பழங்காலச் சுவடுகள் - அத்தியாயம் 6

கதவு தட்டும் சப்தம் கேட்டதும் சின்னச்சாமி கதவைத் திறந்தார். பிரம்ட் வெளியே நின்று கொண்டு இருந்தார். தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்.

''உள்ளே வாங்க''''நீங்க இன்னும் தயாராகவில்லையா''
''இதோ கிளம்பிட்டே இருக்கோம், கொஞ்சம் காத்திருக்க முடியுமா''
''சீக்கிரம் வாங்க''

அகிலாவும் சின்னச்சாமியும் தயாரானார்கள். பாஸ்போர்ட் மற்றும் விமான சீட்டு எல்லாம் பத்திரப்படுத்தினார்கள். இராமபிரானை வேண்டிக்கொண்டாள் அகிலா. வாகனத்தில் அமர்ந்து பிரம்ட் இருக்கும் பகுதிக்கு வந்தார்கள். மாலை நேரம் ஆகியிருந்தது. ஒரே சத்தமாக இருந்தது. பிரம்ட் பதட்டமடைந்தான். வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டின் முன் கூட்டமாக இருந்த மனிதர்களை நோக்கி சென்றான்.

''என்ன நடக்குது, ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள்''
மரியா பிரம்ட் நோக்கி வந்தார்.
''என்னை ஏமாற்றியா நீ இந்த திருமணம் செய்ய துணிந்தாய்?''
''யார் சொன்னது"
''இதோ உனது இளவல் தான் சொன்னான், அந்த சிந்து பெண் திருமணம் ஆனவள் எனவும் அந்த மனிதர் அவரது கணவர் எனவும் சொன்னான், ஏன் இப்படி காரியம் பண்ண துணிந்தாய்''

''நீங்கள் நினைப்பது போல எந்த ஒரு பெண்ணும் எங்கள் ஐவரையும் மணக்க சம்மதிக்கப் போவது இல்லை நாங்கள் காலம் காலமாக இப்படியே இருக்க வேண்டியதுதான்''
''நீ தேடாமல் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வரலாம்''
''நான் உங்கள் பேச்சுப்படி நடக்கப் போவது இல்லை''

கூட்டத்தில் இருந்தவர்கள் வாளினை எடுத்தார்கள். பிரம்ட் நோக்கி வந்தார்கள். பிரம்ட் வாகனம் நோக்கி ஓடினான். மரியா பிரம்ட் ஐ விட்டுவிடச் சொன்னார். ஆனால் கூட்டம் அவனை துரத்தியது. மற்ற நான்கு சகோதரர்களும் வாளினை எடுத்துக்கொண்டு அந்த கூட்டத்தை விரட்டினார்கள். ஓடியவர்கள் திரும்பினார்கள். அகிலாவும் சின்னச்சாமியும் அதிர்ச்சி அடைந்தார்கள். வாள் சண்டை நடந்தது. மரியா கூட்டத்தினரை நோக்கி சண்டையை நிறுத்துமாறு சத்தமிட்டார். ஆனால் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பிரம்ட் சண்டை நடக்கும் இடத்திற்கு ஓடி வந்தான்.

''என்னை வாளால் வெட்டுங்கள்''

சண்டையிட்டவர்கள் அப்படியே நின்றார்கள். மரியாவும் அந்த இடத்திற்கு வந்தார். கூட்டமாக அனைவரும் வந்து சேர்ந்தனர். கூட்டத்தினர் மரியாவை மனம் மாறச் சொன்னார்கள். மரியா தான் தனது கணவருக்கு வாக்கு கொடுத்துவிட்டதால் இப்படித்தான் என் பிள்ளைகள் இருக்க வேண்டும், அவர்கள் இதை மீறிச் செல்லக்கூடாது என பிடிவாதமாக இருந்தார். சிறிது நேரத்தில் மயக்கமாகி விழுந்தார். அவரைத் தூக்கிக்கொண்டு ஒரு கூட்டம் சென்றது. கூட்டத்தில் இருந்தவர் பிரம்ட் நோக்கி சொன்னார்.

''எல்லாவற்றிற்கும் நீயே காரணம், உன்னை பலியிட்டால் தான் சரியாகும், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உங்கள் குடும்பமே விளையாட இருந்தது''
''இது எங்கள் பிரச்சினை, நீங்கள் ஏன் இப்படி தலையிடுகிறீர்கள்''
''இது இந்த பகுதி பிரச்சினை, எங்களுக்கும் உனது தாய்க்கும் நடக்கும் பிரச்சினை, உனது தாயின் ஆசை நிறைவேற்ற இதுபோன்று இங்கிருந்து செய்ய வேண்டாம், ஒரு பொழுது தருகிறோம், இடத்தை காலி பண்ணுங்கள்''

பிரம்ட் விவிட் நோக்கிச் சென்றான். ஏன் இப்படிச் செய்தாய் எனக்கேட்டான். விவிட் சொபிட் பற்றி குறிப்பிட்டான். பிரம்ட்க்கு ஆத்திரமாக வந்தது. அனைவரும் பேசிதானே செய்தோம், அதற்குள் ஏன் இப்படி முடிவு செய்தீர்கள் எனக் கேட்டான். அதற்குள் சொபிட் வாளால் அப்பகுதியைச் சார்ந்த ஒருவன் கையை வெட்டினான். சொபிட்டை விரட்டினார்கள். பிரம்ட் வீட்டுக்குள் சென்று தாயை தூக்கிக்கொண்டு வாகனம் நோக்கி ஓடினான். மற்ற மூவரும் வாகனம் நோக்கி வந்தார்கள். சொபிட் தனியாக விடப்பட்டான், அவனை மட்டுமே கூட்டம் குறி வைத்து ஓடியது. வாகனத்தை விரைவாக எடுத்தான் பிரம்ட். அகிலாவும் சின்னச்சாமியும் பயத்தில் உறைந்து போனார்கள். வாகனம் விடுதி செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றது. சொபிட் தொலைவில் ஓடுவது தெரிந்தது. வாகனத்தை சொபிட் நோக்கி செலுத்தினான் பிரம்ட். வாகனம் அருகில் வந்ததும் சொபிட் தாவி ஏறினான். மற்றவர்கள் வாளை வீசினார்கள். சொபிட் கையை குறிபார்த்தது ஒரு வாள். சொபிட் அலறினான். துணியால் கட்டுப்போட்டார்கள். வாகனத்தை விரைவாக செலுத்தினான் பிரம்ட். வாகனம் பிரமிடுகள் பகுதியை அந்த அந்திமாலையில் அடைந்தது. ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தினான் பிரம்ட். ஐந்து பேரும் தனியாக சென்றார்கள். பிரம்ட் சொன்னான்.

''மடையர்களாக நீங்கள் நடந்து கொண்டீர்கள்''
''தவறு பண்ணிவிட்டோம் மன்னியுங்கள்''
''அத்தனை பொருளும் இழக்க வேண்டியதாகிவிட்டது உங்கள் நடத்தையினால், பாதாள அறையின் சாவி யாரிடம் இருக்கிறது''
''நான் வைத்திருக்கிறேன்''
''சரி இன்று இரவே செல்வோம், பாதாள அறையில் இருக்கும் அந்த பழங்கால பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்''
''யோசனையில்லாமல் நடந்து கொண்டுவிட்டோம்''
''இனி பேசி பயனில்லை, தாயை குணப்படுத்த ஒரே வழி ஒரு பெண்ணை கண்டுபிடிப்பதுதான்''

வாகனத்துக்கு திரும்பினார்கள். அகிலாவையும் சின்னச்சாமியையும் பிரமிடுகளுக்கு அருகில் அமரவைத்தார்கள். மரியாவும் விவிட்டும் உடன் இருந்தார்கள். நால்வரும் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். விவிட் சொன்னான்.
''இதோ இந்த பிரமிடுக்கு முன்னால் நின்றுதான் மாவீரன் அலெக்ஸாண்டர் தனக்கு இதுபோல ஒன்று கட்ட வேண்டும் என சொன்னான்''
''ஏன் இப்படி சண்டை நடந்தது''
''எங்கள் மேல் அந்த பகுதி மக்களுக்கு வெறுப்பு அதிகமாகிவிட்டது, எங்களிடம் பழங்கால பொக்கிஷங்கள் இருக்கிறது, எனது அம்மா பழங்காலத்தில் நடந்த ஒரு மாபெரும் போர் சரித்திரத்தினை கருத்தில் கொண்டு எங்களுக்கு ஒரு பெண்ணை முடித்து வைக்க முடிவெடுத்தார்கள், அதுதான் அவர்களது வெறுப்புக்கு உச்சம்''
''எந்த போர் சரித்திரம்''
''சிந்து நாட்டில் நடந்தது அது''
''இந்தியாவா''''ஆமாம்''
''எப்படி இதெல்லாம் தெரியும்?''
''எங்களிடம் பழங்கால பொக்கிஷங்கள் இருக்கிறது, மாவீரன் அலெக்ஸாண்டர் தனது கேடயத்தை எனது முப்பாட்டனாரிடம் கொடுத்துச் சென்றான்''
''வீட்டில் ஒன்றும் தெரியவில்லையே''
''ஆறு அறைகளுக்கு கீழே பெரிய பாதாள அறை இருக்கிறது, அங்கேதான் நிரப்பி வைத்திருக்கிறோம், ஒழுங்காக அடுக்கப்பட்டு இருக்கிறது வேத சாஸ்திரங்கள் முதற்கொண்டு அங்கே இருக்கிறது. கிரேக்க நாட்டில் பலவருடங்கள் முன்னர் கட்டப்பட்ட நூலகம் ஒன்று அழிந்து போனது, ஆனால் அந்த நூலகத்தில் இருந்த நூல்களின் பிரதிகள் எல்லாம் எங்களிடம் இருக்கிறது''
''எப்படி உங்களுக்கு கிடைத்தது''
''எங்கள் முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் முதல் வழிவழியாக வந்தது'' ''உங்கள் தந்தை எங்கே?''

மரியா விழித்துப்பார்த்தார். பிரமிடு பகுதியில் இருப்பதைக் கண்டு பதட்டமடைந்தார். விவிட் நடந்ததை சொன்னான். அகிலாவைப் பார்த்து மரியா வணங்கினார். மன்னிக்குமாறு வேண்டினார். பிரமிடுகளில் காற்று மோதி ஒருவித சப்தத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. விவிட் பழங்கள் எடுத்து அனைவருக்கும் தந்தான். தந்தையை பற்றி எதுவும் பேசாமல் இருந்தான் விவிட். அகிலாவும் சின்னச்சாமியும் தேன்நிலவுதனை நிலவின் வெளிச்சத்தில் அன்று கொண்டாடினார்கள். வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரம்ட் சற்று தள்ளி நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றான். மூவரும் உடன் சென்றார்கள். ஊர் அமைதியாய் இருந்தது. இருளில் நிலவு வெளிச்சம் மட்டுமே இருந்தது. வீடு பாதிப்பு அடையாமல் இருப்பது கண்டான். வீட்டை திறந்து உள்ளே சென்றான். உள்புறமாக பூட்டிவிட்டு பாதாள அறைக்குச் சென்றான். மூவரும் மேல்தளத்தில் இருந்தார்கள். பாதாள அறையில் விளக்கு ஏற்றினான். அனைத்தையும் எப்படி எடுத்துச் செல்வது என புரியாமல் விழித்தான். வெளியில் பெரும் சப்தம் கேட்டது பாதாள அறையில் எதிரொலித்தது.(தொடரும்)

Friday 20 February 2009

பழங்காலச் சுவடுகள் - 5

குகை போல இருந்தாலும் வெளிச்சமாக இருந்தது. சூரிய கதிர்கள் உள்ளே விழுந்து சுவர்களில் மாட்டி வைக்கப்பட்ட கண்ணாடிகளில் பட்டு உள்ளே இயற்கையின் ஒளி எங்கும் வியாபித்து இருந்தது. அகிலாவும் சின்னச்சாமியும் உள்ளே நடந்து சென்றனர். வெளியில் இருந்து வந்த இளையவன் யாவருக்கும் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சொன்னான். அதைக் கேட்டதும் அகிலா ஆங்கிலத்தில் வினவினாள். மூத்தவன் பதில் சொன்னான்.

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, நாங்க எப்படி திரும்பி போறது''

''கவலை வேண்டாம், எங்களிடம் வண்டி இருக்கிறது''

ஒரு குறுகிய அறைக்குள் நுழைந்தனர். அங்கே கட்டிலில் ஒரு பெண்மணி, மரியா, படுத்து இருந்தார். மூத்தவன் தனது தாயை தொட்டு எழுப்பினான். முனகியவாறெ எழுந்தாள் அந்த பெண்மணி. அந்த பெண்மணியிடம் ஏதோ கூறினான். பெண்மணியின் முகம் மலர்ந்தது. அகிலாவை நோக்கி கையை காட்டினார் அந்த பெண்மணி. நடுவானவன் அகிலாவை செல்லுமாறு கூறினான். சின்னசாமியும் உடன் செல்ல எத்தனித்தார்.

நடுவானவன் சின்னசாமியை சைகையால் இருக்கச் சொன்னான். அகிலாவை செல்லுமாறு மீண்டும் கூறினான். அகிலா பயத்துடன் அருகில் சென்றாள். அந்த பெண்மணி அகிலாவின் கைகளை எடுத்து தனது கன்னங்களில் ஒட்டிக் கொண்டார். தனது அருகி்ல் அமருமாறு கட்டிலில் உட்காரச் சொன்னாள். மொழி புரியவில்லை, விருப்பம் மட்டும் புரிந்தது. அகிலாவும் அமர்ந்தாள். மூத்தவன் அகிலாவை நோக்கி சொன்னான்.

''நீதான் எங்களை கல்யாணம் பண்ணிக்கிற போகிற பெண்ணாக சொல்லி இருக்கிறேன் அதுதான் படுக்கையில் பல நாட்களாக வேதனையுடன் இருந்தவர்கள் எழுந்துவிட்டார்கள். வேண்டாம் என மறுத்து விடாதே''

அகிலாவுக்கு படபடப்பு அதிகமாகியது. நெற்றி வியர்த்தது.

''நான் கல்யாணமானவள் இது போன்று ஏமாற்று வேலைக்கு நான் உதவ மாட்டேன்''

''இல்லை நீ எங்களை திருமணம் முடித்த உடனே செல்லலாம்''

''விபரீதமாக போய்விடும், என்னை எனது கணவர் நிராகரித்து விடுவார்''

''கவலைப்படாதே''

இவர்கள் பேசுவதைக் கெட்டுக் கொண்டிருந்த பெண்மணி மூத்தவனிடம் விசாரித்தாள். மூத்தவன் நாளையே திருமணம் வைத்துக்கொள்வதாக கேட்டதாகவும் அகிலா சரியென சொல்வதாகவும் கூறினான். அந்த பெண்மணி இந்தியா இந்தியா என சொன்னாள்.அகிலாவுக்கு அழுகையாக வந்தது.

கிருஷ்ணரை வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள். எழுந்த மரியா சுறுசுறுப்புடன் காணப்பட்டார். அறையை விட்டு வெளியே வந்தார். தனது நான்கு மகன்களையும் அழைத்தார். அவர்களிடம் சந்தோசமாக பேசினார். அந்த குகையில் ஒவ்வொருவருக்கென ஒரு அறை இருந்தது. ஒரு தனி அறையில் சின்னசாமி மன வருத்தத்துடன் அமர்ந்து இருந்தார். மூத்தவன் பிரம்ட் அகிலாவை சமாதனப்படுத்திக் கொண்டு இருந்தான். அகிலா சின்னசாமியை தேடிச் சென்றாள்.

''இப்போ என்ன பண்ண போற''

''நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க''

''அப்படியே தொலைஞ்சி போயிரு''

''.....''

''போக வேணாம்னு சொன்னேன் கேட்டியா, இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிற சொபிட் என்ன சொல்றான் தெரியுமா''

''யாரு அவன் என்ன சொல்றான்''

''அவன் தான் கடைசி பையனாம், கல்யாணம் முடிஞ்சிட்டா நீ எங்கயும் போக முடியாதாம்''

''பிரம்ட் அப்படி சொல்லலையே, இப்போ என்ன பன்றது''

அப்போது கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். மகாராணியை போன்று உடைகளும் நகைகளும் அணிந்து கம்பீரமாக மரியா அனைவருக்கும் முன்னால் நின்றார். அகிலாவை அழைத்து வரச் சொல்லி கட்டளை இட்டார். பிரம்ட் சின்னசாமியிடமும் அகிலாவிடமும் உறுதி கொடுத்துவிட்டு அகிலாவை அழைத்து சென்றான். அனைவரின் முன்னால் நின்றபோது அகிலாவுக்கு கால்கள் நடுங்கியது. புரியாத மொழியது. மரியா பேசினார்.

''நீங்கள் எல்லாம் எனது மகன்களுக்கு பெண் தரமறுத்துவிட்டீர்கள், சிந்து பெண் எனது மகன்களுக்கு மனைவியாகப் போகிறாள் அந்த வைபவம் நாளை கைரோ பிரமிடுகளுக்கு முன்னால் நடக்கும். அனைவரும் அந்த காட்சியை காண வாருங்கள்''

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அகிலாவை நோக்கி சத்தமிட்டனர். கோவமான மனிதர்கள் பார்த்து அகிலா பயந்து போனாள். சின்னசாமி அங்கே வந்தார். சின்னசாமியை காட்டி மரியா சொன்னார்.

''திருமணம் இவர்தான் நடத்தி வைக்க போகிறார், சிந்து மனிதர்''

கூட்டம் கலைய தொடங்கியது. ஆனால் சின்ன சின்ன கூட்டமாக நின்று பேச தொடங்கி விட்டனர். ஆங்கிலம் பேசுபவர்கள் அந்த கூட்டத்தில் இல்லை. இந்த ஐந்து பேர் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தனர். இவர்கள் ஆங்கிலம் கற்று கொண்டதன் காரணம் இவர்களது தந்தை.

அகிலாவும் சின்னசாமியும் விடுதிக்கு சென்று வரலாம் என சொன்னார்கள். பிரம்ட் சரியென அவர்களை அழைத்துக் கொண்டு தான் மட்டும் வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றான். அகிலா பிரம்டிடம் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிவிட்டது குறித்து கோபமாக பேசிக்கொண்டு இருந்தாள். பிரம்ட் அகிலாவின் யோசனை தான் இந்த முடிவுக்கு காரணம் என சொன்னான். வரமாட்டீர்களோ என அச்சம் கொண்டதாக வேறு சொன்னான். விடுதியில் இறங்கியதும் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டனர் இருவரும். பிரம்ட் விடுதி கீழே வெளியில் காத்துக் கொண்டு இருந்தான்.

''பயமா இருக்கு''

''எல்லாம் உன்னால வந்தது, என்னாலயும் தான்''

''போகாம இங்கேயே இருந்துலாம்''

''அவன் திட்டமில்லாமலா நம்மளை இங்க கொண்டு வந்து இருப்பான் அந்த சொபிட் என்ன சொன்னான் தெரியுமா''

''சொபிட் சொபிட்''

''நாம இந்த திட்டத்துக்கு சரினு சொல்லலைன்னா உன்னை மட்டும் கொன்னு நைல் நதியில வீசிருவானாம்''

''உங்க திட்டம் பலிக்கட்டும்''

''ஆனா அதுல விவிட் ரொம்ப கலக்கமா இருந்தான், எதுவுமே பேசலை''

''யாரு விவிட்''

''மூணாவது பையன்''

மனம் கலக்கத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் இருவரும் இருந்தார்கள். பிரம்ட் இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்தான். அகிலாவும் சின்னசாமியும் உறுதியான முடிவுக்கு வந்தார்கள். அறையின் கதவு தட்டப்பட்டது.

(தொடரும்)

Tuesday 17 February 2009

பழங்காலச் சுவடுகள் - 4

ஐவரும் இவர்களையேப் பார்த்தார்கள். அவர்களை சின்னச்சாமி நேருக்கு நேராய் பார்த்தார். கண்கள் மூடிய அகிலா கண்கள் திறந்தாள். அதில் ஒருவன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். சின்னச்சாமி அகிலா பக்கம் திரும்பினார். அகிலா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவனைச் சுற்றி நின்ற மற்றவர்கள் புன்னகை புரிந்தார்கள். நீ மிகவும் புத்திசாலி பெண் என ஆங்கிலத்தில் பேசியவன் பாராட்டினான். அகிலா ஆஞ்சநேயருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டாள்.

தனது சட்டைப் பையிலிருந்து வேகமாக ஒரு காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்தவன் தனது முகவரியையும் எப்படி அந்த இடத்திற்கு வருவது குறித்தும் எழுதி அகிலாவிடம் தந்தான். பின்னர் சின்னச்சாமியைப் பார்த்து இந்த பெண்ணை உனது மனைவியாக பெற்றதால் நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன் என ஆங்கிலத்தில் சொன்னான். சின்னச்சாமி 'சாரு என்ன சொல்றாரு' என்பது போல் அகிலாவைப் பார்த்தார். அடுத்த நொடியில் சின்னச்சாமிக்கு, கைகள் கூப்பி வணங்கிய அந்த ஐவரின் செய்கை சற்று வியப்பூட்டியது. வெகுவேகமாக நடந்து கடந்தார்கள். சின்னச்சாமி அகிலாவிடம் விசாரிக்கத் தொடங்கினார்.

''அவங்க ஐஞ்சு பேரும் அண்ணன் தம்பிகளாம், அவங்க அம்மா ஒரே ஒரு பெண்ணைத்தான் அந்த ஐஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறனும்னு கண்டிப்பா சொல்லிட்ட்டாங்களாம், ஆனா எந்த ஒரு பெண்ணுமே அப்படி கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாறாங்களாம் அதனால அவங்க அம்மா வேதனையில இருக்காங்களாம். அவங்க அம்மா சொன்னாங்கனு யாரையாவது கடத்தியாவது கல்யாணம் செய்யலாம்னு நினைச்சி இந்த நைல் நதி பக்கம் வாகனத்துல வந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு நடப்பாங்களாம், ஆனா யாரும் இரண்டுமாசமா கண்ணுக்கு சிக்கலை என்ன பண்றது தெரியலைனு சொன்னாங்க''

''அகிலா மஹாபாரதம் சொல்றியா நீ''

''இல்லை நிசமாத்தான் சொல்றேன், வேணும்னா நாம இந்த அட்ரஸுக்குப் போய் பார்ப்போம்''

''அப்படியா, நீ என்ன சொன்ன''

''ஒரு பெண்ணை பார்த்து விசயத்தைச் சொல்லுங்க, ஐஞ்சு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்றதா அம்மா முன்னால கல்யாணம் பண்ணுங்க, ஆனா அந்த பொண்ணோட புருஷனா ஒருத்தர் மட்டும் இருங்க, மத்தவங்க வேற வேற ஊருக்குப் போய் அவங்க அவங்க ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருங்கனு சொன்னேன்''

''என்ன சொன்னாங்க அதுக்கு''

''அருமையான யோசனை, புத்திசாலினு என்னை சொன்னாங்க''

''நீ மஹாபாரதத்தை காப்பி பண்ணி சொல்றியா''

''எப்படி சொன்னா என்ன, அவங்கதான் சந்தோசமா போயிட்டாங்களே''

''இல்லை அவங்க பேசினது வேற, நீ இப்படி சொல்ற''

''உங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமே அப்புறம் ஏன் இப்படி கேட்கறீங்க''

''எனக்குப் புரியலை''

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அகிலா சின்னச்சாமியை அழைத்துக்கொண்டு விடுதிக்கு திரும்ப எத்தனித்தாள்.

''சொல்லு என்ன சொன்னாங்க''

''சோதனையாப் போச்சு, அதான் சொன்னாங்க, நாளைக்கு அவங்க வீட்டுக்கே போகலாம் போதுமா''

சின்னச்சாமி சமாதனம் அடையாதவராய் அகிலாவுடன் நடந்தார். அகிலாவுடன் அவர்கள் தந்த முகவரிக்குச் செல்ல விருப்பமில்லை. சின்னச்சாமி யோசனையில் ஆழ்ந்தார். மின்னல் வெட்டியது. தூறல் மண்ணைத் தொட்டது. விடுதியை அடைந்தனர். அன்றைய இரவு இன்ப இரவாக கழிந்தது. காலையில் எழுந்து குளித்துவிட்டு வெளியே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. அகிலா சின்னச்சாமியிடம் அந்த நபர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக கூறினார்.

''நீயா தொலையனும்னு ஆசைப்படற''

''காலங்கார்த்தால என்ன வார்த்தை இது''

''சரி சரி சேர்ந்தே தொலைவோம்''

அகிலாவும் சின்னச்சாமியும் சாலைகளின் வழியே பயணித்தபோது பிரமிடுகள் அவரவர் கண்ணுக்குள் சின்னதாய் தெரிந்தது. பாழடைந்த கோவில்கள் தென்பட்டன. அதிகாலைப் பயணம் இதமாக இருந்தது. பயணம் செய்த வாகனம் பயணித்தே கொண்டிருந்தது. சஹாரா பாலைவனம் தென்பட்டது. நைல் நதியை ஒட்டியே பாலைவனம் இருந்தது தெரிந்தது. வாகன ஓட்டியிடம் அகிலா முகவரி இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டாள். வாகன ஓட்டி இன்னும் பத்து நிமிடம் ஆகுமென்றார்.

சின்னச்சாமிக்கு தலை கிறுகிறுத்தது.ஒருவழியாய் அந்த இடத்தை அடைந்தபோது வெகு சில குடிசைகளே இருந்தது. ஒரு பக்கம் நைல்நதி. மறுபக்கம் சஹாரா பாலைவனம். அங்கே இறங்கி வாகன ஓட்டியை காத்திருக்கச் சொல்லிவிட்டு நடந்தனர். வழியில் கண்ட ஒருவரிடம் முகவரியைக் காட்ட வாசிக்கத் தெரியாது என சைகை காட்டிச் சென்றார்.

அப்பொழுது ஆங்கிலம் பேசியவன் தென்பட்டான். இவர்களை அடையாளம் கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குடிசையாய் வெளியே தெரிந்தாலும் உள்ளே பெரிய குகையாய் காட்சி அளித்தது. சின்னச்சாமி திடுக்கிட்டார். அகிலாவிற்கு பயமாக இருந்தது. வெளியில் வாகனம் கிளம்பும் சப்தம் கேட்டது.

(தொடரும்)