Friday 17 October 2008

காதல் மட்டும் 11

11. உலக இயக்கம் யாவும்
உனது இயக்கம் என்றே
உள்ளூர நினைத்திருக்க
நான் என்னுள் கொண்டது
காதல் மயக்கமாம்.

காதலுக்கு மயங்குதல்
காதலினால் மயக்குதல்
யாவும் வார்த்தைகளின் மயக்கம்
என்பதை நீயே உணர்ந்து
எனது இதயத்தின்
சீரான அமைதித் துடிப்புக்கு
பார்வையால் சொல்லிச் சென்றாய்

காதல்
தெளிவின் உச்ச நிலை
என்றும் உயர் நிலை
எப்பொழுதும் ஒரே நிலை.

Thursday 16 October 2008

வேர்களை மறந்த விழுதுகள்

முன்னுரை:-
மனித இனத்திற்கென்று தனித்தனி அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டு குடும்பம், ஊர், நகரம், நாடு, உலகம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், சமயக் கொள்கைகள் என பிரிந்து வாழும் முறையானது சரியில்லை என்றாலும் தனக்கென இருக்கும் அடையாளங்களை தொலைத்து வாழ்வது என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். எந்த ஒரு பிரிவினையும் ஏற்படுத்தாது தமக்குரிய அடையாளங்களை பாதுகாப்பது மட்டுமின்றி, மற்றவர்களுடைய அடையாளங்களுக்கு மதிப்பளித்து வாழ்வது இன்றைய உலகில் இன்றியமையாததாகும்.

உலகம் யாவும் தமிழர்:

உலக நாடுகளில் தமிழர்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். கல்வித்துறை, கணினித்துறை, மருத்துவத் துறை, கட்டிடத் துறை, விஞ்ஞானம் என அனைத்து துறையிலும் சிறப்புடன் செயலாற்றி வருகிறார்கள். அப்படி சிறப்புடன் வாழும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கு உரிய கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை இழந்து வருவதும், வேண்டுமென்றே தொலைத்து வருவதும் வேதனைக்குரிய விசயம்.

'எலி வளையானாலும் தனிவளை வேண்டும்' இது ஒரு அழகிய பழமொழி. ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தனிவளையை கொய்துவிட்டு எப்படி தனிவளை ஏற்படுத்திக் கொள்வது எனப் புரியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் கலாச்சாரம், பண்பாட்டினை கட்டிக் காத்திட வெளிநாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை, அங்கேயே இருந்து காப்பாற்ற முடியும். அதுமட்டுமின்றி, இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருப்பது நமது பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அவலத்தை ஏற்படுத்திக்கொண்டே வருவது நமது எண்ணத்தின் ஓட்டத்தை தடுமாறச் செய்வது தவிர்க்க முடியாதது.

'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்றார் மகாகவி பாரதியார். 'தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்ற சொன்ன மகாகவியே இதுபோன்று சொல்ல அன்றே விதை விதைக்கப்பட்டு இருக்கிறது, ஆங்கில தாகம் ஆட்டிப்படைத்திருக்கிறது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னர் அதே நிலை கட்டுக்கடங்காமல் செல்வது கவலைக்குரிய விசயம் அல்லவா!

பிறமொழிகளை கற்றுக் கொள்வதிலும், புலமை பெற்றுக் கொள்வதிலும் எவ்வித இரண்டாம் உணர்வு தேவையில்லை, எனினும் நமது தாய் மொழியை மறந்து வாழ்வது, சந்ததியினருக்கு கற்பிக்காமல் விடுவது நமது தாயை அவமதித்து வாழ்வதற்கு சமம். நாம் தமிழர் என்ற அடையாளம் அழிந்து போகும் நிலை வருத்தத்திற்கு உரியது.

கலாச்சார சீரழிவு, பண்பாடு முறைகேடு:

தமிழனுக்கு என என்ன இருக்கிறது என ஆதங்கப்படும் நிலை இன்று வருவதற்கான காரணமே நல்ல பண்பை, நல்ல செயலை நமது சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லாததுதான். 'அம்மா எங்கே?' என இன்றைய நவநாகரீக தமிழர் குழந்தையிடம் கேட்டால், அக்குழந்தை அம்மாவிடம் சென்று 'அந்த மாமா என்னைத் திட்டுகிறார்' என ஆங்கிலத்தில் சொல்லும் அளவிற்கு நமது நிலை நகைப்புக்குரிய விசயமாகிவிட்டது.

தமிழர் ஒருவரிடம் தமிழ் கலாச்சார பண்பாடு பற்றி விளக்கமாக சொல்லுங்கள் எனக் கேட்டபோது அவர் அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என சொன்ன பதில் எந்த அளவிற்கு கலாச்சார சீரழிவும், பண்பாடு முறைகேடும் நடந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அறியலாம். 'புலியை முறம் கொண்டு விரட்டிய வீரப் பெண்மணி' என தமிழரின் வீரம் பேசிய நாம் இன்று ஒரு வட்டத்தில் சிக்க வைத்து வழி தெரியாது தவிக்கின்றோம்.

'உடுத்தும் உடையிலும்
உண்ணும் உணவிலும்
பேசும் பேச்சிலும்
பார்க்கும் பார்வையிலும்
பணிவின் பாங்கிலும்
அடக்கத்தின் அறிவிலும்
அறிந்துகொள் மனிதனென்று
அதனினும் அவன் தமிழனென்று' என்பான் ஒரு கவிஞன்.

இன்று உடை பற்றிய சர்ச்சை பெரும் சர்ச்சையாகி வருகிறது. 'ஆடை இல்லாத மேனிஅவன் பெயர் அந்நாளில் ஞானி இன்றோ அது ஒரு பொழுது போக்கு'என்னும் நிலை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. உணவு விசயத்திலும் அதே நிலை தொடர்கிறது. அப்படியெனில் மாற்றங்கள் அவசியமில்லையா என கேட்கலாம். மாற்றங்கள் நிச்சயம் வேண்டும், ஆனால் அந்த மாற்றங்கள் நமது அடையாளங்களை அழிப்பதை சம்மதிக்க நாம் நம்மை மாற்றிக் கொள்வது என்பது நம்மை நாமே அவமானப்படுத்துவதாகும்.

வழிமுறை:

'பழமை பழமையென்றுபாவனை பேசலன்றிபழமை இருந்தநிலை கிளியேபாமரர் ஏதறிவார்'என்பார் பாரதி. நமது கலாச்சாரம், பண்பாட்டினை நாம் முறையாக கற்றுக் கொண்டு பின்பற்றுவதோடு மட்டுமின்றி, நமது சந்ததியினருக்கு முறையாக கற்பிக்க வேண்டும். அச்சத்தில் உழன்று நாம் பின்தங்கி விடுவோமோ என்ற எண்ணம் அகற்றி திறம்பட செயல்புரிய வேண்டும்.

லெமூரியா என்றொரு கண்டம் இருந்ததாகவும், அங்கே தமிழர்கள் கலாச்சாரம் பண்பாட்டில் சிறப்புடன் விளங்கியதாகவும் அதில் இருந்த ஒரு பகுதியினர்தான் நாம் எனவும் கூறுவர். அக்கண்டம்தான் அழிந்துவிட்டது, ஆனால் நாம் இருக்கிறோம், நமது கலாச்சாரம் பண்பாடு அழியவிடாமல் காப்பது நமது கடமையல்லவா.

முடிவுரை:

'நல்லதோர் வீணை செய்தே அதைநலங்கெட புழுதியில் எறிவதுண்டோ'எறிந்துவிட்டோம். நமது வேரினை மறந்து விட்டோம். இனியும் அடையாளம் தெரியாத அளவிற்கு அது சிதைந்து போகும் முன்னர் எடுத்து சுத்தப்படுத்துவோம், பாதுகாத்து பின்வரும் நாளில் போற்றி காத்திடுவோம், தமிழர்களாகிய நாம் இதனை சூளுரையாக எடுத்து தொடர்ந்து செயலாற்றி வெற்றி பெறுவோம்.

புற்றுநோய்

புதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.

''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''

''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.

''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்

''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.

ஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.

'புற்றுநோய் எப்படி உருவாகிறது? எதனால் உருவாகிறது? ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.

''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா?' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.

அப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.

ஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

ஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.

முற்றும்.