Wednesday, 21 July 2010

புத்தக வெளியீட்டு விழா


நயினார் பதிப்பக வெளியீடு.



1.  ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ (சிறுகதை தொகுப்பு)

2.  ‘நுனிப்புல்‘ நாவல் பாகம் - 1 

நயினார் பதிப்பகம்,  அகநாழிகை பொன். வாசுதேவன் 999 454 1010


3. வெறும் வார்த்தைகள் (கவிதை தொகுப்பு) 

தமிழ் அலை பதிப்பகம், 1, காவலர் குறுந்தெரு, ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 15, தொடர்புக்கு: இஷாக் 978 621 8777

Tuesday, 20 July 2010

சபலத்தில் அல்லாடும் மனம்


எனது மனைவியின் மனமாற்றம் எனக்குள் பெரும் மகிழ்வை தந்தது. மனைவியின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என கேட்க எனக்குத் தோணவே இல்லை. இந்த மனமாற்ற விசயத்தை எனது மாமா மகளிடமும், என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணிடமும் சொன்னேன். எனது மாமா மகள் மிகவும் சந்தோசபட்டாள், ஆனால் என்னுடம் வேலை பார்க்கும் பெண் முகம் வாடிப்போனது கண்டேன். எப்பொழுது அப்பாவாக போகிறாய், எப்பொழுது விருந்து என நச்சரிக்கத் தொட‌ங்கினாள் என‌து மாமா ம‌க‌ள்.


சில மாதங்கள் மெல்ல கடந்தது. நான் அப்பாவாக போகிறேன் எனும் இனிய செய்தியை எனது மனைவியின் மூலமே அறிந்தேன். எனக்குள் உற்சாகம் பீறிட்டது. அலுவலகத்தில் இதுகுறித்து நான் எதுவும் சொல்லவில்லை. அன்றுதான் அலுவலகத்தில் நானும் என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணும் இரண்டு மாதம் ஹாங்காங் செல்ல வேண்டும் என சொல்லி இருந்தார்கள். 


வீட்டில் எனது மனைவியிடம் குழந்தை விசயத்தை அனைவரிடம் சொல்ல வேண்டும் என சொன்னபோது சில மாதங்கள் கழித்து சொல்லலாம் என சொன்னார். அவரது கண்கள் பயத்தில் இருந்ததை அறிந்தேன். எனக்கும், குழந்தைக்கும் எதுவும் ஆகாதுலங்க என அவர் சொன்னபோது எனது இதயத்தை எவரோ குத்துவது போன்று வலி உணர்ந்தேன். 


தாய்மை நிலை அடைய முடியாமல் தவிக்கும் பலர் நினைவில் வந்தார்கள். கருவுற்ற பின்னர் கரு கலைந்த நிலையில் இருந்த சிலர் நினைவுகளில் மோதினார்கள். எதற்காக இப்படி எதிர்மறை எண்ணம் எல்லாம் வந்து சேர்கிறது என எனக்கு மீது சற்று வெறுப்பு வந்து சேர்ந்தது. 


அப்ப‌டியெல்லாம் எதுவும் ஆகாது, க‌வ‌லை வேண்டாம் என‌ தைரிய‌ம் சொன்னேன். க‌ருவுற்று இருக்கும் கால‌ங்க‌ளில் தைரிய‌மாக‌வும் ந‌ன்றாக‌வும் இருந்தால் மட்டுமே குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சொன்னேன். சரி என கேட்டுக் கொண்டார். 


அந்த நேரத்தில்தான் மனமாற்றத்திற்கான காரணம் கேட்டு வைத்தேன். அப்பொழுது அவர் சொன்ன விசயம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. எனது பாட்டி எனது மனைவியிடம் ''கால காலத்துல குழந்தையை பெத்துக்கலன்னா உன் புருசன் உன்னை விட்டு வேறு ஒருத்தியோட தொடர்பு வைச்சிக்கிற போறான், அவன் வேற கல்யாணம் பண்ணினாதானே, நீ இந்த குடும்பத்தை உண்டு இல்லைனு பண்ணுவ, அவன் வேற ஒருத்தியோட உனக்குத் தெரியாம தொடர்பு வைச்சிட்டா என்ன பண்ணுவ' என சொன்னதும் மனதில் எனது மனைவிக்கு பயம் அப்பிக்கொண்டதாம். இதை என்னிடம் சொன்னபோது எனக்கு பயம் அப்பிக்கொண்டது. 


அந்த அளவுக்கு மனநிலையில் மிகவும் தரம் தாழ்ந்தவனா நான் என என்னுள் நினைத்துக்கொண்டேன். இருப்பினும், இதுதான் உண்மையான காரணமா என கேட்டு வைத்தேன். ஆம் இதுதான் உண்மையான காரணம், பல குடும்பங்களில் குழந்தைக்காக மட்டுமே சேர்ந்து வாழும் பெற்றோர்கள் பார்த்து இருக்கிறேன், அதுவும் இப்பொழுதெல்லாம் எளிதாக சின்ன சின்ன காரணம் காட்டி அறுத்தெரிந்து கொண்டு போய்விடுகிறார்கள் என்றார். உங்களை இழக்க நான் தயாராக இல்லை, சில மாதங்களாக மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவே நான் மாறினேன், மேலும் உங்கள் மாமா மகளின் காதல் முறிவும், உங்களுடன் வேலை பார்க்கும் அழகிய பெண்ணின் நிலையும் என்னை தடுமாற செய்தது. எனக்கு என்னவோ நீங்களும், உங்களுடன் வேலை பார்க்கும் பெண்ணும் தவறு செய்து விடுவீர்களோ என அஞ்சினேன் என்றார். அவர் சொன்னது என்னை நிலை குலைய வைத்தது. 


இப்படி சொன்ன அவரிடம் எப்படி நானும் என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணும் பணி விசயமாக ஹாங்காங் இரண்டு மாதம் செல்ல இருக்கிறோம் என சொல்வது என தள்ளாடினேன். சொல்லித்தான் ஆகவேண்டும் என சொன்னேன். அந்த செய்தியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. குழந்தை உருவாகி இருக்கிறது என காரணம் சொல்லுங்கள் என்றார். ஆனால் நான் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட்டேன் என்றேன். அவரது மனம் சபலத்தில் அல்லாடியது. அவரிடம் நான் குழந்தை மீது சத்தியம் செய்து கொடுத்தேன், இருப்பினும் அவரால் என்னை முழுவதும் நம்ப இயலவில்லை. பெண்கள் பொல்லாதவர்கள், எதையும் சாதிக்கும் வல்லமை பெண்களுக்கு உண்டு என்றார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என அழுது கொண்டே இருந்தார். நான் தைரியம் சொன்னேன். இரண்டு வாரங்கள் வெகுவேகமாக ஓடியது. தினமும் என்னை ஏமாத்தீராதீங்க, குழந்தை வயித்துல இருக்கு என்றார். 


பயணத்தின் நாள் வந்தது. வேலை பார்க்கும் பெண் மிகவும் உற்சாகமாக இருந்தார். இருவரும் விமானத்தில் பயணமானோம். எனது மனைவியின் அச்சத்தை விமான பயணத்தின் போது அவரிடம் சொன்னேன். மனைவியை பிரிந்ததும் என் மீது நீங்கள் கொள்ளும் சபலத்திற்கு உங்கள் மனைவியை காரணம் காட்டுகிறீர்களா என விமானத்தில் அவர் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருக்கையை மாற்றி கொண்டு வேறு இருக்கைக்கு போனார். நான் மனம் உடைந்து அமர்ந்திருந்தேன். 


ஹாங்காங்கில் அருகருகே அறை இருந்தும் என்னுடன் அவர் பேசவே இல்லை. நான் பேச முற்பட்டபோதெல்லாம் விலகி சென்றார். அவரது கண்களில் குற்ற உணர்வு தெரிந்தது. ஆனாலும் எனது மனம் அல்லாடியது. ஒருவாரம் கழிந்ததும் வேலை முடிந்து இரவில் அவரது அறைக்கதவை தட்டினேன். சிறிது நேரம் பின்னர் திறந்தார். ஏனிப்படி நடந்து கொள்கிறாய் என கேட்டேன். அப்பொழுது அவர் உங்கள் மீது நான் ஆசை கொண்டிருந்தேன். உங்களை மணக்கவே நான் நினைத்திருந்தேன், இந்த பயணம் அதற்கு வழிகாட்டும் என இருந்தேன் என்றார். அதை கேட்டபோது என்னால் நம்பவே இயலவில்லை. கதவை சட்டென சாத்திவிட்டு எனது அறையினில் நுழைந்து தாளிட்டு கொண்டேன். மணமான என்னை இவர் ஏன் மணக்க நினைக்க வேண்டும் என காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.

Monday, 19 July 2010

பதிவுலகில் நான் எப்படிபட்டவர்?

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என யாருமே எதற்கு இன்னமும் எழுதவில்லை என யோசித்தபோது தொடர்பதிவுக்கு ஒரு அழைப்பு விட வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என சுவாரஸ்யமாக பலரும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். படிப்பதற்கு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது.

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என்பதையும் படித்துவிட வேண்டும் எனும் ஆவலும் கூடவே எழுகின்றது.

எனவே பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் என எழுத நான் சிலரை அழைக்கிறேன். அத்துடன் அவரவர் ஒருவரை அழைக்க மொத்த பதிவுலகமும் வரலாறுதனை பதிவு செய்துவிடும் எனும் அக்கறை எழுகிறது.

வேதம் மட்டுமின்றி பல அற்புத விசயங்களை எழுதி வரும் விதூஷ் 

கவிதைகள், தொடர்பதிவுகள் என நேஹாவின் நேரத்தை நம்முடன் பகிரும் தீபா 

படங்கள், கட்டுரைகள் என தமிழில் அழகுபடுத்தும் ராமலக்ஷ்மி 

சிறுமுயற்சிகள் செய்து தமிழ் சிறக்க செய்யும் முத்துலட்சுமி 

மரங்கள் மற்றும் உடன் பேசுவது போல கதைகள் எழுதும் ஜெஸ்வந்தி 

விருப்பமிருப்பின் நீங்கள் எழுதலாம். ஒருவேளை எழுத முடியாது போனாலும், வேறு ஒருவரை அழைத்து விடவும். :)


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


வெ.இராதாகிருஷ்ணன் 

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆமாம், அதுதான் எனது உண்மையான பெயர். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


இது பற்றி ஒரு கதை சொல்லலாம். நான் இந்த இணையங்களில் எழுத ஆரம்பித்தது 2006ம் வருடம் என நினைக்கிறன். அப்பொழுது தமிழில் வலைப்பூ பற்றியெல்லாம் தெரியாது. ஆங்கிலத்தில் தமிழ்தனை எழுதி கொண்டிருந்த காலம். அப்படி எழுதி கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானதுதான் முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளம். அங்கு எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் மூலம் நுனிப்புல் நாவல் வெளியிட்டேன். நுனிப்புல் நாவல் நண்பர்களால் பாராட்டபட்டாலும் வெளியில் இருப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  அப்பொழுதுதான் எனது எழுத்தின் நிலை இப்படியும் இருக்கும் என அறிய முடிந்தது. அப்படிப்பட்ட நண்பர்களின் அறிவுரைப்படி எனது எழுத்துகளை சேமிக்கும் தளமாக வலைப்பூதனில் எல்லாம் இருக்கும் வரை என வலைப்பூவிற்கு தலைப்பிட்டு காலடி எடுத்து வைத்தேன். இங்கே எழுதப்பட்ட பல பதிவுகள் எல்லாம் முன்னால் எழுதியவைதான். சில பதிவுகளே நேரடியாக இங்கே எழுதி வருகிறேன். 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்


எப்படியெல்லாம் வலைப்பூதனை விளம்பரம் செய்வது என்பது பற்றி அதிகம் தேடிப்பார்த்தேன். பல தேடு பொறிகளில் எனது வலைபூதனை இணைத்தேன். எனது நண்பரின் அறிவுரைப்படி தமிழ்மணத்தில் இணைத்தேன். பின்னர் தமிழிசில் இணைத்தேன். தமிழ் 10 என்பதிலும் இணைத்தேன். சில தவிர்க்கமுடியாத
பிரச்சினைகளால் தமிழ் 10லிருந்து பின்னர் எடுத்துவிட்டேன். மேலும் சில திரட்டிகளில் இணைத்தேன். சங்கமமும், திரட்டியும் நான் இணைக்காமலே திரட்டி கொண்டன. திரட்டியில், சங்கமத்தில் நேரடியாக சில பதிவுகள் இணைத்தேன். 


இப்படி எப்படியாவது வலைப்பூதனை பிரபல படுத்த வேண்டும் என பேராசை கொண்டு திரிந்தேன். ஆனால் நான் எழுதிய முத்தமிழ்மன்றத்தில் அந்த மன்றத்தின் விதிகளுக்கு ஏற்ப எனது வலைப்பூதனை விளம்பரம் செய்யாமலே தவிர்த்தேன். மேலும் எவருடைய வலைப்பூவிலும் சென்று எனது வலைப்பூதனை விளம்பரம் செய்ய வேண்டும் என ஒருபோதும் எண்ணியதுமில்லை. ஆனால் பிறருக்கு இடப்படும் பின்னூட்டங்களே வலைப்பூவிற்கான விளம்பரம் என்பதும் அறிந்தேன். பல நண்பர்களை மனதில் நினைத்து கொண்டிருக்கிறேன். எனது நேரம் காரணத்தால் பலருடன் என்னால் பழக இயலாமல் இருக்கிறது. 


மேலும் எனது கண்களுக்கு தென்பட்டதெல்லாம் பலரும் வாசிக்கும் தளங்கள். மிக குறைவாகவே சிலர் வாசிக்கும் தளங்கள் தென்பட்டன. எனது தேவை எது என தமிழில் தெரியாததால் அதிகம் சச்சரவு நிறைந்த பதிவுகளையே படித்தேன். எப்படியெல்லாம் மனிதர்கள் சிந்திக்கிறார்கள் எனும் ஆவலும், அடுத்தவர்களை பற்றி அறிந்து கொள்ளும் மோகமும் என்னை சச்சரவு பதிவுகளை படிக்க செய்தது எனலாம். அங்கே நான் இட்ட பின்னூட்டங்கள் எனது வலைப்பூவிற்கான விளம்பரமா என தெரியாது. 


சில காலம் பின்னர் பின்னூட்டங்கள் இடுவதை குறைத்து கொண்டேன். படித்தால் உடனே எதாவது எழுத தோன்றும். மிகவும் சிரமப்பட்டு எழுதாமலே வந்து இருக்கிறேன். எனக்கு படிக்கும்போது எழுதிவிட வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே உண்டு. இருப்பினும் நான் ஒன்று நினைத்து எழுத ஊர் ஒன்று நினைத்து பேசும் என்பதுதான் எனது நிலை. 


நான் மதித்து போற்றும் மனிதர்கள் இந்த வலைப்பூவில் நிறையவே இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து முகம் பார்த்து சிரித்து பேசிட வேண்டும் எனும் ஆவல் உண்டு. இதுவும் எனது வலைப்பூவிற்கு நான் தேடும் விளம்பரமா என்றால் என்னவென சொல்வது?. இதன் காரணமாகவே பல நேரங்களில் என்னை நானே ஒதுக்கி கொள்வது உண்டு. அது தவறு என பலமுறை அறிந்து இருக்கிறேன். நிறைய நல்ல நண்பர்கள் பெற வேண்டும் எனும் ஆசை மனதில் எப்பொழுதும் உண்டு. 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


சுய சொறிதல் என இதை வலைப்பூவில் சொல்கிறார்கள். சென்ற கேள்விக்கான எழுதிய பதிலில் இருந்தே தெரிந்து இருக்கும் நான் எழுதும் எழுத்துகள் பல சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதுதான். எனது அனுபவங்கள் என பல விசயங்களையும், பயண கட்டுரைகள் என பல சொந்த விசயங்களையும் எழுதி இருக்கிறேன். சமூகம் எனும் பார்வையில் எழுதுவது நான் பார்த்த விசயங்களின் பாதிப்புதான். 


 சமூக அக்கறை என்பது நமது மீதான அக்கறை என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். தனி மனிதன் தன் மீது அக்கறை செலுத்தும்போதே சமூகம் அக்கறை கொண்டதாகிவிடுகிறது. சுயநலம் கருதாமல் பொதுநலம் கருதவே முடியாது என்பதுதான் எனது கோட்பாடு. மக்களுக்கு செய்கிறேன் எனும் எண்ணமே சுயநலத்தின் தோற்றம்தான். 


இப்படி சொந்த விசயங்களை எழுதுவதன் மூலம் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் எழவில்லை. எவரையும் திட்டி எழுதும் பழக்கமோ, தாக்கி எழுதும் வழக்கமோ நான் கொண்டிருப்பதில்லை என்பதால் எவ்வித விளைவுகளும் இல்லை. சாதாரணமாக எழுதுவதன் மூலம்  நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். 
    
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


 பதிவுகளின் மூலம் அதிகம் சம்பாதிக்க இயலும் எனும் நிலை வந்தால் எனது மருத்துவ ஆராய்ச்சியை விட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். ஏனெனில் எழுதுவதற்கு கற்பனை வளம் போதும்.  இணையங்களில் தேடினால் விபரங்கள் கிடைக்கிறது. நூலகங்கள் தேடி ஓட வேண்டியது இல்லை. மூன்று வேளை நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். 


கூகிள் விளம்பரம் இணைத்து இருக்கிறேன். அதன் மூலம் இதுவரை எந்த பணமும் சம்பாதித்தது இல்லை. அன்பளிப்பு அளியுங்கள் என ஒரு பொத்தான் நிறுவி இருக்கிறேன். நானாக அதில் சேர்க்கும் பணம் தவிர்த்து வேறு எதுவும் இதுவரை இல்லை. இவை எல்லாம் சமூக நலனுக்காக, பிறருக்கு உதவ வேண்டும் என நான் செய்திருக்கும் விசயங்கள். 


நான் வெளியிடும் நாவல்கள், புத்தகங்கள் மூலம் வரும் பணத்தினை பிறருக்கு உதவி செய்வதற்காகத்தான் என எனது குறிப்புகளில் குறித்து வைத்திருக்கிறேன். ஆனால் இந்த வழிகள் மூலம் இதுவரை எதுவும் செய்ய இயலாமல் தான் இருக்கிறது, எழுத்தின் மூலம் சம்பாதிப்பது அத்தனை சுலபமில்லை. எழுத்தின் மூலம் வரும் பணத்தை நிச்சயம் சமூக நலனுக்காகவே செலவிடுவேன் என மனதில் உறுதியுடன் இருக்கிறேன். மேலும் நான் எழுதும் பெரும்பாலான எழுத்துகள் தொடர்ந்து புத்தகமாக வெளிவரும் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. 


நான் எழுதுவது பொழுது போக்கு என சொல்ல முடியாது. எனக்கு கிடைக்கும் நேரத்தில் எழுதுவது என்பது நிச்சயம் பொழுதை பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். அதே வேளையில் சச்சரவு நிறைந்த பதிவுகளை படிப்பு பொழுது போக்கு என கொள்ளலாம் என கருதுகிறேன். 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


என்னிடம் இருப்பது இரண்டு வலைப்பதிவுகள். ஒரு தமிழ் வலைப்பதிவு, மற்றொன்று ஆங்கில வலைப்பதிவு. ஆங்கிலம் அவ்வளவாக எழுதுவதில்லை. இது தவிர்த்து கல்விக்கென ஒரு தனி இணையதளம் வைத்து இருக்கிறேன். அதிலும் அதிகம் கவனம் செலுத்தியதில்லை. 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


மற்ற பதிவர்கள் மீது கோபம் வந்தது உண்டு, அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என கோபம் இருந்த இடம் தெரியாமல் சில கணங்களில் மறைந்து போனது. மறைந்து போன கோபத்தை மீண்டும் நினைவு படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே பதிவர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. ;) 


மற்ற பதிவர்கள் மீது பொறாமை என சொல்வதற்கு பதிலாக பெருமதிப்பு உருவானது. எழுதப்படும் எழுத்துகள் பல பிரமிக்க வைத்து இருக்கின்றன. அந்த மதிப்பிற்குரிய பதிவர்களை மனதார போற்றுகிறேன். 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய 
மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


முதலில் அறிமுகம் தான் எழுதினேன். அதில் பின்னூட்டமிட்டவர்கள் உண்டு. என்னை வலைப்பூ எழுத சொன்னவர்களின் முதல் பின்னூட்டங்கள் அது.  பின்னர் எழுதப்படும் பதிவுகளுக்கு அங்கொன்று இங்கொன்றுமாய் வந்த பின்னூட்டங்கள் என இருப்பினும், நான் பதிவு செய்பவை எல்லாம் முன்னால் எழுதப்பட்டவை என்பதால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது.  


அதே வேளையில் எனது கதைக்காக விருது கொடுத்து பாராட்டிய சகோதரி விதூஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விருது வழங்கும்போது எதற்காக வழங்குகிறேன் என அவர் சொல்லி தந்த விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 


பின்னர் சகோதரி அன்புடன் அருணா ஒருமுறை ஒரு பதிவுக்கு பூங்கொத்து தந்து இருந்தார்கள். இந்த பதிவுலகில் நான் பெற்ற ஒரே விருது ஒரு ஒரு பூங்கொத்து அதுதான். அந்த விருதினை விரைவில் பிறருக்கு பகிர்ந்து தர வேண்டும் எனும் ஆவல் இருக்கிறது, அதற்கான நாளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். 


தாரவி எனும் பதிவிற்கு தமிழ் 10 மகுடம் சூட்டி இருந்தது. இன்னும் சில பதிவுகள் யூத்புல் விகடன் சுட்டி இருந்தது. இவை தந்த சின்ன சின்ன மகிழ்வுகள் என கொள்ளலாம். 


பதிவுகளை வாசிக்கும் அனைத்து உறவுகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கின்றேன். 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னை பற்றி நானே கூறி கொண்டாலும், அவரவர் மனதில் ஒரு எண்ணம் என்னை பற்றி உருவாகத்தான் செய்யும். அனைவருமே என்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பது எனது ஆணவத்தின் குறியீடு. அனைவருமே என்னை மட்டமாக நினைக்க வேண்டும் என்பது எனது கழிவிரக்கத்தின் குறியீடு. என்னை எவர் எவர் எப்படி நினைக்க வேண்டுமோ அப்படி நினைக்கட்டும் என இருப்பது எனது நிதர்சன நிலையின் குறியீடு. 


என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் விசயங்கள் தினமும் மாறிக் கொண்டே இருந்தாலும் நான் எப்பொழுதும் நான் தான்.