Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday 5 November 2014

கனவில் வந்தனையோ ஆண்டாள்

ஆண்டாளின் வார்த்தைகள் மீது ஒரு தீராத ஆசை. அதிலும் எற்றைக்கும் என வரிகள் வாசிக்க ஆரம்பித்தால் அப்படியே ஒரு தனி அறையில் சென்று அமரத் தோணும். 

இந்த ஆண்டாள் மீது இத்தனை ஆசை வர காரணம் அவள் கொண்ட அந்த பரந்தாமன் காதல் தான்.  ஒரு மாட வீதி தென்படுகிறது. அந்த மாட வீதியில் கூரைப்பட்டு சேலை உடுத்திய வண்ணம் ஆண்டாள் வந்தாள். அவளிடம் என்னை காதலிக்க கூடாதா என்று கேட்டேன். என்னை உன்னால் காதலிக்க முடியுமா யோசி என்றாள். 

நண்பர்களிடம் ஆண்டாள் காதல் குறித்து பெருங்கவலை கொண்டு இருந்தேன். எல்லோரும் ஆண்டாளை பைத்தியம் என்றார்கள் என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. பெரியாழ்வாரிடம் சென்று உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து தாருங்கள் என கேட்டேன். மானிடனுக்கு வாக்கப்படமாட்டேன் என சொல்லிவிட்டாளே என்றார். 

மற்றொரு நாள் ஆண்டாளை சந்தித்தபோது நீ கொண்டிருக்கும் காதல் மாயையானது அறிந்து கொள் என்றேன். நான் காண்பவை உன் கண்களுக்கு தெரியாது என்றாள். பெரியாழ்வாரிடம் சென்று நீங்கள் ஆண்டாளை சரியாக வளர்க்கவில்லை, இதுவே ஒரு தாய் இருந்து இருந்தால் இப்படியாகுமா என்றேன். வேதனையுற்றார். 

என் பெற்றோர்களிடம் ஆண்டாள் குறித்து என் துயரத்தை சொன்னால் அந்த பொண்ணு வாங்கி வந்த வரம் என்றார்கள். என்னால் ஏற்க முடியவில்லை. ஆண்டாளின் தோழிகளிடம் சென்று என் ஆசையை கூறினேன். அந்த தோழிகள் எல்லாம் என்னை ஏளனமாக பார்த்தார்கள். அவள் காதல் உனக்கு இளப்பமா என்றார்கள். 

ஒருநாள் திருவில்லிபுத்தூர் கோவில் வாசலில் நிறு இருந்தபோது ஆண்டாள் வந்தாள் .சிலையாக நிற்பதுதான் உன் காதலனா என்றேன், உயிராக என்னுள் வசிப்பவன் என்றாள். எவரேனும் ஆண்டாளுக்கு அவள் கொண்ட காதல் முறையற்றது என் எடுத்து சொல்லமாட்டார்களா என ஏங்கி  தவித்த எனக்கு நான்தான் முறையற்றவன் என்றார்கள். 

ஆண்டாளின் பிடிவாதமான போக்கு என்னுள் பெரும் அச்சத்தை விளைவித்தது. ஆண்டாளிடம் என் மனக்குமுறல்கள் சொல்லி முடித்தேன். . நாராயணனே பறைதருவான் என்றாள் . பெரியாழ்வாரிடம் நீங்களாவது எடுத்து சொல்லுங்கள் என மன்றாடினேன். ஸ்ரீரங்கத்து ரெங்கமன்னார் மாப்பிள்ளை என்றார். 

ஆண்டாளிடம் சென்று, ஆண்டாள் அந்த நாராயணனை மணம்  முடிக்க நீ மானிட பிறவி கொண்டது பிழை அல்லவா? ஒரு பரமாத்மாவை உன் காதலுக்காக ஜீவாத்மாவாக்கிட நீ துணிந்தது குற்றம் என்றேன். 

என் வார்த்தைகள் கேட்டு வெகுண்டெழுந்தாள். என் காதலை பழித்து கூற உனக்கு என்ன யோக்யதை இருக்கிறது, போ முதலில் காதலித்து பார் என்றாள்  

எந்திரிடா இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும் என அம்மா என்னை எழுப்பிக் கொண்டு இருந்தார். 

நீ மட்டும் இன்றும் மாறாத ஆச்சரியம்

Thursday 23 October 2014

பாரதி' யார்? - வேடிக்கை மனிதனா நீ

'நல்லதோர் வீணை செய்தே' என்ற வரிகளை கேட்டதும் எப்படி இருக்கும் என எழுத்தில் வைக்க முடிவதில்லை. ஆம், இந்த வரிகளுக்கு சொந்தகாரர் மகாகவி பாரதியார் தான். மகாகவியின் கவிதைகள் மட்டுமே தெரிந்த நமக்கு அவரின் வாழ்க்கை பற்றி தெரிவதில்லை, தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

பொது நலத்திற்காக தன்னை அர்பணித்து கொள்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பது என்னவோ உண்மை. மகாகவி பாரதியாரின் வாழ்க்கை குறித்து பலருக்குத் தெரிந்து இருக்காது.

''பாரதி கஞ்சா அடிப்பார்'' என்று சொன்ன நண்பனை நான் கோபத்துடன் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் வரிகளில் நான் வாழ்ந்து வந்து இருக்கிறேன். ''சென்றதினி மீளாது மூடரே'' என்பது எனக்கு அத்தனை பிரியம். பாரதியின் கவிதை வரிகளை ரசித்து ரசித்து பழகிய நான் பாரதியை ஒருபோதும் தவறாக நினைத்தது இல்லை, நினைக்கப்போவதும் இல்லை.

காதல் வரிகளில் கூட பாரதியை போல எந்த ஒரு கவிஞனும் எழுத முடிவதில்லை. ''காற்று வெளியிடை கண்ணம்மா'' என்பதை விட எனக்கு ''நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'' கொள்ளைப்பிரியம். எத்தனை கவிதைகள். அதுவும் ''காக்கைச் சிறகினிலே நந்தலாலா'' பாடிக்கொண்டே இருக்கலாம்.

இந்த பாரதி கஞ்சா அடிப்பார் என்று கேள்விப்பட்ட தினம் முதல் எனக்கு அதுகுறித்து அக்கறை இருந்தது இல்லை. ஆனால் பாரதி குறித்து தேடி தேடி படித்த விசயங்கள் பல உண்டு. பாரதியார் குறித்து படம் வந்தபோது பாரதியாரின் பெருமை சிதைந்து போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

எனக்கு பாரதியாரின் வாழ்க்கையை குறித்து எவரிடமும் பேசப் பிடிப்பது இல்லை. அவரது கவிதைகள் எனக்கு போதுமானதாக இருந்தது.

''அக்கினி குஞ்சொன்று'' பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். பாரதியாருடன் நண்பராக வாழ்ந்து இருக்கலாமோ என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருப்பது உண்டு. ''வேடிக்கை மனிதன் என'' எத்தனை பேர் இதனை பாடி இருப்பார்கள்.

-------

பாரதி குறித்து ஓ சோமசுந்தரம் இப்படி எழுதுகிறார். ''படைப்பாளிகள் சில பொருட்களை உபயோகிப்பார்கள், அதில் பாரதியை பற்றி இங்கே எடுத்துக்கொள்கிறேன்''. கவிஞர்கள் , படைப்பாளிகள் அவர்களது படைப்புகளால் இறவா தன்மை அடைகிறார்கள். அதில் பலர் ஆல்ஹகால் போன்ற போதைப் பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். அறிவார்ந்த தன்மைக்கும், இப்படி பொருட்கள் எடுத்துக் கொள்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணி பாரதியாரின் வாழ்க்கையை இங்கே பார்க்க இருக்கிறோம். பாரதியாரின் கவிதையில் என்னதான் இல்லை? பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர் எட்டயபுர அவையில் முக்கிய நபராக இருந்தார். பாரதி எனும் பட்டம் கவிதைகளால் தமிழ்ப்புலமையால் கிடைத்தது.

பாரதியின் தந்தை இறந்த பின்னர் அரசவை ராஜாவுக்கு பாரதியின் மீது பற்று உண்டாகியது. இந்த ராஜா தான் பாரதிக்கு போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணியவர். அவர் கொடுத்த பூரநதி லேகியம் கஞ்சா போன்ற பொருட்களை கொண்டது. இதை நீ அருந்தினால் உனக்கு நல்ல பலம் வரும். ஆனால் இதை நம்பி பாரதி தொடர்ந்தாரா என தெரியாது. ஆனால் இதுதான் பாரதிக்கு முதன் முதலில் கொடுக்கப்பட்ட போதைப் பொருள்.

அரசவை ராஜா பாரதியை வாரணாசிக்கு அனுப்பி சமஸ்கிருதம், ஆங்கிலம் என புலமை பெற உதவி செய்தார். அரசவையில் இருந்து விலகி மதுரையில் ஆசிரியராக பணியாற்றி சென்னை சென்று சுதேசமித்திரன் நாளிதழ் சேர்ந்து  பின்னர் இந்தியா பத்திரிகை என ஆரம்பித்து அதில் தனது கவிதைகள் வெளியிட்டார். பாரதியின் வ உ சி உடன் பழக்கமும் வ உ சியின் சுதேசி இயக்கம் அதனால் வ உ சி அடைந்த துயரம் பாரதியை வெகுவாக பாதித்தது.

பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றி அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் (1908-1918) பாரதியார் பாண்டிசேரியில் இருந்தார். பெரும்பாலான கவிதைகள் பாஞ்சாலி சபதம் முதற்கொண்டு பக்தி பாடல்கள் கிருஷ்ணர் முருகர் சக்தி பாடல்கள் எல்லாம் அங்கே இயற்றப்பட்டன.

பாரதியாரின் பாண்டிசேரியில் உள்ள ஒரு சாமியாருடன் ஏற்பட்ட பழக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பாரதியாரின் விடுதலை போராட்ட வேட்கையும் தமிழ் இலக்கியமும் மற்றும் இந்த சாமியார் பழக்கம் பாரதியாரை இந்த போதை உலகத்தில் மீண்டும் தள்ளி இருக்கலாம். அவரது இந்த சாமியாருடன் பழக்கமே பல பக்தி பாடல்கள் எழுத காரணமானது. அந்த சாமியாரும், பாரதியாரும் போதை பொருட்களை உபயோகப்படுத்தினர். சில வருடங்கள் போதை பொருட்கள் உபயோகத்தை நிறுத்தி இருந்த பாரதியார் 1911 ம் ஆண்டு போதை பொருட்களை மீண்டும் பாரதியார் உபயோகித்ததை பாண்டிசேரியில் கண்டு வ. ராமசாமி மிகவும் வருத்தம் கொண்டார். நடுஇரவு மருந்து, சாமக்கிரிகை,  என பாரதியார் அங்கே உள்ள வேலையாளை வாங்கி வர சொல்வார். ஆனால் பாரதியார் மீதான மரியாதையில் எதுவும் சொல்லவில்லை. இந்த சாமியார் தெருவில் படுத்து கிடப்பது, நாய்களுடன் சண்டை போடுவது போதை பொருட்கள் உட்கொள்வது  என்றே அவரது வாழ்வு இருந்து இருக்கிறது.

கடைசி மூன்று வருடங்கள் 1918-1921 பாரதியார் சென்னையில் தனது வாழ்நாளை செலவழித்தார். மகாத்மாவின் அகிம்சை செய்கை மகாகவியை புண்படுத்தியது. வ உ சி மகாத்மாவின் வழி பின்பற்ற பாரதி விடுதலை போராட்டத்தை ஒரு கட்டத்தில் கைவிடும் நிலைக்குப் போனார். பாரதியார் நிறைய போதை பொருட்கள் உபயோகித்த கால கட்டம் இதுதான். குள்ளசாமி சாமியாருடன் பாரதியை சென்னையில் கண்ட வ உ சி தன்னால் நம்ப இயலவில்லை. இது பாரதி தானா என்றே சந்தேகம் எழுந்தது. பொலிவிழந்து பாரதியார் காணப்பட்டார்.

வ உ சி , பாரதியாரும் அந்த குள்ளசாமி சாமியாரும் ஒரு பானத்தை அருந்திய பின்னர் அவர்களின் பேச்சு சத்தமாகவும் சுறுசுறுப்பாக உண்டுபண்ணியது கண்டார். வ உ சி என்ன என கேட்டார். அது என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்து என்றே பாரதியார் பதில் அளித்தார். அடுத்த நாள் பாரதியார் அதை அருந்த, வ உ சி புரிந்து கொண்டார். மண்டயம் நண்பர் பாரதியாரின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கண்டார். இந்த மூன்று வருடங்களில் பாரதியாரின் உடல்நிலை பெரிதும் மோசமாகியது.

கடைசி காலத்தில்  பண கஷ்டம் வந்தபோது எட்டயபுரம் ராஜாவிடம் கேட்க அவர் உதவ மறுத்துவிட்டார். ஜூலை 1921ல் யானை அவரை தூக்கி வீசியது. அங்கே இருந்த ஒருவர் அவரை காப்பாற்றினார். எந்த ஒரு மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் செப்டெம்பர் மாதம் பாரதியார் மரணம் அடைந்தார்.

ஓபியம், கஞ்சா பெருமளவில் அப்போது உபயோகிக்கப்பட்டது. பெதடின், ஹெராயின், மார்பின் கொடீன் போன்ற பொருட்கள் பின்னர் இவை இடங்களை பிடித்துக் கொண்டன. பாரதியாரின் மரணம் அவரது போதை பழக்கத்தால் ஏற்பட்டது என்பதை பலரால் ஏற்றுக்கொள்ள இயலாது. கண்ணதாசனுக்கு பெதடின் பழக்கம் இருந்தது என்பது பலருக்கு தெரியும். அவரது மரணம் கூட இந்த பெதடின் ஏற்படுத்தியதுதான். பல படைப்பாளிகள் குடிகார சிகாமணிகள்தான்.

பாரதியின் ''மோகத்தை கொன்று விடு'' என்பது  தன்னால் போதை பொருளை விட முடியாத நிலையில் கதறி அழுத  கவிதையாக கூட இருக்கலாம். பாரதிக்கு நல்ல நண்பர்கள்  வாய்க்காமல் போனார்கள். போதைப் பொருளுக்கு போதை மனதுக்கு அடிமையாகிவிட்டால் நல்ல நண்பர்கள் விலகிப் போவார்கள்.

பாரதி நீ மகாகவி
அப்படியே உன்னை
இவ்வுலகம் போற்றி மகிழட்டும்.  

போதை பொருட்கள் என்ன செய்யும் என்பதை படிக்க இங்கு பாருங்கள்.  

Monday 3 March 2014

தாலேலோ ஆண்டாள்

அடேங்கப்பா ஆண்டாள் - 5

விஷ்ணுசித்தர் வில்லிபுத்தூரில் முகுந்த பட்டருக்கும், பத்மவல்லி அம்மையாருக்கும் பிறந்த ஐந்தாவது புதல்வர். முகுந்த பட்டரும், பத்மவல்லி அம்மையாரும் வடபெருங்கோவிலுடையானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு இருந்தார்கள். வேத விற்பன்னராக முகுந்தபட்டார் திகழ்ந்தார்.

விஷ்ணு சித்தரை ஒரு அந்தணர் போலவே வளர்த்தது முகுந்தபட்டர்தான். மற்ற குழந்தைகள் பற்றி எங்கேனும் குறிப்பு இருக்கிறதா, என்ன ஆனார்கள் என்பது குறித்த ஆராய்ச்சி இங்கே அவசியமற்று போகிறது. விஷ்ணுசித்தர் தன்னை ஒரு வைஷ்ணவராய் உருவகித்து பரமனுக்கு கைங்கர்யம் செய்வதில் நாட்டம் கொண்டு வந்தார். எந்தவகையான கைங்கர்யம் சிறப்பு என நினைத்தபோது மாலைகள் அணிவித்து மகிழ்ந்திருப்பது என எண்ணினார் விஷ்ணுசித்தர்.

ஒரு பூந்தோட்டம் அமைத்திட பெரும்பாடுபட்டு குளங்கள் எல்லாம் உருவாக்கி நந்தவனம் உருவாக்கினார். அங்கே எல்லா பூக்களும் பூத்து குலுங்கின. துளசி, தாமரை, முல்லை, மல்லிகை அழகு சேர்த்தன. அம்மலர் வாசனையை தான் நுகரக்கூடாது என நாசிகளை துணிகளால் மூடி மாலையாக்கி வடப்பெருங்கோவிலுடையானுக்கு சமர்ப்பித்து வந்தார்.

பாண்டிய நாட்டின் அரசன் வல்லபதேவன் மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என ஒரு அந்தணரை சந்தித்ததால் உண்டான சிந்தனையில் வித்வான்களைத் திரட்டிட பறை அறிவித்து பெரும் பொருளை ஒரு வஸ்திரத்தில் கட்டி பொற்கிழியை ஒரு தோரணத்தில் தொங்கவிடப்பட்டது. எவர் மறுமையில் பேரின்பம் பெற இம்மையில் வழி சொல்கிறார்களோ அவர்கள் பொற்கிழி எடுத்துச் செல்லாமல் என அறிவித்தான்.

அன்றைய காலத்தில் புலவர்களுக்கு வேத விற்பன்னர்களுக்கு எப்போதும் ஒருவித போட்டி இருந்து கொண்டே இருப்பதாகவே வரலாறு குறிக்கிறது. முகுந்தபட்டர் விஷ்ணு சித்தருக்கு வேத சாஸ்திரங்கள் கற்று தந்து இருக்கக்கூடும், ஆனால் வேத சாஸ்திரங்கள் மூலம் இறைவனுக்கு கைங்கர்யம் செய்யாமல் மாலைகள் மூலம் மட்டுமே செய்துவந்தவர் விஷ்ணுசித்தர்.

பாண்டிய மன்னன் அறிவித்தமை கண்டு விஷ்ணுசித்தர் நிச்சயம் நினைத்து இருக்கக்கூடும். தந்தை கற்று தந்த கல்வி மனதில் ஓடியிருக்கும். ஆனால் இறைவனே விஷ்ணுசித்தரின் கனவில் வந்து பொற்கிழி அறுத்து வரும்படி சொல்லப்பட்டு இருக்கிறது. விஷ்ணுசித்தர் இறைவன் தம்மை வைத்து காரியம் நடத்த இருக்கிறார் எனும் உறுதி கொண்டு மதுரைக்கு கிளம்புகிறார்.

விஷ்ணுசித்தர் குறித்து வல்லபதேவன் தனது அவையில் இருந்த அந்தணர் செல்வநம்பிகள் மூலம் அறிந்து  இருந்தான். இப்போது வெறும் மாலைகள் மட்டுமே அணிவித்த ஒரு அந்தணர் ஒரே நாளில் பாண்டித்யம் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். சாஸ்திரங்கள் தெரியாத ஒருவரை இந்த அவையில் அனுமதிப்பது தவறு என்றே மற்ற அந்தணர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இறைவன் அருளிச்செய்த சாஸ்திரங்களை விஷ்ணுசித்தர் சொல்லி முடிக்கிறார். நாராயணனே பரம்பொருள் என்பதாக அது அமைகிறது.

விஷ்ணுசித்தர் பட்டர்பிரான் என அழைக்கப்பட தருணம் அது. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடிய பட்டர்பிரான் பரம்பொருளால் பெரியாழ்வார் என அழைக்கபட்டார் என்கிறது சேதி. இப்படி வாழ்ந்து வந்த பெரியாழ்வார் கண்ணனை தன்னை ஒரு யசோதாவாக பாவித்து பல பாடல்கள் இயற்றினார்.

தன்னை அன்னையாக வர்ணித்த பெரியாழ்வார் துளசி செடிக்கு அடியில் ஐந்து வயது குழந்தையாய் கண்டெடுக்கப்பட்டவர் ஆண்டாள். கண்ணனை குழந்தையாக, தன்னை தாயாக பாவித்து வர்ணிக்கும் பெரியாழ்வார் கண்டு ஆண்டாள் தனது காதலனாக கண்ணனை சித்தரித்தாள். சின்ன குழந்தையாய் ஆண்டாள். ஆண்டாள் வளர வளர அவள் கண்ணனும் வளர்கிறான் என்றே மனதில் பாடம் கொண்டாள்.

ஆண்டாள் செய்கை கண்டு பெரியாழ்வார் இப்படித்தான் பாடி வைக்கிறார்.

காறை பூணும் கண்ணாடி காணும் தன்
கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறி தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல் இவள்
மால் உருகின்றாளே

பெரியாழ்வார் போலவே ஆண்டாளும் பாடி முடித்து இருப்பாள். 'வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்' என்பார் பெரியாழ்வார். 'பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை' 'புதுவையர்கோன் விட்டு சித்தன்கோதை' என்பார் ஆண்டாள்.

தாலேலோ ஆண்டாள், இளம் பிராயத்தில் அப்படியே உள்வாங்கி உன்னையே மாற்றிக் கொண்டாய்

(தொடரும்)

Wednesday 19 February 2014

ஆண் கேட்க வந்தவள்

அடேங்கப்பா ஆண்டாள் - 4

பெண் பார்க்க போறது எல்லாம் ஒரு வைபவம் மாதிரியே நடக்கும். முதலில காமிப்பாங்க, அப்புறம் ஜாதகம் பார்ப்பாங்க இதெல்லாம் சரியா இருந்தா பெண் பார்க்க போவாங்க. அப்புறம் பெண் பார்க்க போற இடத்தில் பெண்ணுக்கு என்ன என்ன தெரியும்னு கேட்டுட்டு பையனுக்கு என்ன வேலை, எவ்வளவு சம்பளம் வரைக்கும் பேசி அப்புறம் பலகாரங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் கொடுத்து அதோட ஒரு காப்பி கொடுப்பாங்க.

இந்த பொண்ணு அன்னைக்குன்னு சும்மா ஜெகஜோதியா அலங்காரம் பண்ணி உலகத்திலே இல்லாத வெட்கத்தை எல்லாம் ஒரு சேர முகத்தில் சேர்த்து அன்னப்பறவை நடை சேர்த்து குனிஞ்ச தலை நிமிராமல் அப்படியே பாத்தும்  பாக்காமல் காபி கொடுத்துட்டு போவாங்க. பொண்ணு பிடிச்சி இருந்தா அந்த நேரத்தில் பையன் முகத்தில் தெரியும் கலக்கமிகுந்த சந்தோசம் ஒருவித  வெட்கம்தான்.

இப்ப எப்படி ஊருல பொண்ணு பார்க்கும் வைபவம் எல்லாம் நடைபெறுகிறதுன்னு தெரியலை. இதே மாதிரிதான் கிட்டத்தட்ட இருக்கும்னு வைச்சிக்கிரலாம். கல்யாணத் தரகர் பண்ண வேண்டிய வேலையை திருமண இணையதளங்கள் பண்ணி கொடுக்குது இப்ப.

சில விசயங்கள் மனசுக்கு பிடிச்சி இருந்தா மேற்கொண்டு எல்லா வைபவங்களும் நடைபெறுது. எப்படினாலும் பெண் கேட்கும் படலம் இருக்கத்தான் செய்து. இது அந்த காலத்தில் கூட உண்டு. சீதையை பெண் பார்க்க வந்த அரசகுமாரர்களுக்கு போட்டி வைத்து அதில் வில் உடைத்து வென்ற ராமனே மணாளான். உண்மையிலேயே ராமன் வில் உடைத்தது அவருடைய பராக்கிரம உடல் வலிமை எல்லாம் கிடையாது. எல்லாம் சீதையின் கடைக்கண் பார்வை வந்த வலிமைதான். என் வலிமை பெண்ணால் வந்ததா அப்படின்னு ராமர் வருத்தப்படமாட்டாரு.

ஆனா ஒரு பெண் ஆண் கேட்க இந்த பூவுலகில் வலம்  வந்தாள். அவள் தான் நம்ம ஆண்டாள். உனக்கு எந்த மணாளன் வேண்டும் எடுத்துக்கொள் என்று எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனக்குப் பிடித்த மணாளானை தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள். ஆனால் அந்த மணாளானை தான் தேர்ந்தெடுக்கும் முன்னர் பட்ட பாட்டிற்கு தமிழ் பெருமை கொண்டது.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் 
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோராச் சோர்வேனை 
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே 

என்னை சேராதிருந்தால் அந்த திருவேங்கடத்தானுக்கு என்ன பெருமை, என்னை இப்படி அழ வைக்கின்றானே, என் பெண்மையை அழிக்கின்றான் என மேகங்களிடம் சொல்லித் தவிக்கும் ஆண்டாள் தவிப்பு மேகங்களிடம் ஆண் கேட்டவள். நீ உடன் இருக்க நான் வேண்டினேன் என்பதுவே இது.

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு 
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் 
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே 

மார்புடன் மார்பாக தான் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் பிறந்து இருக்கிறேன் என சொல்லுமாறு மேகங்களை பணித்த ஆண்டாள், வேங்கடவனின் மார்பில் அந்த நப்பினை பிராட்டி இருப்பதை தெரிந்தேதான் கேட்கிறாள். அடடே ஆண்டாள் பிறரின் கணவன் உனக்கு ஏனடி என்று பெற்ற அப்பா ஓங்கி நாலு அறைவிடாமல் எந்த மணாளன் வேண்டுமென சொல் என்றல்லவா சொல்லி இருக்கிறார் என்பது ஏனெனில் நப்பின்னையே ஒரு ஆண்டாள் உருவம் கொண்டு வந்ததுதான், ஆக அந்த பரந்தாமன் எழுந்தருள வேண்டியதுதான் பாக்கி.

தனக்கு என ஒரு மனைவி இருக்க எப்படியம்மா அவன் கீழிறங்கி வருவான் என்றே நாம் நினைக்க அந்த பரந்தாமன் அருள் பாலித்து வந்தான் என்றே சொல்கிறது ஆண்டாள் வரலாறு. ஆண்டாளின் காதல் தூய்மையானது.

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் 
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே 

இந்த பாடலுக்கு ஏதோ ஆண்டாள் பரந்தாமனுடன் ஒருநாளேனும் வாழ்ந்து அதாவது கலவி செய்து விடவேண்டுமென ஆசைப்பட்டு அழைப்பது போல் ஓரிடத்தில் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டாளின் எண்ணம் கலவிக்காக அன்று. அது காதல். ஒரு நாளேனும் அவர் வந்து என்னை அரவணைத்துக் கொண்டால் எனது கொங்கைகளின் மேல் நான் தடவி இருக்கும் குங்கும பூச்சு அழியும், அந்த ஒருநாள் என் உடன் இருக்கும் அன்பு கூட போதும். நான் அந்த நப்பினை பிராட்டியின் அவதாரம் என்றே அந்த பரந்தாமன் அறியமாட்டாவோ என்பதற்கே ஒருநாள் போதும், என் உயிர் வாழும் என்கிறாள்.

அடேங்கப்பா ஆண்டாள், நீ கொண்ட அந்த பரந்தாமன் மீதான காதலில் உனது மார்புக்கு நீ கொடுத்த முக்கியத்துவம் எதற்கு என்றே எண்ணிப் பார்க்கிறேன். காரணம் உனக்கு தெரியாததா ஆண்டாள்.


(தொடரும்) 

Friday 14 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 3

உண்மையிலேயே ஆண்டாள் பற்றி பேச எனக்கு தகுதி இருக்கானு தெரியலைங்க. ஆனால் ஆண்டாள் பற்றி விஜயபாஸ்கர பட்டர் எழுதின புத்தகத்தில் இருந்து ஏராளாமான விஷயங்கள் ஆண்டாள் பற்றி தெரிஞ்சிக்கிரலாம்.

அந்த புத்தகத்தில் ஒவ்வொரு நாச்சியார் திருமொழி எழுதின காரணத்தை சொல்லி இருப்பாங்க. இப்படியா ஒரு பெண் தன்னை அலைக்கழித்து கொள்வார் என்றே எனக்கு தோணியது. எல்லாம் இந்த பெரியாழ்வார் பண்ணின வேலை. சும்மா இருக்காம எப்ப பார்த்தாலும் கண்ணன் கண்ணன் சொல்லி சொல்லியே ஆண்டாளை இப்படி பண்ணிட்டாரு.

ஆண்டாள் அப்படின்னு பேரு கூட பெரியாழ்வார் கொடுத்ததுதான். இந்த பெரியாழ்வார் பத்தின கதை, ஆண்டாள் பத்தின விபரங்கள் எல்லாம் அப்புறம் பாக்கலாம்.

இந்த ஆண்டாள் எதுக்கு இப்படி எழுதினாள் அப்படின்னு நான் நினைச்சிட்டே இருப்பேன். அந்த பாட்டு இப்போ இங்கே.

சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தெனொல்லை விதிக்கிற்றியே

வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

காயுடை நெல்லொடு கரும்பமைத்து
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிருமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மேலிருக்கும் பாடல் எல்லாமே முதல் திருமொழி. இப்போ இதுக்கு இந்த மூணு பாட்டு தேர்ந்தெடுத்தேன் தெரியுமா, எல்லாம் காரணமாகத்தான். எங்க கிராமத்தில எல்லாம் தாய்ப்பால் அப்படின்னு சொல்வாங்க. முலைப்பால் அப்படின்னு ஒருத்தரும் சொல்லமாட்டாங்க. இப்ப எல்லாம் இந்த தாய்ப்பால் விஷயம் எல்லாம் விளம்பரம் பண்ணிற மாதிரி ஆகிப்போச்சு. இந்த தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கடத்தப்படற விஷயம் எல்லாம் அறிவியல் இப்போ சொன்னதுதான். ஆனா இது எல்லா பாலூட்டி ஜீவராசிகளும் வழக்கம் போல செய்வதுதான்.

இந்த பெண்ணின் அங்கம் ஒரு கவர்ச்சி என்ற விதத்தில் மாறிப்போனது நமது துரதிர்ஷ்டம். பாரதியார் கூட கச்சணிந்த கொங்கை மாந்தர் என எழுதினார். அதைவிட அபிராமி பட்டர் ஒருபடி மேலே போய் எழுதி இருப்பார். அவரை பிறகு பார்ப்போம். பைத்தியமாடா உங்களுக்கு என்று இவர்களை ஏசி விடத்தோணுமா, தோணாது. ஆனால் இதை எல்லாம் ஒரு இலக்கியத்தில் வைத்து அழகு பார்த்தார்கள். இந்த வரிகளை படிக்கும்போது ஒருத்தரும் தவறான எண்ணங்களை மனதில் கொண்டு வரமாட்டார்கள், காரணம் என்ன தெரியுமா. அதுதான் அடேங்கப்பா என பிரமிக்க வைக்கும் எழுத்துகளின் ஆளுமை. பெண்களை இப்படித்தான் வர்ணிக்கவேண்டும்  என்பதல்ல. அது காதலின் உச்சகட்டம், கலையுணர்வில் காமம் தெரிவதில்லை என்பதற்கே கல்லில் எல்லாம் நிர்வாண கோலங்களை செதுக்கி வைத்தார்கள். உணர்வில் மறைத்தும், உணர்வற்ற ஒன்றில் வெளிப்படுத்தியும் காட்டியது அன்றைய கலை.

இன்றைக்கு வேண்டாம், எல்லாமே வக்ர துண்டாய தீமஹி என ஆகிவிட்டது. தனது எண்ணத்தை ஆண்டாள் வெளிப்படுத்தினாள், அதைத் தேடிப் படித்து அவள் இப்படி எழுதிவிட்டாள் என சொல்வது நமது குற்றம். கெட்ட நோக்கத்தில் இப்போது சொல்லிவிட்டு ஆண்டாள் மட்டும் எழுதலாமா என்றால் நம்மால் ஆண்டாள் போல் பக்தியை வெளிக்காட்ட முடியுமா என்ன. நினைத்த போதெல்லாம் காதலன், காதலி மாற்றும் நமது சமூகத்திற்கு ஆண்டாள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

இந்த ஆண்டாள் எதற்கு இப்படி எழுதினாள். தனது மார்பகங்கள் குறித்து எழுதவேண்டிய நிர்பந்தம் ஆண்டாளுக்கு வந்தது என்ன காரணம். ஒரு பெண் தனது காதலை இத்தனை வெளிப்படையாகவா சொல்ல இயலும். அதுவும் அந்த மன்மதனிடம் மன்றாடினாள். தான் ஒரு பெண் என்பதையும் அந்த எம்பெருமானுக்கே என்னை கொடுத்தேன் என்பதையும் காதலால் கசிந்துருகி சொன்னாள். இதில் எவ்வித விரசமும் இல்லை. எங்கள் கிராமமும், எங்கள் கிராமத்து அம்மாக்கள் எல்லாம் மிகவும் சகஜமாகவே பேசுவார்கள். ஆனால் இன்றைய நாகரிகம் எல்லாம் மூடித்தொலைத்து காமம் என ஆக்கிவிட்டது. அதுசரி ஆண்டாள் எதற்கு சொல்ல வேண்டும் இதோ அவள் எழுத காரணமான காட்சி.


திருப்பாவை ஒன்றில் இப்படித்தான் பாடினாள்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
     வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்


அடேங்கப்பா ஆண்டாள். நீ தைரியமானவள். நான் மிகவும் கோழை.

(தொடரும்)

Thursday 13 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 2

ஸ்ரீவில்லிபுத்தூர் அப்படினாலே எனக்கு ரொம்ப பிடிச்சது பால்கோவா. ஐயோ எப்படி இருக்கும் தெரியுமா. அப்படியே மொத்தமா வாங்கி சாப்பிட்டு பழகி இருக்கேன். எங்க ஊருல ஒரு ஹெல்ப்பர் மாமா இருந்தாங்க, அவரோட பையன் ஸ்ரீதர். ஸ்ரீதர் என்னோட ரொம்ப நெருங்கிய நண்பன். இன்னமும் என் மேல மாறாத பாசம் வைச்சிருக்கிறவன். சின்ன வயசுல நிறைய புத்தகங்கள் வாசிப்பான். புத்தகத்தை கூட பத்து பைசா, பதினைஞ்சி பைசான்னு வாடகைக்கு தருவான். எங்க ஊருல இருந்து மல்லாங்கிணறுக்கு மாறி போனாங்க. ஆனாலும் ஊருக்கு வந்தா என்னை பாக்காம போகமாட்டான். நான்தான் ரொம்பவே ஒதுங்கி போயிட்டேன். இந்த வாட்டி தேடி வந்து பாத்துட்டு போனான். சந்தோசமாகவே இருந்தது. 

அப்புறம் அவங்க அருப்புகோட்டை போய்ட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவங்க ஸ்ரீவில்லிபுத்தூர்ல கொஞ்ச வருஷம் இருந்தாங்க. என்னை அங்க வந்து சில நாள்கள் இருக்க சொன்னாங்க. நானும் விடுமுறைக்கு  அங்க போயி ரெண்டோ மூணோ நாட்கள் தங்கி இருந்தேன். மலைகள் அது இதுன்னு இருந்தது. கோவிலுக்கு எல்லாம் போனேன். அங்கே ஆண்டாள் முகம் பாக்கிற கிணறு எல்லாம் காட்டினாங்க. நான் கூட ஆண்டாளோட முகம் எங்கனயாச்சும் ஒட்டிக்கிடாக்கானு பாத்தேன். சும்மா சொல்லலைங்க, எனக்கு ஆண்டாள் அப்படினா அத்தனை இஷ்டம். 

அப்புறம் எப்போ ஸ்ரீவில்லிப்புத்தூர் போனேன்னு எனக்கு தெரியாது. மறந்து போயிட்டேன். சமீபத்துல சில வருடங்கள் முன்னர்  நுனிப்புல் புத்தக விஷயமா நண்பர் ரத்தினகிரியை சிவகாசியில பார்த்துட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போனேன். அங்கே அனந்தசயன பட்டர் எனக்கு நிறைய கதைகள் சொன்னாரு. அதை வைச்சித்தான் நுனிப்புல் இரண்டாம் பாகத்தில் சில கதைகளை கலந்துவிட்டேன். எனக்கு அவருகிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருந்தது. 

எப்படி திருவில்லிபுத்தூர் உருவானது முதற்கொண்டு அந்த கதைகள் இருந்தது. எனக்கு பெரியாழ்வார் வம்சாவழி இருக்காங்களான்னு தேடிப் பார்க்கணும் போல இப்போ இருக்கு. ஆனால் அப்போ எதுவுமே எனக்கு கேட்க தோணலையே. அப்போதான் எனக்கு இந்த பெரியாழ்வார்தான் ஸ்ரீ ஆண்டாள் மாதிரி தன்னை உருவகிச்சி எழுதினாரு அப்படின்னு ஒருத்தர் சேதி சொன்னார். உடனே எனக்கு வந்த வாசகம் தான். ''உண்மையை யார் உண்மையாக இருக்க விட்டது'' அப்படின்னு. இதை முத்தமிழ்மன்றத்தில பார்த்த மணிப்பாண்டினு ஒரு நண்பர் இது ஞான வாக்கு அப்படினு சொன்னார். ஐயோ இது கோப வாக்கு அப்படின்னு மனசுல சொல்லிக்கிட்டேன். ஆமா எதுக்கு பெரியாழ்வார் தன்னை ஆண்டாள் மாதிரி வேஷம் போட்டு பண்ணனும். அவருக்கு வேறு வேலை இல்ல. அன்னைக்கி சொன்னவர்கிட்ட பதிலே பேசாம சிரிச்சிட்டே போய்ட்டேன். 

இந்த ஆண்டாள் யாரு பெத்த புள்ளையோ. என்னை எங்க ஊருல ஒருத்தர் 'உன்னை தவிட்டுக்குத்தான் வாங்கினாங்க'னு சொன்னதும் ஓனு அழுதுட்டே போய் என்னை தவிட்டுக்கா வாங்கினீங்கனு அம்மாகிட்ட சின்ன வயசில கேட்டு இருக்கேன். அது கிண்டலுக்கு சொல்றதுன்னு அதுவரைக்கும் எனக்கு தெரியாது. எங்கம்மா சொன்னப்பறம் தான் படுபாவி பசங்க இப்படி கூட பண்ணுவாங்க என நினைச்சேன். அப்போதான் எனக்கு இன்னொரு விஷயம் தெரிய வந்திச்சி. இதைக்கூட எங்கேயாச்சும் சொல்லி வைச்சிருப்பேன். 

என்னோட சின்னம்மா அவங்களுக்கு ஆண் வாரிசு இல்லைன்னு என்னை தத்து எடுத்துகிறேன்னு சொன்னப்ப எங்க அப்பா திட்டி விட்டுட்டாராம். அப்படி ஒரு புள்ளைய எப்படி தர முடியும்னு. இப்ப கூட என் சின்னமாவை நினச்சா கஷ்டமா இருக்கும். என்னைய வேணும்னு கேட்டு இருக்காங்களே.ஆனா எல்லா அக்காக்களும் நல்ல முறையில திருமணம் முடிச்சி எல்லாருமே நல்லா இருக்காங்க. ஆண் வாரிசு, பெண் வாரிசு எல்லாம் ஒன்னுதேன். நாங்க வீட்டுல சின்னம்மா, பெரியம்மா எல்லாம் கூப்பிட மாட்டோம், எல்லோருமே அம்மாதான். 

அதிருக்கட்டும், அம்மா அப்பா தெரியாத ஆண்டாள் துளசி செடிக்கு கீழே கிடந்ததை பார்த்து பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார் அப்படின்னு சொல்லுது ஆண்டாள் வரலாறு. அதாவது அந்த மகாலட்சுமியே அவதாரமாக வந்ததா நம்மளை எல்லாம் நினைக்க சொல்லுது வரலாறு. ஆனா நான் அப்படி நினைக்கலைங்க. என் ஆண்டாள் எவராலோ கைவிடப்பட்டவர். இந்த ஆண்டாளை இப்படி தன்னந்தனியா போட்டுட்டு போன பெற்றோர்களை நினைச்சா பரிதாபமாகவே இருக்கும். எப்படி ஒரு அற்புதத்தை தொலைத்துவிட்டார்கள்னு. இல்லைன்னா பெரியாழ்வாருக்கு பெயர் போகுமா. 

இப்போ பெரியாழ்வார் வீட்டில வளரும் ஆண்டாளுக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும் அது பெரியாழ்வாரின் பக்தி அப்புறம் இந்த நாராயணன். சின்ன புள்ளைங்க மாதிரி விளையாடும் இந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார் பாடுற பாட்டு, நாராயணன் பத்தின அன்பு எல்லாம் சொல்ல சொல்ல தனக்குள்ளே ஆசைய ஆண்டாள் வளர்த்துக்காம என்ன பண்ணுவா. 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பல கோடி நூறாயிரம் அப்படின்னு சொன்னா எனக்கே சில்லுனு இருக்கே, எப்படி இருந்து இருக்கும் இந்த ஆண்டாளுக்கு. ஆண்டாள் போல இருந்த தோழிகள் எல்லாம் எதுக்கு ஆண்டாள் மாதிரி பாடலை. அதுதான் கொடுப்பினை. சரி, நான் சமீபத்தில ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு போனேனா, அந்த ஆண்டாள் பார்த்தேனா. சின்ன பொண் போல என் கண்ணுக்கு தெரிஞ்சிதுங்க, பாத்துட்டே இருந்தேனா, கண்ணீர் கோத்திருச்சி. என்ன ஆச்சின்னு மனைவி கேட்டாங்க. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேன். 

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். அடேங்கப்பா ஆண்டாள். எப்படி இப்படி உன்னால் நினைக்க முடிந்ததுன்னு அப்ப நினைச்சப்ப வந்த கண்ணீர் அது. 

இப்ப கூட எங்கயாச்சும் உட்காந்து ஆண்டாள் பத்தி நினைச்சா கண்ணீர் கோத்துக்கும். என்னை பொருத்தவரை ஆண்டாள் ஒரு கற்பனை உலகத்தை தனக்கு உருவாக்கிகிட்டானுதான் தோணும். 

இந்த ஆண்டாள் நாச்சியார் திருமொழிக்கு காரணமே, திருப்பாவை கேட்டும் மனம் இரங்காத நாராயணன் தான் காரணம்னு சொல்வாங்க. ஒருவேளை இந்த நாராயணன் ஆண்டாள் இப்படி எல்லாம் பாடட்டும்னு நினைச்சி இருப்பாரோ. 

அனங்கதேவன் யாரு தெரியுமாங்க! சிவனால் உடல் எரிக்கப்பட்ட மன்மதன். அடேங்கப்பா ஆண்டாள். 

(தொடரும்) 

Wednesday 12 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 1

ஒரு கற்பனையான வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். ஒரு பயலும் நம்மை என்ன ஏதுன்னு கேட்கமுடியாது.நம்ம இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டு போயிரலாம். ஆனா அந்த கற்பனையை வெளியில் சொன்னா காறி துப்புவாங்கே என்னமோ கற்பனையே பண்ணாதவங்க மாதிரி. ஆனா இந்த ஆண்டாள் இருக்காளே ஆண்டாள் அதுதான் வில்லிப்புத்தூர் கோதை, தன்னோட கற்பனைகளை எல்லாம் வெளியில் அள்ளி கொட்டிட்டா. கொஞ்சம் கூட அவள் யோசிச்ச மாதிரியே தெரியலை.

அவள் விதிக்கிற்றியே அப்படின்னு சொல்றப்ப நான் விக்கித்துப் போனேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் திருப்பாவை மட்டும் தான். அப்போ அப்போ வாரணமாயிரம் சூழ வலம் வந்து கேட்டு இருக்கேன். கற்பூரம் நாறுமோ கேட்டு இருக்கேன். ஆனா முழுசா நான் நாச்சியார் திருமொழி படிச்சது இல்லை. வில்லிப்புத்தூர்காரர் ஒருத்தர் என்கிட்டே நாச்சியார் வரலாறு கொடுத்தாரு அதுல இந்த நாச்சியார் திருமொழி இருக்கு. அவர் கொடுத்து ஐஞ்சு வருஷம் மேல இருக்கும். அப்போ அப்போ எடுத்து பாத்துட்டு வைச்சிருவேன். எனக்கு எங்கே இலக்கியம் படிக்கிற அளவுக்கு அறிவு இருக்கு.

பொதுவாகவே எனக்கு இந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் அப்புறம் தமிழ் இலக்கியங்கள் மேல ஒரு ஆசை உண்டு. சாகும் முன்னர் நானும் ஒரு வியாசர், வால்மீகி ஆகணும்னு சின்ன வயசுல மனசுல நினைச்சிப்பேன். இப்ப கூட இந்த ஆராய்ச்சி எல்லாம் தூக்கிப் போட்டுட்டு எல்லா இலக்கியம் எடுத்து படிக்கணும்னு நினைச்சிட்டே இருப்பேன். ஆனாலும் கம்பராமாயணம், ஸ்ரீமத்பாகவதம் எல்லாம் எடுத்துப் புரட்டி பார்த்துட்டு வைச்சிருவேன். ஏகப்பட்ட வேலைகளுக்கு இடையில் இது எப்படின்னு ஒரு மலைப்பு வந்து சேரும்.

நேத்து ஒரு இரவு பத்து மணி இருக்கும். திடீருன்னு ஆண்டாளோட நாச்சியார் திருமொழி யூட்யூப்ல தூங்கிட்டே கேட்க ஆரம்பிச்சேன். இதுமாதிரி பல தடவை நாலாயிர திவ்விய பிரபந்தம் கேட்க நினைச்சி பத்து நிமிசத்தில மனைவிகிட்ட திட்டு வாங்கி நிப்பாட்டி இருக்கேன். ஆனா நேத்து அத்தனை பாட்டையும் கேட்டு முடிச்சிட்டேன். அடேங்கப்பா ஆண்டாள் அப்படின்னு தோணிச்சி. எனக்கு ஆண்டாள் காலத்தில வாழ்ந்து இருக்கணும்னு தோணிச்சி. ஆண்டாள் தோழிகள் கூட பேசி இருக்கணும்னு தோணிச்சி. எதுக்கு ஆண்டாள் இப்படி நினைச்சா, யாரு ஆண்டாளுக்கு இப்படி ஒரு எண்ணத்தை  வரவைச்சதுனு எனக்கு தெரிஞ்சிக்க ஆசை. அதனாலதான் என்னோட நாவலில் குட்டி சுபாவை உருவாக்கினேன். அவள் ஆண்டாள் மீரா போல ஆகணும்னு ஆசை படுற மாதிரி வைச்சேன். எனக்கு இந்த நுனிப்புல் நாவலை திரும்ப எழுதனும்னு ரொம்பவே ஆசை. ஆனா நான் பண்ணிக்கிட்டு திரியற வேலையில இதுக்கெல்லாம் நேரம் எங்கே இருக்கு.

இப்படி நேரம் இல்லை இல்லைன்னு சொல்றியே, விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டுப் போ அப்படின்னு மனசு கூட சொல்லும். ஆனா விருப்பம் நிறையவே இருக்கு. இதைவிட பெரிய கொடுமை, ஒரு பண்டிதர் சொன்னாரு, ஆண்டாள் ரங்கனை நினைச்சி பாடலை, வேறொரு காதல்னு சொன்னப்ப எனக்கு பிரமை பிடிச்ச மாதிரி ஆயிருச்சி. ரெண்டுநாள் சோறு தண்ணி இறங்கல. எப்படி அவதூறு பேசறீங்கனு அந்த பண்டிதர்கிட்ட மனசில இருந்ததை எல்லாம் கொட்டி வைச்சேன். அந்த பண்டிதரை வெறுப்பேத்திட்டேனு கூட நான் உணரலை. உண்மையிலே எனக்கு அன்னைக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சி. இதுல என்ன பெரிய கொடுமைனா அந்த பண்டிதருக்கு இந்த ஆண்டாளை ரொம்பவே பிடிக்கும். இதுநாள் வரை நான் அப்படி நடந்ததே இல்லை.

என் ஆண்டாள், என் ஆண்டாள் அப்படின்னு ரொம்பவே ஆண்டாளை நேசிச்சிட்டு இருந்து இருக்கேன். இல்லைன்னா திருப்பாவையை சின்ன வயசுல மனப்பாடம் பண்ணி தினமும் பாடி இருப்பேனா. எங்க வீட்டுல என் அக்காக்கள் பல பேருக்கு நாச்சியார் பேரு தான், இப்ப சில வருஷம் முன்  பிறந்த என் அண்ணனோட பெண் குழந்தைக்கு கூட நாச்சியார் தான். நான் கூட நாவலில நாச்சியார்னு ஒரு பகுதி வைச்சி இருந்தேன். நாவலிலே அது ஒண்ணுதாண்டா நல்லா இருக்குனு என்னோட ஒரு அக்கா கோதை நாச்சியார் சொன்னப்ப மனசுக்கு சந்தோசமாகவே இருந்துச்சி.

எனக்கு ஆண்டாள்னா ரொம்பவே இஷ்டம், இல்லைன்னா ஆண்டாளுக்கு கல்யாணம்னு ஒரு சிறுகதை எழுதி இருப்பேனா. அந்த கதையில் வர பொண்ணு சனிக்கிழமை சனிக்கிழமை கல்யாண கனவு காண்பா. நான் அந்த கதையில சொல்ல வந்ததே இந்த ஆண்டாள் தான், ஆனா cystic fibrosis பத்தி அப்போ படிச்சிட்டு இருந்தேனா அதை அப்படியே கதையில இடைச்செருகல் பண்ணிட்டு இந்த வில்லிபுத்தூர் ஆண்டாளை அப்படியே ஒதுக்கி வைச்சிட்டேன்.

என்கிட்டே என்ன குறைன்னா, எதுவுமே முழுசா தெரியாது. எல்லாம் செவி வழி கேட்டதுதான். உண்மையிலே எனக்கு அறிவு கம்மிதான். ஆனா யாரும் நம்பறதே இல்லை. தன்னடக்கம், புலனடக்கம்னு சொல்லிட்டு போவாங்க. போங்கப்பு எனக்கென்ன. எனக்கு இந்த இலக்கியத்துல இருக்கிற பிரச்சினை மொழி பிரச்சினை.

ஒருத்தர் என்ன எழுதுறாரு என்ன சொல்ல வராருருனு என்னால புரிஞ்சிக்க முடியறது இல்ல. நானே ஒரு அர்த்தம் வைச்சிட்டு போயிருவேன். அது தப்போ சரியோ யாருக்கு கஷ்டம். எனக்குதானே. என்னோட மாமா மகன் வீட்டுல தமிழ் அகராதி வைச்சிருந்தான். நான் அப்பப்போ எடுத்து பார்ப்பேன். ஆனா அதை கூடவே கொண்டு வந்து இருக்கணும். ஆத்தி, ஆண்டாள் என்ன என்ன எழுதி இருக்கா. வார்த்தை தேனாமிர்தம் மாதிரி இருக்கு ஆனா எப்படி அர்த்தப்படுத்தி படிக்கிறதுன்னு எனக்கு தெரியலை.

ஏண்டி ஆண்டாள், உன் காதல் நிறைவேற ரங்கன் கிட்ட கேட்காம அந்த மன்மதன் கிட்ட, காம தேவன் கிட்ட எதுக்குடி கேட்டனு எனக்கு கேட்கணும் போல இருக்கு. போயும் போயும் அந்த மன்மதன்கிட்டவா மன்றாடனும். ஆனா காதலுக்கு மன்மதன் தான் தலைவனாம். ஆண்டாள் தப்பு செய்வாளோ! அனங்கதேவா அப்படின்னு ஆண்டாள் சொல்வா, அடேங்கப்பா!

காதலர்கள் தினம் கொண்டாடுறவங்க எதுக்கும் ஆண்டாள் பாசுரம் எடுத்து படிங்க.

(தொடரும்) 

Wednesday 29 January 2014

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

ஒரு கவிஞன் என்ன மனநிலையில் இருந்து எழுதுகிறான் என்பது அந்த கவிஞனுக்கே வெளிச்சம். அந்த கவிஞன் பணி தனது எண்ணங்கள் மூலம் சமூகத்தில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே.

ஏன் எழுதினேன் தெரியுமா? எதற்காக எழுதினேன் தெரியுமா என இன்றைய கவிஞர்கள் சொல்வது ஒரு புத்தகவடிவில் வந்து விடும் நிலை இன்று இருக்கிறது. அன்றைய சூழலில் இதுபோன்று தனது நெருங்கியவர்களிடம் கவிஞர்கள் சொல்லியிருக்கக்கூடும். அப்படி சொல்லப்பட்டது பதிவு செய்யப்பட்டு இருப்பின் கவிதைக்கான பொருள் நேரடியாக கவிஞன் பார்வையில் கிடைத்துவிடும். இப்பொழுது வாசகன் அங்கு வருகிறான் என வைத்துக்கொள்வோம். வாசகருக்கு கவிஞனின் பின்புலம் எதுவும் தெரியாத நிலை. அப்படியிருக்க கருப்பொருள்தனை தனது கற்பனைக்கு கொண்டு செல்கிறான் வாசகன். இது காலம் காலமாக நடப்பதுதான்.

வாசகன் பல வடிவம் கொண்டவன். சிந்தனையற்ற நிலையில் இருந்து எண்ணற்ற சிந்தனை களம் சென்று பயணித்து வருபவன். படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பது எத்தனையோ பொருள் தரும். ஒரு பாடலின் கருச்சிதைவு என்பது வாசகனின் பார்வை படும்போதே நடந்தேறிவிடுகிறது. புரிதல் எளிதில்லை என்பதே பலரும் புரிந்து கொண்டு இருப்பது. கவிஞன் மனநிலையை அடைய வாசகன் முற்படுவதே இந்த சங்கடங்களுக்கு காரணம்.

இந்த பாடல் மூலம் பாரதி என்ன சொல்ல வருகிறார் என்பதைவிட என்ன சொன்னார் என்றுதான் முதலில் பார்க்க வேண்டும்.

நெருப்பு பொறி அதுவும் சின்னதாக காண்கிறான். காட்டில் சென்று ஒரு பொந்தில் வைக்கிறான். காடு எல்லாம் வெந்து சாம்பலாகி விட்டது. அவ்வளவுதான்.

ஆனால் அடுத்துச் சொல்கிறான், தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? தகதகவென எரியும் நெருப்பை போன்ற வீரம் கொள்ள சின்னவர் பெரியவர் என பேதம் உண்டா? த தரிகிட தி தரிகிட தி தோம்

இந்த கடைசி வரியை வைத்தே முதல் வரிகள் பொருள் இப்போது மாறும். வீரம் எதற்கு வேண்டும்? அநியாயம், கொடுமை, பாதக செயல்கள், கொத்தடிமைத்தனம், அடிமைத்தனம், பெண்ணடிமை, சமூகத்தில் புறையோடி இருக்கும் அவலங்கள் என எதிர்க்கவே வீரம் வேண்டும். இங்கே அக்கினிகுஞ்சு சின்ன சிந்தனை நெருப்பு, அதை காடெல்லாம் ஓடி ஓடி வைக்க வேண்டியதில்லை, அதாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை. தனியாக கூப்பிட்டு சிலரிடம் சொன்னேன், தீ பரவியது! பணி முடிந்தது. பாரதியார் சின்ன வயசு. நானே இப்படி செய்திட முனைய இத்தனை வருசம் என்ன செஞ்சீங்க என குஞ்சென்று மூப்பென்று முண்டோ!

கடைசி வரிகள் மிருதங்க தாளங்கள்
த திரிகிட நான் திருகிட
தி திரிகிட நீ திருகிட
தி தோம் நாம் முடித்தோம்.

த கி ட த க
தி கி ட த க
தி தோம்

கி ட த க என்பது தரிகிட என பாடுவர். அழுத்தி சொல்ல வார்த்தை திருகி தத்தரிகிட என்றார்.

தன்னுள் ஞானம் தோன்றி தனக்குள் உள்ள அழுக்காறுகளை போக்க இந்த பாடல் என்றெல்லாம் புறணி பேசித் திரிவர். பாரதி தனக்கு தேவை எனில் நேராகவே கேட்கும் வழக்கம் கொண்டவன். இது போதும் என்னுள் நெருப்பு சிந்தனை எழுப்புகிறான் பாரதி, என் குடும்பம், என் வாழ்க்கை என என்னை போன்று வாழ்பவருக்கு பாரதியின் சமூக சிந்தனை தோன்றாது! 
இதே பாடலுக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொண்டு உள்ளனர். அதில் ஏதும் தவறில்லை. ஒரு சிறந்த கவிதைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் வழக்கம். 
''நான் நனையாமல் இருந்துவிட குடை நனைகிறது'' இது என்ன பெரிய கவிதை. இது சாதாரண பேச்சுமொழி. இதில் அர்த்தங்கள் எழுதிப் பாருங்கள். வரி சொல்லும் கதைகள் ஆயிரம்.
''நின்று கொண்டு இருந்தேன் திடீரென அவள் வந்தாள் உன்னை காதலிக்கலாமா என்றாள். என்ன கேள்வி இது, உன் அனுமதி கேட்டா உன்னை காதலிக்கிறேன் என்றேன், வெட்கத்தில் சிரித்தாள்'' இதை எல்லாம் பெரிய கவிதை என சொல்லிவிட முடியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை அது காதலின் வெளிப்பாடு. 
அவள் எல்லாரிடமும் சென்று அவ்வாறு கேட்கவில்லை. தன்னை காதலிக்கிறான் என்பதை உணர்ந்த அவள் அவனது வாயிலிருந்து கேட்கவே வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவளது உணர்வுகளை புரிந்தவன் சொல்கிறான், உன்னை நான் காதலிக்கிறேன் என! இதில் என்ன பெரிய அர்த்தங்களை கொண்டு சேர்த்துவிட முடியும். ஆனால் அக்கினிக் குஞ்சொன்று அப்படி அல்ல. அதனால் தான் பாரதி ஒரு மகாகவி. 
இந்த கவிதை அவரது பாடல்களில் சமூக பாடலாக வைக்கப்படவில்லை. பிற பாடல்கள் என்ற குறிப்பில் உள்ளது. எனவே அர்த்தம் கொள்வோர் எப்படி வேண்டுமெனில் கொள்க, நல்லவிதத்தில் மட்டுமே என்று முடித்தல் சுபம். 

Friday 6 December 2013

ராமனின் சீதை தீ குளித்தாரா?

என் அம்மா இறந்தபின்னர் பத்து நாட்கள் எனது சின்னம்மா இரவில் ராமாயணம் புத்தகம் எடுத்து வைத்து படித்து கொண்டிருந்தார். அவரை சுற்றி சிலர் அமர்ந்து இருந்தார்கள். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அதுவும் எனக்கு எங்கள் வீட்டில் ராமயாணம் புத்தகம் இருக்கும் என்றே தெரியாது. ராமாயணம் புத்தகத்தை படித்தால் இறந்தவர்களின் ஆத்மா சொர்க்கத்தை அடையும் என்பது ஒருவகையான ஐதீகம் என பின்னர் தெரிந்து கொண்டேன். அன்று கூட ராமாயணம் படிக்க வேண்டும் என நினைத்தது இல்லை. நான் அதிகம் படித்த புத்தகங்கள் கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள், (அர்த்தமுள்ள இந்துமதத்தை பலமுறை படித்து இருக்கிறேன்) மற்றும் அகிலனின் சிறுகதை தொகுப்பு மட்டுமே. நண்பன் ஸ்ரீதர் கொடுத்த பட்டுகோட்டை பிரபாகர், சுபா போன்றோரின் கதைகள் என சில. பாடபுத்தகங்களை மட்டுமே அதிகம் படித்து வளர்ந்தேன்.

நான் இதுவரை ராமாயணம் முழுவதுமாக படித்ததே இல்லை. என்னிடம் இப்போது ராமாயணம் புத்தகம் இருக்கிறது. திடீரென சில பக்கங்களை புரட்டி அதில் இருக்கும் பாடல்களை எப்போதாவது வாசிப்பது வழக்கம். ஆனால் ராமாயணம் குறித்து பல விசயங்கள், விவாதங்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் 'விடிய விடிய கதை கேட்டு ராமன் சீதைக்கு சித்தப்பானு  சொன்னானாம்' எனும் வழக்கு மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் இப்படித்தான் பலர் ராமாயணத்தை அரைகுறையாக தெரிந்து கொண்டு அதில் குறைகள் என குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.

வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது சரியா? என்பன போன்ற வாதங்கள என கேட்டு இருக்கிறேன். மூலக்கதையை சற்று தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப கம்பர் மாற்றி விட்டார் எனும் சொல் பேச்சும் கேட்டதுண்டு. ராவணன் மிகவும் நல்லவர், அவர் சைவ சமயத்தை சார்ந்து இருந்ததால் சைவ சமயத்தை மட்டமாக்க வைணவ சமயத்தை சேர்ந்த ராமனை உயர்த்தி சொல்ல எழுதப்பட்டது என்பார்கள்.

ராமாயாணத்தை கேலி செய்வதற்காக படிக்க தொடங்கிய நான் ராமாயாணத்தின் பெருமை பேச தொடங்கினேன் நான் என்றார் கன்ணதாசன்.
ஒரு கதாசிரியர் என்ன நினைத்தாரோ அதைத்தான் அவரால் எழுத முடியும், நாம் நினைப்பதை எல்லாம் எழுத கதாசிரியர் எதற்கு? ஒரு கதையின் தன்மை எழுதுபவரை விட புரிந்து கொள்பவர்களின் மன நிலையினை பொருத்தே அந்த கதையின் தன்மை இருக்கும், இல்லையெனில் திருக்குறளுக்கு இன்னும் பலர் உரை எழுதிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

அப்படித்தான் ராமாயணமும் சரி, மகாபாரதமும் சரி மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ராமன் தனது மனைவியை சந்தேகம் கொண்டதால் சீதை தீயில் குதித்து தனது புனித தன்மையை நிலைநாட்டினார் என்றே பேசப்படுகிறது.

இந்த விஷயத்தை வால்மீகியும் சரி, கம்பரும் சரி எப்படி எதிர்நோக்கினார்கள் அல்லது எப்படி எழுத்தில் வைத்தார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் ஊரில் சொன்ன கதையை இனிமேல்தான் சென்று இந்த நூல்களில் பார்க்க வேண்டும்.

ஒரு வண்ணான் ராமர் நகர்வலம் வந்தபோது தனது மனைவியிடம் 'என்னை என்ன ராமன் என நினைத்தாயா? எவனோ ஒருவன் வீட்டில் பலநாட்கள் இருந்துவிட்டு வந்தவளை பத்தினி என ஏற்றுக் கொள்ள என சொல்லிவிடுகிறான்' இதைக் கேட்ட ராமன் தன் மனைவிக்கு இப்படி அவப்பெயர் நேர்ந்து விட்டதே என மனம் கலங்குகிறான். ராமனுக்கு தெரியும் சீதை பத்தினி என. ஆனால் இங்கே கதாசிரியர் ராமனை ஒரு சாதாரண மனிதராகவே பாவிக்கிறார்.

ஊர் பழி நேர்ந்துவிட்டதே என நினைத்த ராமன் ஊருக்கு சீதை பத்தினி தான் என சொல்லவே தீக்குளிக்கும் வைபவம் நடைபெறுவதாக அந்த காவியத்தில் காட்டபடுகிறது. ராமன் தன மனைவியை சந்தேகபட்டுவிட்டான் என நினைப்பது நமது அறியாமை. ஊரின் சந்தேகம் போக்கவே அந்த நிகழ்வு என்பதை தெரிந்து கொளல் வேண்டும். மேலும் கதாசிரியர் ஊரின் வாயை அந்த வண்ணான் நிகழ்வை காட்டாமல் தவிர்த்து இருக்கலாம். ஆனால் பின்வரும் சந்ததியினர் ஒருவேளை இந்த கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என அதற்கும் பதில் வேண்டுமென்றே அந்த நிகழ்வை வைத்து இந்த தீக்குளிப்பு வைபவத்தை நிறைவேற்றி இருக்கலாம்.

எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள். அதாவது பத்தினியாக இருப்பவர் தனது சீலையில் நெருப்பை வாங்கிக் கொண்டால் அந்த சீலை பொசுங்காது என! என்ன பைத்தியகாரத்தனம். கற்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் பொது, ஆனால் பெண்ணின் மீது அதை ஏற்றிவைத்து சமூகம் அழகு பார்த்தது. பத்தினிக்கும் நெருப்புக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தமோ?நெருப்பு எதையும் எரித்துவிடும் தன்மை உடையது. பெண் நெருப்பை போன்றவள் என வசனம் எல்லாம் உண்டு.

நெருப்பை பொசுக்கிவிடும் சீலையை போலவே உரிய சாதனம் உடலில் பொருத்திக் கொள்ளாமல் நெருப்பில் குதித்தால் பொசுங்கி போவார்கள். நமது உடல் நிலை அப்படி. நமது தோல், செல் அமைப்பு எல்லாம் கருகிப் போய்விடும். இது கூட அறியாத சமூகத்திலா  நாம் இருக்கிறோம். தீயில் குதித்துதான் பாருங்களேன்.

அப்படி எனில் எப்படி சீதை தப்பித்து இருக்க இயலும்? அதுதான் கதாசிரியரின் வெற்றி. சீதையை தெய்வ அவதாரமாக காட்டவே இந்த யுக்தி. வால்மீகி இப்போது இருந்து இருந்தால் பல விளக்கங்கள் கேட்டு இருக்கலாம், அல்லது அயோத்தி காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சந்ததி இப்போது இருந்தால் அதையும் கேட்டு வைக்கலாம். ஆனால் எதுவுமே இல்லை. எனவே ஒரு காவியத்தை காவியமாக படித்துவிட்டு அதில் இருக்கும் விசயங்களை அதீத கற்பனைகளுக்கு விடாமல் அது ஒரு நிகழ்வு என கடந்து செல்ல பலரால் முடிவது இல்லை.

இந்த உலகில் நிறைய கருத்துகளுடன் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் என்ன செய்வது!





Wednesday 21 August 2013

கம்பன் காதலுக்கு எதிரியா, அம்பிகாபதி?

அமரக் காதல், ஜீவித காதல், தெய்வ காதல் இன்னும் எத்தனயோ பெயர் வைத்துக் கொள்ளலாம். காதல் அத்தனை தித்திப்பானது. வேப்பாங்காயை கடித்துவிட்டு இனிக்கிறதே என டுபாக்கூர் விட சொல்லும் காதல். காதல் எதையும் தாங்கும் வல்லமை கொண்டது. காதல்தனை காதலிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். எத்தனையோ புராணங்களில் காதல் புராணம் மிகவும் அற்புதமானது.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மகன் அம்பிகாபதி மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் மகள் அமராவதியின் காதல் மிகவும் பிரசித்தி பெற்றது. முதலாம் குலோத்துங்க சோழனின் மனதுக்கு பிடித்தவராகிறார் கம்பன். கம்பனின் காவியத் திறமைக்கு மதிப்பளித்து தனது அரசவை கவிஞர் ஆக்குகிறார் சோழ மன்னர். கம்பனின் வளர்ச்சி கண்டு பொறுப்பற்ற தன்மையில் பொறாமை கொள்கிறான் ஒட்டகூத்தன்.

கம்பனின் மகன் அம்பிகாபதியும், சோழ மன்னரின் மகள் அமரவாதியும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததே சோழ மன்னர் தான். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கினங்க அம்பிகாபதி மிகவும் காவிய திறமை வாய்ந்தவனாகவே வளர்கிறான். அம்பிகாபதியும், அமராவதியும் காதல் கொண்ட விசயம் கம்பன் அறிந்தபோது தள்ளாடுகிறான், அல்லாடுகிறான்.

மன்னரின் காதிற்கு விசயம் போனால் பேராபத்து விளையும் என்பதை அறிந்து கொண்ட கம்பன் அம்பிகாபதியிடம் காதலை கைவிடுமாறு கோரிக்கை விடுகிறான். மேலே எழுதிய காதல் வகைகளில் ஒன்றை குறிக்க மறந்து விட்டேன், அது பொருந்தா காதல். அமராவதிதான், அம்பிகாபதியை காதல் புரிந்து இருக்க வேண்டும், காதல் புரிய தூண்டி இருக்க வேண்டும். அரச பரம்பரையில் வந்தவர்கள் அரச பரம்பரையில் தான் திருமணம் முடிப்பார்கள் என்பது எழுதப்படாத நியதி.

இந்த காதல் விசயம் ஒட்டக்கூத்தனுக்கு தெரிய இதுதான் தக்க தருணம் என குலசேகர இளவரசனுடன் இணைந்து கொண்டு பல திட்டங்கள் தீட்டுகிறான், ஒவ்வொன்றிலும் தப்பிக்கிறான் அம்பிகாபதி.

காதல் என வந்துவிட்டால் அனைவரும் கவிஞர்களாகி விடுவார்கள். ஆனால் கவிஞன் இங்கே காதலனாகி நிற்கிறான். காதல் ரசம் சொட்ட சொட்ட அமராவதியை சிலாகித்து கவிதைகள் பொழிகிறான். ஆண்டாள் கூட தான் காதல் ரசம் சொட்ட சொட்ட ரங்கநாதன் மீது கவிதைகள்  எழுதினாள். இந்த கவிதைகளே அம்பிகாபதிக்கு எதிரிகள் ஆகின.

சோழ மன்னருக்கு விசயம்  ஒட்டகூத்தன் மூலம் சென்றடைகிறது. கம்பர் மீதான மரியாதையில், கம்பரின் வேண்டுகோளுகிணங்க அம்பிகாபதியை நாடு கடத்த உத்தரவு இடுகிறார் மன்னர். புஷ்பக தீவுக்கு செல்லும் வழியில் சென்ற கப்பல் உடைந்து அதில் கிடைத்த மரக்கட்டையின் மீதேறி செண்பக தீவு அடைகிறான் அம்பிகாபதி. உறையூரில் நடக்கும் விசயம் அவனது காத்து எட்டுகிறது. புகழேந்தி புலவரின் மகள் கண்ணம்மாவின் மூலம் அமரவாதியை சந்திக்க ஆயத்தம் செய்கிறான் அம்பிகாபதி. காதலின் வலி, அவனை அமராவதியை அழைத்து கொண்டு ஓடி செல்ல தூண்டுகிறது. அவ்வாறு திரும்பி வந்து அழைத்து செல்லும் தருவாயில் இருவரும் பிடிபடுகிறார்கள்.

இந்த முறையும் கம்பர் மீதான மரியாதையில், அமராவதி அடம்பிடித்ததில் இருந்து  அம்பிகாபதி கொல்லப்படுவதில் இருந்து மீட்கபடுகிறான். சோழ மன்னரோ கவிதைக்கு பெரும் மரியாதை தருபவர், அதன் காரணமாக அம்பிகாபதி நூறு பாடல்கள் புறம் பற்றி, அதாவது போர், அரசியல் குறித்து பாடினால் தனது பெண்ணை மணமுடிக்க சம்மதம் சொல்கிறார், அப்படி இல்லாத பட்சத்தில், கொல்லப்படுவாய் என அரசர் அரசாணை இடுகிறார். காதல் பற்றி ஒரு பாடலும் பாடக் கூடாது என்கிறார். கம்பர் அச்சம் கொள்கிறார். பெண்ணின் மீது காதல் இருக்குமிடத்து புறம் தெரிவது இல்லை. அம்பிகாபதியை மிகவும் எச்சரித்து அனுப்புகிறார். ஓட்டகூத்தனோ தனது திட்டம் தவிடு பொடியாகிவிட்டதே, தனக்கு நிகரான ஒரு புலவனின் மகன் இளவரசனா? என எப்படியாவது இந்த காதல் கரைசேர விடக் கூடாது என திட்டம் தீட்டுகிறான்.

அரச சபை கூடுகிறது. பாடல் பாட ஆரம்பிக்கிறான் அம்பிகாபதி. ஒன்று இரண்டு என தொன்னூற்றி ஒன்பது வந்தாகிவிட்டது. அனைவரும் அமைதியாய் இருக்க, வாழ்த்துபாவுடன் இணைத்து நூறு என எண்ணிக்கொண்டு காதலில் திளைத்த அமராவதி, அம்பிகாபதி முன் சென்று வெற்றி களிப்பில்  நிற்கிறாள். நூறாவது பாடலை அவள் அழகை பாடி முடிக்கிறான் அம்பிகாபதி. ஒட்டக்கூத்தன் எழுகிறான், நூறு பாடல்கள் சொன்னபடி பாடவில்லை என ஆதாரத்துடன் காட்டுகிறான். அரசர் இதை காரணம் காட்டி அம்பிகாபதியை கழுவில் ஏற்றுகிறான். அமராவதியும் உடன் இறக்கிறாள்.

கம்பர் மிகவும் சமயோசிதமாக நடந்து கொண்டும் தனது மகனின் காதலை கைகூட வைக்க முடியவில்லை. கம்பர் இந்த காதலை பொருந்தா காதல் என்றே எண்ணினார். இன்றைய காலகட்டத்தில் காதல் எதிர்ப்பு பெருகி இருக்க, அன்றைய கால கட்டம் இதைவிட சற்று மோசமாகவே இருந்து இருக்க கூடும். கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் முன்னர் அரங்கேறிய நிகழ்வு இது. அதுவும் அரசரின் மகள்.

போட்டிகள் வைத்தே மணம் முடித்து வைக்கும் பாங்கு அன்றைய தேதியில் இருந்து இருக்கிறது. அம்பிகாபதியின் காதல் ஒரு காவியமாகி போனது. இந்த நிகழ்வுகள் வைத்தே 'பெண் புத்தி பின் புத்தி' என சொல்லப்படுவது உண்டு. அதாவது செய்து முடித்த பின்னர் யோசிப்பது. இந்த அம்பிகாபதி குறித்து இரண்டு முறை தமிழ் சினிமா குறித்து வைத்துள்ளது. இரண்டுமே மாபெரும் வெற்றி படங்கள். ஒன்று தியாகராஜா பாகவதர் நடித்தது, மற்றொன்று சிவாஜி கணேசன் நடித்தது.

கம்பரின் நிலையில் இருந்து இந்த நிகழ்வை எல்லாம் அசை போடும்போது மனம் மிகவும் அதிகமாகவே வலிக்கிறது. கம்பன் காதலுக்கு எதிரியா, அம்பிகாபதி?


Wednesday 14 March 2012

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (4)

பகுதி 3 

நமது உடலில் அமைந்து இருக்கும் இந்த நுரையீரல், மூச்சுக்குழல் என்பதில் எல்லாம் இந்த ஆஸ்த்மா பிரச்சினை பண்ணுவதில்லை என்றில்லை. மூச்சுக்குழல் இரண்டாக பிரிவடைந்து செல்லும் அந்த இருபகுதிகளில் ஏற்படும் இறுக்கமே ஆஸ்த்மாவுக்கு அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் சுவாசம் செய்வதற்கு நமது நரம்பு மண்டலம் உறுதுணையாக இருக்கிறது.

நன்றி: கூகிள்

நாம் உடற்பயிற்சி செய்யும்போதோ, ஓடும் போதோ நமது சுவாசம் அதிகரிப்பதற்கு நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜனை தரவேண்டியே இந்த சுவாசம் வெகுவேகமாக நடைபெறுகிறது. பெரும்பாலோனோர் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் பல விசயங்களை கட்டுபாடுக்குள் கொண்டு வரலாம் என சித்தர்கள் குறிப்பில் உள்ளதாக கூறுகிறார்கள்.

நமது உடலில் உள்ள தசைகள், செல்கள் எல்லாவற்றிற்கும் மிகவும் சீரான முறையில் ஆக்சிஜன் சென்றாலே போதும். தசைகள், செல்கள் எல்லாம் நன்றாக வேலை செய்யும். யோகா பயிற்சி முறைகள் உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவி புரியும் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த உடற்பயிற்சி குறித்து ஒருவர் நகைச்சுவையாக சொன்னார்.

அதோ அந்த பூங்காவில் நடந்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் இங்கே எப்படி வந்தார்கள் தெரியுமா? என்றார். 


தெரியவில்லை சொல்லுங்கள் என்றார் மற்றொருவர். 


இதோ இந்த கார்களில் தான் வந்தார்கள் என்றார். 

வாழ்க்கையில் சில விசயங்களை எதற்கு செய்கிறோம் என்கிற ஒரு அடிப்படை உணர்வே நமக்கு மறந்து போய்விடுகிறது. நன்றாக மூக்கு முக்க சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தால் சரியாகிப் போய்விடும் என்பது. மருந்து மாத்திரை இருக்கிறதே என கண்டபடி வாழ்க்கையை அமைத்து கொள்வது. இதை எழுதும் நான் ஒன்றும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இப்படியெல்லாம் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என நினைத்தே பொழுதுகள் கரைந்து போய்விடுகின்றன.

இந்த ஆஸ்த்மா ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மரபணுக்கள், அலர்ஜி சம்பந்தமான பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொருவரின் நிலையம் வெவ்வேறாகவே இருக்கிறது. இன்னதுதான் என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையும் கூட நிலவுகிறது. இது போன்ற இறுக்கத்தை தளர்த்தும் மருந்துகள் என சல்புடமோல் பெரிதாக உபயோகப்படுகிறது.

பிரணாயாமம் எனும் மூச்சு பயிற்சி முறை பெருமளவில் இந்தியாவில் பேசப்படுகிறது. இது குறித்து திருமூலர் எழுதிய பாடல்களை பார்க்கலாம்.
இந்த தலைப்பில் எழுதப்பட்ட பாடல்கள் என பதினான்கு பாடல்கள் தென்படுகின்றன. பாடல்கள் குறிப்பு எழுதப்பட்டே இருக்கிறது. நேரடியாக எதுவும் சொல்லாமல் இருப்பது போன்றே தென்படுகிறது. இதற்காக பிரத்தியோக தமிழை கற்று கொள்தல் அவசியமாகிறது.

பன்னிரண்டானை பகல் இரவுள்ளது
பன்னிரண்டானையை பாகன் அறிந்திலன்
பன்னிரண்டானையை     பாகன் அறிந்தபின்
பன்னிரண்டானைக்கு பகல் இரவு இல்லையே.

என்னது பன்னிரண்டு? இது குறித்து சிலர் சில விளக்கம் சொல்கிறார்கள். நமது உடலில் இருக்கும் காற்றினை எப்படி கையாள்வது என்பது குறித்தே இவரது சிந்தனையெல்லாம் இருக்கிறது.

புறப்படு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

ஹீமோக்ளோபின் எனும் புரதம் நமது உடலில் உள்ள ஆக்சிஜனை எல்லா செல்களுக்க்ம் எடுத்து செல்கிறது. அப்படிபட்ட ஆக்சிஹீமொக்லோபின் சிவப்பு நிறத்திலே இருக்கும். எப்போது ஆக்சிஜன் நீங்குகிறதோ சிறு பச்சை வண்ணம் மாறி விடும். எதற்கு இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்த்தால் வாய் வழியாக சுவாசித்து அந்த ஆக்சிஜன் எதற்கு ரத்தத்தில் சேரக்கூடாது எனும் சிந்தனை நமக்கு தேவைப்படுகிறது. மேலும் திருமூலர் சொல்கிறார்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளரில்லை
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளர்க்கு
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

இப்போது ஆஸ்த்மா உடையவர்கள் இந்த கணக்கை எல்லாம் அறிந்து கொண்டால் தீர்வாகி விடுமா என்றால் இதை சொல்வது மிகவும் கடினம். காற்றே உட்புக வழியின்றி போம்போது அங்கே எப்படி எதை பிடித்து நிறுத்துவது?

இந்த உலகில் ஆஸ்த்மாவினால் கிட்டத்தட்ட முன்னூறு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. கிட்டதட்ட 250,000 மக்கள் வருடந்தோறும் உலகில் இறக்கிறார்கள். இந்த ஆஸ்த்மாவிற்கு முறையான சிகிச்சைகள் இல்லையெனினும், மக்கள் தங்கள் வாழ்க்கை முறையின் மூலம் கட்டுபடுத்தலாம் எனவும் ஆய்வு சொல்கிறது.

ஆஸ்த்மாவிற்கான அறிகுறிகள் என மூச்சு இழப்பு, நெஞ்சில் இறுக்கம், தொடர் இருமல் போன்றவை ஆகும். இப்படி வரும்போது உடனடியாக மருந்தினை எடுத்துகொள்வது பயன் தரும். ஆனால் இது போன்ற சூழலில் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லதாகும்.

எந்த ஒரு நோயையும் உதாசீனபடுத்துவது நம்மில் பெரும் அபாயத்தை விளைவிக்கும். தெரிந்தே அந்த தவறை நாம் செய்து கொண்டே வருகிறோம்.

(தொடரும்)




Monday 27 February 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 4

பகுதி - 3 

திருமூலர் கதையை பற்றி அறிந்ததும் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றே மனம் சொல்லி அமைதி கொண்டது. பேய் பிடித்து அதை விரட்ட சொல்லி எங்கள் ஊருக்கு முனியாண்டி என்ற ஒரு பூசாரியிடம் வந்த பலரின் கதையை கேட்டதுண்டு. ஒவ்வொருவரும் ஒரு விதமாகவே சொன்னார்கள். அந்த அம்மா, அந்த பொண்ணு போலவே பேசினாங்க. என்ன நடந்த்துச்சினு, எப்படி நடந்துச்சுன்னு சொன்னாங்க என்றெல்லாம் சொன்னதை கேட்டதும் மனதில் ஆச்சர்யம் பொங்கி வழிந்தது. ஆனால் இதுவரை எதையும் சோதனை செய்தது இல்லை. 

நான் உறங்கி கொண்டிருக்க, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஆவியை வைத்து விளையாடிய கல்லூரி நண்பர்கள் சொன்ன கதை பலிக்காமல் போனது கண்டு புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்தது. 

திருமூலரின் கதை சுருக்கத்தை மீண்டும் பார்க்கலாம். 

திருமூலர் சுந்தரநாதா எனும் இயற்பெயர் கொண்டவர். இவர் வாழ்ந்த காலம்  எட்டாம் நூற்றாண்டு அல்லது பதினோராம் நூற்றாண்டு என்றே கருதபடுகிறது. அதுவும் இவர் எழுதிய திருமந்திரம் மூலமே இவரது காலம் கணிக்கப்படுகிறது. அதாவது எப்போது வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார் என்கிற ஒரு விபரங்கள் கிடைக்காத படச்சத்தில் இவரைப் பற்றிய ஒரு விசயம் பரவலாகப் பேசப்படுவது ஆச்சர்யமே. அதாவது இவர் கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்று கொண்டவராக சொல்லப்படுகிறது. இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்தி மூன்று நாயன்மார்களிலும் ஒருவராகவும் போற்றப்படுகிறார். 

இவர் இமாலய மலைப்பகுதிகளில் தோன்றியவர் என்றும் கூறப்படுகிறது. இமாலய மலைப்பகுதிகளில் தோன்றிய இவர் தென்னிந்தியாவிற்கு வந்து அதுவும் தமிழில் மூவாயிரத்திற்கும் மேலாக பாடல்கள் இயற்றி இருப்பது  பெருமைக்குரியது. பொதுவாகவே இந்த சித்தர்கள், முனிவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் போலவே இடம் விட்டு இடம் செல்லுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மனிதர்கள் வணிகம் செய்ய செல்வார்கள், இவர்கள் எதற்கு இப்படி இடம் பெயன்றார்கள்? 

இவர் பொதிகை மலையில் இருந்த தனது நண்பர் அகஸ்தியரை  காணவே கைலாய மலைகளில் இருந்து கிளம்பினாராம். அன்றைய காலத்தில் தொலைபேசி இல்லை, கடித போக்குவரத்து புறா மூலம் இருந்து இருக்கலாம். இதை எல்லாம் உபயோகிக்காமல் நேரடியாக அகஸ்தியரை காண திருமூலர் கிளம்பிவிட்டார். அப்படி வரும்போது சாத்தனூர் எனும் ஊருக்கு அருகில் பசுக்கள் எல்லாம் இறந்து போன ஒரு மனித உயிரை சுற்றி அழுது கொண்டிருந்தனவாம். அந்த மனிதர் மூலன், அந்த மாடுகளை தினமும் மேய்ப்பவன். இப்படி மாடுகள் அழுவதை கண்டு இரக்கப்பட்ட திருமூலர், தான் ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவு செய்தார். தனது உடலை ஒரு மரக்கட்டையில் பத்திரப்படுத்திவிட்டு இந்த மூலன் உடலில் தான் உட்புகுந்தார். அந்த மாடுகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. அந்த மாடுகளை எல்லாம் வீட்டில் பத்திரமாக சேர்த்துவிட்டு தனது உடலை பார்க்க வந்த திருமூலர் உடல் காணாமல் போனது கண்டு கலக்கமுற்றார். இப்போது மாடுகள் திருமூலருக்கு வழிகாட்டியதா? அல்லது மூலனின் உடலில் நுழைந்ததால் எல்லா விசயங்களும் திருமூலருக்கு நினைவுக்கு வந்ததா? இப்போது தான் மூலன் இல்லை என்கிற ஒரு உணர்வு திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும், அதே வேளையில் மூலன் என்பவனின் எண்ணங்களும் திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும். எது சரி? 

அந்த மூலனின் உடலில் இருந்து கொண்டே பல பாடல்கள் இயற்றியமையால் திருமூலர் எனும் பெயர் அடைந்தார் என்கிறது வரலாறு. இப்போது இந்த பாடலை எழுதியது மூலன் என்பவனா? அல்லது மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதா எனும் திருமூலரா? மூலனின் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் சிந்தனையை உருவாக்கியது திருமூலரின் ஆன்மாவா? அல்லது மூலனின் சிந்தனைகளா? 

சுந்தரநாதா என இருந்தவரை எந்த ஒரு பாடலும் இயற்றியதாக வரலாறு இல்லை. அதுவும் சுந்தரநாதா என இருந்தபோது என்ன மொழி இவர் அறிந்து இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் கிடையாது. மூலன் தமிழன். தமிழில் பாடல் இயற்றிய திருமூலர் இதை எங்கேனும் சொல்லி இருக்கிறாரா என பாடல் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன். 

எதற்கு திருமூலர் கதை? எழுதியவரே இப்படி எல்லாம் எழும் கேள்விகள் என ஆங்காங்கே பதில்கள் எழுதி வைத்து இருக்கிறார். அதே வேளையில் நரம்பு மண்டலத்தை அலசி பார்க்க இதுதான் ஒரு சிறந்த வழியாக தெரிகிறது. பரிணாமம், கடவுள் என்றெல்லாம் பேசி பேசி மொத்த நரம்பு மண்டலத்தை சிதைத்து கொண்டிருக்கிறோமோ என்னவோ! 

நரம்புகள் பற்றிய பார்வை மூலம் எப்படி ஒருவர் முக்காலமும் அறிந்தவராக மாற முடியுமா என்பதை காணலாம். இந்த நரம்பு மண்டலம் தான் சிந்தனைகளை தூண்டுகின்றனவா? நமது மூளைக்கும், விலங்குகளின் மூளைக்கும் என்ன வித்தியாசம்? இந்த மூளையை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடவுள் பகுதி என ராமச்சந்திரன் என்பவர் மூளையில் ஒரு இடத்தை கண்டுபிடித்ததாக நுனிப்புல் நாவலில் எழுதி வைத்தேன். அதாவது கடவுள் பற்றாளர்கள் மத, கடவுள் எண்ணம் எழும்போது மூளையில் ஒரு பகுதி அதிக அளவில் செயல்படுவதாகவும், அதே வேளையில் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு மூளையில் அந்த பகுதி செயல்படுவதில்லை எனவும் சொல்லி இருப்பது விவாதத்திற்கு உரியது என்றாலும் ஒன்றை ஒன்றுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதுதான் அறிவியலில் உள்ள வேலை. 

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றும் இல்லை
அவனன்றி ஊர்புகு மாற்றி யேனே (6 )

மேற்குறிப்பிட்டபடி திருமூலர் வரலாறு என்றே திருமூலரே பல பாடல்களில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடலில் இப்படி எழுதி இருக்கிறார். 

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது 
முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர் 
என்னைநன் றாக இறைவன் படைத்தனன் 
தன்னைநன் றாக தமிழ்ச்செய்யு மாறே (80 )

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே  சதாசிவ னாயினேன் 
நந்தி அருளால்மெய்ஞ்  ஞானத்துள்  நண்ணினேன் 
நந்தி அருளால் நானி ருந்தேனே (92 )

இந்த பாடலில் திருமூலர் ஒரு ரகசியத்தை எழுதி வைத்து இருக்கிறார். மூலனை நாடிப்பின் சதாசிவ னாயினேன். 

அதிலும் ஒரு சிறப்பு. 

சுந்தரனாதன் எழுதியது என்று திருமூலர் சொல்லவில்லை. 

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் 
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் 
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே (99 )

யான் பெற்ற பெறுக இவ்வையகம் என்றே சொல்கிறார் திருமூலர். அதோடு மட்டுமில்லாமல் மூலனின் உடலில் உட்புகும் முன்னர் சிவனோடுதான் இருந்தேன் என்கிறார். சிவநாமங்கள் ஓதிக்கொண்டிருந்தேன். நந்தியின் இணையடிக்கீழ்  இருந்தேன் என்கிறார். 

விநாயகர் பற்றி துதி எழுதியது திருமூலர் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுவது உண்டு. திருமூலருடன் சேர்ந்து  பல முனிவர்களை சந்திப்பதோடு நரம்பு மண்டலம் நோக்கிய பயணம் தொடரும்.  

Wednesday 22 February 2012

ரீமேக், ரீமிக்ஸ் - சீரழிகிறதா சினிமாத்துறை

ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது அத்தனை சுலபமான வேலை அல்ல. அதே போல ஒரு எழுத்தை ரீமேக் செய்வதும் அத்தனை சுலபமான வேலை அல்ல. சிந்தனை மட்டுமே இங்கே அதிகம் வேலை செய்வதில்லை. மற்றபடி பார்த்து எழுதுவதற்கான புலமை, பார்த்ததை மீண்டும் அப்படியே செய்ய  கட்டாயம் திறமை வேண்டும்.

டப்பிங், ரீமேக் என்பதற்கு வேறுபாடு உண்டு. டப்பிங் படங்களில் வசனங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்படும். ரீமேக் படங்களில் மொத்த விசயங்களையும் மாற்றி செய்யலாம், ஆனால் மூலபடத்தினை ஒட்டியதாக அமையவேண்டும் எனும் நிர்பந்தனைகள் ரீமேக் படத்திற்கு உண்டு. இன்றைய தினத்தில் ரீமேக் படங்கள் மிகவும் அதிகம் தமிழ் சினிமாவில் எட்டி பார்த்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் 'பெரிய' நடிகர்கள் என சொல்லப்படுபவர்களே இந்த ரீமேக் கலாச்சாரத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

இவர்கள் ஆங்கிலப்படத்தை, இந்திப்படத்தை, தெலுங்கு படத்தை, மலையாள படத்தை ரீமேக் செய்வதோடு மட்டுமில்லாமல் பழைய தமிழ் படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதைபோல தமிழ் படங்களும் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எல்லா மொழிகளிலும் எடுத்து வெளியிடப்படும் திரைப்படங்கள் வெகு சில உண்டு. இப்படி ரீமேக் செய்வது இவர்களிடம் சிந்தனைகள் வற்றி போய்விட்டன என்பதையே காட்டுகிறது என சொல்வோர் உண்டு. 'அரைத்த மாவை அரைக்கும் மசாலா, காதல் கதைகள்' எல்லாமே ஒரு விதத்தில் ரீமேக் படம் தான் என்பதை இந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உணர்வது இல்லை.

ரீமேக் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றவையா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒரு மொழியில் உள்ள ரசனை மற்ற மொழியில் இருப்பது இல்லை. பொதுவாக மலையாள படங்களை தமிழில் அப்படியே ரீமேக் செய்தால் ஒரு படம் கூட ஓடாது என உறுதியாக சொல்லலாம். மலையாளத்தில் வெளியான சிறந்த படங்களை தமிழுக்கு என்றே மசாலா தடவி விற்றால் தான் வெற்றி பெறும் நிலைதான் தற்போது நிலவி வருகிறது.

ரீமிக்ஸ் பாடல்கள் அதைவிட மிகவும் கொடுமை என்போர் சிலர். மூல பாடலின் ஜீவனை ஒட்டு மொத்தமாக கொன்றுபோடும் அளவிற்கு 'டன் டன்' என இந்த காலத்து இசைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு அவை வலம் வந்து கொண்டிருக்கின்றன. தெய்வீக பாடல்கள் முதற்கொண்டு எல்லாமே இன்று ரீமிக்சியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் வெகுவாக ஜனங்களால் ரசிக்கப்படுவது என்பது ஓரளவுக்கு உண்மைதான். பாரதியார் கவிதைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தனித்தன்மை என்பதை பொறுத்தே ஒருவரின் திறமை பெரிதளவு பேசப்படுகிறது. தனக்கென ஒரு அடையாளத்தை காட்டாத எவருமே உலகில் பெரிதாக சாதித்தது இல்லை. ஒரிஜினாலிட்டி, நாவல்டி என சொல்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் எல்லா துறைகளுமே கிட்டத்தட்ட மூட்டை கட்டி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. எதற்கு கிடந்து மெனக்கெடுவானேன். சிம்பிளா ஒரு விசயத்தை செய்றதை விட்டுட்டு எதுக்கு காம்ப்ளிகேட் பண்ணனும் என்றே பலரும் நினைக்கிறார்கள். உடனடி வெற்றிதான் இப்போதைய இலக்கு. உடனடி வெற்றி உடனடியாக மறைந்து போய்விடுகிறது, அது காலத்திற்கும் நிற்பது இல்லை.

அதைப்போலவே வலைப்பூக்கள் எழுதும் பலரிடம் ஒரிஜினாலிட்டி இருப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு நிலவி வருவது தவிர்க்க இயலாதது. அவசர உலகில் நின்று நிதானமாக எழுதும் நிலை எல்லாம் வெகு குறைவானவர்களிடமே இருக்கிறது என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது.

நாவல்கள், கவிதைகள், உபநிடதங்கள், வேதங்கள் என முன்னோர்கள் எழுதியவற்றை பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்கள். இங்கே மூலத்தினை சிதைக்காமல் எழுதுவது மிகவும் அவசியம் ஆகிறது. இப்படி பல காலத்திற்கு முன்னாள் எழுதியவகைகள் திரும்பவும் எழுதுவதால் எழுத்துகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன, சிந்தனைகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் ஆகிவிடாது. அதைப்போலவே ரீமேக், ரீமிக்ஸ் போன்றவைகள் ஒரு துறையை சீரழித்து கொண்டிருக்கின்றன என்பது ஆகாது. பழையனவாகிய  அவை எல்லாம் புதுப்பிக்கப்பட்டு கொண்டு வருகின்றன என்றுதான் அர்த்தம் கொள்ளலாம். 

Friday 3 February 2012

ரஜினிகாந்தும் இலக்கியமும்

ரஜினி இலக்கிய விழாவில் பங்கு எடுக்க போகிறார் என்றதுமே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இந்த மனிதருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என நினைப்பு வந்து அமர்ந்தது. அதோடு நான் இது சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை வலைப்பூ ஒன்றில் படித்தபோது எஸ் ரா மீதான குற்றச்சாட்டு கண்டு மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இப்படி எல்லாம் செய்து இருப்பார்களா என யோசிக்க வைத்தது. 

அந்த குற்றசாட்டின் சாராம்சம் என்னவெனில் எஸ் ராவுக்கும், சாகித்ய அகாடெமி விருது பெற்ற வெங்கடேசன் என்பவருக்கும் தீராத பகை என்பதாகவும், எஸ் ராவின் மரியாதை குறைந்து போனதாகவும், அதனால் அந்த மரியாதையை நிலைநிறுத்த எஸ் ரா, ரஜினியை வைத்து விழா எடுக்கிறார் என்பதுதான். 

இத்தனைக்கும் எஸ் ரா எனது பக்கத்து ஊர்க்காரர். நான் அவரை பார்த்தது இல்லை, படித்தது இல்லை. எடின்பரோ நண்பர் ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த 'உறுபசி' கூட இன்னமும் புத்தக அலமாரியில் உறங்கி கொண்டிருக்கிறது. சில முறை எடுத்து பார்த்துவிட்டு வாசிக்காமல் வைத்து இருக்கிறேன். சமீபத்தில் வாசித்த தமிழ் நாவல் என எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஊரில் இருந்தவரை சில புத்தகங்கள் கல்கத்தாவில் இருந்த நூலகங்களில் இருந்து எடுத்து வந்து படித்து இருக்கிறேன். என்னுடன் படித்த அன்பழகன் சார், எனது சீனியர் அண்ணாதுரை சார் இவர்கள் எல்லாம் தமிழ் புத்தகங்கள் எல்லாம் வாரம் வாரம் அள்ளிக்கொண்டு வந்து படிப்பார்கள். ஆச்சர்யபட்டு இருக்கிறேன். 

இப்படி இலக்கியங்கள் படைத்து கொண்டிருக்கும் இலக்கிய எழுத்தாளர்கள் இடையே போட்டி பொறாமை என்றெல்லாம் அந்த வலைத்தளத்தில் படித்தபோது மிக மிக வருத்தமாகவே இருந்தது. மனதில் என்னவெல்லாமோ எழுத தோன்றியது, பின்னூட்டம் எதுவும் இடாமல் வந்துவிட்டேன். ஏனெனில் சென்னையில் இருக்கும் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளமால் என்ன சொல்வது எனும் மனநிலைதான். எப்போது இந்த இலக்கிய விழா நடக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் ரஜினியும் எலக்கியமும் என தலைப்பிட்டு ஒன்றை எழுத நினைத்தபோது ரஜினியின் பேச்சை கேட்காமல் எழுதக் கூடாது என தள்ளிவைத்தேன். அது மிகவும் சரியாக போய்விட்டது. ரஜினிகாந்தும் இலக்கியமும் என நன்றாகவே தலைப்பிட்டு எழுத வைத்தது. 

ரஜினி மேடை பேச்சுகளில் எப்போதுமே குட்டி குட்டி கதை சொல்வார். அந்த கதையில் பல அர்த்தங்கள் பொதிந்து இருக்கும். எழுத்து என்பதன் வலிமை என்ன என அவர் பேசிய பேச்சு அற்புதம். அதிலும் கடவுள் இருக்கிறார் என்பதற்கான கதையை சொல்லி அதற்கு பின்னர் அவர் முடித்த விதம் அட்டகாசம். அந்த கதையின் கடைசி வரிகள் தான் ரஜினி ஒரு சிறந்த இலக்கியவாதி என காட்டியது. என்ன சொல்கிறாய் என்பதல்ல எழுத்து, எப்படி சொல்கிறாய் என்பதுதான் எழுத்து. 

எத்தனை விசயங்கள். தன்னை தாழ்த்தி பேசும் பேச்சில் மனிதர் உயர்ந்து நிற்கிறார். இதைவிட அந்த வலைத்தளத்தில் எழுதி இருந்த குற்றச்சாட்டுதனை பொடிபொடியாக்கும் வண்ணம் எப்படி இந்த விழா நடக்க காரணமானது என அவர் சொன்ன விதம் எப்படியெல்லாம் உலகில் பிறர் பொய் பேசித் திரிகிறார்கள், வன்மை வைத்து திரிகிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. ரஜினி ஏமாறவில்லை. ஏமாற்றவும் இல்லை. 

தமிழ் எழுத்தாளர்கள் என ஜெயமோகன், சாருநிவேதிதா ( இவரை பலநாட்கள் பெண் எழுத்தாளர் என்றே நினைத்து இருந்தேன், சுஜாதாவை நினைத்தது போல) இவர்களுக்கு இடையே நடக்கும் எதோ அறபோராம் , அக்கப்போராம் அதையெல்லாம் படித்து எழுத்தாளர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் எனும் நினைப்பை அகல வைத்தது ரஜினியின் பேச்சு. 

இவரது பேச்சை கண்டு ரசிக்க இதோ இங்கே. இரண்டாம் பகுதி. 

ஒரு குட்டி சுயசரிதை எழுதப்பட்டு விட்டதாம். பிறர் மனம் நோக வேண்டாம் என வெளியிடவில்லை என அவர் சொன்னதில் இருந்தே ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். 




Wednesday 30 June 2010

காமம் - 6

கண்ணம்மா பற்றி எழுதும்போது இப்படித்தான் எழுதுகிறார் பாரதியார். இந்த பாடல்களில் இருக்கும் காதல் ஒரு சஞ்சலமாகவே பாரதிக்குத் தோணவில்லை. அது ஒரு மாபெரும் இன்பமாகவே அவருக்கு இருந்து இருக்கிறது.

1 காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே.

2 . நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று
சரண மெய்தினேன்

காதல்தனை மையமாக வைத்து வேண்டும்போது மிகவும் அழகாகவே பாடுகிறார்.

பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்.

இந்த காதல் ஆசை மோகம் எனும் கட்டுக்குள் விழுந்துவிடும் போது பாரதியார் தள்ளாடுகிறார். ஒரு விரக்தியின் நிலையில் இருந்தே மகாசக்திக்கு விண்ணப்பம் வைக்கிறார்.

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடு.

இந்த பாடலை கேட்கும்போது மோகம் அத்தனை கொடியதா? என்றே கேள்வி எழுந்துவிடுகிறது. மனைவியின் விருப்பத்திற்கோ, கணவனின் விருப்பத்திற்கோ எதிராக இருவருக்குள் ஏற்படும் கலவி கள்ளத்தனம் என்கிறது சட்டம். மனைவியானவர், கணவன் தன்னை மோசம் செய்துவிட்டார் என வழக்கு போடலாம் என்கிறது அந்த சட்டம். இதோ இப்படிப்பட்ட மோகம் மிகவும் கொடியதுதான். அவரவர் சுய விருப்பத்திற்காக காதல் இங்கே பலி கொடுக்கப்படுவதுதான் உண்மை.

ஒரு பாடலை (பாடல் கீழே தரப்பட்டு உள்ளது) எழுதிய காரணத்திற்காக மட்டுமல்ல, துறவி வேடம் கொண்ட துரோகத்தனத்திற்காக பட்டினத்தார் மேல் எனக்கு கோபம் இருந்தது  உண்டு. புத்தரை  துறவி என கருதுவதில்லை, ஒரு துரோகியாகத்தான் அவர் எனது கண்ணுக்கு தென்பட்டது உண்டு.

பட்டினத்தார் ஒரு தாம்பத்ய உறவை எத்தனை கீழ்த்தரமாக எழுதிவிட்டார் என்றுதான் தோன்றியது. தான் வாழும் வாழ்க்கை முறையை உயர்த்திப் பேசி அடுத்தவர் வாழும் முறையை தாழ்த்திப் பேசும் சராசரி மனிதரை போல்தான் அந்த பாடல் தோன்றியது. இதில் காதல் எங்கே இருக்கிறது. வெறும் காமம் என்றுதான் பார்த்து இருக்கிறார் பட்டினத்தார். அதன் காரணமாக பரிதாபம் மட்டுமே அவர் மீது மிஞ்சுகிறது.

நாப்பிளக்கப் பொய் உரைத்துனவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

இதோ பத்திரகிரியார். என்ன விளையாடுகிறாரா? கவிதையின் வரிகளுக்கு வேண்டுமெனில் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?

வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்?

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்?

இந்த பாடல் எல்லாம் வந்தவிதத்திற்கான காரணம் காதல் தொலைந்து போனதுதான். காமம்தனை முன்னிறுத்தி வாழ்ந்த மன்னர் கால வழக்கம் இவருக்கு பெரும் எரிச்சலை தந்து இருக்கலாம். ஆக, காமம் அத்தனை கொடியதா?

சூர்ப்பனகை கொண்ட காம வேட்கையை கம்பர் இப்படித்தான் விவரிக்கிறார்.

நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள்

வான்தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள்
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள்

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவேன் போக்கு அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்

எவர் மீதும் எப்படி வேண்டுமானாலும் ஆசை வந்து தொலையும். ஆனால் காதல் ஒரு முறையோடு வந்துதான் நிற்கும். காதல் வேறு, ஆசை வேறு. காதல் ஆசையாய் மாறாதவரை பாரதியின் மோகத்தை கொன்றுவிடு வரி அவசியமில்லை. ஆசை காதலாக மாறும்போது அங்கே நின்னை சரணடைந்தேன் என்றுதான் பாடத் தோன்றும்.

எனக்கு நின்னை சரணடைந்தேன் எனும் பாடல் மிகவும் அதிகமாகவே பிடித்து இருக்கிறது.

Thursday 24 June 2010

கம்பராமாயணம் - 1

பாயிரம் 


கடவுள் வணக்கம்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

சிற்குணத்தர் தெரிவு அரு நல நிலை
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றனுள்
முற் குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்று ஆரோ

ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார்

அவையடக்கம்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து ராமன் கதைஅரோ

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையி னோர்புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உரை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பாஅரோ

முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பண்ணப் பெறுபவோ?

அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?

நூல் வரலாறு

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர்ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ

களம் கண்ட காவியம்

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் ஆறு மாக் கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே.

Thursday 6 May 2010

காமம் - 5

காமம் - 4

எந்த ஒரு ஆணும்  சரி, பெண்ணும் சரி தனது அந்தரங்கங்களை  அத்தனை எளிதாக வெளியே சொல்வதில்லை. விளையாட்டாகப் பேசித் திரிதல் வேறு வகை சார்ந்ததாகும். தனது ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் எவரும் விரும்புவார்கள். தன்னால் வெளிப்படையாக உலகில் நடத்த முடியாதவற்றை கனவுகள் மூலம் தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு பலர் தங்களை தள்ளிக் கொள்வது நடந்து வரும் செயலாகும். சமுதாய கட்டமைப்பில் இருந்து கொண்டு பாலியல் சிந்தனைக்கு உட்பட்டு இருக்கும் பலர் காமத்திற்கு அடிமைப்படுதலோடு தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட காமம் அவசியமா என்பதை சிந்திக்கும் திறன் கூட இருப்பதில்லை.

எவருக்கும் தெரியாமல் தப்பு செய்வதில் இருக்கும் ஈடுபாடு மன நிலை நோயாளியாக ஒருவரை மாற்றி விடுகிறது. விளையாட்டாக ஆரம்பிக்கும் செயல்கள் பல விபரீதமான நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. இதில் காமத்தின் செயல்பாடு மிகவும் கொடுமையானது. பெண்களை போகப் பொருளாகவே பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் ஆணின் கண்கள் போலவே, ஆண்களை போகப் பொருளாகப் பார்க்கும் பெண்கள் என சமுதாயத்தில் அதிகம் இருப்பதில்லை. இத்தகைய வேறுபாடுகள் இடத்திற்கு இடம் மாறுபாடு அடையும். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன் என்பது ஒரு ஆணுக்கு பெருமை தரக் கூடிய விசயமாகவும், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை விபச்சாரி எனும் பட்டத்துடனும் பார்க்கும் இந்த சமுதாயத்தின் புத்தி மிக மிக கோணலானது.

தாய், சகோதரி என  வேறுபாடு படுத்தி பார்க்கும் அளவுக்கு சிந்தனை பெருகிப் போன கட்டத்தில் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பெண்களைப் பார்க்கும் போது மட்டும் ஏன் இந்த காம உணர்வு ஒரு கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இதற்கு  வயதில் ஏற்படும் கோளாறு என்றோ, இயற்கையான விஷயம் இது என்றோ எவரும் காரணம் கற்பித்துக் கொள்ள இயலாது. சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

பிறன் மனை கள்வர்கள் என ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எச்சரிக்கை செய்துதான் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண் தான் பார்க்கும் எல்லா பெண்களையும், ஒரு பெண் தான் பார்க்கும் எல்லா ஆண்களையும் காதல் செய்ய, திருமணம் முடித்துக் கொள்ள நினைப்பது சுரப்பிகளினால் ஏற்படும் மாற்றம் என்று எவரும் சொல்லித் திரிய இயலாது. சுரப்பிகள், நரம்புகள் செயல்பாட்டினை மீறி எண்ணங்கள் ஒன்று அனைவரிடமும் இருந்து கொண்டு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.

பயத்துடனே எவரும் தப்பினை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த தப்பானது தண்டிக்கப்படாமல் போகும்போது மேலும் மேலும் அந்த தப்பை தெரிந்தே செய்கிறார்கள். ஒரு பெண் தனது கணவனுடன் வாழ்ந்து கொண்டே மற்றொரு மணமான ஆணுடன் தவறான உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டபோது ஆண் மட்டுமே தண்டிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு வெறும் வசவு பேச்சுகளோடு நின்று போனது. ஏனெனில் ஆண் மட்டுமே தவறு செய்பவனாக பார்க்கப்படுகிறான். இதில் பெண்களுக்கு என விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற பெண்களை  கிராமத்து வழக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை தள்ளி வைக்கிறேன். இப்படிப்பட்ட மறைமுகமான தவறான நடைமுறைக்கு என்ன காரணம் எனில் சமுதாய கட்டமைப்புகள் மட்டுமல்ல, தனது காமத்தை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள தெரியாதவர்கள் தான். மேலும் வாய்ப்பு கிடைக்காதவரை அனைவரும் யோக்கியர்கள் என சொல்லக் கேள்விப்பட்டிருப்பதையும்  காணும்போதே, மானம் பெரியதென பலர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி எனும் கட்டுப்பாடுடன் வாழும் பல கோடி மக்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

காமத்தை முன்னிறுத்தி எவரும் காதல் புரிவதில்லை. காதல் வசப்படும் போது காமம் தொலைப்படும். குடும்ப வாழ்க்கைக்கு முன்னர் ஏனோ தானோவென திரியும் பலரும் குடும்ப அமைப்பில் உட்படும் போது எப்படி ஒரு கட்டுக் கோப்புடன் வாழச் சாத்தியப்படுகிறார்கள்? சமுதாய அமைப்பில் தங்களுக்கென ஒரு நிலையை ஏற்படுத்தி கொள்ளும்போது ஒரு அச்சம் வந்து சேரும். ஆனால் அதையும் மீறி தனது நிலை தெரிந்தே தப்பினை செய்யத் தூண்டுவது கட்டுப்பாடில்லாத காமம்.

இந்த காமத்தை அறவே துரத்துவது பிரம்மச்சரியம். ஆனால் பிரம்மச்சரியம் என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. என்னைப் பாதித்த ஒரு கதை உண்டு.  உயர் வகுப்பை சேர்ந்த ஒருவரின் மனைவி கடும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவே தினமும் அவர் தனது மனைவிக்கு பணிவிடைகள் செய்து வருவதையே பெரும் பேறாக கருதி வருகிறார். ஊரில் இருப்பவர்கள்  தருவதை  மட்டும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார். இவ்வாறு இருக்கும்போது ஒரு பணியாக அவர் ஒருமுறை தனியாய் காட்டின் வழியில் நடந்து செல்லும் போது எதிர்ப்பாதையில் தாழ்ந்த வகுப்பினை சார்ந்த பெண் ஒருவர் வருவதை காண்கிறார். அப்பொழுது அவரின் மனம் அல்லாடுகிறது. சல்லாபத்தில் தள்ளாடுகிறது. இப்பொழுது தான் பல வருடங்களாக கட்டிக்காத்த பிரமச்சர்யம் பற்றி, மனிதரில் ஏற்றத் தாழ்வு பற்றி அவருக்கு எந்த சிந்தனையும் எழவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். எவரும் கண்ணுக்குத் தென்படவில்லை என்பதை உறுதி செய்ததும் அந்த பெண் அருகில் வந்ததும் அந்த பெண்ணின் கையைப் பிடிக்கிறார். பிரம்மச்சர்யம் தொலைந்து போகிறது.

இப்படித்தான் பலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முறை, சமுதாயத்தில் இருக்கும் நன்மதிப்பு என பல விசயங்களை இந்த கட்டுப்பாடில்லாத காமத்திற்கு பலியாக்கி விடுகின்றனர். இது இயற்கையான விசயமா? அல்லது கட்டுப்பாடில்லாத மனதினால் ஏற்படும் அசிங்கமா?

(தொடரும்)

Friday 12 March 2010

காமம் 4

வர்ணனைகள், வார்த்தைகள் காமத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாலுணர்வு தொடர்புடைய வார்த்தைகள் மிகவும் கொச்சையாகவேப் பார்க்கப்படுகிறது. அவை பிறரை அவமானப்படுத்தவும், கேவலப்படுத்தவும், திட்டவுமே உபயோகப்படுகிறது. சாதாரணமாக எழுதப்படும் கதைகளில், கவிதைகளில் இது போன்ற வார்த்தைகள் தாராளமாக உபயோகிக்கப்படுவதில்லை. அது எழுதுபவரின் எண்ணத்தைப் பொருத்தும் அமைந்துவிடுகிறது, மேலும் என்ன இப்படியெல்லாம் எழுதி இருக்கிறார் எனும் கண்டனத்திற்கும் உள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் எழுத்துகள் திருத்தி அமைக்கப் பட்டுவிடுகிறது. இது போன்ற எழுத்துகளை தவிர்ப்பது என்பது அவரவர் மனதிற்கு உட்பட்டதாகவே அமைந்து விடுகிறது. அங்கே ஒரு சாரரின் பார்வையில் வார்த்தைகள் ஆபாசத்தன்மைகளை பெற்று விடுகின்றன. ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளை தமிழில் திட்டத்தான் உபயோகப்படுத்துகிறோம், ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் சாதாரணமாகவே பேசுகிறார்கள்.

ஒருமுறை ஒருவரின் பேட்டிதனை வலைப்பூவில் படித்தபோது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது, ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவரது பார்வையில் பார்த்தபோது ஓரளவுக்கு அவர் சொல்வது நியாயமாகத்தான் தெரிந்தது. விளையாடும்போது, திட்டும்போது உபயோகிப்படும் வார்த்தைகள் எழுத்தில் இருந்தால் எழுத்தின் நாகரிகம் குறைந்தா போய்விடும் என்கிறார் அவர். எழுத்து நாகரிகம் குறையாது, ஆனால் படிப்பவர்கள் மனதில் ஒருவித வெறுப்பு ஏற்படும். ஆனாலும் பலரும் அப்படித்தான் எழுதுகிறார்கள். இது தவறு, இது தவறில்லை என்பது எழுதும் விசயத்தைப் பொருத்து அமைந்து விடுகிறது என்பதை உற்று நோக்குதல் அவசியமாகும்.

'வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது' என ஊர் வழக்கில் சொல்வார்கள். நாம் கோபப்படும்போது உபயோகிக்கப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் நாம் உபயோகிக்க வேண்டியதன் அவசியமே இருக்காது. இருப்பினும் அதனை அவசியமாக்கிக் கொள்கிறோம். கோபத்தினை வெளிக்காட்டும் ஒரு பெரிய ஆயுதம் மெளனம் ஒன்றுதான். பேசாத வார்த்தைகளையெல்லாம் இந்த மெளனம் பேசிவிடும்.

கவர்ச்சிகமான வார்த்தைகள், துள்ளலுடன் கூடிய ஆபாசமான வார்த்தைகள் காமம்தனை விரும்புவோர்க்கு மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணும், காமம் பிடிக்காதோர்க்கு மனதில் எரிச்சலை ஏற்படுத்தும். காமத்தின் மூலதனம் ஆசை மொழி, வார்த்தைகளை மென்மையான வருடலாக மாற்றும் நெருடல் இல்லாத மொழி.

ஆண்குறி, பெண்குறி என்றே பொதுவாக தமிழில் எழுதுவது சரியாகப்படும். ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் பாடம் படித்தபோதுதான் பெண்குறிக்கு யோனி என்று மற்றொரு பெயர் உண்டு என அறிந்தேன். அந்த பாடத்தை மறைத்து வைத்துப் படிக்கத்தான் தோன்றியது, மறைத்து வைத்துத்தான் பார்க்கத் தோன்றியது. அப்போதெல்லாம் இலக்கியம் எவர் படித்தது.

ஆண்குறிக்கு இதுவரை வழக்கத்தில் இல்லாத வேறு மொழி அறிந்தது இல்லை. கல்லூரிகளில் கவிதை எழுதத் தொடங்கியபோதுதான் பெண்குறிக்கு இலக்கிய வார்த்தை என்னவென்று அறிய முடிந்தது. தமிழ் அகராதியில் தேடிப் பார்த்ததில் அல்குல் என்றே இருந்தது. தமிழ் இலக்கியமோ, தமிழ் அகராதியோ படிக்காதவர்களிடம் போய் இந்த வார்த்தையைச் சொல்லி வேறு அர்த்தம் சொன்னால் தவறாகவா நினைக்கப் போகிறார்கள்? வார்த்தை, அது வார்த்தை தான். அதை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் வார்த்தையின் அமைப்பு இருக்கிறது.

திருப்பாவையில் ஒரு பாடல் வரும், அந்த பாடலில் அல்குல் என்றே ஆண்டாள் எழுதி இருப்பார். இதுகுறித்து பெரும் சர்ச்சைகள் இலக்கிய வரலாறில் எழுந்தது உண்டு. அதே வரியில் ஆண்குறி பற்றியும் எழுதி இருப்பதாக சொல்வார்கள். எனக்கு இலக்கியமோ, அல்லது ஆண்டாள் என்ன சொல்ல வருகிறார் என்பதை பிறரின் விளக்கவுரையில் இருந்து அறிந்து கொள்ள முடியாததாலோ ஆண்டாளின் எண்ணம் நிச்சயம் கொச்சைப்படுத்துதலில் இல்லை என்பதை என்னால் உறுதி செய்து கொள்ள இயலும், பிறர் அதை உறுதி செய்ய கொள்ள வேண்டுமென வாதிட எனக்கு அவசியமில்லை. அதோ அந்த பாடல்.

''கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து, 
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் 
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.'' 


பெண்களின் மார்பகங்கள் காமத்தின் ஒரு பெரும் அங்கமாகவே இருக்கிறது. காமம் பற்றிய வர்ணனைகளில் மார்பகங்கள் கிளர்ச்சியூட்டுவதாகவே அமைந்துவிடுகிறது. 'கச்சணிந்த கொங்கை மாந்தர்' எனும் பாரதியின் வரிகளைப் படித்தபோது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. எப்படி இப்படி இவர் எழுதலாம் என நினைத்தேன். 'வசந்தவள்ளி பந்து பயின்றாலே' எனும் பாடலிலும் இந்த கொங்கை எனும் வார்த்தை உபயோகிக்கப்பட்டு இருப்பதாகவே நினைவில் இருக்கிறது. ஆனால் அங்கே எழுதப்பட்டதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை, இருப்பதை அப்படியே மிகைப்படுத்தாமல் சொல்லப்பட்டது. இதில் எந்த தவறு இருப்பதாகவோ, இவை காமம்தனை அதிகரிப்பதாகவோ எனக்குத் தெரியவில்லை.

கொங்கை என்பது சற்று நாகரிகமாகத்தான் இருக்கிறது, 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' எனும் பழமொழியை சற்று அநாகரிகமாக பெண்களின் மார்பகங்களை காட்டி ஒரு திரைப்பாடல் காட்சி அமைத்து இருந்தபோது என்ன ரசனை என்றேதான் தோன்றுகிறது. நேரடியாகவே முலை என்ற வார்த்தையை அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் படித்தபோது அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் இவை காமத்தை கிளர்ச்சி அடையச் செய்வதில்லை. மேலும் எவருமே தாய்ப்பால் என்றுதான் சொல்வார்களே தவிர முலைப் பால் என்றோ கொங்கை பால் என்றோ சொல்வதில்லை. அந்த பாடல் உங்கள் பார்வைக்கு.

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் 
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை 
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் 
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே 


நேரடியாகச் சொல்லப்பட்டதன் காரணமாக இது அநாகரிமாகவே இல்லை என்றே பலர் வாதிடலாம். ஆனால் ஒன்றின் மேல் வேறொரு பொருள் வைத்து பேசுவது, எழுதுவது சற்று அநாகரிகமாகவேத் தெரிகிறது. இப்படித்தான் சென்னை மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அன்பழகன் கவிதை எழுதினான்.

'நீ என்னை கைகாட்டி வழியனுப்பிய போது
கைகள் மட்டுமா ஆடியது அந்த
கயிலாய மலைகளும் அல்லவா ஆடியது'

இதில் வக்கிரம் இருக்கிறதா? காமத்தைத் தூண்டும் பொருள் அமைந்திருக்கிறதா என்பதை படிப்பவர்களைப் பொருத்தே அமைந்துவிடும். இப்படி நிறைய விசயங்கள் சொல்லலாம். சொல்லப்பட்ட வார்த்தையில் அகங்கார அர்த்தம் தேடுவதும் நம்மில் இயல்பு. இவையெல்லாம் கேட்கும்போது நமக்குத் தெரியாமலேயே சிரித்து மகிழ்வோம் என்பதை அறியத் தொடங்குங்கள்.

இப்படித்தான் இந்த தொடர் எழுதுவதற்காக பல இடங்களில் தேடிப் பார்த்தபோது சிறுவயதில் ஒரு பாடல் ஒன்றுக்காக நூறு தடவை தங்கமகன் எனும் திரைப்படம்தனை பார்த்த ரசிகர் ஒருவர் இருந்தார் என்றே கேள்விபட்டு இருந்தேன். அந்த பாடலைப் பற்றிதான் அந்த இணையதளத்தில் வெகுவாக விவாதிக்கப்பட்டு இருந்தது. 'மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே' எனும் வரிகள். இந்த வரிகளுக்கான அர்த்தம் இரட்டை அர்த்தம் தெரிந்து கொண்டவருக்கும், இரட்டை அர்த்தத்தில் பார்ப்பவருக்கும் மட்டுமே புரியும், இப்படி எழுதி வைத்துவிட்டார்களே, இதை நானும் பாடிக்கொண்டு திரிந்தேன் அப்போது என் அன்னை என்னைக் கண்டித்தார் என ஒருவர் எழுதி இருந்ததைப் பார்த்தபோது அப்படி அர்த்தம் பார்த்தால் பல தமிழ் திரைப்பாடல்களை முணுமுணுக்கவே இயலாது. இங்கே இவை எல்லாம் காமம் எனும் உணர்வை கிளர்ச்சியூட்டச் செய்கின்றனவா? இல்லை என்றே சொல்வாரும் உளர்.

இப்படி ஒன்றின் மீது பொருள் வைத்து பேசப்படும் வார்த்தைகள், வர்ணனைகள் கிளர்ச்சியூட்டுவதை விட நகைச்சுவையாகவேப் பார்க்கப்படுகிறது, அது மட்டுமில்லாமல் எரிச்சல் ஊட்டுவதாகவும் அமைந்து விடுகிறது. தமிழ் இலக்கியங்களில் எழுதப்படாததா என்றே பலரும் கேட்கிறார்கள், காமம் பரவலாகவே பரந்து கிடக்கிறது என சொல்வாரும் உளர், அங்கே காமம் ரசிக்கப்படுகிறது, காம உணர்வுகள் கிளறப்படுவதில்லை. காமசூத்திரமும் சரி, சமண முனிவர் எழுதிய இலக்கியமும் சரி, ஜெயத்தக்கத் தேவர் எழுதிய பாடல்களும் சரி காமம் மென்மையானது என்றே சொல்லிவிட்டுப் போகும்.

ஒரே விசயத்தை ஆபாசம் என்றும், இலக்கியம் என்றும் நமது மனம் ஏன் அப்படி ஒரு நிலையை எடுத்துக் கொள்கிறது?

Thursday 18 February 2010

எதற்காக எழுதுகிறீர்கள்?

எழுத்தாளர்கள் அல்லாத ஒவ்வொருவருக்கும் சொந்த அலுவல்கள் இருக்கின்றன, அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய பின்னர் எழுத்துக்கும், வாசிப்பதற்கும் என நேரம் ஒதுக்கி ஒருவர் பதிவு இடுவது என்பது வாசிப்பது என்பது அத்தனை எளிதானதும் அல்ல. விசயங்கள் அறிய வேண்டியிருக்கிறது, சரியான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டியிருக்கிறது. சொந்த படைப்புகள், பிறர் தந்த படைப்புகள் என்பது பதிவிடும் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலையில் உயரிய ஒன்றுதான். 

மேலும் பதிவுகளிடும் பதிவாளர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தேவைப்படுகிறது என்பது பொதுவாக ஒப்புக்கொண்ட வாதமாக இருந்தாலும் எழுதுபவர் எப்பொழுதுமே தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் உற்சாகம் என்பது பிறர் மூலம் வந்தால், பிறர் இல்லாத பட்சத்தில் உற்சாகம் தொலைந்து போய்விடும். எழுதும் எழுத்து என்றாவது எங்காவது எப்படியாவது பயன் அளிக்கும் என்ற திடகாத்திரமான நம்பிக்கை ஒன்றே தொடர்ந்து எழுத்துப் பணியில் ஒருவரை இருக்க வைக்கும். 

ஒரு பதிவரின் கருத்துக்கு மாற்று கருத்துத் தெரிவிக்கும்போது அந்த பதிவரின் சிந்தனைக்கு எதிர்மறையான சிந்தனை ஒன்று எழுந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு எழும்போது தனது சிந்தனையை அந்த பதிவர் சரியே என நிரூபிக்கும் நிலைக்கும், எதிர்மறை சிந்தனையாளர் தனது சிந்தனையை சரியே என நிரூபிக்கும் நிலை ஏற்படும் பட்சத்தில் மாற்றுக் கருத்து என்பது மறைந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் எழுதுகின்ற பதிவர்கள் மனநிலையில் 'அட அவருடைய கருத்தும் பரவாயில்லையே, ஆனா நம்ம கருத்து இது' என எண்ணம் எழும்போது அங்கே கருத்து வேறுபாடுத் தோன்றாது. ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என எண்ணம் எழும். 

மாற்றுக் கருத்துக்கும், கருத்து வேறுபாடுக்கும் என்ன வித்தியாசம் எனில் ஒருவர் கொண்ட கருத்தினில் வேறுபாட்டு நிலையை எடுத்துக் கொண்டு எழுதியவரின் நிலையை சந்தேகிப்பது, எழுதியவரை குற்றம் சொல்வது என தனிமனிதரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவது போன்ற நிலையை கருத்து வேறுபாடு உருவாக்கிவிடும். ஆனால் மாற்றுக் கருத்து என வரும்போது அங்கே அத்தகைய சூழ்நிலை தவிர்க்கப்பட்டு விடுகிறது. தனிமனிதரின் செயல்பாடுகள் குறித்து எந்த கேள்விக்குறியும் எழுவதில்லை. 

பொதுவாக எதனையும் சொந்தப் பிரச்சினையாக நினைக்கும்போது செயல்பாடுகள் குறித்து வருத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமது எண்ணத்துக்கு எப்படி மற்றொருவர் மாறிப் போகலாம் என எண்ணம் எழும்போது அங்கே எப்படியாவது நமது எண்ணமே சரி என்கிற தோற்றத்தை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 

ஒரு கருத்தினை எடுத்துக்கொள்ளும் விதம் பொருத்தே ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. மாற்றுக் கருத்து உட்பட. ஆனால் இவர்னா இப்படித்தான் என்கிற மனப்பக்குவம் ஒவ்வொரு பதிவரிடமும் இயற்கையாகவேத் தோன்றுவதால், குறிப்பிட்ட பதிவர் என்ன எழுதினாலும் அந்த எழுத்தின் தன்மைக்கு ஒரு முலாம் பூசப்பட்டு காட்சி அளிப்பதை எவராலும் மறுக்க இயலாது. 

எழுத்துகள் 

சாம்ராஜ்யங்கள் கட்டவும் அழிக்கவும் உதவின,
விடுதலை வேட்கையைத் தூண்டின, 
பாலியல் எண்ணங்களை பரவசப்படுத்தின, 
எதிரிகளை உருவாக்கின,
நண்பர்களை கொண்டு வந்து சேர்த்தன,
வரலாறை திரித்தும் திரிக்காமலும் பேசின, 
கற்பனைகளை, மந்திரங்களை பிரபலமாக்கின
ஆராய்ச்சிகளுக்கு அடித்தளம் போட்டன
இறைத்தூதர்களுக்கும் ஒரு மொழியாகின
மனதின் பிம்பங்களாயின
மரணமில்லா நிலையும் பெற்றன

இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்?  

Thursday 11 February 2010

காமம் - 3

காமம் 1  காமம் 2  படிக்க.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.  (நன்றி 



1997 ல்,  முதன் முதலில் திருப்பாவை மனப்பாடம் செய்ய ஆரம்பித்த காலம் அது. திருப்பாவையை மனனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்தது எனத்  தெரியாது.  முப்பது பாடல்களையும் மனனத்தில் வைத்திருந்தேன். காலையில் எழுந்ததும் வழக்கம் போல பத்தியும், சூடமும் ஏற்றி வைத்து சில நிமிடங்களாவது இறை வணக்கம் செலுத்தாமல் கல்லூரிக்கு சொல்லித் தர செல்வதில்லை. 

இந்த பாடலை இன்று பாடினாலோ, கேட்டாலோ  கூட கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும். பல பாடல்கள் மறந்து போயின. ஆனால் இன்னும் மனதில் ஒரு ஆசை இருக்கிறது,  எப்படியாவது என்னை மீண்டும் தேடி எடுத்து விடவேண்டும் என. 

'மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்' எனச்  சொல்லும்போதே வாழ்க்கை இன்ன பிற ஆசைகளுக்கு அடிமையாகிவிடுமோ எனும் அச்சம் எழத்தான் செய்கிறது. அப்படி அடிமையாவதன் பொருட்டு கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் கோலோச்சத் தொடங்கிவிடுகின்றன.  சாந்த நிலையை அடைய வேண்டிய மனம் தள்ளாடி திரிகிறது.  காமம் அத்தனை மோசமானதா? இறைவன் மேல் வைக்கப்படும் காமம் மட்டும் என்ன தனிச் சிறப்பு உடையதா? 

காமம் ஒரு உணர்வு. அது பக்குவப்படுத்தப்படாத வரைக்கும் அந்த காமத்தினால் சீரழியும் மனிதர்களை எதுவும் செய்ய இயலாது. பக்குவப்படுத்தப்பட்ட காமம் காதலுக்கு பெருமை சேர்க்கும், ஒரு போதும் சிறுமை சேர்க்காது. பக்குவப்படுத்தப்பட்ட காமம் வாழ்க்கைக்கே பெருமை சேர்க்கும். பேரின்பத் தழுவல்களில் இறைவனை பற்றி சொல்லும் போது கூட இப்படித்தான் எழுத முடிகிறது. 

உணர்வுகளினை உறுப்புகளில் உலர வைத்து
திணறும்படி இச்சைதனை பரப்பி வைத்து
ஒதுக்கித் தள்ளி உன்னிடம் ஒட்டிக்கொள்ள
பதுக்கிய உணர்வு எவ்விதம்

இதே  வரிகளை வேறு கண்ணோட்டத்தில் நினைத்துப்  பார்க்கிறேன். உலகமெல்லாம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உள்ளத்தில் உணர்வுகள் கிளறப்படுகின்றன. இப்போது உணர்வுகளினை கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பது என்பது அவரவர் மன வலிமையை பொறுத்தே அமைந்து விடுகிறது. தவறில்லை என நினைத்து செயல்புரிவோர்கள் பற்றி எதுவும் சொல்ல இயலாது. 'இதிலென்ன இருக்கு' என விளையாடும் மனிதர்களை பற்றி எதுவுமே எழுதவும் முடியாது. 

இந்த காமம் பற்றி மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் எழுதியதைப் படித்தபோது மனதில் பெரும் கலக்கம் ஏற்படத்தான் செய்தது.  மனைவியைத்  துன்புறுத்தும் கணவர்களில் ஒருவராகத்தான் காந்தி எனது கண்ணுக்கு தெரிந்தார். மகாத்மா எனப் போற்றபடுவதால் அவர் தவறே இழைத்து இருக்கமாட்டார் என்றெல்லாம் நான் நினைத்து இருக்கவில்லை ஆனால் அவரது வாழ்க்கை முறை என்னை ஆச்சரியப்படுத்தியது. சக உயிரை அடிமைப்படுத்தும் எண்ணமும், மிரட்டி உருட்டி வைக்கும் கொடுமையும் இன்றும் உலக அளவில் பெரும்பாலும் நடந்து வருவது கண்டு மனதில் ஏற்பட்ட கலக்கமே அது. இந்த காமம் எந்த வகையில் சேர்க்கப்படும்? 

மனித இனத்தில் இனப்பெருக்கம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்தால் உருவாவது என்பதுதான் அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறாதவரைக்கும் இருந்த நிலை. இன்றைய சூழல் எத்தனையோ மாறிவிட்டது. ஆண் மற்றொரு ஆண் மீது கொள்ளும் காமம், பெண் மற்றொரு பெண் மீது கொள்ளும் காமம் என  சமுதாயம் எந்த நிலையையும்  ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கு வந்துவிட்டது.  எப்படிப்பட்ட காமமும் சரிதான் என ஏற்றுக்கொள்ளும் சமுதாயமாகத்தானா மாறிவிடப் போகிறது? 

'மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்'