Friday 17 June 2016

இது கர்மவினை அல்ல, பரிணாமம்

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - முன்னுரை

பரிணாமம் குறித்துத்தான் எழுத வேண்டும் என நினைத்து இந்த கதையைத் தொடங்கினேன். அப்போது பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் எனும் இந்த வாக்கியம் மிகவும் பிடித்து இருந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டேன். எதற்காக இதைச் சொன்னார்கள் என்பதை விடுத்து இந்த வாக்கியத்திற்கு இரண்டு விதமான பொருள் தரலாம். ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவது பெண்களின் சமயோசித புத்திகளில் ஒன்று. மற்றொன்று இந்த பிரபஞ்சமானது ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து இன்று கடவுள் இவ்வுலகை படைத்தார் என்பதற்கான காரணியாக பெண்கள் விளங்குகிறார்கள் எனவும் கொள்ளலாம்.

இன்றைய மருத்துவ உலகில் தாயின் கர்ப்பப்பை இல்லாமல் ஒரு குழந்தையை முழுமையாக உருவாக இயலாத நிலைதான் இருந்து வருகிறது. அப்படியே வைத்துக் கொண்டால் இந்த உலகின் சந்ததிகள் தாயின் வழித் தோன்றல்களாக இருப்பார்கள். தாய் தனது சந்ததிகளை பேணி காத்து வராது போயிருப்பின் உயிரின பரிணாமத்தின் நிலையை யோசிக்க இயலாது. 

இப்படித்தான் கதையின் பாதையை சிந்தித்து வைக்க கர்மவினை என்ற ஒரு விஷயம் நிறைய இடைஞ்சலாகவே இருந்தது. போன ஜென்மத்தில் நீ அதுவாக பிறந்து இருப்பாய், அடுத்த ஜென்மத்தில் நீ இதுவாக பிறப்பாய் என்றெல்லாம் மனிதர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சரியானது இல்லை என முழுவதும் விலக்கி வைத்தாலும் உலகில் நடக்கும்  ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆச்சரியமும் ஆதங்கமும் கொள்ள வைக்கின்றன.

காதல், கல்யாணம், குடும்பம் என ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டாலும் மனிதனின் எண்ணங்கள் ஒரு வட்டத்தில் நின்றது இல்லை. மேலும் பரிணாமத்தின் 'வலுவுள்ளதே பிழைக்கும்' எனும் கோட்பாட்டின் படி தனக்கு சாதகமான விஷயங்களை செய்து முடித்துக்கொள்ள எந்த ஒரு எல்லைக்கும் ஒரு உயிரினம் போகும் ஆனால் மனிதன் மட்டும் காதல், உறவு, நட்பு என சொல்லிக்கொண்டு தியாகம் என அடைமொழி கொடுத்து மரணித்துப் போகவும் தயங்கமாட்டான்.

நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும் என நம்பி வாழ்ந்து கொண்டு இருப்பதால் இந்த கர்ம வினை மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆனால் மனிதன் சிந்திக்காமல் பரிணாமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து இருந்தால் இப்படிப்பட்ட எண்ணங்கள், சிந்தனைகள் ஒருபோதும் வந்து இருக்காது.

ஒருவனின்  வாழ்வில் என்னவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டோ அல்லது தொடர்பு இன்றியோ நடக்கிறது போலவே இந்த கதையை முடித்து வைத்தேன்.

கர்ம வினை என்பதை விட பரிணாமம் மிகவும் சரியாகவே இருக்கிறது.



Wednesday 15 June 2016

இறந்தது போல இருந்தது இல்லை இறந்தது

மாறா மரபு - முன்னுரை


ஒருவேளை இப்போதே இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என யோசித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு அப்படி ஒரு நினைப்பு வந்து இருக்கத் தேவை இல்லைதான்.

இறப்பு பற்றிய நினைப்பு  ஒன்று வேதனைபடுபவனுக்கும்  மற்றொன்று சந்தோசத்தில் துள்ளிக்குதிப்பவனுக்கும் வந்து சேர்கிறது.

இவ்வுலகில் நிறைய விசித்திரங்கள் நடைபெறுவது உண்டு. பொருள் பணம் என எதுவும் இல்லாதவன் கூட இறப்பது குறித்து யோசிப்பது இல்லை. எப்படியேனும் வாழ்நாளை கழித்து விட வேண்டும் எனும் அக்கறை மட்டுமே இருக்கும். பொருள் பணம் இருந்தும் இறப்பது குறித்த சிந்தனை கொண்டவர்களும்  உண்டு.

இந்த உலகில் மரணத்தை வென்று விடும் ஒரு அரிய  வாய்ப்பு கிட்டிவிடும் எனில் அதைவிட மிகச் சிறந்த ஒரு விஷயம் இருக்கவே இயலாது. ஆனால் எத்தனை பேர் இந்த உலகில் வாழ வேண்டும் என பிரியம் கொள்கிறார்கள்.

இன்னும் அவன் யோசித்துக் கொண்டு தான் இருந்தான். தான் பெற்ற பெயர், படிப்பு, நட்பு, உறவு என என்னவென்னவோ அவனது மனதில் வந்து நிழலாடியது. அவனுக்கு இன்னமும் திருமணம் ஆகி இருக்கவில்லை.

இத்தனையும் விட்டுவிட்டு இறந்து போய்விட்டால் என்ன செய்வது எனும் சிந்தனையுடன் அவனது பொழுது கழிந்து கொண்டு இருந்தது.

அப்பொழுதுதான் அவனது யோசனை மரபணுக்கள் மீது உட்கார்ந்து கொண்டது. இந்த மரபணுக்களில் மாற்றம் செய்துவிட்டால் மரணத்தை வென்றுவிடலாம் எனும் ஒரு யோசனை. அதன்படி அவனது சிந்தனை இன்ட்ரான் மீது சென்று அமர்ந்து கொண்டது.

இன்ட்ரான் எக்சான் எல்லாம் மரபியலில் ஒரு முக்கிய கூறு, அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஆனால் அவனது எண்ணம் இரண்டுமே வெவ்வேறு என்று எண்ணத் தோனியது. அவனைச் சொல்லி ஒரு குற்றமும் இல்லை. இன்ட்ரான்கள் இல்லாது போனால் மனிதன் நோயின்றி வாழ இயலும் என கணித்து வைத்தான்.

பிறவா வரம் வேண்டும் என பாடி வைத்தவர்கள் பலர். இறவா நிலை வேண்டும் என துடிதுடித்தவன் அவன். அவனது சிந்தனையும் செயலும் அதைச் சுற்றியே இருந்தது.

எதுவெல்லாம் சாத்தியம் இல்லையோ அதுவெல்லாம் கற்பனை ஆகிறது. எப்போது கற்பனை சாத்தியம் ஆகிறதோ அப்போது அது சாதனை ஆகிறது. அவனது கற்பனை சாத்தியமா என அவனால் கூட சொல்ல இயலாது. ஆனால் சாதிக்கப்போவதாகவே அவன் எண்ணிக்கொண்டு இருந்தான்.

அவன் இப்படித்தான் பிரபலமாக சொல்லிக் கொண்டான். உலகில் நோயற்ற மனித இனத்தை உண்டு பண்ணுவதே என்  வாழ்வின் இலட்சியம். கேட்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது.

மனிதன் நோயினால் மட்டுமே மரணம் அடைவது இல்லை என அவன் சிந்திக்க மறந்து இருந்தான்.

எத்தனையோ உயிரினங்கள் தோன்றியும், அழிந்தும் போன இந்த பூமியில் இறந்தது போல இருந்தது இல்லை... இறந்தது. 


நன்றி

அன்புடன்
வெ. இராதாகிருஷ்ணன்
இலண்டன்