Thursday 29 January 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - யூதர் உலகம்

முந்தைய பகுதி   சென்ற பதிவுக்கு சில எதிர்ப்புகள்  இருந்தது என்பதால் இந்த தொடரை எழுதுவதை தள்ளிவைக்கவில்லை. அவ்வப்போது எழுதுவதுதான் வாடிக்கை. என்றோ வாழ்ந்து அழிந்தவர்களின் வரலாற்றை அருகில் இருந்து பார்த்தது போல  எழுதப்படும் விசயங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க இயலாது.

எகிப்து, பாபிலோனிய பயணத்தின் போது  இந்த இஸ்ரேல் குறித்து என்னவென பார்க்க ஆவல் பிறந்தது. இன்றைய இஸ்ரேல் குறித்து எழுதப்படும் பார்வை அல்ல இது. மேலும் பைபிளில் குறிப்பிடப்படுவது எல்லாம் அத்தனையும் பொய் புரட்டு என ஒதுக்கி விட இயலாது, அதே வேளையில் எல்லாம் உண்மை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சுவாரஸ்ய வாசிப்புதனை முன்னர் எழுதப்பட்டு இருப்பவை தந்து போகின்றன. அதை எடுத்துக்கொண்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் என இப்போதும் கட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் ஒன்றின் மீது நம்பிக்கை, தைரியம் இல்லாதவன் எதிரியை பலவீனப்படுத்தும் முறை என ஒன்று உண்டு.

இந்த இஸ்ரேல் முன்னர் எகிப்தியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இறைத்தூதர்கள் என அறியப்பட்டவர்களின் கட்டுபாட்டில் இருந்தது என பைபிள் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட 3035 வருடங்களுக்கு முன்னர் சால் என்பவன் ஒரு பேரரசனாக இருந்தான். இவனைப் பற்றி குறிப்பிடும்போது இவன் ஸ்திரதன்மை  அற்றவனாக இருந்து இருக்கிறான். மன உறுதி அற்றவர்கள் வாழ்க்கையில் சீரழிந்து போவார்கள் என்பதற்கு இவன் ஒரு உதாரணம். அதற்குப் பின்னர் வந்த டேவிட் என்பவன் இந்த இஸ்ரேலிய பேரரசுதனை விரிவாக்கம் செய்தான். இவனது காலத்தில் ஜெருசலம் புனித தலமாக  விளங்கி வந்தது. இவனது மகன் சாலமன் ஒரு மாநிலத்தை பன்னிரண்டு மாவட்டங்களாக பிரித்தான். இவனது காலத்தில் வியாபாரம் பெருகியது. ஜெருசலத்தில் பெரிய கோவில் ஒன்றை கட்டினான் சாலமன்.

பழங்குடியினரை இந்த சாலமன் மிகவும் மோசமாக நடத்தினான் எனும் குற்றச்சாட்டு உண்டு. இந்த காலகட்டத்தில் இஸ்ரேலில் வன்முறைகள் வெறியாட்டம் போட்டன. எப்போது ஒரு மக்களின் உரிமைகளை மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். அது அந்த காலம் என்றல்ல, எந்த காலமும் அப்படித்தான். அஷ்ஷிரியர்கள் இந்த இஸ்ரேலை குறி வைத்து இருந்தார்கள். வட  பகுதியில் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அஷ்ஷ்ரியர்கள் இஸ்ரேலை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். இஸ்ரேலின் தென் பகுதி மட்டுமே சாலமன் மற்றும் அவனது மகனின் வசம் இருந்தது. சாலமன் வட  பகுதி மக்களை ஒழுங்காக நடத்தி இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது.

இந்த அஷ்ஷிரியர்களை எதிர்த்து வந்தவன் ஹெசக்கியா. பெர்சியன் அரசன் பாபிலோனியாவை கைப்பற்றியதும் யூதர்களை அங்கு அனுமதித்தான். அவர்களுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்கள் எல்லாம் ஜெருசலத்தில் கட்டப்பட்டன. இஸ்ரேலியர்கள் இதுதான் சமயம் என மத வழிபாடுகளில் மிகவும் ஈடுபாடு கொண்டார்கள். பெர்சியர்களின் தலைமையில் யூதர்கள் பெரும் சமூகமாக உருவானார்கள். இந்த மத சுதந்திரம் எல்லாம் ஒரு முன்னூறு ஆண்டுகள் செழிப்பாக இருந்தது.

கோவில்கள் கட்டுவது என ஒரு கூட்டமும், கோவில்களை இடிப்பது என ஒரு கூட்டமும் அன்றே இருந்து இருக்கின்றன. மேலும் கோவில்கள் மூலம் சேர்க்கப்படும் பொருளை கைப்பற்றி அரசையே மாற்றியவர்கள் இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் ரோமானியர்கள் இஸ்ரேலில் காலடி எடுத்து வைத்தார்கள். ஒற்றுமையின்மையை பயன்படுத்தி ரோமானியர்கள் ஜெருசலத்தினை கைப்பற்றினார்கள், அதோடு கோவில்களை இடித்து தள்ளினார்கள்.

யூதர்கள் இஸ்ரேலில் இருந்து உலகம் எல்லாம் பரவிய காலம் அது. யூதர்கள் ஜெருசலத்தில் தங்கக்கூடாது என கிட்டத்தட்ட 2125 வருடங்கள் முன்னர் ஒரு அரசர் கொண்டு வந்த சட்டம் யூதர் சமூகத்தை அலங்கோலம் செய்தது. இப்போது நமது இலங்கையை எடுத்துக் கொள்வோம். இலங்கையில் ஒரு கொடுங்கோலன் ஆட்சி செய்தான், தமிழர்களை இலங்கையில் இருக்கவே விடாமல் உலகம் எல்லாம் விரட்டிட செய்தான் என 2025 வருடங்கள் கழித்து படிப்பவனுக்கு அது எல்லாம் உண்மை அல்ல என நினைப்பான் எனில் நாம் கண்டது எல்லாம் பொய்யா?

ஒற்றுமையின்மை, பலமின்மை வாழ்க்கையில் தனி மனிதரை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே சீரழித்து விடும்.

(தொடரும்)


Monday 19 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை நிறைவு 4

நிறைய நாட்கள் கழித்து முதன் முறையாக ஒரு தமிழ் இதழை வாசித்து முடித்து இருக்கிறேன். முத்தமிழ்மன்றத்தில் நிறைய பேர் நிறைய எழுதுவார்கள். 2006 ம் வருடத்தில் இருந்து அங்கே உறுப்பினராக இருந்தேன். அப்போது திரு. ரத்தினகிரி, திருமதி பத்மஜா போன்றவர்களின் எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவர்கள் தந்த கருத்துகளால் எனது நுனிப்புல் முதல் பாகம் நாவல் வளர்ந்தது என்றால் மிகையாகாது, அந்த நன்றியை அவர்களுக்கு முதல் நாவலில் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் அவர்களது ஊக்கம் இருந்தாலும் எழுதுவது எனது எண்ணமாக இருந்ததால் இரண்டாம் பாகம் அவர்களின் அதிக பங்களிப்பு இன்றி எழுதி முடித்தேன். மூன்றாம் பாகத்திற்கு எவரேனும் என்னோடு பயணிக்க கூடும். குழு மனப்பான்மை, சச்சரவுகள் என பல இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அப்படித்தான் எழுதினேன். பின்னர் வலைப்பூ ஆரம்பித்தபிறகு முத்தமிழ்மன்றம் மட்டுமல்ல எனது வலைப்பூவில் எழுதுவது கூட குறைந்து போனது. இதற்கு நான் 2010 ல் மீண்டும் ஆலயம் ஒன்றில் தொண்டுபுரியும் அறங்காவலராக பணிபுரிய சென்றது என்று சொல்லலாம். அவ்வபோது எழுதி வந்து இருக்கிறேன், முற்றிலும் நிறுத்தியது இல்லை. அப்படி இந்த ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் முன்னர் எழுத ஆரம்பித்து தமிழ் எழுத்துகள் வாசித்து வந்தது மகிழ்வாக இருந்தது.

அப்படி ட்விட்டரில் எழுத்து மூலம் பழகியதால்  திரு. என். சொக்கன், திரு கண்ணபிரான் ரவிசங்கர், 'திருப்பூர் இளவரசி' சு.ஐஸ்வர்யா இவர்களின் பழக்கம் அவ்வளவாக இல்லாதபோதும் இவர்களிடம் நுனிப்புல் பாகம் 2 க்கு அவர்களது எண்ணங்களை வாங்கி புத்தகம் வெளியிட முடிந்தது. அதுவும் திரு என். சொக்கன் அவர்கள் என் நாவலை திருத்தித் தந்தது இங்கு நினைவுகூறத்  தக்கது. இப்படி பலர் எழுதிக்கொண்டு இருக்கும் ட்விட்டரில் இருந்து ஒரு மின்னிதழ் வெளியே வந்து இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஆசிரியர் ஒரு எழுத்தாளர் என்றாலும் முதல் பார்வையில் சொன்னது போல ரைட்டர் என செல்லமாக அழைக்கப்பட்டாலும், ட்விட்டர் உலகில் இருந்து பலரை இந்த தமிழ் மின்னிதழில் அறிமுகம் செய்து இருக்கிறார். அது எழுத்துக்கு கொடுக்கப்பட்ட கௌரவம்.

பொதுவாக நான் எதையும் விமர்சனம் பண்ணும் தகுதி உள்ளவன் என என்னை எண்ணுவதில்லை. அதனால் எனது சினிமா விமர்சனம் கூட மேலோட்டமாகவே இருக்கும். விமர்சனம் என்பது ஒன்றை பண்படுத்த உதவ வேண்டும், பழுதுபடுத்த அல்ல. மென்மேலும் முயற்சிக்க வைக்க வேண்டும், முடங்க வைக்கக்கூடாது. இங்கே இந்த தமிழ் மின்னிதழில் எனது பார்வையை முன் வைத்து இருக்கிறேன், இது எனக்கே கூட ஒரு புது அனுபவமாக இருந்தது. பக்கத்து ஊர்க்காரர் எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துலக பயணம் எனக்கு ஆச்சரியம் உண்டுபண்ண வைத்தது. எங்கள் ஊரில் கூட சில எழுத்தாளர்கள் உண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எல்லாம் எங்கள் கிராமத்தில் உண்டு. அப்படி சிறு வயதில் எழுத ஆரம்பித்தேன். கல்லூரியில் படித்தபோது இப்படி நோட்டில் கிறுக்கிக் கொண்டே இருக்காதே என அறிவுரை எல்லாம் எனக்குத் தந்தார்கள். நான் எழுத்துலகில் ராமனுஜனாக எழுத்தில் பரிமாணம் எடுக்க இயலாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் எனது திமிர், ஈகோ. எழுதி ஏமாற்றுகிறார்கள் என்பதே எனக்குள் இருக்கும் எழுத்து மீதான விமர்சனம். எழுதுபவன் எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும்  இறங்க வேண்டும் என எண்ணுபவன், அதனால் எனது எழுத்துகளில் ஒருவித ஏக்கப் பெருமூச்சு அவ்வப்போது இருந்து கொண்டே இருக்கும். அதை எல்லாம் தாண்டிப் பார்த்தால் எழுத்து ஒரு தவம். அது சிலருக்கே கை வந்து இருக்கிறது. அப்படி பலரை கௌரவம் செய்து இருக்கிறது இந்த தமிழ்  மின்னிதழ். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

தமிழ் திரைப்பட விருதுகள் - 2014  எனக்கு சிறு வயதில் இந்தவிருதுகள் பட்டியல் எல்லாம் பார்க்க பேரானந்தமாக இருக்கும். இப்போது கூட தேசிய விருதுகள் பட்டியலை ஆர்வத்தோடு பார்ப்பேன். எனக்கு பிலிம்பேர் விருதுகள், இன்னபிற விருதுகள் எல்லாம் பல வருடங்களாக ஈடுபாடு தந்தது இல்லை. தேசிய விருது மட்டுமே நான் அதிகம் விரும்பி பார்ப்பது. இங்கே என்ன விருதுகள் என்ன தரப்பட்டு இருக்கிறது என்று பார்த்தால் பெரும்பாலான படங்கள் நான் இன்னமும் பார்க்கவில்லை. இதற்கு ஒரு காரணம் நமது ஊரில் உள்ளதுபோல திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு படங்கள் வருவது இல்லை. குறிப்பிட்ட சில படங்களே வரும். மேலும் பெரும்பாலான படங்கள் இணையம் அல்லது டிவிடியில் பார்க்க வேண்டிய சூழல். ஊரில் இருக்கும்போது பாடல்கள் நிறைய கேட்பது உண்டு, இங்கே வெகுவாக குறைந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கலை உலகினருக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக விருது என்பது விமர்சனத்திற்குரியது, பலருக்கு திருப்தி தருவதைவிட அதிருப்தி தந்துவிடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விருது வழங்குவது தொடர்ந்து நடைபெறுவது நல்ல விஷயம்.

அடுத்து படித்த எழுத்து சற்று வித்தியாசமானது.  முதலில் சில வரிகள் படித்ததும் தமிழ் - மின்னிதழை மூடிவிட்டேன். பொதுவாக இப்படி இருப்பவர்கள் என குறிப்பிட்டு வாசிக்க வேண்டாம் என சொல்லிவிட்டால் அதில் ஏதேனும் ஒன்று எனக்குப் பொருந்தும் எனில் கூட நான் வாசிப்பதே இல்லை. எழுதுபவருக்குத்  தரும் மரியாதையாகவே நான் அதை கருதுவேன். அப்படித்தான் படிக்கவே வேண்டாம் என முடிவு செய்தேன். ஆனால் இந்த தமிழ்-மின்னிதழ் அந்த கொள்கையை தகர்த்த சொன்னது. முழுமையாகப் படிக்காமல் வாசிப்பது முழுமை அடையாது என வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. புதிய எக்சைல் - புனைவும் புனைவற்றதும் - சுரேஷ் கண்ணன் எழுதி இருக்கிறார். அதிலும் எழுதுவதற்கு ஆசிரியரின் பரத்தை கூற்று தனை காரணம் காட்டுகிறார். உங்ககளை  வாசிக்கக் வைக்கவே அப்படி தொடக்கத்தில் எழுதினேன் என்கிறார். அப்படி எல்லாம் வாசிக்கமாட்டேன் சுரேஷ்கண்ணன். வாசிக்காதே என்றால் வாசிக்கவே மாட்டேன். எவருக்காகவும் எழுத்து சமரசம் செய்யக்கூடாது, தனது நிலையை எழுத்து மாற்றக்கூடாது என எண்ணுபவன் நான். காமக்கதைகளுக்கு இங்கு மவுசு அதிகம் என நான் எழுதிய கதை ஒன்றில் ஒரு வார்த்தை கூட வேறு விதமாக எழுதி இருக்க மாட்டேன். வாசகனுக்கு எழுத்தாளனை விட கற்பனை சக்தி அதிகம் என நினைப்பேன். கதாபாத்திரங்கள் மூலம் அழகாக பல விசயங்களை எழுதி இந்த புதிய எக்சைல்  எனும் தமிழ் நாவலுக்கு இரண்டு விமர்சனங்கள் வைத்து இருக்கிறார். அவரே குழப்பம் அடைந்து இருக்கிறார் என முடிவில் நையாண்டியாக முடிக்கிறார். சுவாரஸ்யமான எழுத்து.

காமத்தை முன்னிறுத்தி எழுதப்படும் கதைகளில் சமீபத்தில் ராஜன் என்பவர் எழுதிய தேர்க்கால் எனும் சிறுகதை அப்படியே மனித உலகில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளை பிரயோகித்து இருப்பார். வாசகன் இதைக் கண்டு அஞ்சக்கூடாது அதுதான் நிதர்சனம். இதைவிட மோசமான வார்த்தைகளை எங்கள் கிராமத்தில் உபயோகம் செய்வார்கள். சுரேஷ் கண்ணன் மறைமுகமாக சில வார்த்தைகளை உபயோகம் செய்கிறார். ஜ்யோவரம் சுந்தர் என நினைக்கிறேன், ஒரு கட்டுரையில் அப்படியே வார்த்தைகளை உபயோகம் செய்து இருப்பார்.  எழுத்து நாகரீகம் கருதி அப்படியே எவரும்  எழுதுவதில்லை. ஆங்கில நாவல்கள் விதிவிலக்கு என கருதுகிறேன். இப்போதெல்லாம் எவ்வித மன சஞ்சலம் இன்றி எதையும் வாசிக்க முடிகிறது. எனது மனம் சிறுவயது கட்டுக்கோப்பில் இருந்து வெகுவாக வெளியேறிவிட்டது ஆனால்  என்னால் இப்படி எழுதவே இயலாது, எழுத வேண்டிய நிர்பந்தமும் எனக்கு இல்லை. எழுதுபவர்கள் எழுதட்டும்.

இசை - இசையை நோக்கி நகர நகர இசையை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறேன். ராகங்கள் எல்லாம் கற்று தாளங்கள் கற்று நானும் ஒரு இசை மேதை ஆக விருப்பம். ஆனால்  சாத்தியமற்ற ஒன்று. இளையராஜா, இசைஞானி. இவரது ரமண மாலை, திருவாசகம் எல்லாம் நான் திரும்பத் திரும்ப கேட்பவை. ஆனால் என்ன ராகம் என்ன இசை வாத்தியங்கள் என்ன என்றெல்லாம் மனம் சஞ்சரிப்பது இல்லை. வார்த்தைகளுக்காக நான் மயங்குவேன். காரணமின்றி கண்ணீர் வரும் என்றவுடன் எனக்கு கண்ணீர் வரும். ஆனால் எஸ். சுரேஷ் சுவப்னம் கனவுகளுக்கான இசை என ஒரு ஆல்பத்தை அழகாக இசைத்து இருக்கிறார். கானடா, காம்போதி, ஜோக், பிலஹரி என பல ராகங்கள், மிருதங்க இசை, பாடல் பாடும் அழகு என ஆராதனை செய்து இருக்கிறார். நிச்சயம் இவரை நம்பி இந்த ஆல்பம் கேட்டு மகிழலாம் என நினைக்கிறேன்.

இந்திரன் எழுதிய பந்து புராணம். அட்டகாசம். எனது கிரிக்கெட் வாழ்நாளை அசைபோட வைத்தது. என்ன இந்திரன் வேறு ஊர்களுக்கு சென்று விளையாடவில்லையா என்றே கேட்கவேண்டும் என இருக்கிறேன். வேறு ஊர் அணிகளில் அவர்களுக்காக களம் இறங்கவில்லையா என்ற கேள்வியும். எங்கள் ஊரில் பெண்கள் கிரிக்கெட் விளையாண்டது இல்லை. அவர் குறிப்பிட்டது போல ஊரில் உள்ள அக்காக்கள் எல்லாம் வேற பொழப்பே இல்லையா இப்படியா வேகாத வெயிலில் விளையாடுறீங்க நீங்க சின்ன பசங்க எங்க மாமாவை எல்லாம் ஏன்டா  இப்படி விளையாட இழுத்துட்டு போறீங்க என திட்டாத நாளில்லை. வெயிலில் விளையாடியே கருத்து போனேன் என வீட்டில் சொல்வார்கள். பழைய நினைவுகளை அசைபோட வைத்த அற்புத விபரிப்பு, அதுவும் கடைசியில் முடிக்கும் போது  ஒரு காவியம் போல முடித்து இருக்கிறார்.

பாலா மாரியப்பனின் நிழோலோவியம். ஏதேனும் தென்படுகிறதா என பூவினை தாண்டி பார்த்தேன். புகைப்படம் அருமை. எனக்கு ஓவியம் என்றால் கொள்ளைப்பிரியம். ஓவியத்தில் மனதை அழகாக சொல்லலாம். ட்விட்டரில் ஓவியம் வரையும் ராகா, பாரதி, அகழ்விழி, அண்ணே ஒரு விளம்பரம், தமிழ்பறவை, பிரசன்னா மீனம்மாகயல் என ஒரு பெரிய ஓவியர்கள்  பட்டாளமே உண்டு. எனது  நுனிப்புல் பாகம் 2 நாவலுக்கு அகழ்விழி தான் ஓவியம் வரைந்து தந்தார். அப்படியே நான் அவரது ஓவியத்தை எடுத்துக்கொண்டது அவருக்கு சற்று ஆச்சரியம். இந்த தமிழ் மின்னிதழில் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த இயக்குனர் கே பாலசந்தர் அவர்களைப் பற்றிய நினைவு கூறல் என தனது அருமையான அனுபவத்தை அவர் ஒரு தொடர்கதை என கார்த்திக் அருள் அழகாக எழுதி இருக்கிறார். அதுவும் அவருடன் நேரடியாய் பேசிய அனுபவம் சிறப்பு. நானும் கே பாலசந்தர் படங்களை பார்க்கலாம் என இருக்கிறேன்.  தமிழ் மின்னிதழின் கடைசி பக்கத்தில் பரணிராஜன் வரைந்த பாலசந்தர் ஓவியம் அப்படியே பாலசந்தரை ஒரு விழாவில் அமர்ந்து இருப்பதை பார்ப்பது போன்ற போன்ற உணர்வைத் தந்தது. இவர் வரையும் ஓவியங்கள் அத்தனை தத்ரூபமாக இருக்கும். மாதுளம் பழம் ஒன்று உரித்து அது தட்டின் மேல் இருக்கும் ஒரு ஓவியம் பிரமிப்பு தரும், பாராட்டுகள். எப்படி இப்படி வரைவது என இவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ளவும் ஆசைதான்.

இணைய நூற்றாண்டு குறித்து சிறகு அவர்கள் மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். மிகவும் உண்மை. இந்த உலகம் இணையம் மூலம் பெரும் உதவியையும் அச்சுறுத்தலையும் சந்தித்து வருகிறது. அருமையான  எழுத்து. இறுதியாக திறமைசாலிகள்  என ட்விட்டர் மூலம் அடையாளம் காட்டப்படும் எழுத்து என எஸ்கே செந்தில்நாதனின் குவியொளி வெகு சிறப்பு. ஆத்திசூடி போன்று டிவிட்டர்சூடி. எழுதிய அனைவருக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த தமிழ் மின்னிதழ் குறித்து இரு வாக்கியங்களில் ஒரு விமர்சனம்.

'நிர்வாணத்தை மறைக்க விரும்பாத ஒரு அழகியல் -தமிழ் மின்னிதழ்' 

'நிர்வாணத்தை மறைத்த பின்னும் கண்களை அகற்ற இயலாத பேரழகியல் - தமிழ் மின்னிதழ்'

எனது பார்வை நிறைவுப் பெற்றது. இந்த தமிழ் மின்னிதழ் காலாண்டு இதழாக தொடரும். அன்றும் தமிழ் - மின்னிதழில்  பகிரப்படும் படைப்புகள் குறித்து இங்கே எழுதுவேன் எனும் நம்பிக்கையுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்.

 (முற்றும்)

Saturday 17 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 3

என்னால் எழுத்தாளன் ஆக இயலாது என உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டபோது எழுதுவது எனக்கு மிகவும் எளிதானது. நான் பாடப்புத்தகங்கள் வாசித்து வளர்ந்தவன். எனக்கு இந்த நாவல், சிறுகதை தொகுப்பு எல்லாம் அதிகம் வாசிப்பது ஒரு பதினாறு வயதுடன் முடிந்து போனது என்றே கருதுகிறேன். அவ்வப்போது சில நாவல்கள் வாசிப்பது உண்டு. நாவல் எழுத அமர்ந்தபோது எப்படி எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்ற சிந்தனை இல்லை. எழுத வேண்டும், அவ்வளவுதான். எனது எழுத்துக்களைப் பார்த்து இன்னும் சிறப்பாக எழுதுங்கள், விரிவாக, விபரமாக எழுதுங்கள் என சொன்னவர்கள் ஏராளம், அவர்களை எல்லாம் ஏமாற்றுவது எனக்கு வாடிக்கை. ஆனால் ஒரு எழுத்தாளன் யார், அவன் எப்படிப்பட்டவன், எப்படியெல்லாம் எழுத்தாளன் உருவாகிறான் என நீங்கள் தெரிந்து கொள்ள இந்த 'தமிழ்' மின்னிதழில் வெளியாகி இருக்கும் மின்காணல்தனை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

பொதுவாக நேர்காணலில் உள்ள பிரச்சினை என்னவெனில் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே எழுதுவது சற்று சிரமம். அப்படியே எழுதினாலும் வசதிக்கேற்ப எழுத்துகளை மாற்றி அமைத்து வெளியிடுவார்கள். அந்த பிரச்சினை இதில் இல்லை, அவர் என்ன எழுதி அனுப்பினாரோ அதையே பிரசுரித்து இருக்கிறேன் என்கிறார் ஆசிரியர். அதற்கு முதலில் பாராட்டுகள்.

அடேங்கப்பா! எத்தனை பெரிய மின்காணல். கிட்டத்தட்ட 47 பக்கங்கள், 54 கேள்விகள். புத்தகத்தில் 35 சதவிகித பக்கங்கள். வெற்றி பெற்ற எழுத்தாளன், படைப்பாளி  பேசினால் அதில் திமிர்த்தனம், தலைக்கனம் எல்லாம் வெளிப்படும். பணிவாக இருப்பவனே சிறந்தவன் என்கிற பண்பாடு எல்லாம் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இல்லை. எழுத்துலகில் மட்டுமல்ல எதிலும் அரசியல் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. வெற்றி பெற்ற சக மனிதனின் மீது பொறாமை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அனைவராலும் சொல்லப்படும் ஈகோ.

ஜெமோ என செல்லமாக அறியப்படும் ஜெயமோகன். எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். இவரது கருத்துகளில் எல்லோரும் உடன்பட வேண்டிய அவசியமில்லை. தனக்குத் தெரிந்ததை, தனக்குப் புரிந்ததை, தனக்குள் பிறர் நிரப்பிய விசயங்களை பகிர்தல் என்பது ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் செய்துகொண்டுதான் இருக்கிறான். எனக்கு இவரைப்பற்றி நிறையத் தெரியாது என்பதால் எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது. அதுவும் 'ஒருபோதும் எழுத்தாளன் அன்றி பிற அடையாளங்களை நான் ஆசைப்பட என் அம்மா விரும்பியதில்லை' என்ற வரிகள் அட! 'எழுத்தில் சாதித்துவிட்டதாகத் தோன்றியபின் எழுதவே தோணாது'.

'வாசிப்பே என்னை எழுத்தாளனை உருவாக்கியது' என்பதோடு ஆன்மிக நாட்டம் குறித்து நண்பன் மற்றும் அம்மாவின் தற்கொலையை குறிப்பிடுகிறார். எனது நண்பன் கிரியின் தற்கொலையை நினைவுபடுத்தியது. கற்பனையே எழுத்துக்கு வழி. அமரர்கள் சுந்தர ராமசாமி, சுஜாதா, சுஜாதாவின் மனைவி குறித்த இவர் கருத்துகள், மனுஷ்யபுத்திரன், பெண்கள், மலையாளி முத்திரை, சொல் புதிது, குருநாதர், சினிமா உலகம், இவரது நாவல்கள், நோபல் பரிசு, நகைச்சுவை கதைகள், குழந்தை நாவல்கள், அறிபுனைவு, வாசிப்பாளனின் இயலாமை, விமர்சனம் பண்ணவேணும் எனும் அயோக்கியத்தனம், இணைய மொண்ணைகள் என இவரது விவரிப்பு ஆச்சரியங்களை உள்ளடக்கியது. ஆசிரியரின் கேள்விகள் எழுத்தாளனின் உள்ளக்கிடங்கை கிளறி இருக்கிறது.  'நல்ல எழுத்தாளன் புகழ் அங்கீகாரம் எதற்காகவும் எழுதுவது இல்லை'. அடடே! எதற்கும் நீங்களே எல்லாம் வாசியுங்கள். அவரது ஒவ்வொரு வரிகளை எழுதிக்கொண்டு இருந்தால் நான் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டி இருக்கும். அப்புறம் என்னை அவர் வசையாகத் திட்டிவிடுவார். எனக்குப் பிறரிடம் திட்டு வாங்கும் அளவுக்கு எழுதும் தைரியம் இல்லை.

அடுத்து வினோத நகரம். - முரளிகண்ணன் எழுதி இருக்கிறார். அதுவும் எங்கள் விருதுநகர். அவர் எழுதியதில் எண்ணையில் குளித்த புரோட்டா, சினிமா காட்சிகள் மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி பெண்கள் இதற்காகத்தான் திருவிழா செல்வது, குடும்ப உறவுகளின் பலம், நகை எடுக்கும் பாங்கு இதெல்லாம் நான் ஊன்றி கவனித்தது இல்லை. ஐந்தாம் திருவிழா என டிராக்டர் சென்ற அனுபவம் சினிமா சென்று தொலைந்து போன அனுபவம் என பல உண்டு. விருதுநகரில் இருந்து பதினோரு  கிலோமீட்டர் தொலைவில் எனது ஊர் என்பதால் எனக்கு விருதுநகர் சற்று அந்நியம்  தான். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறார்.

அடுத்து புனைவுகள். எல்லா புனைவுகளையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டே வாசித்தேன். நளீரா, என்னை நடுநடுங்க வைத்துவிட்டாள். தோழர் கர்ணா சக்தி எழுதி இருக்கிறார். கருவில் உள்ள குழந்தை கதை சொல்வது போல அமைந்து இருக்கிறது. அபிமன்யு நினைவுக்கு வந்தான். தோழர் கர்ணா சக்தி ஒரு புரட்சி சிந்தனையாளர். பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது என கேட்கும் பலரிடம் பிறக்கும் முன்னரே குழந்தை என்ன செய்தது என சமூகத்திடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். தோழரே, இந்த சமூகம் மூடர்களால், மடையர்களால் ஆனது, அறிவாளிகள் கூட சாதி, மதம் என வந்தபின்னர் அறிவிழந்து போகிறார்கள். சந்ததியை அழித்தால் எல்லாம் அழியும் எனும் கொடூர எண்ணம் கொண்டு வல்லூறுகள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. இணக்கமான சமூகம் அழிந்து கொண்டே இருக்கிறது. மனதை கலங்க வைத்த கதை.

0 F  மத்யமன் என்பவர் எழுதி இருக்கிறார். வித்தியாசமான கதை, வித்தியாசமாகவே தொடங்குகிறது. அதுவும் ட்விட்டர் சம்பவங்களை வைத்தே தொடங்கி ஆருத்ரா தரிசனம், ஒரு ஆத்திகனுக்குள் நாத்திகன் என கதை பரபரப்பாக நகர்கிறது. குளிர் குறித்த விவரிப்பு, சமன்பாடு என கடைசியில் மனித நேயம் சொல்லி முடிகிறது கதை. உதவும் மனப்பான்மையை நட்புகளிடம் மட்டுமே கொண்டு இருக்க வேண்டியது இல்லை என சொல்லும் கதை எனவும் கொள்ளலாம். நன்றாக இருக்கிறது.

சிறகில்லாப் பறவைகள் - அல்டாப்பு வினோத் எழுதி இருக்கிறார். எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் காந்திய கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்றே எண்ணுகிறேன். ரஜினி ரசிகர் என்பது கூட இவர் அடையாளம் என எண்ணுகிறேன். கதை சொல்லும் பாணி ஒரு சினிமாவைப் போன்று காலங்கள் நேரங்கள் குறித்து எழுதி இருக்கிறார். ஒரு இளைஞனின் வாழ்க்கை குறித்த கதை. இறுதி நிகழ்வு மனதில் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது. வெளிநாடு செல்பவர்கள் எல்லாம் பணத்தில் குளிப்பவர்கள் அல்ல என எளிமையாக உலகிற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். அருமை வினோத்.

அடுத்து கவிதைகள் தாவினேன். நிறைவேறாத ஆசைகள் - மிருதுளா. எதிர்நீச்சல் என்ற பாடல் வரிகள் போல இருக்கிறது என எனது எதிர்பார்ப்புகள் கவிதைகள் குறித்து என் தங்கை சொன்னது உண்டு. ஆனால் இந்த நிறைவேறாத ஆசைகள் இருபக்க விசயங்களை அழகாக தொட்டு செல்கிறது. இருக்கலாம் என்பதான வார்த்தையே கவிதைக்கு அழகு, அதுவும் முடித்த விதம் சிறப்பு.

சிரஞ்சீவியும் ஜீவிதாவும் - சொரூபா. மனதை கனக்க  வைத்த கவிதை. சிரஞ்சீவிடா, ஜீவிதாடி. கவிதையில் கலங்க வைக்க இயலும் என சொல்லி இருக்கிறார். நிறுத்தி நிதானமாக நிகழ்வுகளை அசைபோடுங்கள்.

நா ராஜு கவிதைகள். மிருதுளா, சொரூபா அற்புதமான எழுத்தாளர்கள் என ட்விட்டர் உலகம் அறியும். எனக்கு ராஜு, அசோகர் பரிச்சயமில்லை. முத்தம் மூர்க்கமெனினும்  காதல். அருவி, நீர், பறவையின் பாட்டு என வேறொரு பொருள் உண்டு இங்கு என்கிறார். முன்னேற்பாடுகள் அற்ற விசயங்கள் என கவிதையின் ஆழம் அருமை.

ஒரு பெண் ஒரு ஆண் - அசோகர். வித்தியாசமான கவிதைக்களம். சிந்தனை மாறுபாடு ஒன்றும் காதலுக்கு அலுக்காதுதான். நன்றாகவே இருக்கிறது. ஒப்புமை குறியீடுகளில்  மூழ்கி முத்தெடுங்கள்.

விமர்சனம். ஸ்டான்லி க்ப்யூரிக் - இயக்குனர்களின் ஆசான்  எழுதி இருப்பவர்  நவீன் குமார். நல்ல சுவாரஸ்யமாக படம் பார்க்கும் உணர்வை தந்து இருக்கிறது எழுத்து. மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறார். படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் வந்து போகிறது, அதே வேளையில் நேர்மையாக இருக்கும் கணவன் மனைவி குடும்பத்தில் சர்ச்சை தோன்ற வைத்துவிடும் அளவிற்கு இந்த படம் ஒரு மன உளைச்சலை தந்துவிடும் எனும் அபாயமும் உள்ளது. பொதுவாக கணவனுக்கும் மனைவிக்கும் நல்லிணக்கம் அத்தனை இருப்பதில்லை என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுவது. நக்கல், கேலி, கிண்டல் என இருந்தாலும் மெல்லிய காதல் குடும்ப அமைப்பில் இருந்து கொண்டே இருக்கும். எப்போது நிராகரிப்பு, புறக்கணிப்பு நிகழ்கிறதோ அப்போது பிரச்சினை தலைதூக்கும். ஒருமித்த கருத்து உள்ள தம்பதிகள்  வாழ்வின் வரம்.

இப்படியாக 'தமிழ்' மின்னிதழை வாசித்துக் கொண்டே இருக்கிறேன். புனைவுகள், கவிதைகள், நேர்காணல் எனும் மின்காணல் என வாசித்து முடித்த தருணத்தில் இந்த தமிழ் மின்னிதழ் ஒரு அருமையான இலக்கிய இதழ் என தைரியமாக சொல்லலாம். இது ஆசிரியரின் முதல் முயற்சி என்றாலும் தெரிவு செய்த விதங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த மின்காணல் இந்த தமிழ் மின்னிதழின் முத்தாய்ப்பு.

நான் நேசிக்கும் ஓவியர்கள் என ட்விட்டரில் நிறைய உண்டு. எவராவது கோலம் படம் போட்டால் கூட ஓடிச்சென்று அதை சேமித்து விடுவேன். அதுபோல எவரேனும் படம் வரைந்தால் அட என பிரமித்துவிடுவேன். ஓவிய ஈடுபாடும் இந்த தமிழ் மின்னிதழில் உள்ள வேறு சில ஓவியங்களோடு விமர்சனம் அனுபவங்கள் என சில நாளைப் பார்க்கலாம்.

மின்காணல் வாசித்து முடித்ததும் மனதில் எழுந்தது இதுதான். எதையும் முழுதாய் வாசிக்கத் திராணியற்ற இணைய மொண்ணைகளே, ஒன்றை விமர்சனம் செய்ய முழுவதுமாக வாசித்துவிட்டு பின்னர் விமர்சனம் செய்யுங்கள், இல்லையெனில் போங்கடா வெண்ணைகளா என திட்ட வேண்டி இருக்கும். ஷப்பா... தமிழ் எழுத்துலகம் என்னை மிரள வைக்கிறது.

(தொடரும்)


Friday 16 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 2

சிறுகதையோ, கதையோ புனைவு என்று அழைத்துக் கொள்கிறார்கள். கவிதை கூட புனைவதுதான் ஆனால் அது புனைவு என சொல்லப்படுவதில்லை. நாவலை புதினம் என்றும் அழைக்கிறார்கள். புனைவு எனும் சொல் நன்றாகவே இருக்கிறது.

பைத்தியக் காலம் என்றொரு புனைவு    எழுதியவர் 'இலக்கிய எழுத்தாளர்' நர்சிம்.  இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடத்தேவையில்லை. எழுத்துலகம் இவரது எழுத்துக்கள் பற்றி அறியும். இவரது எழுத்துக்கள் குமுதம், ஆனந்தவிகடன் என அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. இவரிடம் சென்று எழுத பயின்று கொண்டால் நான் நன்றாக எழுத ஆரம்பிக்கலாம். ஒருமுறை நான் எழுதியதை கவிதை என்றேன். சற்று மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்றார். எப்படி மாற்றி அமைப்பது என சிந்தித்து பின்னர் வேண்டாம் என விட்டுவிட்டேன்.

'தான் தவிர்க்கப்படுதல் தெரியாமல் அண்டை வீட்டிற்கு விளையாடச் சென்று வெறுமையாய் திரும்பும் சிறுவனின் மனவலியை உணரச் செய்து விடுகிறார்கள் சிலர்'. இது அவரின் எழுத்து. எனக்கு என்னவோ இந்த எழுத்து வெகுவாக என்னை பாதித்துவிட்டது. எனது கிராமத்தின் சூழலை கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்தியது. இப்படித்தான் இவரது எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் நிகழ்வு மனக்கண் முன்னால் வந்து போகும். சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். அதில் இவர் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். விவரிப்பு அதில் வரும் கதாபாத்திரங்கள் அழுத்தமான ஒன்றை சொல்லி செல்லும். இந்த பைத்தியக் காலம். கதையை வாசித்து முடித்தபோது அதே பிரமிப்பு. கோமாதா, நந்தி அட! சொல்ல வைத்தது. அதுவும் கதையில் வரும்காட்சிகளின் பின்னணி. முடிவுதான் கதைக்கான மொத்த தளமும்.

அடுத்து பொன் வாசுதேவன் அவரது கவிதைகளுக்குப் போனேன். எளிமையான மனிதர். நேரில் பார்த்து இருக்கிறேன், பேசி இருக்கிறேன். எனது இரண்டு புத்தகங்கள் வெளிவர காரணமானவர். இவரது  இருபது வருடங்களுக்கு மேலான வாசிப்பு அனுபவம் இவரது எழுத்துகளில் மிளிரும். ஒரு நாவல் எழுதிக் கொண்டு இருந்தார். தமிழும், அடர்ந்த கருத்து செறிவுமான  கவிதைகள் . ம்ம் இவரிடம் கவிதை எழுத கற்றுக்கொள்ளப்போகலாம். 'தப்பிப் பதுங்கிய சிறுதுளி நீர் சிற்றலை நெளிய' பிரமாதம். நிழல் குறித்து  அட! வாழ்தலின் பலி கொண்டலையும் அற்ப சிம்மாசனம். வேரிழந்த எழுத்துக்கள். எனக்கு மிகவும் கடினம் இதுபோன்ற வார்த்தை கோர்ப்புகள். அதனால் தான் எனது கவிதைகளை வெறும் வார்த்தைகள் என கர்வத்துடன் சொல்லிக்கொண்டேன்.

அடுத்து என் சொக்கன் அவர்கள். இவருடனான அறிமுகம் ட்விட்டரில் இடம்பெற்றது. இவர் அழகாக வெண்பா எழுதுவார். அழகாக கதையும் சொல்வார். இவரது புனைவின் தலைப்பு காரணம். இவரது கதையை படிக்கும் முன்னரே நான் இப்படி எழுதி இருந்தேன்.

மனமுவந்து பாராட்டுவதை கூட உள்நோக்கம் ஏதேனும் இருக்குமோ என எண்ண  வைத்தது சந்தேக குணத்தின் குரூரமான பக்கம். 

இவரது கதையை படிக்கும்போது இதே சிந்தனை கொண்ட கதை. ஆனால் மனிதர்கள்  எப்படி விலகிப் போய்விட்டார்கள் என சொல்லும் அழுத்தமான கதை.

அடுத்து ரைலு. முத்தலிப். நகைச்சுவை உணர்வு உடையவர். பெயர்தான் முத்தலிப் ஒரு முத்தம் கூட தன இதழ்கள் கண்டதில்லை என என்னை சிரிக்க வைத்தவர். ரைலு ஒரு கனவும் அந்த கனவின் ஏமாற்றமும் சொன்ன கதை. இவர் தற்போது எழுத்துலகில் பரப்பரப்பாக கண்காணிக்கப்படுபவர். இந்த கதையும் அப்படியே. அதுவும் எங்கள் ஊர் பக்க கதை என்பதால் ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை ரயில் மனத்திரையில் வந்து போனது. உள்ளப் போராட்டங்களை சொன்னவிதம் வெகு சிறப்பு. சில புதிய சொற்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

சங்கீதா பாக்கியராஜா. இலங்கையை சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்துகளில் ஒரு கனமான வலி இருக்கும். அது சிறிது நாட்கள் வலித்துக் கொண்டே இருக்கும். இவரது எழுத்து பெண்களின் பிரச்சினைகளை நிறைய பேசும். இந்த அன்றில் பறவை ஒரு தபுதாரனின் கதை. நான் இந்த கதையைப் பற்றி நிறைய சொல்லப்போவதில்லை. ஒரே வரி மனைவி போனால் எல்லாம் போம்.

அடுத்து தமிழ் தமிழ் தமிழ். ஆம். கண்ணபிரான் ரவிசங்கர்.  இவரது சிந்தனைகள் இவர் ஒரு தமிழ் மாமேதை. எனக்கு இவரைப் பார்க்கும்போதெல்லாம் கணிதமேதை ராமனுஜன் நினைவுக்கு வருவார். இவர் முருகனின் அருள் பெற்றவர். தரவு இல்லையெனில் வெளியே போ என மிரட்டும் கோபக்காரர். இவரோடு நான் ஒருமுறை ஆண்டாள் பற்றி விவாதம் செய்தபோது நான் விளையாட்டாக எழுதினேன் ஆனால் இவர் எல்லாவற்றையும் ஆணித்தரமாக எழுதினார். இதோ தரவு இப்படி அர்த்தம் கொள்ளலாம் என்றார். எனக்கு பொதுவாக புராணங்கள், பழைய விசயங்களில் அத்தனை தரவு பார்ப்பதில்லை, கற்பனைதான். ஆனால் இவரின் சிந்தனை வேறு. இவரைப்போல தமிழுக்கு பலர் வேண்டும். இவருக்கு எழுத்துலகில் கடும் எதிர்ப்புகள் இருப்பதால் பிளாக்கில் எழுதுவதை நிறுத்திவிட்டார். மீண்டும் இவர் எழுத வேண்டும். இவர் எல்லாம் மாதம் ஒரு தமிழ் நூல் வெளியிடலாம். தமிழில் சிலப்பதிகாரம்தனை ஆய்வு செய்து உள்ளார். இவரது எழுத்து எனது நூல் ஒன்றுக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம்.  அதைப்போல இவரது எழுத்து சுமந்து வந்த 'தமிழ்' மின்னிதழ் பெரும் பாக்கியம் செய்து இருக்கிறது. இலக்கியம், இலக்கணம் என சொல்லி எல்லா விசயங்களையும் இங்கே அருமையாக எழுதி இருக்கிறார். தகவல் களஞ்சியம், தமிழ் களஞ்சியம்.

அட இப்படி எழுதலாமா என ஜி ரா எண்ண  வைத்துவிட்டார். கேபியும் மூன்று பெண்களும் என்பதான புனைவு. எனக்கு அவர் குறிப்பிட்ட படங்கள் தெரியாது என்பதால் முழுவதும் உள்வாங்க இயலவில்லை. ஆனால் கதைநாயகிகள் மூலம் அற்புதமாக பல விசயங்கள் சொல்லி இருக்கிறார். படம் பார்த்து மீண்டும் படித்தால் சுவராஸ்யமாக இருக்கும்.

இன்று இறுதியாக விமர்சனம். உலகப்படங்கள் பார்ப்பவர்கள் தமிழில் அதிகம், ஆனால் அதை அழகாக விமர்சனம் செய்வது இவருக்கு மட்டுமே கைகூடும். இவரது எழுத்து எனக்கு முன்னரே பரிச்சயம். புத்தக விமர்சனங்கள் இவர் எழுதுவது உண்டு. இவர் எழுதியதைப் படித்தபோது அந்த நியூரி பில்கே சிலேன் இயக்குனரின் படங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மிகவும் தெளிவான நடை. தற்போது இவரது எழுத்துக்கள் பத்திரிக்கைகளிலும் வருகிறது.

நாளை, விஷ்ணுபுரத்தான் ஜெயமோகன் மற்றும் சில கவிதைகளும், புனைவுகளும்.

(தொடரும்)


Thursday 15 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1

நூற்றி முப்பத்தெட்டு பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ள தமிழ் மின்னிதழ் ஒன்று தமிழ் ட்விட்டர் சமூகத்தில் 'ரைட்டர்' என செல்லமாக அழைக்கப்படும் திரு சி சரவணகார்த்திகேயன் அவர்களின் முயற்சியால் இன்று வெளிவந்து உள்ளது.

தமிழ் மின்னிதழ். அட்டையில் ஓ!  இவர்தான் ஜெயமோகனா என ஆசிரியரின் எழுத்தைப் படித்த பின்னரே தெரிந்தது. "எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு!" நேர் வாழ்க்கை தெரியும், எதிர் வாழ்க்கை தெரியும். நிகர்வாழ்க்கை எனக்குப் புதிது.  ஜெயமோகன் எழுத்து நிறைய கேள்விபட்டதுண்டு. வாசித்தது இல்லை.

"தமிழ்" எழுத்து வடிவமைப்பு மிகவும் எளிமையுடன் கூடிய சிறப்பு. 'தமிழ் சிற்பி' மீனம்மாகயலுக்கு பாராட்டுகள். சமூக இருள் போக்க வரும் தமிழ். ஆசிரியர் சி சரவணகார்த்திகேயன் அவர்களை இந்த முயற்சிக்கு வெகுவாக பாராட்ட வேண்டும். இவருக்கு பக்கபலமாக இருந்த ஆலோசனைக்குழு கௌரவ குழுவிற்கும் ஆசிரியருக்கும் உளம்கனிந்த பாராட்டுகள். தை என எழுதாமல் பொங்கல் என இதழ் 1 வந்தது தித்திக்கும் இனிப்புதான், தமிழுக்கு தமிழருக்கு வெகு சிறப்பு.

பிரசன்னகுமார் அற்புதமான ஓவியர் சமீபத்தில்தான் இவரது ஓவியங்கள் கண்ணுக்குப்பட்டது. வெகுநேர்த்தியாய் எழுத்தாளனாக ஒரு ஜெயமோகனை வடிவமைத்த விதம் பாராட்டுகள். புதியன விரும்பு என்பது கட்டளைச் சொல். தமிழுக்கு அந்த உரிமை உண்டு. ஆசிரியர் உரை படிக்கிறேன். கல்லூரி கனவு நனவாகி இருக்கிறது. உலகம் யாவையும் என வாசித்ததும் அப்படியே உள்ளுக்குள் மகிழ்ச்சி ஓடும் அது அந்த பாடலின் வலிமை. இது ஒரு தொடக்கம் என்கிறார் ஆசிரியர். தொடர்ந்து  சிறப்பாக நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமரர் சுந்தர ராமசாமிக்கு சமர்ப்பணம் செய்தது வெகு சிறப்பு என தமிழ் மின்னிதழைப் போற்றி மகிழ்கிறேன்.

 எனக்கு தமிழ் எழுத்துலகம் தெரியாது. பெயர்கள் மட்டுமே பரிச்சயம் எவருடைய நாவல்களும் பல ஆண்டுகளாக வாசித்தது இல்லை. எனது வாசிப்பு blog twitter மட்டுமே. அப்படி வாசித்தபோது பழக்கமான சிலர் முகங்கள் இங்கே இந்த தமிழ் மின்னிதழில் உண்டு. எவருடனும் நெருங்கி பழகிய அனுபவம் இல்லை.

நான் போற்றும் மனிதர்களான  எனது நூல்களை வெளியிட்ட பொன்.வாசுதேவன், தமிழ் உயிர்மூச்சு என இருக்கும் 'முருகனுருள்' 'சிலுக்கு சித்தன்' புகழ் கண்ணபிரான் ரவிசங்கர், வெண்பா புகழ் என் சொக்கன், பிரமிக்க செய்யும் நர்சிம், முத்தமிழ்மன்ற தொடர்பு ஜி ராகவன், நல்ல வாசகி லேகா,  இந்த எழுத்துலகில்  எனக்கு புதிதாக அறிமுகம் ஆன மீனம்மாகயல், முத்தலிப், சங்கீதா பாக்கியராஜா, கர்ணா சக்தி, மிருதுளா, சொரூபா  மற்றும் ட்விட்டரில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் வைத்திருக்கும் சௌம்யா.

நான் Facebook படிக்கும் வழக்கம் இல்லாத காரணத்தினால் பெருமாள் முருகன் சமீபத்தில் எழுதிய மாதொருபாகன் எனும் நாவல் குறித்த சர்ச்சை ட்விட்டரில் கேள்விபட்டேன். அது குறித்து கிருஷ்ணபிரபு இந்த மின்னிதழில் எழுதி இருக்கிறார். ஒரு எழுத்தாளன் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை அப்படியே வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்த மதமும் சாதியையும் துள்ளிக்கொண்டு திரிகிறது என தெரியவில்லை. எத்தனை பிரம்மானந்தா, நித்யானந்தா இந்த சமூகம் கண்டு இருக்கிறது. அவர்களை எல்லாம் செருப்பால் அடிக்காமல் விட்டது இந்த சமூகத்தின் தவறு.

எங்கள் கிராமத்தில் கூட முன்னொரு காலத்தில் பிடித்தவனோடு பிள்ளை பெறும்  கலாச்சாரம் உண்டு என சில வருடங்கள் முன்னர் என் பெரியம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்ன சொல்றீங்க என கேட்டபோது ஆமாம் எடுபட்ட  சிறுக்கிக  என திட்டிய காலம் என் பெரியம்மா காலமாக மாறி இருக்கலாம். வைப்பாட்டி எல்லாம் இல்லாமலா? ஆனால் என்ன இந்த சமூகத்தில் சாமியால் நடைபெறும் விசயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஏனெனில் இறைவன் தூய்மையானவன், இறைவனை பின்பற்றுபவர்கள் தூய்மையானவர்கள் எனும் ஒரு மனநிலை மனிதர்களில் பதிந்துவிட்டது.

பெருமாள் முருகன் எழுதாமல் விட்டால் அது தமிழ் எழுத்து உலகிற்கு நல்லதல்ல எனவும் நல்லது எனவும் கூறுகிறார்கள். எனக்கு நாவல் படித்தது இல்லை என்பதால் எதுவும் சொல்ல இயலாது. ஆனால் காலங்கள் பல தடைகளை பல கலாச்சாரங்களை கடந்தே வந்து இருக்கின்றன. தொன்மைபழக்கங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

கானல் - மீனம்மாகயல் எழுதிய ஒரு கதை. இந்த கதையை சற்று கவனமாக வாசிக்கத் தவறினால் என்ன சொல்ல வருகிறது என புரியாமல் போகும். கதையில் குறிப்பிடப்பட்ட நேரமே இரண்டு நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு. இவருக்கு நல்ல தமிழ் சிந்தனை உண்டு, ஆனால் என்ன எழவோ காமத்தை சுற்றியே இவரது எழுத்தும் எண்ணமும் அமைந்துவிடுவது இவருக்கான பலமும் பலவீனமும். ஒட்டுமொத்த சமூகம் காமத்தினால் அல்லல்படுவது இயற்கைதான். வெளிச்சொல்ல இயலாமல் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் நிலை உலகில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அதே பாலியல் வன்முறையை எழுத்துகளில் சாடும் பெண் என்றாலோ, எழுத்துகளில் வைத்திடும் பெண் என்றாலோ அந்த பெண்ணை பற்றிய சமூகத்தின் பார்வைதான் நான் குறிப்பிட்ட 'என்ன எழவோ'. அந்த கதையில் குறிப்பிட்ட 'தா..' என்ற வார்த்தையை கூட நான் எழுதுவதும்  உச்சரிப்பதும்  இல்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நிலை ஆசிரியர் அந்த வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அட ஆசிரியர் சொல்கிறார், சொல்வதற்கு நன்றாக இருக்கிறதே என நானும் சில நாட்கள்  சொன்னேன். ஒரு பனங்காடி  நண்பன் அழைத்து அது கெட்ட வார்த்தை என சொன்னதில் இருந்து அந்த வார்த்தை நான் உபயோகம் செய்வது இல்லை.

ஆனால் சமீபத்தில் என் அத்தை ஒருவர், என் அப்பா அந்த வார்த்தை உபயோகித்தபோது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த கதையில் சொல்லப்படும் விசயங்கள் கானல் தான். ஒரு பெண்ணை பலவந்தபடுத்த சமூகம் தயாராக காத்து இருக்கிறது. அதை எதிர்த்து போராட வழி இல்லை. இதே போன்று ஒரு உண்மையான நிகழ்வை ட்விட்டரில் பூங்குழலி எனும் மருத்தவர்  எழுதி இருந்தார். மகளை பறிகொடுத்த தந்தை. கிராமங்களில் நிறைய நடைபெறுகிறது. பாதுகாப்பற்ற சமூகம்.

சௌம்யாவின் கவிதைகளுக்கு தாவினேன். சௌம்யாவின் எழுத்து எவரையும் காயப்படுத்தாது. அவரின் பண்பு அவரை எல்லோருக்கும் பிடித்த ஒருவராகவே இந்த ட்விட்டர் சமூகம் பார்த்து வருகிறது மீ காதல் ஒரு எளிய அன்பின் வெளிப்பாடு. பெண்ணியம் என்ற வார்த்தை இப்போது நிறைய பயன்பாட்டில் உள்ளது. இதழதிகாரம், அதிக காரம் எல்லாம் இல்லை.மிகவும் இனிப்புதான். அதுவும் என் பெண் முத்தங்கள் என்றே முடிகிறது கவிதை.அவளதிகாரம்  அவனதிகாரம், மகளதிகாரம்  மனைவியதிகாரம் என நிறைய இருக்க இதழதிகாரம். இலக்கியமாக சொல்லிச் செல்லும் ஊடலுணவு. கோபத்தில் பாசம் வெளிப்படும் என்பதை வெளிச்சொல்லும் கவிதை.

நாளை நர்சிம், கண்ணபிரான், சொக்கனோடு பிரயாணிக்கிறேன்

(தொடரும்)


Tuesday 13 January 2015

மதமும் சாதியும்

மூர்க்கர்கள் நிறைந்த உலகில் இந்த மதம் சாதி  எல்லாம் குறித்து கண்டித்து எழுதினாலும் மூர்க்கர்கள் திருந்தவே மாட்டார்கள்.

இந்த மதம், சாதி குறித்து எழுதினால் தரம் தாழ்ந்துவிடும். தரங்கெட்டதை குறித்து எதற்கு எழுதுவானேன்.

                                                     நன்றி வணக்கம்.

இப்படியெல்லாம் எழுத்தாளன் ஓடி ஒளியக்கூடாது. எழுதிக்கொண்டே இருப்பதுதான் எழுத்தாளன் பணி, இல்லையெனில் சமூகத்தின் பிணியை எவர் தீர்ப்பது.

திருவள்ளுவர் எழுதியே திருந்தாத சமூகம் நம்மளோடது, அதனால் எழுதுவது மட்டுமே எழுத்தாளன் பணி. மக்களை நல்வழிபடுத்தி செல்வது அரசு பணி . 

Tuesday 6 January 2015

பொய்யான மனிதர்களின் கூடாரம்

'பக்தா, பக்தா' எனும் சத்தம் கேட்டு கண் விழிக்க முடியாமல் தவித்தேன்.

'என்ன பக்தா, நிறைய உறக்கமோ?' என்றபோது கூட என்னால் விழிக்க இயலவில்லை.

'நான் தான் சாமியார் வந்து இருக்கிறேன்' என்றதும் கண்களை கசக்கியவாறே  எழுந்தேன்.

'வாருங்கள் சாமி'

'என்ன பக்தா, என்னை காண வேண்டும் எனும் அக்கறை எதுவும் உனக்கு தோணவில்லையா?'

'உங்களை எனக்குத்தான் பிடிக்காதே, பின்னர் எதற்கு உங்களை நான் தேடி வர வேண்டும்?'

'அதுதான் நான் உன்னைத் தேடி வந்தேன் பக்தா'

'என்ன விஷயம் சொல்லிவிட்டு போங்க எனது உறக்கத்தை கெடுக்க வேண்டாம். யார் உங்களுக்கு கதவு திறந்து விட்டது?'

'உனது அன்னைதான் கதவு திறந்துவிட்டார், என்னை அமர சொல்ல மாட்டாயா?'

'சரி அமருங்கள்'

'பொய்யான மனிதர்களுடன் நிறைய சகவாசம் வைத்துக்கொண்டு இருக்கிறாயே பக்தா?'

'நீங்கள்தான் போலியானவர், நான் எதற்கு பொய்யான மனிதர்களுடன் சகவாசம் கொள்ள வேண்டும்?'

'என்ன பக்தா, எனக்கு எதுவும் தெரியாது என்று நீ நினைத்தாயா?'

'இதற்குதான் உங்களை எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை, திடீரென வருகிறீர்கள், சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள்'

'பக்தா உனது நலமே எனது நலம். நீ பொய்யான மனிதர்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டு இருக்கிறாய்?'

'உங்கள் உளறலை நிறுத்துங்கள், அம்மா இந்த ஆளை எதற்கு உள்ளே விட்டீங்க, கழுத்தறுக்கிறான்'

'பக்தா, உனது நல்லதுக்கு சொன்னால் என்னை நீ கோவித்துக் கொள்கிறாயே'

'என்ன நல்லது? யாரை போலியான மனிதர்கள் என சொல்கிறீர்கள்?'

'நீ இணையத்தில் தொடர்பு கொண்டுள்ள மனிதர்களைத்தான் போலியானவர்கள் என்கிறேன்'

'இதற்கு மேல் பேசினீர்கள் சாமியார் என பார்க்கமாட்டேன், வெளியே போய்விடுங்கள்'

'என்ன பக்தா நீ செய்வது எனக்குத் தெரியாது என எண்ணிவிட்டாயா? முகமே தெரியாத மனிதர்களுடன் என்ன அப்படி ஒரு பழக்கம் உனக்கு வேண்டி இருக்கிறது. உனக்கு உன் பெற்றோர்கள் நல்ல பெண்ணை மணமுடித்து வைப்பார்கள் தானே, அதை விட்டுவிட்டு நீ எதற்கு முகம் தெரியாத பொய்யான பெண்களுடன் காதல் வசனம் பேசித் திரிகிறாய். நீ உண்மையானவனாக இருக்கலாம் ஆனால் அவர்கள் எல்லாம் பொய்யானவர்கள் எனும் ஒரு எண்ணம் உனக்கு வரவில்லையா? இணையம் பொய்யான மனிதர்களின் கூடாரம் பக்தா'

'போதும் நிறுத்துங்கள், எனது உயிர் நண்பர்கள் இருக்கிறார்கள். சிலரை சிறு வயது முதல் தெரியும். கல்லூரியில் பழகியவர்கள் என சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எப்படி பொய்யான மனிதர்கள் ஆவார்கள். உங்கள் சாமியார் வேலையை மட்டும் பாருங்கள்'

'பதறாதே பக்தா, உனது உயிர் நண்பர்கள் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. முகமே அறியாத, எவ்வித அறிமுகமும் இல்லாத மனிதர்களுடன் உனக்கு என்ன பழக்கம் என்றுதானே கேட்கிறேன். அதுவும் உனக்கு இந்த பொய்யான மனிதர்களுடன் என்ன பழக்கம் வேண்டி இருக்கிறது என சொல். நீ பண்ணுவது எத்தனை குற்றம் தெரியுமா?'

'என்ன குற்றம் கண்டுவிட்டீர்கள்'

'பக்தா, அவர்கள் எல்லாம் தங்களது வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள், அவர்களுக்கு எல்லாம் அது ஒரு பொழுதுபோக்கு ஆனால் நீ அப்படியா? ஒவ்வொன்றும் நீ செய்வது இவ்வுலகில் எவருக்கேனும் பயன்பட வேண்டும் என எண்ணுபவன் நீ. அப்படி இருக்க நீ எப்படி பொய்யான மனிதர்களுடன் உனது நேரத்தை செலவிட்டு கொண்டு இருக்கிறாய்'

'மனதுக்கு சந்தோசம் தருவதை செய்வதில் என்ன தவறு'

'பக்தா, உனது மூடத்தனத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டுப் பார். நீ இணையத்தில் பழகும் அந்த பொய்யான மனிதர்கள் ஒருபோதும் உனது உண்மை வாழ்வில் வரப்போவது இல்லை. உனது உண்மை வாழ்வில் வரத்தயங்கும் அந்த போலிகளுக்கு நீ எதற்கு உனது நேரத்தை செலவழிக்க வேண்டும். அவர்களுக்கு பொழுதுபோக்கு அவர்கள் செலவழிப்பார்கள், ஆனால் நீ?'

'உங்களால் இணையம் பயன்படுத்த இயலாது என்பதற்காக என்னை நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் சாமி'

'மூடனைப் போல பேசாதே பக்தா. இந்த அகில உலகம் என்னில் இயங்கும்போது இந்த இணையம் எனக்கு எதற்கு அவசியம். நீ உண்மையான, உன்னிடம் உண்மை பேசும் மனிதர்களுடன் பழக்கம் கொள்வதை நான் தவறு சொல்லவில்லை. ஆனால் நீ கொண்டுள்ள பொய்யான மனிதர்களின் பழக்கம் தான் என்னை அச்சுறுத்துகிறது. அந்த பொய்யான மனிதர்கள் தங்களை எவர் என காட்டிக்கொள்ள தைரியம் இல்லாத கோழைகள். அவர்களுடன் எல்லாம் நீ பழகி பேசி என்ன இவ்வுலகில் சாதிக்க நினைக்கிறாய்'

'நீங்கள் அறிவிழந்து பேசுகிறீர்கள் சாமி. அவர்கள் எல்லாம் உண்மையானவர்கள் தான். அவர்கள் ஒன்றும் பொய்யானவர்கள் அல்ல. தங்களின் பாதுகாப்பு கருதி அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்'

'பக்தா, உன்னைப் போல முட்டாள்தனத்தில் மூழ்கி இருப்போரை நான் எப்படி திருத்த இயலும் என அச்சம்  கொள்கிறேன். ஆனால் உன்னை திருத்துவது எனது கடமை. எனது பக்தன் வழி தவறிப் போவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க இயலாது. விளையாட்டுத்தனம் நிறைந்த பொய்யான மனிதர்கள் எப்போதுமே ஆபத்தானவர்கள். அவர்கள் தவறு செய்யாதது போலவே அவர்கள் நடந்து கொள்வார்கள் ஆனால் உன்னைப் போன்ற பல அப்பாவிகள் அவர்களின் செயல்பாட்டை உண்மை என நம்பி ஏமாந்து போவார்கள். என்ன பக்தா நீ பெண் என்று நம்பிய ஒருவர் ஆண் என அறிந்தபோது நீ எத்தனை வேதனை அடைந்தாய் என்பதை சொல்லட்டுமா'

'போதும் சாமி நிறுத்துங்கள், நான் எப்படி போனால் என்ன'

'இல்லை பக்தா, நீ முட்டாள்தனத்தில் உன்னை அழித்துக் கொண்டு இருக்கிறாய். நீ எப்படியேனும் அதில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே எனது முயற்சி. உன்னை நான் அடிக்கடி வந்து சந்திக்க வேண்டும். என்னை விட்டு நீ விலகிப் பொய் கொண்டு இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது'

'இப்போது என்ன செய்ய வேண்டும்'

'பொய்யான மனிதர்களிடம் இனிமேல் நீ ஒருபோதும் பேசக்கூடாது, பழகக் கூடாது என சத்தியம் செய்து கொடு. உன்மீது நம்பிக்கை வைக்காத நயவஞ்சகர்களின் பிடியில் இனிமேல் நீ சிக்கி சீரழியக் கூடாது எனவே உன் மீது நம்பிக்கை வைக்காத மனிதர்களுடன் நீ ஒருபோதும் பேசக்கூடாது. இதுவே நான் உனக்கு இடும் கட்டளை'

'சாமி, அப்படியெனில் நான் இணையம் பயன்படுத்தக்கூடாது என்கிறீர்களா, எனது நண்பர்கள் என்னை தேடுவார்களே'

'அதெல்லாம் தேடமாட்டார்கள், அவர்கள் பொழுதைப்போக்க வேறு எவரையேனும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். பொழுதைப் போக்க நினைக்கும் பொய்யான மனிதர்களுக்கு நீ மட்டுமே அத்தியாவசியம் என நினைப்பதே உனது முட்டாள்தனத்தின் முதல் படி. அதை நீ முதலில் விட்டொழி பக்தா. நீ உனது உற்றார் உறவினர் என அவர்களோடு அன்போடு இரு. பாசமாக இரு. நாளை ஒரு பெண்ணை மணமுடித்த பின்னர் அந்த பெண்ணுக்கு உண்மையாய் இரு. இந்த பொய்யான மனிதர்களை விட்டு சற்று விலகியே நில். புரிந்து கொள் பக்தா இவ்வுலகில் நீ பலமுறை பிறப்பு எடுப்பதில்லை'

'எப்படி விலக இயலும் சாமி'

'எப்படி சேர்ந்தாய்  பக்தா, அப்படியே விலகிவிடு'

'சாமி நிறையே பேர் என்னை நேசிக்கிறார்களே'

'பக்தா, இதுதான் முட்டாள்தனத்தின் உச்சம். பொய்யான மனிதர்களின் நேசம் எதற்கு அவசியம் பக்தா. உனது உண்மையான நண்பர்கள் உன்னோடு எப்போதும் தொடர்பில் இருப்பார்கள். நீயாக தேடி எவரையும் தொடர்பில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது. நீ சோகத்தில் இருந்தபோது அவர்கள் வந்தார்களா? அவர்களின் சோகத்தில் நீ சென்று இருந்தாயா? உண்மையான யதார்த்தம் புரிந்து கொள்ள மறுப்பதேன் பக்தா'

'எல்லாம் துறந்து இருக்கும் உங்களுக்கு சாத்தியம் ஆனால் எனக்கு'

'துறந்து விடும் விசயங்களில் பற்று வைத்திடும் உங்களுக்கு நானா தெரிகிறேன் துறவியாய் எனும் வாசகம் படித்தது உண்டா பக்தா. எதை துறக்க வேண்டுமோ அதில் நீ பற்று வைத்துக்கொண்டு திரிகிறாய். அந்த பற்று தவறு என சொல்கிறேன், கேட்க மறுத்து கேள்வி கேட்கிறாய். பெரும்பாலும் வெளி உலகின் அழுத்தம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களே இணையத்தில் பேசி மகிழ்ந்து இருப்பார்கள்  பக்தா, இதை எவரும் உண்மை என ஒப்புக்கொள்வதில்லை. மற்றவர்களுடன் எழுதி பேசுகையில் உனக்குள்ளேதான் பேசிக் கொள்கிறாய் பக்தா. எனவே எனது பேச்சைக் கேள். உனக்கு அடுத்த முறை பூமி குறித்து சொல்கிறேன்'

'என்னால் இயலாது. எனக்கு அந்த பொய்யான கற்பனையான உலகம் பிடித்து இருக்கிறது, ஆனாலும் பேசமாட்டேன் பழகமாட்டேன் என சத்தியம் செய்கிறேன்'

'பக்தா மிகவும் நல்லது, அடுத்த முறை வரும்போது நீ பொய்யான மனிதர்களுடன் தொடர்பில் இருக்க மாட்டாய் என்றே எண்ணுகிறேன்'

திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. மொபைலில் வந்த ஒரு நோடிபிகேசனில் 'எழுந்திருடா செல்லம்' என முகமே தெரியாத, உண்மை பெயரும் தெரியாத ஒரு பெண் எழுதி இருந்தாள்.

அவளுக்கு பதில் எழுத எத்தனித்தபோது சாமியாரிடம் செய்த சத்தியம் தடுத்தது.


Sunday 4 January 2015

வெட்டித் தருணங்கள் - 3

அடுத்த நாள் சிவக்குமாரை சந்தித்தேன். ஓங்கி ஒரு குத்து விட்டேன்.

''என்னடா''

''இனிமே நீ சொல்வியா?''

''டேய் என்னடா சொன்னேன்''

''நேத்து சொல்லலை''

''அணிலா?''

திரும்பி ஓங்கி ஒரு அறைவிட்டேன். அவனுடனான சண்டை அன்று பெரும் பிரச்சினையில் முடிந்தது. அவன் என்னோடு இனிமேல் பேச மாட்டேன் என கூறினான். போடா வெங்காயம் என திட்டிவிட்டேன். என்னைக் கண்டு அங்கிருந்தவர்கள் பயந்தார்கள். நான் இப்போது கல்லூரியில் எனக்கான அடையாளம் ஒன்றை உருவாக்கிக் கொண்டேன்.

சில நாட்களில் இணைய இணைப்பு வீட்டில் வந்தது. முதலில் ட்விட்டர் திறந்தேன். www.twitter.com சென்று vijayathma என பெயரிட்டு @vijaysole என வைத்தேன். புதிய உலகம் கண்ணுக்கு பட்டது. முதலில் ஒரு விஜய் ரசிகர் டேய் அது vijaysoul என்றார். உடனடியாக அக்கவுண்ட் டெலிட் பண்ணிவிட்டு @soulvijay எனத் தொடங்கினேன்.

விஜய் ரசிகர்களாக தேடி தேடி இணைந்தேன். அவர்களும் என்னைத் தேடி தேடி இணைந்தார்கள். விஜய் படத்தை இணைத்தேன். பின் அட்டையில் பெரியார் படத்தை இணைத்தேன். முதல் நாள் மட்டுமே நூறு பேர் பாலோ பண்ணினேன். முன்னூறு பேர் பாலோ பண்ணினார்கள்.

வெளி உலகத்தை விட இந்த உலகம் மிக நன்றாக இருந்தது. தமிழில் எப்படி எழுதுவது என தெரியவில்லை. அப்போது ஒருவர் தமிழில் எழுதுவது எப்படி என சொல்லித் தந்தார். ஒரு மாதம் எதுவும் எழுதுவதில்லை என முடிவு செய்து என்ன நடக்கிறது என பார்த்தேன். (தொடரும்)