Wednesday 14 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 5

'வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் அக்காவின் காதலை எதற்கு தடுத்தீர்கள் என கேட்டேன். அதற்கு அம்மா, அந்த பையனுக்கும், சுபாவுக்கும் சரிப்பட்டு வராதுன்னு தெரிஞ்சிதான் சொன்னேன், அந்த பையனுக்கு அவனுடைய குணத்திற்கு ஏத்தமாதிரி பொண்ணு கிடைக்கனும்னு நினைச்சேன். நம்ம சுபா அவனுக்கு சரிபட்டு வரமாட்டா.

அம்மாவின் இந்த வார்த்தைகள்... நான் எதிர்பார்க்கவே இல்லை. எப்படி அம்மா தீர்மானம் செய்தார். அப்படியெனில் நான், காயத்ரி. காயத்ரிக்கு நான் பொருத்தமா என்றேன். படிக்கிற வயசில என்ன இப்படி ஒரு ஆசை, பழக்கம் வேற, பழக்கத்தை மீறிய வழக்கம் வேற. நீ நாலைஞ்சி வருஷம் கழிச்சி எப்படி இருப்பியோ அப்பத்தான் சொல்லமுடியும். நேத்து வரைக்கும் நீ இருந்தமாதிரி இருந்தா நிச்சயம் நான் உன்னை அந்த பொண்ணுக்கு கட்டி கொடுக்க மாட்டேன். அவ குணத்துக்கு நீ சரிப்பட்டு வந்து இருக்கமாட்ட. இதெல்லாம் பத்தி இப்ப எதுக்கு கவலைப்படற. ஒருத்தரை பிடிச்சி இருந்தா எதுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைப்பு வருது. அம்மாவின் வார்த்தைகளில் கோபம் மறைந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். எப்போதாவது வெளிப்பட்டு விடலாம் என்பதால் அமைதியாக இருந்தேன்.

நான் காயத்ரியை பார்க்க நினைச்சதுக்கு காரணமே இத்தனை வருசமா என்னால உன்னை மாத்த முடியலையே, ஆனா ஒரு நாளுல உன்னை மாத்திட்டாளே அப்படிங்கிறதை தெரிஞ்சிக்கத்தான். அவங்க அம்மா, அப்பா கூட காதல் திருமணம் தான். சொந்தகாரங்க எல்லாம் இவங்களை ஒதுக்கி வைச்சிட்டாங்க. எதுக்கு அந்த ஊருல இருக்கணும்னு கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்தவங்கதான். அதிக பேச்சு வார்த்தை எல்லாம் இல்லையாம். அம்மா தொடர்ந்து பேசியதும் நான் அமைதியாகவே இருந்தேன். இங்க பாரு முருகேசு எனக்கு காயத்ரியை ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு. இதே மாதிரி எல்லாருமே எல்லா நேரத்திலும் இருப்பாங்கனு நினைக்காத.

சரிம்மா என சொல்லிவிட்டு அம்மாவுக்கு உதவியாய் சில வேலைகள் செய்தேன். அம்மா சொன்னது மனதில் என்னவோ பண்ணிக்கொண்டு இருந்தது. அதிலும் அந்த ஆசிரியர் சொன்ன விசயம் நெருடலாக இருந்தது. எனது மனம் காயத்ரிக்கு எதற்கு கட்டுப்பட்டது என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. எனது சந்ததிகளை பெருக்கி கொள்ளவா நான் காயத்ரியை நேசிக்கின்றேன். ஒருவேளை எங்கள் இருவருக்கும் சந்ததிகளே இல்லாமல் போனால் காயத்ரி என்னைவிட்டும், நான் காயத்ரியை விட்டும் பிரிந்து சென்றுவிடுவோமா?

இந்த சின்ன வயதில் இப்படிப்பட்ட விபரீத எண்ணங்கள் எல்லாம் என்னுள் சுற்றி கொண்டிருந்ததை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என நினைத்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது. அம்மாதான் எடுத்து பேசினார். எதிர்முனையில் காயத்ரி என்பதை தெரிந்து கொண்டேன். அம்மா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தேன்.

காயத்ரியோட அப்பா பிசினஸ் டிரிப்பை கேன்சல் பண்ணிட்டு வந்துட்டு இருக்காராம். காயத்ரியோட அம்மா மூச்சு விட கஷ்ட படறாங்களாம். இந்த வியாதிக எல்லாத்துக்கும் ஒரு மருந்து இருக்க கூடாதா என அம்மா வேதனைப்பட்டு கொண்டார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பா வந்ததும் இந்த விசயத்தை அம்மா சொன்னார். ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயிருக்கலாமே என அப்பா தனது பங்குக்கு சொன்னார். எத்தனை வருசமா இருக்கு என்றார் மேலும். சின்ன வயசிலே இருந்து இருக்குனு சொன்னாங்க என்றார் அம்மா.

மருந்து மாத்திரை எல்லாம் பக்கத்திலேயே வைச்சிருக்க சொன்னியா என்றார் அப்பா. ம்ம் என்றார் அம்மா. அப்பா பேசியபோது எனக்குள் இனம் புரியாத பயம் வந்து சேர்ந்தது. ஆஸ்த்மாவினால் அவதிப்படுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அப்பா சொன்னபோது இது மிகவும் ஆபத்தான நோய் போன்ற தோற்றத்தை எனக்கு கொடுத்தது. ஆமா அவங்களுக்கு சொந்தக்காரங்க இல்லையா என்றார் அப்பா.

யாரும் இங்கே இல்லை என அம்மா சொன்னதும் எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. எதற்கு இப்படி பேசறீங்கப்பா என கேட்டுவிட்டேன். என் மனசுக்கு சரியா படலை முருகேசு என்றார் அப்பா. அப்பாவின் முகம் மிகவும் கலங்கி போய் இருந்தது. இரவு பத்து மணி இருக்கும். தொலைபேசி ஒலித்தது. எங்கள் வீட்டுக்கு இப்படியெல்லாம் இரவில் தொலைபேசி வருவது இல்லை.

எனது அறையை விட்டு வெளியே வந்தேன். அம்மா அருகில் இருக்க, அப்பா தொலைபேசியில் பேசியவர் தொலைபேசியை கீழே வைத்துவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டார். என்ன ஆச்சுங்க எனும் அம்மாவின் குரலில் தெரிந்த பதற்றம் எனக்குள் பற்றிக்கொண்டு கை கால்களில் எல்லாம் நடுக்கம் கொடுத்தது. அந்த பொண்ணோட அம்மா இறந்துட்டாங்களாம் என அப்பா சொன்னதும் அம்மா ஓவென அழுதுவிட்டார். நான் இடிந்து போய்விட்டேன். அப்பா எங்களை அவசரமாக கிளம்ப சொன்னார்.

காயத்ரியின் வீட்டினை அடைந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. வேறு சிலரும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் சென்றதும் அம்மா அவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டார்கள். காயத்ரியின் அப்பா வந்தபோது இரவு ஒரு மணி இருக்கும். அவர் காயத்ரியின் அம்மாவை கட்டிபிடித்து அலறிய அலறலில் எனக்கு இந்த உலகம் எல்லாம் வெறுத்து போய்விட்டது.

அன்று இரவெல்லாம் அங்கேயே அழுது கொண்டிருந்தோம். காயத்ரியின் சொந்தக்காரர்கள் என காலையில் சில பேர் வந்து கொண்டிருந்தார்கள். 'என் தங்கச்சி உன்னாலதான் செத்துட்டா' என ஒருவர் காயத்ரியின் அப்பாவை பார்த்து சொன்னபோது நான் நிலைகுலைந்து போனேன். அப்படி சொன்ன அவரை மற்றொருவர் திட்டி கொண்டிருந்தார். தாயை பறி கொடுத்த அந்த நிலையில் இந்த பிரச்சினைகள் காயத்ரியையும் அவளது அக்காவையும் என்ன பாடுபடுத்தும். ஆனால் வந்தவர் விடாமல் காயத்ரியின் அப்பாவை திட்டி கொண்டே இருந்தார். காயத்ரியின் அக்காதான் 'மாமா நீங்க வீட்டை விட்டு வெளியே போங்க' என அழுகையின் ஊடே அவரை சத்தம் போட்டார். 'இவரை வெளியே அனுப்புங்க' என அவர் மீண்டும் சொன்னதும் ஒரு சிலர் அவரைப் பிடித்து வெளியே இழுத்து சென்றார்கள். ஆனால் காயத்ரியின் அப்பா எதுவுமே பதில் பேசாமல் காயத்ரியின் அம்மாவின் முகத்தை பார்த்து கொண்டே இருந்தார். அன்று நடந்த நிகழ்வுகள் என்னை விரக்தியாய் அமர வைத்துவிட்டது.

அப்பா வேலைக்கு லீவு சொல்லிவிட்டார். நான் கல்லூரிக்கு லீவு போட்டேன். காயத்ரியின் அப்பா அதிர்ச்சியில் அமர்ந்து இருக்க, என் அப்பா எல்லா வேலைகளையும் செய்தார். எல்லா காரியங்களையும் அன்றே செய்து முடித்தார்கள். இது எல்லாம் நடந்து கொண்டிருக்க என் அம்மாவை பார்க்கும்போது மனதில் அதிக பயம் வந்து சேர்ந்தது. அம்மாவும் ஒருநாள் இப்படி போய்விட்டால், நினைக்கும்போதே மேலும் அழுகை பீறிட்டு வந்தது. அம்மாவின் அருகில் சென்றேன். அப்பா எதற்கு அப்படி பேசினார் எனும் நினைப்பு சுற்றிக்கொண்டே வந்தது.

வந்திருந்த காயத்ரியின் சொந்தக்காரர்கள் எல்லாம் அன்று இரவே கிளம்பினார்கள். அதுவரை காயத்ரியின் அப்பா ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனமாகவே இருந்தார். தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ இல்லை. கண்ணீர் மட்டும் வழிந்தோடி கொண்டிருந்தது. என் அப்பா காயத்ரியின் அப்பா கூட பேச்சு கொடுத்தார். காயத்ரியையும், அவளது அக்காவையும் பார்க்க பாவமாக இருந்தது.

'சார், என் ரெண்டு பொண்ணுகளையும் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன், பார்த்துக்குவீங்களா' என அவர் சொன்னதும் என் அப்பா 'எதுக்கு சார் அப்படி எல்லாம் பேசறீங்க, மனசு உடைஞ்சிராதீங்க' என அப்பா ஆறுதல் சொன்னார். அதற்கு பின்னர் அப்பாவை ஒரு தனியறைக்கு அழைத்து சென்றார். அரை மணி நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வரவில்லை. காயத்ரியும், அவளது அக்காவும் என் அம்மாவின் மேல் சாய்ந்து இருந்தார்கள். என் அம்மா!

சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வந்ததும் அப்பா கண்களில் கண்ணீரோடு இருந்தார். அன்று இரவு எங்கள் நால்வரையும் எங்கள் வீட்டிற்கு போக சொன்னார் அப்பா. நானும் உடன் இருக்கிறேன் என சொன்னேன். அம்மா மட்டும் அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு எங்கள் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அப்பா என்னை வெளியே அழைத்து சொன்ன விசயம் என்னை உருக்குலைய வைத்தது. காயத்ரியின் அப்பா, காயத்ரியின் அம்மாவிடம் செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்து விட்டதாகவும், அவரை சமாதனப்படுத்துவதற்குள் மிகவும் கஷ்டமாகிப் போய்விட்டது என்றார் அப்பா. ஆனால் எந்த நேரத்திலும் அந்த முடிவுக்கு போய்விடுவாரோ என அச்சத்தில் தான் இருப்பதாக சொன்னார்.

நான் காயத்ரியின் அப்பாவை பார்க்க வீட்டிற்குள் சென்றேன். அவர், காயத்ரியின் அம்மாவின் படத்தையே பார்த்து கொண்டிருந்தார். 'சார்' என்றேன். திரும்பினார். அவரது சிவந்த கண்கள் என்னை மீண்டும் அழ வைத்தது.

(தொடரும்)

No comments: