Friday 30 July 2010

கம்யூனிசமும் கருவாடும் - 1

மதார் அவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க கம்யூனிசம் பற்றி ஒரு முழு விளக்கம் வெகு விரைவில் தரப்படும். அதனை கம்யூனிஸ்ட்கள் தந்தால் ஒருதலை பட்சமாக கருதப்படும் என்பதால் இது குறித்து விபரமாகவே எழுதுகிறேன். அதனால் கம்யூனிஸ்ட்கள் சற்று பொறுத்துக் கொள்க.

நான் கம்யூனிசவாதி கிடையாது, இந்த வாதி எனப்படும் வியாதி எதுவும் எனக்கு கிடையாது. பலருக்கு கம்யூனிசம் என்றாலே வேப்பங்காயாக கசப்பதற்கு காரணம் அரை குறையுடன் தெரிந்து வைத்து கொண்டு தன்னை கம்யூனிஸ்ட் என சொல்லிக் கொள்பவர்களும், கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சுயநலத்துடன் வாழப் பழகி கொண்டதும், கம்யூனிசம் என்றாலே உலகில் சமத்துவம் நிலவும் என்கிற பொய்யான கோட்பாடும்தான் முழு முதற் காரணம்.

பொருளாதாரத்தை மையப்படுத்தி பல புரட்சிகள் உலகில் ஏற்பட்டு இருக்கின்றன. முதலாளிகள், தொழிலாளிகள் எனப்படும் பிரிவினையை கண்டு குமுறியவர்கள் பலர்.

கம்யூனிசம் என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை ஆணி வேர். ஆனால் புரிதல் இல்லாத காரணத்தினால் இந்த கம்யூனிசம் கேலிப் பொருளாகிப் போனது. ஜனநாயகம் என்பதன் அடிப்படையே கம்யூனிசம் தான். எத்தனை பேருக்கு கம்யூனிசம் பற்றி ஒழுங்காக தெரியும்?

கம்யுனிட்டி (சமூகம்) பற்றிய சிந்தனை மட்டுமே கம்யூனிசத்துக்கு உண்டு. கம்யூனிசத்தில்தான் தோழர்களே எனும் ஒரு அன்பு பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆனால் இப்பொழுது மனிதர்கள் பார்வை எப்படி இருக்கிறது?

(தொடரும்)

வாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா?

எனக்கு நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத சந்தேகம் ஒன்று இருந்து வருகிறது.

வாசகர் கடிதங்களை பொதுவில் வெளியிட்டு அதற்கு பதில் தெரிவிப்பது சரியான முறையா?

வாசகர்கள் எப்படி தனியாய் நேரம் ஒதுக்கி நமக்கு தனியாய் எழுதுகிறார்களோ அதைப் போல நாமும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி எழுதுவதை தனியாய் அனுப்புவதுதான் சரியா?

சில வாசகர்கள் தங்களது எண்ணங்களை பொதுவில் வைக்க விரும்புவதில்லை என்பதால் மட்டுமே தனிப்பட எழுதி அனுப்புகிறார்கள் என்பதை எவரேனும் உணர்ந்து இருக்கிறார்களா?

மேலும் பின்னூட்ட மட்டுறுத்தல் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே வந்திருக்கும் பின்னூட்டங்களை படித்துதான் வெளியிடுகிறார்களா?

எவரும் கருத்து தெரிவிக்கலாம் எனும் வாய்ப்பு இருப்பதால் அதனை முறை கேடாக பயன்படுத்தும் நபர்களின் பின்னூட்டங்களை தைரியமாக நீக்கும் பண்பு உண்டா அல்லது அந்த முறைகேடுகளையும் சிரித்து வாசிக்கும் பண்புதான் நீடிக்கிறதா?

வாசகர்களே உங்கள் எண்ணங்கள் பல எழுத்தாளர்களின் எள்ளல்களுக்கு உள்ளாகி இருப்பதை எப்போதேனும் நினைத்து பார்த்தது உண்டா?

எனது கருத்துதனை சொல்கிறேன் என விழலுக்கு நீர் பாய்ச்சுதலை இனிமேலாவது தவிர்த்து விடுங்கள் வாசகர்களே.

Thursday 29 July 2010

இனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே

ஒரு வலைப்பூ வைத்திருந்தால் அதற்கு கட்டாயம் பின்னூட்டம் எழுதும் வாய்ப்புதனை வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அது ஒரு வலைப்பூவே அல்ல.

                                                 - ஆங்கில வலைப்பதிவர்

வலைப்பூ அங்கீகாரம்தனை இன்றுமட்டும்  எனது வலைப்பூ இழக்கிறது. :)

அடியார்க்கெல்லாம் அடியார் 25

வைஷ்ணவியும் கதிரேசனும் பல விசயங்களைப் பேசினார்கள். பேசிக் கொண்டிருந்ததில் நடு இரவும் தாண்டியது. டார்வின் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. வைஷ்ணவி சொன்ன விசயங்கள் கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.


''டார்வின் சொன்ன விசயங்களை யாருமே ஏற்றுக்கொள்ளாதிருந்தார்களாம். அப்பொழுது டார்வின் தன்னைப்போலவே ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தனது நண்பருக்கு தனது கருத்துக்களை பரிமாறிக்கொண்டே இருந்தாராம். அப்பொழுது அந்த நண்பர் டார்வின் சொன்ன ஒரு முக்கியமான விசயத்தைப் படித்ததும் 'அடடே எனக்குத் தோணாமல் போய்விட்டதே' என சொல்லி டார்வினைப் பாராட்டினாராம்.

இருப்பினும் டார்வின் தனது கண்டுபிடிப்புகளையெல்லாம் எழுதி ஒரு இடத்தில் ஒளித்து வைத்தாராம். ஏனெனில் அந்த காலகட்டத்தில் வெளியிட்டால் மதத்தினரால் பெரும் பிரச்சினைகள் எழக்கூடும் என எண்ணி தனது மனைவிக்கு ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தாராம், தான் இறந்த பிறகு அனைத்தையும் வெளியிட வேண்டும் எனவும் கேட்டிருந்தாராம்.

நிலைமை இப்படியிருக்க டார்வினின் நண்பர் தான் கண்டுபிடித்த விசயங்களை மட்டுமே வெளியிட முயற்சி செய்து வந்தாராம். இதை அறிந்த டார்வின் தான் முதலில் வெளியிடவில்லையெனில் தனது கண்டுபிடிப்புகள் எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும் என வெகுவேகமாக நண்பருக்கு முன்னரே வெளியிட்டாராம். அப்படி அவர் ஒருவேளை வெளியிடாது போயிருந்தால் இன்று டார்வின் என்ற பெயர் உலகத்தில் எப்படி அவரது நண்பர் பெயர் பிரபலமாகாது இருக்கிறதோ அதைப் போலவே போயிருந்து இருக்கும்'' என சொல்லி முடித்தாள் வைஷ்ணவி.

''நமக்குத் தெரிஞ்சதை உடனே உலகத்துக்குத் தெரியப்படுத்திரனும்'' என்றான் கதிரேசன். ''யார் ஏத்துப்பாங்கனு நினைச்சிட்டிருந்தா நினைச்சிட்டே இருக்க வேண்டியதுதான்'' என்றாள் வைஷ்ணவி. ''சமணர் பத்தி உனக்குத் தெரியுமா?'' என்றான் கதிரேசன். ''சமணர்களைத்தான் நாளைக்குப் பார்க்கப் போறோமே'' என சமணர்கள் பற்றி எதுவும் சொல்லாது நிறுத்தினாள் வைஷ்ணவி.

''தூக்கம் வந்தா தூங்கு கதிரேசா'' எனச் சொன்னாள் வைஷ்ணவி. ''நாளைக்கு பஸ்ல போறப்ப தூங்கிக்கிறேன், எனக்கு இருக்கிற சந்தேகத்துக்கு என்ன பதில்னு சொல்றியா'' என்றான் கதிரேசன். ''டார்வின் சந்தேகமா?'' எனக் கேட்டாள் வைஷ்ணவி. ''இல்லை, என் பாடல் பத்தின சந்தேகம்'' என நிறுத்தினான் கதிரேசன்.

''தப்பில்லை கதிரேசா, உள்ளமும் உடலும் இணையற ஒரே இடம் காதலுலதான் சாத்தியம். இதையேன் தப்பான விசயமா நினைக்கிற நீ'' என அதற்கு மேல் பேசாமல் தவிர்த்தாள் வைஷ்ணவி. அமைதியாக இருந்த கதிரேசனிடம் ''நீ ஈஸ்வரியைக் கல்யாணம் பண்ணி குழந்தைகளோட நல்லா இருக்கற வழியைப் பாரு, நாம எல்லாம் தனித்தனியா குழந்தையைப் பெத்து வளர்த்துக்க முடியாது இயற்கையில அது சாத்தியமில்லை இப்போது'' என்றாள். கதிரேசன் பெரும் யோசனையிலிருந்தான்.

''மதுசூதனனை கல்யாணம் பண்ணிக்கிருவியா?'' எனக் கேட்டான் கதிரேசன். ''அவனை நான் கல்யாணம் பண்ணனுமா? சரி பண்ணிக்கிறேன்'' எனச் சிரித்தாள் வைஷ்ணவி. சற்று இடைவெளி விட்டு ''ஒரு வருசப் படிப்பு இருக்கு, வேலை தேடனும் அவன் தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டானே'' என்றாள் அவள்.

''உன்னை அவன் வேணும்னு சொல்வான், உன் காதலோட'' என சொன்னான் கதிரேசன். ''ம் பார்க்கலாம்'' என சொல்லிவீட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர் உறங்கினார்கள்.

கதிரேசன் அதிகாலையில் எழுந்து குளித்துத் தயாராக இருந்தான். தாயாரம்மாள் எழுந்திருந்தார். வைஷ்ணவி இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தாள்.

பூஜையறையில் சென்று அமர்ந்து கதிரேசன் கணீரெனும் குரலில் பாடினான்.

''படைப்பது கஷ்டம் பாவியென எம்மை பெருமானே
புடைப்பது தகுமோ பூவின் மணமோ
இல்லறம் இல்லா வாழ்வதை உயிர் போற்றிடும்
நல்லறம் ஆகுமோ சொல்பெருமானே''

பாடல் கேட்டு விழித்தாள் வைஷ்ணவி. அவசர அவசரமாக கிளம்பினாள். ஆனால் நேரம் கடந்துவிட்டிருந்தது. சமணர் கோவில் நோக்கிச் சென்றார்கள். சமணர் கோவிலின் வாசலில் மதுசூதனன் நின்று கொண்டிருந்தான்.

(தொடரும்)

Wednesday 28 July 2010

புத்தக வெளியீட்டு விழா படங்கள்


திருமதி. தாரா கணேசன்


திருமதி. தாரா கணேசன் மற்றும் கவிஞர் திரு. அய்யப்ப மாதவன்


பத்திரிகையாளர் திரு. அதிஷா



திரு. டி.வி.ராதாகிருஷ்ணன் ஐயா, திரு. சினேகன்  மற்றும் நண்பர்கள்




 திரு. காவேரி கணேஷ்   கேபிள்ஜி

இன்னும் சில படங்களை இணைக்கவில்லை.


Tuesday 27 July 2010

போபால் - கண்டும் காணாமல்

இந்த போபால் விஷ வாயு பற்றி பல வருடங்களுக்கு முன்னரே கேள்விப்பட்டு இருக்கிறேன். பல முறை இது குறித்து நினைத்து இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட என்ன ஏதுவென அக்கறை இல்லாமல் தான் இருந்து வந்து இருக்கிறேன். விஷ வாயு கசிவால் பலர் மரணம். அது ஒரு செய்தியாய் மட்டுமே இத்தனை வருடங்களாக தெரியும்.

இதுவரை இந்த போபால் விஷ வாயு பற்றி புத்தகங்களும், திரைப்படங்களும் வந்து இருக்கின்றன என்பது கூட அறியாத நிலைதான். சரியாக இரண்டு மாதம் முன்னர் ஆய்வகத்தில் ஒரு மூலக்கூறினை உருவாக்க நான் உபயோகித்து கொண்டிருந்த பாஸ்ஜீன் (phosgene) தனை பார்த்த இந்தியர் ஒருவர் என்னைப் பார்த்து 'உனக்கு வேறு வேதிப் பொருளே கிடைக்கவில்லையா, போபால் விஷ வாயு பற்றி தெரியாதா' என எச்சரிக்கை விடுத்தார்.

மீதைல் ஐசோசையனேட் எனும் வேதி பொருள்தான் இந்த போபால் விஷ வாயு  கொடுமைக்கு காரணம். மீதைல் அமின்,  பாஸ்ஜீன் உடன் வேதிவினை புரிந்து மீதைல் ஐசோசையனேட் உருவாக்கும். இதை நாப்த்தாலுடன் வேதி வினை புரிய செய்யும்போது கார்பரில் உருவாக்கலாம். இந்த கார்பரில் பல விசயங்களுக்கு பயன்படுத்தலாம். இந்த கார்பரில் உருவாக்க மீதைல் ஐசோசையனேட் உருவாக்கித்தான் செய்ய வேண்டியதில்லை. இந்த வேதிவினையில் இருக்கும் பாஸ்ஜீன் தான் நான் உபயோகபடுத்தியது.

நான் மிகவும் கவனத்துடன் 'நான் திரவ பொருள்தான் உபயோகபடுத்துகிறேன், வாயு பொருள் அல்ல' என சொன்னதும் அதற்கு அவர் திரவம் என்றால் என்ன, வாயு என்றால் என்ன 'எந்த ஒரு வாசமும் அடிக்காத இந்த வேதி பொருள் நமது உடலில் உள்ள புரதத்துடன் வேதி வினை புரிந்து நம்மை கொன்று விடும். நீ இந்த திரவ பொருளை சிந்திவிட்டால் என்ன செய்வாய் என கேட்டார். நானும் அதற்கு 'சோடியம் பைகார்பனேட்' போட்டுவிட்டால் சரியாகிவிடும் பின்னர் நீரினை உபயோகித்து ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம் என்றேன். 'இந்த ஆய்வகத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு நீ உபயோகித்து கொண்டிருப்பது தெரியுமா' என்றார். 'அறிவர்' என்றேன். 'அப்படியெனில், எங்கு வேதிவினை செய்கிறாயோ அங்கு எழுதி வை' என்றார். அத்துடன் அவர் நிறுத்தவில்லை.

'ஏன் இப்படி ஒரு வேதிவினை செய்துதான் தீர வேண்டுமா, வேறு வேதிப் பொருள்களை உபயோகித்து செய்' என சொன்னார்.

எனக்கு அந்த பாஸ்ஜீன் மனதில் வந்து போனது. பாஸ்ஜீன் முதலில் சுவாச பைகள், மூச்சு குழல் போன்றவற்றை பாதிக்கும், நுரையீரல் பாதிக்கப்படும் என இருந்தது. நான் உபயோகித்தது மிக மிக குறைந்த அளவுதான். இதை எல்லாம் கவனத்தில் கொண்டே நான் அந்த வேதிவினையை செய்ய முற்பட்டேன்.

இருப்பினும் அவருடைய எண்ணத்தை புரிந்து கொண்டு நம்மால் பிறருக்கு எந்த கெடுதலும் நேர வேண்டாம் என  நான் இதுவரை அந்த வேதிப் பொருளின் அருகில் கூட செல்வதில்லை. அதற்கு பதிலாக மாற்று வேதி பொருள் உபயோகிக்கத் தொடங்கி விட்டேன். ஆனால் வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும்போது அறிவியல் ஆய்வாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றுதான் சொல்கிறது அறிவியல் உலகம். பல உயிர்களை காக்க தங்களது உயிர்களை தியாகம் செய்ய தயாராக இருந்தார்கள் பலர்.

மீண்டும் இந்த போபால் பற்றிய எண்ணம். அப்படி என்னதான் நடந்தது என தேடும் எண்ணம் வந்தாலும் மீண்டும் அதே அலட்சியம். போபால் பற்றி தேடுவதை விட்டுவிட்டேன். போபால் விஷ வாயுவினால் மனிதர்கள் மரணம் அடைந்தார்கள். மேலும் பலர் துன்புற்று கொண்டு இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் கூட சகிக்க முடியாததுதான். இது ஒவ்வொரு மனிதரையும் கலங்க வைக்கும் செயலே. சக மனிதர்கள் இறப்பது கண்டு எந்த மனிதரும் கண்ணீர் வடிக்கத்தான் செய்வார்கள். ஆனால் சக மனிதர்களை கொன்று குவிக்கும் எண்ணம் இருப்போர்கள் கண்ணீரா வடிப்பார்கள்?  உலகமெங்கும் திட்டமிட்டே மனிதர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து கொண்டிருக்கிறார்கள்.

போபால் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருக்கிறது என்பதைவிட போபால் போன்ற விசயங்களில் அக்கறை இன்மை அதிகம் தென்படத்தான் செய்கிறது. இந்த போபால் விசயங்கள் போலவே பல விசயங்கள் இருக்கத்தான் செய்கிறது.

அப்படி என்னதான் போபாலில் நடந்தது என படிக்கும் ஆர்வம் வந்தது. முழுமையாக விசயத்தை விக்கிபீடியாவில் படித்தேன். அதிர்ச்சியும், அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகளும், அதனை பொருட்படுத்தாது தங்களது வயிற்று பிழைப்புக்காக பாதுகாப்பற்ற சூழலில் வேலை பார்க்க துணிந்துவிட்ட சாதாரண மனிதர்களும், அருகிலே மரணத்தை வைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களும் என பல எண்ணங்கள் எழுந்தது.

இந்த விஷ வாயு நடந்த ஆண்டு டிசம்பர் 1984. முழு விபரங்களை படித்து பார்த்தால் அரசுவின் மெத்தனப் போக்கு தென்படும். எந்த ஒரு அரசும் மக்களுக்காக பாடுபட்டதே இல்லை. சுகாதரமற்ற சூழலில் வாழ்ந்து பழகி போன படுபாவி மக்களுக்கு இந்த அரசுகளை எதுவுமே செய்ய முடியாத நிலை. இந்த அரசுகளும் அதை நன்றாகவே பயன்படுத்தி கொள்கின்றன. வழக்கில் நீதி என ஒரு கண் துடைப்பு நிகழ்ந்த ஆண்டு 2010. கிட்டத்தட்ட இருபத்தி ஆறு வருடங்கள். அந்த கொடும் கோரம் நிகழ காரணமாக இருந்தவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து விட்டார்கள். குற்ற உணர்வு இருக்குமா? என்றால் குற்ற உணர்வை குப்பையில் போடு என்றுதான் சொல்லத் தோன்றும்.

யோசித்து பார்க்கிறேன். இது போன்று அலட்சிய போக்குகளால் பல வருடங்களாய் இன்னலுற்று வாழும், இறந்து போகும் மனிதர்கள் எத்தனை எத்தனை? எவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பது?

எனது ஆயவகத்தில் கதிரியக்க வேதி பொருள்கள் உபயோகிப்பது உண்டு. அந்த ஆய்வகம் விட்டு வேறு ஆய்வகம் சென்றால் அந்த ஆய்வகத்தில் கதிரியக்க பொருள் சம்பந்தமாக எதுவுமே இல்லை என நிரூபிக்க வேண்டும். ஆனால் இந்த போபால் தொழிற்சாலையில் இது போன்று ஒன்று நடக்கவில்லை என்பது போலவும், அங்கே சில வேதி பொருட்கள் தேங்கி கிடக்கலாம் என சொல்வது எத்தனை அஜாக்கிரதை, அசௌகரியம். இந்தியா அப்படித்தான் இருக்கும். அப்படியேதான் இருக்கும்.

போபால் விஷ வாயு விபத்தா? திட்டமிட்ட சதியா? என பார்த்தால் விக்கிபீடியாவில் எழுதப்பட்டு இருப்பதை படிக்கும் போது திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும் என கருத இடம் இருக்கிறது. திட்டமிட்ட சதியோ, விபத்தோ, சக மனிதர்களின் உயிர் போனதை, அவர்களின் வாழ்க்கை தொலைந்ததை எந்த அரசு திரும்ப வாங்கி தரும்? ஆயிரத்து இருநூற்றி ஐம்பத்து ஆறு கோடி ரூபாய் இந்த போபால் மக்களின் நிவாரணத்துக்கு என இப்பொழுது அரசு ஒதுக்கி இருக்கிறதாம். பாவப்பட்ட மனிதர்கள். தொலைந்த வாழ்க்கை தொலைந்ததுதான்.

சாதாரண மனிதர்கள் ஏதாவது ஒருவகையில் நசுக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறார்கள். யார் என்ன சொல்லிவிட இயலும், யார் என்ன செய்து விட இயலும் எனும் தைரியம், வல்லவன் வகுத்ததே சட்டம் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருப்பதாலும் போபால் ஒரு தொடர்கதைதான். கண்டனங்களும், விழிப்புணர்வும் ஏற்படுத்தினாலும் பலர் கண்டும் காணாமலே செல்வார்கள். அப்படித்தான் வாழ பழகி கொண்டோம்.

Sunday 25 July 2010

புத்தக வெளியீட்டு விழா - நன்றி

தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தகம்தனை மிகவும் சிறப்பாக முறையில் வெளியீடு செய்தமைக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றிகளையும் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

நான் யார் என்றே தெரியாத போதிலும் எனது எழுத்துதனை படித்து அதனை வெகு சிறப்பாக பாராட்டி பேசியதுடன், புத்தகத்தை வெளியிட்ட  தாரா கணேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

முதல் பிரதியை பெற்று கொண்டு நல்வாழ்த்து தெரிவித்த கவிஞர் அய்யப்ப மாதவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஐந்தே நிமிடங்களில் பேச வேண்டும் என அழைப்பு விடப்பட்டதும் என்னிடம்  கொண்டிருக்கும் நட்புக்காக மிகவும் சிறப்பாக பேசிய எனது தோழியும், முத்தமிழ்மன்றத்தின் தலைமை நடத்துனர்களில் ஒருவரான சூரியகாந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அசைபடம் எடுக்க வேண்டும் என விண்ணப்பம் தந்ததும், உடனே சம்மதம் தெரிவித்து அசைபடம் எடுக்க உதவியாக இருந்த மணீஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுரையை வழங்கிய புதிய தலைமுறை பத்திரிகையின் ஆசிரியர் அதிஷா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களின் முயற்சியால் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மற்றும் முத்தமிழ் மன்ற நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த தருணத்தில் விதூஷ், மணீஜி, கேபிள்ஜி ஆகியோருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புதனை ஏற்படுத்தாமல் போனது குறித்து மனதில் சிறு வருத்தம் வந்தது என்னவோ உண்மை.

விழா குறித்து மேலும் தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.

சினேகன் அவர்களின் புத்தக விமர்சனம் கண்டேன். ஒரு பக்கம் மனதில் மகிழ்ச்சி நிலவினாலும், ஒரு இனம் புரியாத பயமும் வந்து சேர்கிறது. நன்றி சினேகன்.

எங்கோ இருக்கிறேன் என
நினைக்கும்போது
அருகில்தான் இருக்கிறாய் என
அன்புடன்
அரவணைத்து கொண்ட
அனைத்து
தோழர் தோழிகளுக்கும்
எனது
உளமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.

Friday 23 July 2010

களவாணி எனும் திருட்டு பயலே

படம் பேரு என்ன சொன்னீங்க? களவாணியா? கலைவாணியா?

களவாணி தான் படத்தோட பேரு. களவாணி பயலுக ஜாஸ்தியா போய்ட்டாங்க போல, அதான் இப்படி எல்லாம் பேரு வைக்க தோணுது.

திருட்டு பயலே அப்படினு படம் எல்லாம் வந்திருக்குதானே?.

ஆமாம், அதுக்கென்ன, களவாணி அப்படிங்கிறது கிராமத்து பாஷை. அதை களவாண்டுட்டான், இதை களவாண்டுட்டான் அப்படினு சொல்வோம்ல. களவாணி பயலுக ஆட்டை திருடிட்டு போய்ட்டானுக அப்படினு சொல்வோம்ல. இப்ப புரியுதா களவாணி தான் படத்தோட பேரு. திருட்டு பயலே படத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.

திருட்டு பயலே அப்படின்னு சொல்றதும் களவாணி அப்படின்னு சொல்றதும் ஒண்ணுதானே?

அதுக்கு என்ன இப்போ? களவாணி அப்படிங்கிறது பொதுபால். திருட்டு பயல அப்படிங்கிறது ஆண்பால். அதிருக்கட்டும், அந்த கதை வேற, இந்த கதை வேற.

களவாணி எப்படி இருக்கு?

களவாணித்தனம் நிறைய இருக்கு. படம் பாத்து முடிச்சப்பறம் என்ன சொல்ல வராக? அப்படினு தோணிச்சி. அப்படியாகுமோ, இப்படியாகுமோ அப்படினு பரபரப்பு ஏற்படுத்தி இருக்காக,  படம் முழுக்க நகைச்சுவையாத் தான் இருக்கு.

நல்லவேளை,  மூட நம்பிக்கையை ஆதரிக்கும் படம் அப்படினு ஒருத்தர் கூட சவாடல் விடக் காணோம்.

என்ன சொல்றீக?

படம் நல்லா இருக்கு. பாருங்க. அதெல்லாம் எதுக்கு. நாம கிண்டிவிடனுமா? நாம நம்பிக்கையில ஊறின ஆளுக.

என்ன விமர்சனம் இப்படி இருக்கு?

களவாணிய நாமளும் களவாட வேண்டாம்னு விட்டுட்டேன். படம் பாருங்க. :)

உன்னதமான நட்பு

எரிச்சலூட்டம் நகரம், ஆனாலும் விலகிப் போய்விடமுடியாதபடி வாழ்க்கை. அந்த வாழ்க்கையில்தான் இருந்தான் அஸ்வின். அஸ்வின் ஒரு துடிதுடிப்பான இளைஞன் ஆனால் மனதில் நிறைய வலிகளை சுமந்து கொண்டு கணினித் துறையில் வேலைபார்ப்பவ‌ன். ஒவ்வொரு முறையும் தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை செம்மையாக செய்தபோதும் அதற்கேற்ற அங்கீகாரமும், உதவித் தொகையும் கிடைக்காமல் போவது கண்டு மனம் வெந்து மனதில் உள்ள இந்த துன்பச் சூழலை ஒதுக்கிட பேருந்தில் ஏறி கடற்கரை பக்கம் அவன் செல்வதுண்டு. அந்த கடற்கரையில் இருந்து வேறொரு பேருந்தில் ஏறினால் அவனது வீடு பத்து நிமிடங்களில் வந்துவிடும். போகும்போதும் வரும்போதும் அந்த கடலைப் பார்க்கும்போது தன்னையும் உள்ளிழுத்துக் கொள்ளாதோ இந்த கடல் எனும் எண்ணம் வந்து கொல்வதுண்டு.


இன்று அதே கடற்கரை. ஒவ்வொரு முறை வரும்போதெல்லாம் கடலின் அலைகளைப் பார்த்ததோடு சரி. மனதில் ஏற்படும் அலைகள் வேலை பற்றிய ஒன்றாகவே இருக்கும், அதுவும் பிரச்சினைகள் பற்றியதே. இப்படிப்பட்ட வேலையை விட்டுவிட்டு கிராமத்திற்குச் செல்லும் எண்ணம் அவனுள் ஓட ஆரம்பித்தது. சுற்றுமுற்றம் பார்த்தான்.


தனது பள்ளிக்கால நினைவுகளும் அவனுடன் பழகிய நண்பர்கள் அவனது மனதில் வட்டமிடுகிறார்கள். பெயரை மணலில் எழுதுகிறான். அசோக். அழிக்கிறான். மற்றொரு பெயரை எழுதுகிறான். சுதாகர், அழிக்கிறான். மீண்டும் ஒரு பெயரை எழுதுகிறான் முகமது, பின்னர் அதையும் அழிக்கிறான். தனது பெயரையும் எழுதி அதை அழிக்கிறான். கண்களில் நீர் கோர்த்துக் கொள்கிறது.


அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த நான்கைந்து சிறுவர்கள் அஸ்வின் நோக்கி ஓடிவருகிறார்கள். அஸ்வினின் கவனம் சிதறுகிறது. கத்தலுடனும், கும்மாளத்துடனும் அவர்கள் அவனைத் தாண்டிச் செல்கிறார்கள். அஸ்வின் மீண்டும் தனது பள்ளிக்கால நினைவுகளில் மூழ்குகிறான். அதே நான்கு பெயர்களை மணலில் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்காமல் எழுதுகிறான். இது அழியாமல் காக்கப்பட வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டிருக்கையில் மழை தூறல் போடத் தொடங்குகிறது. மழை கொஞ்சம் வேகமாகவே கொட்டுகிறது. அந்த பெயர்கள் மெதுவாக அழியத் தொடங்குகிறது. ஆனால் அவனுள் அவனது நண்பர்கள் பற்றிய எண்ணம் நிலைகொள்ளத் தொடங்குகிறது.

அசோக்? சுதாகர்? முகமது? காலத்தின் வேகத்தில் வெவ்வேறு திசையில் சென்றுவிட்ட அந்த நண்பர்களை நினைக்கும்போதே மனதில் ஒரு அழுத்தம் வந்து சேர்கிறது. மழையில் தொப்பலாய் நனைந்து கொண்டே பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில், நிழற்கூடை அது இப்போது மழைகூடை, ஒதுங்குகிறான். அங்கிருப்பவர்களில் ஒருவர் 'நனைஞ்சதுதான் நனைஞ்சிட்டே அப்படியே போக வேண்டியதுதானே' என சிரிக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான், தொலைத்த நட்புகளை அப்படியே தொலைத்துவிட்டே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. எத்தனை வருடங்கள்? எண்ணிப் பார்த்தால் கை விரல்களுக்குள் மட்டுமே அடக்கம்.

வெவ்வேறு திசையில் இருந்தே நால்வரும் பள்ளிக்கு வந்ததை நினைத்துப் பார்க்கும்போது அஸ்வின் மனதில் ஒரு சின்ன வலிதான். மழையின் வேகம் குறைகிறது. 'தடுமம் பிடிக்கப்போகுது, துவட்டிக்கோ ராசா' என அங்கிருந்தவர்களில் ஒருவர் தன்னிடமிருந்த துணியை எடுத்து அஸ்வினுக்குத் தருகிறார். 'இல்லை வேணாம்ங்க, மழை விட்டுரும், நான் வீட்டுக்குப் போயிக்கிறேன்' பேருந்து வருகிறது. அவனது நினைவுகள் கலைகிறது?!

சிதறல்கள்

ஒன்றாய் ஒடுக்கியே வைத்திருந்த
நட்சத்திரக்குடும்பத்தை பால்வெளிவீதி அமைத்து
சிதறி விளையாடிவிட்டு சிறப்பிக்கின்றாய்
ஒன்றாய் சேர்த்திட வழித்தெரியுமோ

துகள்கள் சிதறியே பாறையானது
பாறை சிதறியே துகள்களுமானது
அண்டவெளியில் காற்றைச் சிதறியும்
கண்ணுக்கு உட்படாது இருப்பதோ

சிதறிய மேகம் மழைத்துளியோ
சிதறிய கடல் நீராவியோ
ஒளியும் சிதறியே ஊடுருவும்
எட்டாத தொலைவும் எட்டுமோ

வெடித்துச் சிதறும் விதைகள்
ஒற்றை மரமாய் சிதறும்
நிலமதில் பழங்கள் பரவும்
ஒன்றாய் இருந்தது பலவகையானதோ

மொத்தம் மொத்தமாய் கூடிய
அத்தனை உருவும் சிதறியது
சிறகை சிதறலில் விரித்தே
பிரிவினையை சேர்த்துக் கொண்டதோ

ஒன்றே என்பதை உணராமல்
ஒழுங்காய் சிதறத் தெரியாமல்
வார்த்தை சிதற விட்டவன்போல்
வழியில் பழி கொண்டதோ

தனித்தனியாய் சேர்ந்த சிதறல்கள்
இணைந்து சிறப்பு எய்திடுமோ
சிதறல்கள் ஒன்றாய் சேர்வதில்லையெனில்
மன உதறல்கள் உண்மையன்றோ!

Thursday 22 July 2010

நுனிப்புல் (பாகம் 2) 13

13. சாத்திரம்பட்டி சுமதி


விஷ்ணுப்பிரியன் வாசன் அருகில் அமர்ந்தார். பெரியவர் விஷ்ணுப்பிரியனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார். பின்னர் விஷ்ணுப்பிரியன் தான் தூங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால், பெரியவர் பாண்டியிடம் விஷ்ணுப்பிரியனுக்கு தூங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். விஷ்ணுப்பிரியன் வெகுவேகமாகவே உறங்கச் சென்றார். பெரியவர் வாசனிடம் பேச்சைத் தொடர்ந்தார்.

''நல்லா நாராயணனை வேண்டிக்கோ வாச, நாம போற காரியம் எந்தவித தடையில்லாம முடியனும்''

''சீக்கிரம் முடிஞ்சா நல்லது ஐயா, நோட்டுல குறிப்பிட்டமாதிரி, அந்த இடத்தில ஒரு வேளை கிடைக்கலைன்னா என்ன பண்ற ஐயா''

''செடியோ, விதையோ இல்லாம நாம திரும்ப போறது இல்ல, எப்படியும் எடுத்துட்டுத்தான் வரனும் அங்கே கட்டாயம் கிடைக்கும்''

''நாம பயிரிட அளவுக்கு கிடைக்கனுமே ஐயா''

''கிடைக்கும் வாசா''

வாசன் யோசித்தான். அதிக அளவில் வளரும் செடியாய் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் எந்த வேளாண்மைத்துறையில் இந்த விதையோ, செடியோ கிடைக்காது எனில், இது நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செடிதானா என யாரிடம் கொடுத்து உறுதி செய்வது?

''என்ன யோசிக்கிற வாசா?''

''இது நீங்க வரைஞ்சிருக்க செடி போல, வேற செடி கிடைச்சி அதை நாம எடுத்துட்டு வந்துட்டா, நம்ம திட்டம் எல்லாம் வீணாயிருமே ஐயா''

''ம், இத்தனை நாளா இது பத்தி யோசிக்காம நாளனைக்கி கிளம்பிப் போகப் போறோம், இப்ப வந்து இப்படி கேள்வி கேட்கறியே''

''ஒரு இடத்திற்கு கிளம்பிட்டோம், அதனால என்ன என்ன யோசிக்கனுமோ அதையெல்லாம் யோசிக்கிறது நல்லதுதானய்யா, நாம அவசரத்துல ஏதாவது தப்பு பண்ணிறக்கூடாதுல்ல ஐயா''

''யாருக்கு அவசரம் வாசா?''

''அது...''

''அப்படி அவசரப்பட்டு செய்ற காரியமா இருந்தா, அன்னைக்கே சொல்லி ஆட்களை கூட்டிட்டுப் போய் செடிய தேடிக்கொண்டு வந்துருக்க மாட்டேனா, இது அப்படிப்பட்ட இலேசான விசயமில்லை, உன்னை வைச்சி செய்ய வேண்டிய காரியம் அதுவும் உன் மனதிருப்தியோட செய்ய வேண்டிய காரியம், உனக்காக நான் காத்திருந்தேன், இனியும் நான் காத்திருக்கனும்னா காத்திருக்கேன் வாசா''

''இல்லை ஐயா, நாம இனி தாமதிக்க வேண்டாம்''

''நம்பிக்கையை என்னைக்கும் தளரவிடாத, எது வேணும்னு நினைச்சி நாம செயல்படறோமோ அது நிச்சயமா கிடைக்கும், ம்.. திருமாலை பத்தி தகவல் கிடைச்சதுனு கேள்விபட்டேன்''

''திருமால் சாத்திரம்பட்டியில பிறந்தவராம் ஐயா''

''சாத்திரம்பட்டியா? சேகர் இதுபத்தி எதுவும் சொல்லலையே''

''சேகர் ஐயாவுக்குத் தெரியாம இருந்திருக்கலாம், உங்களுக்கு சாத்திரம்பட்டி தெரியுமாய்யா''

''ம்ம்... நம்ம ஊரிலிருந்து மூணு மணி நேரம் ஆகும், கிழக்கே இருக்கு, அந்த ஊருப் பக்கத்துல பெரிய ஊருனு எதுவும் இல்லை, போக்குவரத்து வசதி கிடையாது''

''நீங்க போனதுண்டா ஐயா''

''ம்ம் இருபத்தி ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி போய் இருக்கேன், ஆனா இப்பவும் அதே மாதிரிதான் இருக்குனு கேள்விபட்டேன்''

''யார் சொன்னாங்க ஐயா''

''பெருமாள் தாத்தா''

''ஓ சாத்திரம்பட்டிக்கு எதுக்குப் போனீங்க ஐயா?''

''அதெல்லாம் இப்ப எதுக்கு வாசா, நீ வேணும்னா ஒருநாள் போய்ட்டு வா''

''திருவில்லிபுத்தூர் போய்ட்டு வந்துதான் இனி போகனும், நாளைக்கு சில வேலையெல்லாம் இருக்கு ஐயா''

''நாளைக்குப் போறதா இருந்தா நானே வேணாம்னு சொல்லிருவேன்''

நோட்டினை எடுத்து வைக்குமாறு சொன்னான் வாசன். பெரியவரோ தனக்கு எல்லாம் நினைவில் இருப்பதாக சொன்னார். ஆனால் வாசன் தனக்கு பெரியவர் முதன்முதலில் எழுதிய நோட்டு நிச்சயம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். பெரியவர் சம்மதம் தந்தார். அருளப்பனிடம் அனைத்து விபரங்களையும் பேசிவிட்டதாக வாசன் கூறினான். இரவு ஒன்பது மணி ஆகி இருந்தது. நேரத்தைப் பார்த்த வாசன் பெரியவரிடம் விடைபெற்றுக்கொள்வதாகக் கூறிக்கொண்டு தனது வீட்டை நோக்கி நடந்தான்.

இரவு நேரமாகியும் குழந்தைகள் கவலையுடன் அமர்ந்து இருந்தார்கள். சுமதி அழுதவாறே இருந்தாள். அதைக்கண்ட வாசன் என்னவென கேட்டான். சுமதி தானும் திருவில்லிபுத்தூர் வரவேண்டும் என கூறினாள். வீட்டில் அனுமதி தர மறுக்கிறார்கள் என கூறினாள். வாசன் அறிவுரை கூறினான். சுமதி சமாதனம் அடையவில்லை.

''ஆண்டாள் போல நானும் அந்த ஊரில இருக்கனும் மாமா''

''அதுக்கு அந்த ஊருக்குப் போகனும்னு அவசியமில்லை''

வாசன் தர்மசங்கடமாக உணர்ந்தான். சுமதியின் இந்த எண்ணத்திற்கு யார் காரணம்? இந்த சின்னஞ்சிறு வயதில்! அப்பொழுது சுமதியின் தாயார் சுபத்ரா அங்கு வந்தார். வாசனிடம் விபரம் கூறினார்.

''நீ படிச்சி பெரிய ஆளா வரனும்னு உங்க அம்மா சொல்றாங்க நீ இப்படி என்னோட கிளம்பி வந்தா உன் படிப்பு என்னாகிறது?''

''என்னைக் கூட்டிட்டுப் போங்க மாமா''

வாசன் சுபத்ராவைப் பார்த்தான். சுபத்ரா சுமதியை வீட்டுக்கு வருமாறு கண்டித்தார். சுமதி இடத்தைவிட்டு நகருவதாக தெரியவில்லை.

''இந்த தடவை நான் முக்கியமான காரணமா போறேன், அடுத்த தடவை கூட்டிட்டுப் போறேன்''

''தம்பி, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா, எப்பப் பார்த்தாலும் நாராயணனை நினைச்சிட்டே இருக்கா, நோட்டுல ஏதாவது எழுதிட்டே இருக்கா. நல்லாப் படிக்கிறா ஆனா சின்ன வயசுல இருந்தே இந்த பழக்கம் வந்துருச்சு எப்படி மாத்துரதுனு தெரியலை''

''ஒருதரம் ஆண்டாளா, மீராவா மாறனும்னு சொன்னா''

''அம்மா, நான் மாமாவோட போகலை என்னைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்''
இதுதான் சமயம் என வாசன் சுபத்ராவிடம் சுமதியை அழைத்துப் போகச் சொன்னான். சுமதி வாசனை திரும்பி திரும்பி பார்த்தவாறே நடந்தாள். வாசனுக்கு சுமதியின் செயல் மிகவும் விசித்தரமாக இருந்தது. அன்றைய இரவு பல கேள்விகளுடன் கடந்து கொண்டிருந்தது.
(தொடரும்)

Wednesday 21 July 2010

புத்தக வெளியீட்டு விழா


நயினார் பதிப்பக வெளியீடு.



1.  ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ (சிறுகதை தொகுப்பு)

2.  ‘நுனிப்புல்‘ நாவல் பாகம் - 1 

நயினார் பதிப்பகம்,  அகநாழிகை பொன். வாசுதேவன் 999 454 1010


3. வெறும் வார்த்தைகள் (கவிதை தொகுப்பு) 

தமிழ் அலை பதிப்பகம், 1, காவலர் குறுந்தெரு, ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 15, தொடர்புக்கு: இஷாக் 978 621 8777

Tuesday 20 July 2010

சபலத்தில் அல்லாடும் மனம்


எனது மனைவியின் மனமாற்றம் எனக்குள் பெரும் மகிழ்வை தந்தது. மனைவியின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என கேட்க எனக்குத் தோணவே இல்லை. இந்த மனமாற்ற விசயத்தை எனது மாமா மகளிடமும், என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணிடமும் சொன்னேன். எனது மாமா மகள் மிகவும் சந்தோசபட்டாள், ஆனால் என்னுடம் வேலை பார்க்கும் பெண் முகம் வாடிப்போனது கண்டேன். எப்பொழுது அப்பாவாக போகிறாய், எப்பொழுது விருந்து என நச்சரிக்கத் தொட‌ங்கினாள் என‌து மாமா ம‌க‌ள்.


சில மாதங்கள் மெல்ல கடந்தது. நான் அப்பாவாக போகிறேன் எனும் இனிய செய்தியை எனது மனைவியின் மூலமே அறிந்தேன். எனக்குள் உற்சாகம் பீறிட்டது. அலுவலகத்தில் இதுகுறித்து நான் எதுவும் சொல்லவில்லை. அன்றுதான் அலுவலகத்தில் நானும் என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணும் இரண்டு மாதம் ஹாங்காங் செல்ல வேண்டும் என சொல்லி இருந்தார்கள். 


வீட்டில் எனது மனைவியிடம் குழந்தை விசயத்தை அனைவரிடம் சொல்ல வேண்டும் என சொன்னபோது சில மாதங்கள் கழித்து சொல்லலாம் என சொன்னார். அவரது கண்கள் பயத்தில் இருந்ததை அறிந்தேன். எனக்கும், குழந்தைக்கும் எதுவும் ஆகாதுலங்க என அவர் சொன்னபோது எனது இதயத்தை எவரோ குத்துவது போன்று வலி உணர்ந்தேன். 


தாய்மை நிலை அடைய முடியாமல் தவிக்கும் பலர் நினைவில் வந்தார்கள். கருவுற்ற பின்னர் கரு கலைந்த நிலையில் இருந்த சிலர் நினைவுகளில் மோதினார்கள். எதற்காக இப்படி எதிர்மறை எண்ணம் எல்லாம் வந்து சேர்கிறது என எனக்கு மீது சற்று வெறுப்பு வந்து சேர்ந்தது. 


அப்ப‌டியெல்லாம் எதுவும் ஆகாது, க‌வ‌லை வேண்டாம் என‌ தைரிய‌ம் சொன்னேன். க‌ருவுற்று இருக்கும் கால‌ங்க‌ளில் தைரிய‌மாக‌வும் ந‌ன்றாக‌வும் இருந்தால் மட்டுமே குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சொன்னேன். சரி என கேட்டுக் கொண்டார். 


அந்த நேரத்தில்தான் மனமாற்றத்திற்கான காரணம் கேட்டு வைத்தேன். அப்பொழுது அவர் சொன்ன விசயம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. எனது பாட்டி எனது மனைவியிடம் ''கால காலத்துல குழந்தையை பெத்துக்கலன்னா உன் புருசன் உன்னை விட்டு வேறு ஒருத்தியோட தொடர்பு வைச்சிக்கிற போறான், அவன் வேற கல்யாணம் பண்ணினாதானே, நீ இந்த குடும்பத்தை உண்டு இல்லைனு பண்ணுவ, அவன் வேற ஒருத்தியோட உனக்குத் தெரியாம தொடர்பு வைச்சிட்டா என்ன பண்ணுவ' என சொன்னதும் மனதில் எனது மனைவிக்கு பயம் அப்பிக்கொண்டதாம். இதை என்னிடம் சொன்னபோது எனக்கு பயம் அப்பிக்கொண்டது. 


அந்த அளவுக்கு மனநிலையில் மிகவும் தரம் தாழ்ந்தவனா நான் என என்னுள் நினைத்துக்கொண்டேன். இருப்பினும், இதுதான் உண்மையான காரணமா என கேட்டு வைத்தேன். ஆம் இதுதான் உண்மையான காரணம், பல குடும்பங்களில் குழந்தைக்காக மட்டுமே சேர்ந்து வாழும் பெற்றோர்கள் பார்த்து இருக்கிறேன், அதுவும் இப்பொழுதெல்லாம் எளிதாக சின்ன சின்ன காரணம் காட்டி அறுத்தெரிந்து கொண்டு போய்விடுகிறார்கள் என்றார். உங்களை இழக்க நான் தயாராக இல்லை, சில மாதங்களாக மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவே நான் மாறினேன், மேலும் உங்கள் மாமா மகளின் காதல் முறிவும், உங்களுடன் வேலை பார்க்கும் அழகிய பெண்ணின் நிலையும் என்னை தடுமாற செய்தது. எனக்கு என்னவோ நீங்களும், உங்களுடன் வேலை பார்க்கும் பெண்ணும் தவறு செய்து விடுவீர்களோ என அஞ்சினேன் என்றார். அவர் சொன்னது என்னை நிலை குலைய வைத்தது. 


இப்படி சொன்ன அவரிடம் எப்படி நானும் என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணும் பணி விசயமாக ஹாங்காங் இரண்டு மாதம் செல்ல இருக்கிறோம் என சொல்வது என தள்ளாடினேன். சொல்லித்தான் ஆகவேண்டும் என சொன்னேன். அந்த செய்தியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. குழந்தை உருவாகி இருக்கிறது என காரணம் சொல்லுங்கள் என்றார். ஆனால் நான் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட்டேன் என்றேன். அவரது மனம் சபலத்தில் அல்லாடியது. அவரிடம் நான் குழந்தை மீது சத்தியம் செய்து கொடுத்தேன், இருப்பினும் அவரால் என்னை முழுவதும் நம்ப இயலவில்லை. பெண்கள் பொல்லாதவர்கள், எதையும் சாதிக்கும் வல்லமை பெண்களுக்கு உண்டு என்றார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என அழுது கொண்டே இருந்தார். நான் தைரியம் சொன்னேன். இரண்டு வாரங்கள் வெகுவேகமாக ஓடியது. தினமும் என்னை ஏமாத்தீராதீங்க, குழந்தை வயித்துல இருக்கு என்றார். 


பயணத்தின் நாள் வந்தது. வேலை பார்க்கும் பெண் மிகவும் உற்சாகமாக இருந்தார். இருவரும் விமானத்தில் பயணமானோம். எனது மனைவியின் அச்சத்தை விமான பயணத்தின் போது அவரிடம் சொன்னேன். மனைவியை பிரிந்ததும் என் மீது நீங்கள் கொள்ளும் சபலத்திற்கு உங்கள் மனைவியை காரணம் காட்டுகிறீர்களா என விமானத்தில் அவர் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருக்கையை மாற்றி கொண்டு வேறு இருக்கைக்கு போனார். நான் மனம் உடைந்து அமர்ந்திருந்தேன். 


ஹாங்காங்கில் அருகருகே அறை இருந்தும் என்னுடன் அவர் பேசவே இல்லை. நான் பேச முற்பட்டபோதெல்லாம் விலகி சென்றார். அவரது கண்களில் குற்ற உணர்வு தெரிந்தது. ஆனாலும் எனது மனம் அல்லாடியது. ஒருவாரம் கழிந்ததும் வேலை முடிந்து இரவில் அவரது அறைக்கதவை தட்டினேன். சிறிது நேரம் பின்னர் திறந்தார். ஏனிப்படி நடந்து கொள்கிறாய் என கேட்டேன். அப்பொழுது அவர் உங்கள் மீது நான் ஆசை கொண்டிருந்தேன். உங்களை மணக்கவே நான் நினைத்திருந்தேன், இந்த பயணம் அதற்கு வழிகாட்டும் என இருந்தேன் என்றார். அதை கேட்டபோது என்னால் நம்பவே இயலவில்லை. கதவை சட்டென சாத்திவிட்டு எனது அறையினில் நுழைந்து தாளிட்டு கொண்டேன். மணமான என்னை இவர் ஏன் மணக்க நினைக்க வேண்டும் என காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.

Monday 19 July 2010

பதிவுலகில் நான் எப்படிபட்டவர்?

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என யாருமே எதற்கு இன்னமும் எழுதவில்லை என யோசித்தபோது தொடர்பதிவுக்கு ஒரு அழைப்பு விட வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என சுவாரஸ்யமாக பலரும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். படிப்பதற்கு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது.

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என்பதையும் படித்துவிட வேண்டும் எனும் ஆவலும் கூடவே எழுகின்றது.

எனவே பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் என எழுத நான் சிலரை அழைக்கிறேன். அத்துடன் அவரவர் ஒருவரை அழைக்க மொத்த பதிவுலகமும் வரலாறுதனை பதிவு செய்துவிடும் எனும் அக்கறை எழுகிறது.

வேதம் மட்டுமின்றி பல அற்புத விசயங்களை எழுதி வரும் விதூஷ் 

கவிதைகள், தொடர்பதிவுகள் என நேஹாவின் நேரத்தை நம்முடன் பகிரும் தீபா 

படங்கள், கட்டுரைகள் என தமிழில் அழகுபடுத்தும் ராமலக்ஷ்மி 

சிறுமுயற்சிகள் செய்து தமிழ் சிறக்க செய்யும் முத்துலட்சுமி 

மரங்கள் மற்றும் உடன் பேசுவது போல கதைகள் எழுதும் ஜெஸ்வந்தி 

விருப்பமிருப்பின் நீங்கள் எழுதலாம். ஒருவேளை எழுத முடியாது போனாலும், வேறு ஒருவரை அழைத்து விடவும். :)


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


வெ.இராதாகிருஷ்ணன் 

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆமாம், அதுதான் எனது உண்மையான பெயர். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


இது பற்றி ஒரு கதை சொல்லலாம். நான் இந்த இணையங்களில் எழுத ஆரம்பித்தது 2006ம் வருடம் என நினைக்கிறன். அப்பொழுது தமிழில் வலைப்பூ பற்றியெல்லாம் தெரியாது. ஆங்கிலத்தில் தமிழ்தனை எழுதி கொண்டிருந்த காலம். அப்படி எழுதி கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானதுதான் முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளம். அங்கு எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் மூலம் நுனிப்புல் நாவல் வெளியிட்டேன். நுனிப்புல் நாவல் நண்பர்களால் பாராட்டபட்டாலும் வெளியில் இருப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  அப்பொழுதுதான் எனது எழுத்தின் நிலை இப்படியும் இருக்கும் என அறிய முடிந்தது. அப்படிப்பட்ட நண்பர்களின் அறிவுரைப்படி எனது எழுத்துகளை சேமிக்கும் தளமாக வலைப்பூதனில் எல்லாம் இருக்கும் வரை என வலைப்பூவிற்கு தலைப்பிட்டு காலடி எடுத்து வைத்தேன். இங்கே எழுதப்பட்ட பல பதிவுகள் எல்லாம் முன்னால் எழுதியவைதான். சில பதிவுகளே நேரடியாக இங்கே எழுதி வருகிறேன். 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்


எப்படியெல்லாம் வலைப்பூதனை விளம்பரம் செய்வது என்பது பற்றி அதிகம் தேடிப்பார்த்தேன். பல தேடு பொறிகளில் எனது வலைபூதனை இணைத்தேன். எனது நண்பரின் அறிவுரைப்படி தமிழ்மணத்தில் இணைத்தேன். பின்னர் தமிழிசில் இணைத்தேன். தமிழ் 10 என்பதிலும் இணைத்தேன். சில தவிர்க்கமுடியாத
பிரச்சினைகளால் தமிழ் 10லிருந்து பின்னர் எடுத்துவிட்டேன். மேலும் சில திரட்டிகளில் இணைத்தேன். சங்கமமும், திரட்டியும் நான் இணைக்காமலே திரட்டி கொண்டன. திரட்டியில், சங்கமத்தில் நேரடியாக சில பதிவுகள் இணைத்தேன். 


இப்படி எப்படியாவது வலைப்பூதனை பிரபல படுத்த வேண்டும் என பேராசை கொண்டு திரிந்தேன். ஆனால் நான் எழுதிய முத்தமிழ்மன்றத்தில் அந்த மன்றத்தின் விதிகளுக்கு ஏற்ப எனது வலைப்பூதனை விளம்பரம் செய்யாமலே தவிர்த்தேன். மேலும் எவருடைய வலைப்பூவிலும் சென்று எனது வலைப்பூதனை விளம்பரம் செய்ய வேண்டும் என ஒருபோதும் எண்ணியதுமில்லை. ஆனால் பிறருக்கு இடப்படும் பின்னூட்டங்களே வலைப்பூவிற்கான விளம்பரம் என்பதும் அறிந்தேன். பல நண்பர்களை மனதில் நினைத்து கொண்டிருக்கிறேன். எனது நேரம் காரணத்தால் பலருடன் என்னால் பழக இயலாமல் இருக்கிறது. 


மேலும் எனது கண்களுக்கு தென்பட்டதெல்லாம் பலரும் வாசிக்கும் தளங்கள். மிக குறைவாகவே சிலர் வாசிக்கும் தளங்கள் தென்பட்டன. எனது தேவை எது என தமிழில் தெரியாததால் அதிகம் சச்சரவு நிறைந்த பதிவுகளையே படித்தேன். எப்படியெல்லாம் மனிதர்கள் சிந்திக்கிறார்கள் எனும் ஆவலும், அடுத்தவர்களை பற்றி அறிந்து கொள்ளும் மோகமும் என்னை சச்சரவு பதிவுகளை படிக்க செய்தது எனலாம். அங்கே நான் இட்ட பின்னூட்டங்கள் எனது வலைப்பூவிற்கான விளம்பரமா என தெரியாது. 


சில காலம் பின்னர் பின்னூட்டங்கள் இடுவதை குறைத்து கொண்டேன். படித்தால் உடனே எதாவது எழுத தோன்றும். மிகவும் சிரமப்பட்டு எழுதாமலே வந்து இருக்கிறேன். எனக்கு படிக்கும்போது எழுதிவிட வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே உண்டு. இருப்பினும் நான் ஒன்று நினைத்து எழுத ஊர் ஒன்று நினைத்து பேசும் என்பதுதான் எனது நிலை. 


நான் மதித்து போற்றும் மனிதர்கள் இந்த வலைப்பூவில் நிறையவே இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து முகம் பார்த்து சிரித்து பேசிட வேண்டும் எனும் ஆவல் உண்டு. இதுவும் எனது வலைப்பூவிற்கு நான் தேடும் விளம்பரமா என்றால் என்னவென சொல்வது?. இதன் காரணமாகவே பல நேரங்களில் என்னை நானே ஒதுக்கி கொள்வது உண்டு. அது தவறு என பலமுறை அறிந்து இருக்கிறேன். நிறைய நல்ல நண்பர்கள் பெற வேண்டும் எனும் ஆசை மனதில் எப்பொழுதும் உண்டு. 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


சுய சொறிதல் என இதை வலைப்பூவில் சொல்கிறார்கள். சென்ற கேள்விக்கான எழுதிய பதிலில் இருந்தே தெரிந்து இருக்கும் நான் எழுதும் எழுத்துகள் பல சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதுதான். எனது அனுபவங்கள் என பல விசயங்களையும், பயண கட்டுரைகள் என பல சொந்த விசயங்களையும் எழுதி இருக்கிறேன். சமூகம் எனும் பார்வையில் எழுதுவது நான் பார்த்த விசயங்களின் பாதிப்புதான். 


 சமூக அக்கறை என்பது நமது மீதான அக்கறை என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். தனி மனிதன் தன் மீது அக்கறை செலுத்தும்போதே சமூகம் அக்கறை கொண்டதாகிவிடுகிறது. சுயநலம் கருதாமல் பொதுநலம் கருதவே முடியாது என்பதுதான் எனது கோட்பாடு. மக்களுக்கு செய்கிறேன் எனும் எண்ணமே சுயநலத்தின் தோற்றம்தான். 


இப்படி சொந்த விசயங்களை எழுதுவதன் மூலம் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் எழவில்லை. எவரையும் திட்டி எழுதும் பழக்கமோ, தாக்கி எழுதும் வழக்கமோ நான் கொண்டிருப்பதில்லை என்பதால் எவ்வித விளைவுகளும் இல்லை. சாதாரணமாக எழுதுவதன் மூலம்  நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். 
    
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


 பதிவுகளின் மூலம் அதிகம் சம்பாதிக்க இயலும் எனும் நிலை வந்தால் எனது மருத்துவ ஆராய்ச்சியை விட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். ஏனெனில் எழுதுவதற்கு கற்பனை வளம் போதும்.  இணையங்களில் தேடினால் விபரங்கள் கிடைக்கிறது. நூலகங்கள் தேடி ஓட வேண்டியது இல்லை. மூன்று வேளை நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். 


கூகிள் விளம்பரம் இணைத்து இருக்கிறேன். அதன் மூலம் இதுவரை எந்த பணமும் சம்பாதித்தது இல்லை. அன்பளிப்பு அளியுங்கள் என ஒரு பொத்தான் நிறுவி இருக்கிறேன். நானாக அதில் சேர்க்கும் பணம் தவிர்த்து வேறு எதுவும் இதுவரை இல்லை. இவை எல்லாம் சமூக நலனுக்காக, பிறருக்கு உதவ வேண்டும் என நான் செய்திருக்கும் விசயங்கள். 


நான் வெளியிடும் நாவல்கள், புத்தகங்கள் மூலம் வரும் பணத்தினை பிறருக்கு உதவி செய்வதற்காகத்தான் என எனது குறிப்புகளில் குறித்து வைத்திருக்கிறேன். ஆனால் இந்த வழிகள் மூலம் இதுவரை எதுவும் செய்ய இயலாமல் தான் இருக்கிறது, எழுத்தின் மூலம் சம்பாதிப்பது அத்தனை சுலபமில்லை. எழுத்தின் மூலம் வரும் பணத்தை நிச்சயம் சமூக நலனுக்காகவே செலவிடுவேன் என மனதில் உறுதியுடன் இருக்கிறேன். மேலும் நான் எழுதும் பெரும்பாலான எழுத்துகள் தொடர்ந்து புத்தகமாக வெளிவரும் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. 


நான் எழுதுவது பொழுது போக்கு என சொல்ல முடியாது. எனக்கு கிடைக்கும் நேரத்தில் எழுதுவது என்பது நிச்சயம் பொழுதை பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். அதே வேளையில் சச்சரவு நிறைந்த பதிவுகளை படிப்பு பொழுது போக்கு என கொள்ளலாம் என கருதுகிறேன். 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


என்னிடம் இருப்பது இரண்டு வலைப்பதிவுகள். ஒரு தமிழ் வலைப்பதிவு, மற்றொன்று ஆங்கில வலைப்பதிவு. ஆங்கிலம் அவ்வளவாக எழுதுவதில்லை. இது தவிர்த்து கல்விக்கென ஒரு தனி இணையதளம் வைத்து இருக்கிறேன். அதிலும் அதிகம் கவனம் செலுத்தியதில்லை. 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


மற்ற பதிவர்கள் மீது கோபம் வந்தது உண்டு, அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என கோபம் இருந்த இடம் தெரியாமல் சில கணங்களில் மறைந்து போனது. மறைந்து போன கோபத்தை மீண்டும் நினைவு படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே பதிவர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. ;) 


மற்ற பதிவர்கள் மீது பொறாமை என சொல்வதற்கு பதிலாக பெருமதிப்பு உருவானது. எழுதப்படும் எழுத்துகள் பல பிரமிக்க வைத்து இருக்கின்றன. அந்த மதிப்பிற்குரிய பதிவர்களை மனதார போற்றுகிறேன். 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய 
மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


முதலில் அறிமுகம் தான் எழுதினேன். அதில் பின்னூட்டமிட்டவர்கள் உண்டு. என்னை வலைப்பூ எழுத சொன்னவர்களின் முதல் பின்னூட்டங்கள் அது.  பின்னர் எழுதப்படும் பதிவுகளுக்கு அங்கொன்று இங்கொன்றுமாய் வந்த பின்னூட்டங்கள் என இருப்பினும், நான் பதிவு செய்பவை எல்லாம் முன்னால் எழுதப்பட்டவை என்பதால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது.  


அதே வேளையில் எனது கதைக்காக விருது கொடுத்து பாராட்டிய சகோதரி விதூஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விருது வழங்கும்போது எதற்காக வழங்குகிறேன் என அவர் சொல்லி தந்த விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 


பின்னர் சகோதரி அன்புடன் அருணா ஒருமுறை ஒரு பதிவுக்கு பூங்கொத்து தந்து இருந்தார்கள். இந்த பதிவுலகில் நான் பெற்ற ஒரே விருது ஒரு ஒரு பூங்கொத்து அதுதான். அந்த விருதினை விரைவில் பிறருக்கு பகிர்ந்து தர வேண்டும் எனும் ஆவல் இருக்கிறது, அதற்கான நாளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். 


தாரவி எனும் பதிவிற்கு தமிழ் 10 மகுடம் சூட்டி இருந்தது. இன்னும் சில பதிவுகள் யூத்புல் விகடன் சுட்டி இருந்தது. இவை தந்த சின்ன சின்ன மகிழ்வுகள் என கொள்ளலாம். 


பதிவுகளை வாசிக்கும் அனைத்து உறவுகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கின்றேன். 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னை பற்றி நானே கூறி கொண்டாலும், அவரவர் மனதில் ஒரு எண்ணம் என்னை பற்றி உருவாகத்தான் செய்யும். அனைவருமே என்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பது எனது ஆணவத்தின் குறியீடு. அனைவருமே என்னை மட்டமாக நினைக்க வேண்டும் என்பது எனது கழிவிரக்கத்தின் குறியீடு. என்னை எவர் எவர் எப்படி நினைக்க வேண்டுமோ அப்படி நினைக்கட்டும் என இருப்பது எனது நிதர்சன நிலையின் குறியீடு. 


என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் விசயங்கள் தினமும் மாறிக் கொண்டே இருந்தாலும் நான் எப்பொழுதும் நான் தான். 

அடியார்க்கெல்லாம் அடியார் 24

கதிரேசன் சங்கரன்கோவில் சென்று அடைந்தான். சிவசங்கரன் கதிரேசனை வேலையில் சென்று சேர்த்தார். ஒவ்வொரு தினமும் கதிரேசன் மிகவும் சிறப்பாக வேலை செய்து முன்னேற்றம் கண்டு வந்தான். அவனது தேர்வு முடிவுகள் அனைத்தும் வெற்றிகரமாகவே வந்தமைந்திருந்தது. கல்லூரிக்குச் சென்று மதிப்பெண்கள் பட்டியல் வாங்கியும் வந்தான். மதுசூதனனையும் வைஷ்ணவியும் சந்தித்தான்.

வைஷ்ணவி கதிரேசனை தனது ஊருக்கு அழைத்தாள். விடுமுறை கிடைக்கும்போது தகவல் சொல்லும்படியும், தான் வருவதாகவும் சிவசங்கரனின் முகவரி தந்து விடைபெற்றான் கதிரேசன். நாட்கள் பல நகர்ந்தது. இரண்டு விடுமுறையிலும் கதிரேசனால்  செல்ல இயலவில்லை. கோடை விடுமுறையில் செல்லலாம் என நினைத்து இருந்தான்.

ஈஸ்வரியை கதிரேசன் வாரத்திற்கு ஒருநாள் அல்லது மாதத்திற்கு ஒருநாள் என்றே சந்தித்து வந்தான். ஈஸ்வரியும் கதிரேசன் இருக்குமிடம் தேடி வருவதில்லை. சிவனின் மேல் தனது மனம் லயித்திருப்பதை ஈஸ்வரியை சந்திக்கும்போதெல்லாம் பேசினான் கதிரேசன். அதற்கு ஈஸ்வரி திருமணம் ஆனால் எல்லாம் சரியாகப் போய்விடும் எனவும் சிவன் பற்றிய சிந்தனை விலகும் என்றே கூறினாள். கதிரேசன் சிவன் சிந்தனையை அகற்றி வாழ்தல் என்பது இயலாது என்றே பதில் அளித்து இருந்தான்.

தனது வேலைத் திறமையால் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றான் கதிரேசன். கதிரேசனின் வேலை நிரந்தரமாக்கப்பட்டது.  புளியம்பட்டிக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் ஒருமுறை என சென்று வந்து கொண்டிருந்தான். புளியம்பட்டியில் அதிக சொத்துக்கள் ஏதும் இல்லாததால் செல்லாயி அவனுடனே சென்று தங்க முடிவு செய்தார். கதிரேசனும் தன்னுடன் செல்லாயியை அழைத்துக்கொண்டு சென்றான். அதனால் இம்முறை ஒரு சிறிய தனிவீட்டினை ஏற்பாடு செய்ய வேண்டியதானது.

செல்லாயி வந்த பின்னர், ஈஸ்வரி கதிரேசனின் வீட்டிற்கு ஒவ்வொரு தினமும் வந்து செல்லத் தொடங்கினாள். சிறிது நேரம் செல்லாயியிடம் பேசிவிட்டுத்தான் செல்வதை வழக்கமாக வைத்திருந்தாள். ஈஸ்வரியை செல்லாயிக்கு மிகவும் பிடித்துப் போனது. ஈஸ்வரியும் தனது கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில்தான் இருந்தாள்.
கல்லூரியில் கோடை விடுமுறை விட்டார்கள். கதிரேசனுக்கு ஈஸ்வரியைப் பெண் கேட்டுவிட நினைத்தார் செல்லாயி. பார்வதியிடம் ஒருநாள் இதுகுறித்துப் பேசியவர், பார்வதி ஈஸ்வரியின் படிப்பு முடியட்டும் என்றே பதில் அளித்து இருந்தார். பார்வதிக்கு இத்திருமணத்தில் முழு சம்மதமில்லையோ என சந்தேகம் எழுந்தது செல்லாயிக்கு. அதைப்பற்றி அன்றே அவர் கேட்டுவைத்தார். அதற்கு பார்வதி அப்படியெல்லாம் எதுவும் இல்லை, சின்னப் பொண்ணாக இருக்கிறாள், ஒரு வருடம் போகட்டும் என்றார்.

திருமணம் குறித்து கதிரேசனுக்குத் தெரிய வந்தது. கதிரேசன் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். ''ஏன் கவலையா இருக்கேப்பா'' என்றார் செல்லாயி. ''இந்த கல்யாணம் இப்போ அவசியமா?'' என்றான் கதிரேசன். ''ஒரு வருசம் போகட்டும்தான் சொல்லியிருக்காங்கப்பா'' என்றார் செல்லாயி. இத்திருமண விசயம் கேள்விப்பட்டு ஈஸ்வரி அளவில்லா மகிழ்ச்சி கொண்டாள். கதிரேசன் சிவன் கோவிலில் சென்று அன்று இரவு அமர்ந்தான். பாடல் மனதில் எழுந்தது. அவன் அருகில் ஒரு பெரியவர் அமர்ந்து இருந்தார். கதிரேசன் மெல்லிய குரலில் பாடினான்.

''சிவனே காதல் கொண்ட மனதில் மங்கையும்
பவனியது வந்தபோது கொண்ட மகிழ்வு
உள்ளம் சேர்த்து உடலும் தந்திடும் நிலை
கள்ளம் ஆகுமோ சொல்சிவனே''

அந்த பாடலைக் கேட்ட அங்கிருந்த அந்த பெரியவர் கலகலவென சிரித்தார். ''கல்யாணம் கட்டிக்கிட்டு சந்நியாசமாலே யாசகம் பண்ணுதே, பொண்ணு வாழ்க்கையக் கெடுத்துப்பூடாதலே'' எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறி மறைந்தார் அவர். கதிரேசன் திடுக்கிட்டான்.

கதிரேசனுக்கு அந்தப் பெரியவர் ஏன் அப்படிச் சொல்லிவிட்டுச் சென்றார் என்ற யோசனை வட்டமிட்டது. மனதில் திட்டமிட்டபடி அதிகாலையில் வைஷ்ணவியின் ஊருக்குக் கிளம்பினான். அன்று இரவுக்குள் திரும்பிவிடுவதாக செல்லாயியிடம் சொல்லிவிட்டு அவர் தயார் செய்து இருந்த பலகாரங்களையும், தனக்குத் தேவையான மாற்று உடைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.


ஈஸ்வரியைப் பற்றிய எண்ணம் மனதில் ஈசல்கூட்டம் போல் மொய்த்தது. 'பொண்ணு வாழக்கையை கெடுத்துப் பூடாதலே' எனும் வாசகம் மனதில் வண்டுகளின் சப்தம் போல் ரீங்காரமிட்டது. பேருந்தில் ஏறி அமர்ந்தான். வைஷ்ணவியின் ஊரான பெருமாள்பட்டியை அடைந்தபோது மாலை நேரம் நெருங்கிவிட்டது. வைஷ்ணவியின் வீட்டினை எவரிடமும் விசாரிக்காமல் தேடிச் சென்றான். அழகிய மாடவீட்டிற்கு முன்னால் நின்றவன் கதவு எண்ணை சரிபார்த்துக் கொண்டு வாசற் கதவை தட்டினான் கதிரேசன்.

வைஷ்ணவி கதவைத் திறந்தாள். வாசலில் நின்ற கதிரேசனைப் பார்த்து அவளது கண்கள் ஆச்சரியத்தில் நிலைத்தது. ஆ என பெருமூச்சு விட்டுக்கொண்டவள் ''உள்ளே வா'' என அழைத்து நடு அறையில் நாற்காலியை எடுத்துப் போட்டு ''உட்கார்'' என சொன்னவள் ''என்ன குடிக்கிற'' எனக் கேட்டாள்.

கதிரேசன் தனது தாய் கொடுத்தனுப்பிய பலகாரங்களைத் தந்து ''அம்மா செஞ்சாங்க'' என கொடுத்தான். ''ரொம்ப நன்றி, மோர் கொண்டு வரவா'' என்றாள். ''ம்'' என்றான் கதிரேசன். மோருடன் தனது அம்மாவுடன் வந்தாள் வைஷ்ணவி. கதிரேசன் எழுந்து நின்று வணங்கினான். சிறிது நேரம் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

''ஆச்சரியம் கொடுக்கனும்னு சொல்லாம வந்தியா'' என்றாள் வைஷ்ணவி. ''இந்த வாரம் போகனும்னு நினைச்சிருந்தேன், உடனே கிளம்பி வந்துட்டேன்'' என்றான் கதிரேசன். அப்பொழுது வைஷ்ணவியின் தாய் கடைக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றார்.

''சமணர் கோவில் போகனும், பக்கம் தான'' என்றான் கதிரேசன். ''அடுத்த ஊர் தான், கொஞ்ச பேரு சமணர்கள் இருக்காங்க அங்க, காலையில போவோம்'' என்றாள் வைஷ்ணவி. ''நீ எதுக்கும் மதுசூதனனை வரச் சொல்றியா, அவன் வர இரண்டு மணி நேரம் ஆகுமா?'' எனக் கேட்டான் கதிரேசன். ''அவன் வரமாட்டான், என்னோட மூணு மாசமா அவன் சரியா பேசறதில்லை'' என்றதும் கதிரேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் வைஷ்ணவி மிகவும் சாதாரணமாகவே சொன்னாள்.

இதைக் கேட்டு அமைதியாக இருந்த கதிரேசனிடம் ''அவன் ரொம்ப அளவுக்கு அதிகமாப் போறான், மூணு மாசம் முன்னாடி நம்ம கல்லூரி கோவிலுல ஒரு பிரச்சினை பண்ணிட்டான். சிவலிங்கத்துக்கு நாமம் போட்டா திருமால் மாதிரியே இருக்கும்னு அங்க இருக்க குருக்கள்கிட்ட அவன் சொல்ல அவர் அவனை ஓங்கி அறைஞ்சிட்டார். அன்னைக்கு என்கிட்ட முறைச்சவந்தான், என்னை காதலிக்க முடியாதுனு சொல்லிட்டு என்னைய வைணவம் இல்லைன்னு சொல்லிட்டான், நீயே சொல்லு, நான் வைணவம் தான்னு எப்படியெப்படி நிரூபிக்க முடியும். அடிப்படையில ஒரு பொண்ணு நான், என் காதல் இல்லாமப் போயிருச்சு இப்போ'' என்றாள் வைஷ்ணவி.

அப்பொழுது வைஷ்ணவியின் தாய் கடையில் இருந்து காய்கறிகளுடன் உள்ளே வந்தார். ''அம்மா சமைக்கப் போறீங்களா, நான் செய்றேன்'' என்றாள். ''நீ பேசிட்டு இரும்மா, நான் தயார் பண்றேன், வெந்நீர் வைக்கிறேன், தம்பி குளிக்கட்டும்'' எனச் சொல்லி சென்றார். ''அப்பா எங்கே'' எனக் கேட்ட கதிரேசனுக்கு ''வியாபாரம் விசயமா வெளியில போய் இருக்கார், செவ்வாய்கிழமைதான் வருவார், நான் வெந்நீர் வைக்கிறேன், நீ குளி'' எனச் சென்றாள் வைஷ்ணவி.

நன்றாக குளித்துவிட்டு வந்தவனிடம் ''இந்தா திருநீரு, அம்மா கடையில வாங்கி வந்திருக்காங்க, எங்க வீட்டுல நாமக் கட்டிதான் இருக்கு'' எனச் சிரித்தாள். ''மதுசூதனன் பத்தி கவலையில்லையா'' என்றான் கதிரேசன். ''அவன் ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டான், இனி தேவையில்லாம மனசை ஏன் வருத்துவானேன்'' என்றாள்.

''திரும்பவும் காதல் பண்றேனு சொல்லி வந்தான்னு வைச்சிக்குவோம் என்ன பண்ணுவ'' என்ற கதிரேசனுக்கு ''இனி அவன் இந்த உடம்பைத்தான் காதல் பண்ண முடியும், ஆனா என்னால அவன் உடம்புக்காக காதல் பண்ண முடியாது'' என சொல்லி நிறுத்தியவள் ''அதிகமா பேசிட்டேனோ'' என்றாள். சிரித்தான் கதிரேசன். ''அளவாத்தான் பேசின'' என்றான்.

''பேச்சுப் போட்டியில கலந்துக்கிட்டியா'' என்றான் கதிரேசன். வைஷ்ணவியின் முகம் மிகவும் பிரகாசமானது. ''இந்த வருசம் கலந்துகிட்டு பேசிட்டேன், சிவநாதன் ஆடிப்போய்ட்டார். அன்புதான் அடிப்படைனு பேசிட்டே வந்துட்டு கோவில் என்பதில் என்ன பிரிவினை வேண்டியிருக்கிறது, ஒன்றே கடவுள் என உயரிய தத்துவம் வைத்திருந்தால் கோவில் என்றோ ஆலயம் என்றோ மட்டும் சொல்லுங்கள். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என சொன்னது இப்படி மாரியம்மன் கோவில், செயின்ட் பீட்டர் தேவாலயம், சிவன் கோவில், விஷ்ணு கோவில், அக்பர் மசூதி என வைத்துக் கொள்ள அல்லனு பேசிட்டு நமது கல்லூரி முதல்வர் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என முடிச்சேன். இப்போ சிவன் கோவில்னு பேரு இல்லை, கோவில்னு மாத்திட்டார் ஆனா நாம மாறமாட்டோம்'' என சிரித்தாள் வைஷ்ணவி.

சிறிது நேரத்தில் சமையல் தயார் ஆகிவிட்டதாகவும் சாமிக்கு அன்னம் வைக்கச் சொல்லி வைஷ்ணவியின் தாய் தாயாரம்மாள் சொன்னார். ''நீ வைக்கிறியா'' என்றாள் வைஷ்ணவி. தாயாரம்மாள் ''இந்தாங்க தம்பி'' என்றார். கதிரேசன் அன்னம் வாங்கிக் கொண்டு வைத்து தீபம் ஏற்றிட மூவரும் வழிபட்டார்கள். பாடலும் உதித்தது.

''பெருமானே எம்மனதில் கொண்டது சுமையென கருதி
தருமாறு கேட்டிட அன்னம் படைத்திட்டேன்
மனதில் தூயவடிவம் கொண்டு வளர்த்திடும் நிலையது
கனவென நிலைகொள்ளுமோ சொல்பெருமானே''

''நல்ல குரல் வளம், நல்ல பாட்டு'' என தாயாரம்மாள் பாராட்டினார். ''எதுவும் சுமையில்லை, நீ சிவனையே மனசில நினைச்சிக்கோப்பா. அன்னம் கடவுளுக்கு படைக்கிறதாய் உலக உயிர்களுக்குத் தரச் சொல்றதுதான் ஐதீகம்'' என சொல்லிவிட்டு சாப்பிட வரச் சொன்னார்.

''சொல்சிவனேனு பாடுறதில்லையா'' என்றாள் வைஷ்ணவி. ம்ம் பாடினேன் என நேற்றைய பாடலைச் சொன்னான் கதிரேசன். ''என்னைப் போலவே நினைக்கிற, சார்லஸ் டார்வினோட இயற்கைத் தேர்வு பத்தித் தெரியுமா'' என நிறுத்தினாள். ''தெரியாது'' என்றான் கதிரேசன்.

''உடல்கள் இணையாம இனப்பெருக்கம் அடைஞ்ச உயிரில இருந்துதான் நாம இப்படி வந்திருக்கோம், அதே மாதிரி மாற்றத்துக்கு திருப்பிப் போறதுங்கிறது இயற்கைத் தேர்வுல புறக்கணிக்கப்படுற விசயமாத்தான் இருக்கும்னு இயற்கை அறிவியலாளர்கள் சொல்றாங்க'' என வைஷ்ணவி சொன்னதும் ''எப்படித் தெரியும் உனக்கு'' என்றான் கதிரேசன். ''உலக விசயங்களைப் படிக்கனும்'' என சொல்லிவிட்டு ''வா சாப்பிடலாம், நிறைய பேசனும் உன்னோட'' என அழைத்துச் சென்றாள்.

(தொடரும்)

Sunday 18 July 2010

ஈழத்து குரல்

''அம்மா நான் விளையாடப் போறேன்''

யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டினில் அந்த இனிய மாலை வேளையில் எழுகின்ற குரல் சப்தங்கள்  ஊர் வீதியினை கலகலப்பாக வைத்திட தயாராகிவிடும்.

''யாரோடையும் சண்டையிடாம விளையாடி வெருசா வீட்டுக்கு வந்துருங்கோ''

தாயின் கரிசனத்தின் அன்பினில் குழந்தைகள் குதூகலமாக வீதிகளில் காய்ந்து கிடக்கும் மண்ணில் சேர்ந்து காய்ந்திட தயாராவார்கள். அப்படி நான் காய்ந்து திரிந்த காலங்கள் கண்ணுக்குள் இன்னும் இருக்கின்றன.

1950வது வருடத்துடன்  எனது விளையாட்டு தருணம் அந்த மண்ணில் தொலைந்து போனது. அந்த இருபது வயதில் யாழ்ப்பாணம் விட்டுவிட்டு ராமநாதபுரம் வந்து குடும்பம், குழந்தைகள் என ஆகிப்போனது.

சொந்த மண் என வருடம் ஒரு தரமாவது யாழ்ப்பாணம்தனில் எனது கால் வைக்காத தருணம் இல்லை. அங்கே வீடுகளில் ''அம்மா நான் விளையாடப் போறேன்'' எனும் குரல் ஒலித்து கொண்டுதான் இருந்தது. தெருவில் விளையாடும் குழந்தைகளை கண்டு மனம் மகிழும். ஒவ்வொரு வருடமும் அந்த மண்ணில் கால் வைக்கும்போது எனது உயிரின் ஒலி எனக்கு கேட்கும்.

சொந்த மண்ணைவிட்டு போன வருத்தம் என்னுடன் இருந்து கொண்டே இருந்தது. சரியாக ஆறு வருடங்களுக்கு பின்னால் நான் சென்றபோது நடந்த விசயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்பொழுது சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்கினார்களோ அப்பொழுதே தமிழ் பேசும் மக்களுக்கு அழிவுதனை விதைத்து வைத்தார்கள். எனக்கு தெரிந்த பலர் அரசு பணியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அடக்குமுறை ஒரு மொழியினால் வந்தது இந்த சிலோனில்தான். எனக்கு தேகம் சிலிர்த்தது. எனக்கு தெரிந்தவர்களுக்காக நான் அரசுதனை எதிர்த்து போராடினேன்.

எனது சுயநலம். என் குடும்பம், என் பிள்ளைகள் எனும் நினைப்பால், சில வாரங்களிலேயே ராமநாதபுரம் வந்து சேர்ந்தேன். வீட்டில் விபரம் கேட்டு என்னை யாழ்ப்பாணம் செல்ல வேண்டாம் என தடுத்தார்கள். வருடா  வருடம் செல்வது குறைந்து போனது. பத்து  வருடம் பின்னால் ஒரு முறை சென்றேன். பிள்ளைகள் தெருக்களில் விளையாடிக் கொண்டுதான் இருந்தார்கள். தமிழுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து போராட்டம் நடத்த இளைஞர்கள் துடி துடித்து கொண்டு இருந்தார்கள்.

ஆறு வருடங்கள் பின்னர் 1972 என நினைக்கிறேன். சிலோன் இலங்கையாகி இருந்தது. தமிழ் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டு இருந்தது. ''அம்மா நான் விளையாடப் போறேன்'' எனும் குரல் கேட்க முடிந்தது. எனது அம்மம்மா, அப்பப்பா என அனைவருமே தென் தமிழகத்தில் குடியானோம். நிலங்கள் விற்றோம்.

பின்னர் யாழ்ப்பாணம் பற்றிய விசயங்கள் செய்திதாளில் படிப்பது போன்று ஆனது. ஒரு நண்பர் மட்டும் தொடர்பில் இருந்தார். மற்றவர்களுடன் முற்றிலும் தொடர்பு விட்டு போனது. என்றாவது சுற்றுலா செல்வது போல் நானும் எனது மனைவியும் சென்று வந்தோம். 1976 என நினைக்கிறேன், விடுதலை புலிகள் அமைப்பு தோன்றிய போது எனக்கு 46 வயது இருக்கும்.

இனக்கலவரம் நடந்தபோது நண்பர் ஒருவரின் மரண நிகழ்வில் கலந்து கொள்ள நான் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன். எனக்கு 53 வயது. துடி துடித்து போனேன். அம்மா நான் விளையாடப் போறேன் பதிலாக அழுகுரல் கேட்டது. வேதனையுடன் ராமநாதபுரம் வந்து சேர்ந்தேன்.

தினம் தினம் என் மண் நாசமாகும் செய்தி கேட்டு எதுவும் செய்ய இயலாமல் போனேன். எனது பிள்ளைகளை எனது மண் காத்திட அனுப்ப விழைந்தேன். ''விசரம் பிடிச்சிப் போச்சோ'' என வீட்டில் என்னை பேசினார்கள். எனது மூன்று மகன்களிடம் விபாமாக கதைத்தேன். ''வெளிநாடு போறோம்'' என லண்டன், கனடா என பறந்து போனார்கள்.

வேதனையில் என் உயிரின் ஒலி அடங்கி போனது. அகதிகளாய் ஒவ்வொருவரும் வந்து குவிந்தபோது எனது மனம் துடித்தது. மனைவியுடன் கொரனைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து போராடினேன். என் மண் பிள்ளைகள் ''அம்மா நான் விளையாடப் போறேன்'' என ஆடி திரிய வேணும் என்பதுதான் எனது ஆசையாய் இருந்தது.

வேதனையிலும், உடல் நலம் சரியாய் கவனியாத காரணத்திலும் சில வருடமே உடல் தாக்கு பிடித்தது. ராமநாதபுரம் வந்து சேர்ந்தேன். திடீரென அமைதியும், சட்டென சண்டையுமாய் ஆகி போனது எனது பூமி. மண்ணில் படும் துயரம் என்னை வாட்டியது. சாவுடன் நான் நடத்தியே வந்தேன் போராட்டம்.

இன்றுடன் எனக்கு 80 வயது. சொந்த மண்ணை விட்டுவிட்டு அவரவர் நலன் தேடி புலம் பெயர்ந்து போனார்கள். சொந்த மண்ணின் விடுதலைக்கு பல உயிர்கள் போனதுதான் மிச்சம். எனது பிள்ளைகள் சொந்த தேசம் ராமநாதபுரம் என்றே சொல்கிறார்கள். புலம் பெயர்ந்து போனவர்களுக்கு இனி யாழ் பற்றியோ, ஈழம் பற்றியோ என்ன அக்கறை இருந்து விடப் போகிறது. என் யாழ் மண்ணில் உயிர் நீத்தவர்கள் எத்தனை எத்தனையோ.

கண் பார்வையும், காதும் நன்றாகவே இருக்கிறது எனக்கு. ஏதேதோ சொல்கிறார்கள். வெளியில் இருந்து எல்லாம் அரசு என சொல்கிறார்கள். எல்லாம் செய்து கொள்ளுங்கள். சென்ற வருடம் நான் யாழ்ப்பாணம் சென்றபோது அம்மா நான் விளையாடப் போறேன் எனும் குரல்தனை என்னால் எந்த வீட்டினில் இருந்தும் கேட்க இயலவில்லை.

என் உயிர்களே, நான் செத்து போகும் முன்னராவது அந்த 'அம்மா நான் விளையாடப் போறேன்' எனும் குரல்களை ஒவ்வொரு வீட்டினுளும் ஒலிக்க செய்ய மாட்டீர்களோ!

Wednesday 14 July 2010

அதிகாலை குருவிகள்




சூரியனே


குயில்கள் குரல் கேட்க குளிர்ச்சியாய்

எழுந்து வந்தாயோ

செந்தூர வானத்தில்

வெள்ளை வட்ட பொட்டு வைத்து



குருவியே

ஒற்றைக்காலில் நின்று

ஒய்யாரமாய் உன் குரல்வளம்

சரிசெய்கிறாயோ

அதென்ன சூரிய

நமஸ்காரம் செய்யாமல்

இந்தப் பக்கம் பார்வை



மகிழ்வைத் தந்து விடுவாய்

மனதில் வைத்து போற்றுகிறேன்

அதிகாலை என்றும் அழகுதான்

அதிலும் உன்குரல் மெல்லிய இசைதான்

குருவியே உன்குரல் பிடிக்கும்

உன்குரல் மட்டுமே பிடிக்கும்

எனக்காக நீ பாடும் பாடல்!

கோழிதான் முதலில் வந்தது

முதலில் வந்தது எது? கோழியா? முட்டையா?

விடை தெரியாத கேள்விக்கு ஒரு விடை கிடைத்துவிட்டதாய் அறிவியலாளர்கள் அறிவிப்பு.

முதலில் வந்தது கோழிதான் என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

ஒரு புரதம் (ஒவோக்லேடிடின் 17) முட்டை உருவாவதற்கு காரணம் என்பதை கண்டுபிடித்ததன் மூலம் இதை அறிவித்து இருக்கிறார்கள். இந்த புரதம் கோழியின் அண்ட செல்லில் மட்டுமே இருப்பதாலும், இந்த புரதம் பல வினைகளை செயல்படுத்துவதாலும் கோழிதான் முதல் என சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புரதம் கால்சியம் கார்பனேட் தனை மாற்றி முட்டையின் ஓடுதனை உருவாக்குகிறதாம்.

விடை தெரியாத கேள்விக்கெல்லாம் விடை உண்டு. அந்த விடையையும் மாற்றும் வல்லமை அறிவியலுக்கு உண்டு.

அடியார்க்கெல்லாம் அடியார் - 23

வீட்டிற்குச் சென்றதும் செல்லாயி அமைதியானார். கதிரேசனும் அமைதியாக அமர்ந்து இருந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் பக்கத்து ஊர் சிவன் கோவில் குருக்கள் பச்சிலை சாறுடன் வீட்டிற்கு வந்தார். ''இதை மூணு வேளைக்குப் பையனுக்குக் கொடுங்க'' எனச் சொல்லிவிட்டு பதில் ஏதும் எதிர்பாராமல் கொடுத்துவிட்டுச் சென்றார். கதிரேசனின் நெற்றிப்பகுதியைத் தொட்டுப் பார்த்தார். காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது.

''நாளைக்கே நான் சங்கரன்கோவில் கிளம்புறேன்மா'' என்றான் கதிரேசன். ''உடம்பு சரியானப்பறம் போப்பா'' என்றார் செல்லாயி. ''ரொம்பநாள் கழிச்சிப் போனா, அந்த வேலைய யாருக்காவது தந்திருவாங்கம்மா, வாடகை எடுத்த வீட்டுக்கும் பணம் வேற தரனும், இல்லையின்னா அதுவும் கிடைக்காது '' என்றான் கதிரேசன். ''இந்த மருந்தைக் குடிப்பா, இதையும் கூட எடுத்துட்டுப் போ'' என்றார் செல்லாயி.

கதிரேசன் அன்று இரவு நன்றாகத் தூங்கினான். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு உடலெல்லாம் திருநீரு பூசினான். கிழக்குப் பக்கம் திரும்பி நின்றுகொண்டு ''ஓம் நமசிவாய'' என உரக்கச் சொன்னான். கதிரேசன் சொன்னதைக் கேட்டு எட்டி வந்துப் பார்த்தார் செல்லாயி.

''பெற்றகடன் தீரும் என்றா பிறவி தந்தாய்
மற்றகடனும் தீர்த்து வைக்கும் வழியிதுவா
எக்காரியம் செய்திட இங்கே என்னை அனுப்பினாய்
அக்காரியம் உனதாலாகாதோ சொல்சிவனே''

பாடிமுடித்தவன் ''சிவனே போற்றி போற்றி'' எனச் சொல்லிவிட்டுத் திரும்பினான். கையில் கரண்டியுடன் நின்ற செல்லாயி ''என்னை மறந்துராதப்பா'' என்றார். கதிரேசன் அமைதியாகவே நின்றான். ''என்னை மறந்துருவியாப்பா'' என்றார் செல்லாயி மேலும். அப்பொழுதும் கதிரேசன் அமைதியாகவே நின்றான். ''பேசுப்பா'' என்றார் செல்லாயி.

''இவரால் தான் நானும் இங்கே வந்தேன்
என்முன்னால் இவரும் சென்றிட தகுமோ
பிரியாது இவரும் என்னோடு இருக்கும் வழிதனை
தெரியாது என்பாயோ சொல்சிவனே''

''என்னப்பா சொல்ற'' என்றார் செல்லாயி. ''நீ உயிரோடு இல்லாமப் போனா என்னை மறந்துருவியில்லம்மா'' என்றான் கதிரேசன். ''ஐயோ கதிரேசா, ஏன் இப்படியெல்லாம் பேசறப்பா'' என்றார் செல்லாயி. ''கவலைப்படாதேம்மா, இந்த உயிர் இந்த ஜீவன்ல இருக்கறவரைக்கும் உன்னை மறக்கமாட்டேன்மா'' என்றான் கதிரேசன். செல்லாயியின் கவலை மிகவும் அதிகமானது. கதிரேசன் சங்கரன்கோவிலுக்குக் கிளம்பினான். ''அவரோட ஃபோன் நம்பர் கொடுத்துட்டுப் போப்பா'' என்றார். சிவசங்கரனின் தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தான் கதிரேசன்.

''உன் அப்பா என்னைத் தவிக்க விட்டுட்டுப் போனமாதிரி போயிராதப்பா'' என்று சொன்னார் செல்லாயி. ''ஏன்மா என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையாம்மா'' என்றான் கதிரேசன். ''உன் மேல நம்பிக்கை இருக்குப்பா, ஆனா அந்த சிவன் மேல கொஞ்சமும் எனக்கு நம்பிக்கை இல்லைப்பா'' என்றதும் ''நம்பிக்கை வைச்சிக்கோம்மா'' என செல்லாயியின் கால்களில் விழுந்தான். செல்லாயியின் கண்ணீர் கதிரேசனின் கழுத்துப் பகுதியில் சொட்டென்று விழுந்தது.

(தொடரும்)