Monday 29 June 2009

கள்ளிப்பாலின் கயமை

முன்னுரை:

கள்ளிப்பால் என சொன்னதும் உசிலம்பட்டி எனும் தமிழக வரைபடத்திலே இல்லாத ஒரு கிராமம் அனைவருக்கும் நினைவில் வந்து செல்லும், அந்த பச்சிளம் குழந்தைகளின் வேதனைகள் மனதை நீங்காமல் வட்டமிட்டு இருக்கும். கள்ளிப்பால் மருந்தாகவும் பயன்படக்கூடியது, மேலும் கள்ளிப்பால் தரும் கள்ளிச்செடி தன்னைக் காத்துக்கொள்ள முட்கள் எல்லாம் வைத்து இருக்கும். இப்படி மருந்தாக பயன்படக்கூடியதை மரணத்திற்காக பயன்படுத்தியது கள்ளிப்பாலின் கயமைத்தனம் என்றால் இல்லை என்று சொல்லலாம். மாறாக இதனை இப்படி உபயோகப்படுத்தலாம் என மனிதர்களின் கயமைத்தனம்தனை வன்மையாக கண்டிக்கலாம்.

இளைஞர்(ஞி)களும் கள்ளிப்பாலும்

'ஆசை ஆசையாய் புள்ளை பிறக்க வேணுமின்னு
அய்யனாருக்கு படையல் வைச்சி வருசம் பல
காத்திருந்து கண் விழிச்சி காத்திருக்கையிலே
பிறந்த புள்ளை பொட்டை புள்ளையாய் போச்சுதுன்னு
இறந்த சேதி சொல்ல கள்ளிப்பாலு கொடுத்தாளே பாட்டி'

எனும் நாட்டுப்புற பாடலில் இருக்கும் அகற்றமுடியாத சோகம் ஒவ்வொரு மனித உயிரையும் உலுக்கி வைக்கும். இந்த கள்ளிப்பால் நிலையில் தான் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் இருக்கிறார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்டு, படித்தபின்னர் இவர்கள் தனது சொந்த சிந்தனையை தொலைத்து போதைப் பொருளுக்கும், சிற்றின்ப விசயத்திற்கும் விலை பேசாமலே இவர்களை தாங்களே விற்றுவிடுகிறார்கள். கள்ளிச்செடியின் முள்ளானது ஓரளவிற்கு எதிர்ப்பு தர முடியும், ஆனால் இந்த இளைஞர்கள் கூட்டம் தகர்க்க முடியாத எதிர்ப்பை தர முடியும். அப்படி இருக்கும் இந்த இளைஞர்கள் இப்படி வீணாகிப்போவது இவர்களது கயமைத்தனத்தையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களது திறமையை உலகம் முழுவதும் அறிய வேண்டி செயலாற்றுதல் மிகவும் முக்கியமான செயலாகும்.

தனக்கு தீங்கிழைக்காத செயல்கள் மட்டுமின்றி, பிறருக்கு தீங்கிழைக்காத செயலையும் செய்யாது இருப்பது போற்றத்தக்கது. நல்ல விசயங்களை மட்டுமே நாம் தாங்கிக்கொண்டு வந்து இருந்தால், தீமையைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருக்காது. கள்ளிப்பால் நல்ல விசயத்துக்கு மட்டும் என இருந்து இருந்தால் தீமைக்கு துணை போயிருக்க வேண்டியிருக்காது. ஆனால் இப்படி இயற்கையாய் அமைந்து விட்ட விசயம்தனில் 'அல்லவை தேய நல்லவை நாடி வரும்' என போராடி தீய விசயங்களை அகற்றி செயலாற்றுதல் சிறப்பு.

உயிர்களின் சிறப்பு:

'பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது' 'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என நம்பிக்கையூட்டும் விசயங்கள் இருந்தாலும் எல்லா உயிர்களும் நன்மை தீமை என அனைத்தையும் தன்னுடன் இணைத்தே வைத்திருக்கிறது.

நுண்ணுயிர்கள் நமது உடலுக்கு தீங்கிழைக்க கூடியதுதான், ஆனால் அவை நமது உயிர் காக்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரும் கொண்டுள்ள பண்புகளால் அவை கயமைத்தனம் கொண்டவை என கருதமுடியாது. எப்பொழுது ஒரு உயிர் தீயனவாக செயல்படுகிறதோ அப்பொழுதுதான் அந்த உயிர் கயமைத்தனம் உடையதாக கருத முடியும். 'இருந்தும் இல்லாதிருப்பது' என்பது இங்கே சரியாகப் பொருந்தும். தீய விசயங்களுக்கு ஆட்படாமல் உயிர்களின் சிறப்பை நிலை நாட்டும் வண்ணம் நற்பண்புகளுடன் செயல்புரிவது அத்தியாவசியமாகிறது.

முடிவுரை:-

'இவ்வுலக படைப்பில் ஏற்றத் தாழ்வுகள் எதுவுமில்லை, ஏனோ மனிதன் பார்த்த பார்வையில் ஏற்றம் கூட தாழ்வாகிப் போனது'

அனைத்தும் சமமாக இருந்திட இன்னல்கள் இல்லாத சமுதாயம் உருவாக்கிட நமது கயமைத்தனம் அகற்றி நல்ல பார்வையுள்ள மனிதர்களாக வாழ்ந்து சிறப்போம்.

No comments: